Lekha Books

A+ A A-

என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது - Page 28

en thathavukku oru yanai irunthathu

“உம்மா சொல்வாங்க, தலையை வாரினா காஃப்ரிச்சியா ஆயிடுவோம்னு...”

அதைக் கேட்டு ஆயிஷாவின் தாய் சிரித்தாள். அவள் ஒரு சீப்பை எடுத்து குஞ்ஞுபாத்தும்மாவின் தலை முடியை வாரி வகிடு எடுத்து பிரித்தாள். குஞ்ஞுபாத்தும்மாவின் முகம் இப்போது மேலும் அழகாகத் தோன்றியது. ஆயிஷாவின் தாய் அவளின் முடியை அழகாகக் கட்டிவிட்டாள்.

ஆயிஷா முல்லைப் பூக்களைப் பொறுக்கிக்கொண்டு வந்து குஞ்ஞுபாத்தும்மாவின் கூந்தலில் வைத்தாள்.

“தலையில இப்லீஸ் ஏறிடுமா?” குஞ்ஞுபாத்தும்மா கேட்டாள்.

“போய் குருவிகிட்ட கேளு!”

“போ துட்டாப்பி...”

அவள் வெட்கப்பட்டாள். சந்தோஷப்பட்டாள். வீட்டுக்குச் சென்றாள். அவளின் தாய் அவளைப் பார்த்து கேட்டாள்:

“என்னடி... உன் தலையில என்ன?”

குஞ்ஞுபாத்தும்மா பதில் எதுவும் சொல்லவில்லை.

அவளின் தாய் எழுந்து வந்து அவளின் தலை முடியைப் பிடித்து இழுத்து, கூந்தலில் இருந்த பூக்களை வீசி எறிந்தாள்.

“அவங்க செய்றதையெல்லாம் நீ செய்யணும்னு  அவசியம் இல்ல. அந்தப் பெண்ணோட தாத்தா ஒரு மாட்டு வண்டி ஓட்டுற ஆளு. தெரியுதா? நீ யானை மக்காரோட செல்ல மகளோட செல்ல மகளாக்கும்! உன்னோட தாத்தாவுக்கு சொந்தத்துல ஒரு யானை இருந்துச்சு. பெரிய ஒரு ஆண் யானை!”

குஞ்ஞுபாத்தும்மா ஒன்றுமே பேசவில்லை. அன்றே அவள் வேறொரு செய்தியையும் அறிந்தாள். அவளின் திருமணம் விரைவில் நடக்கப் போகிறது! அவளின் தந்தை மணமகனைத் தேடிக்கொண்டிருக்கிறார்.

அந்தச் செய்தியைக் கேட்டு அவள் நடுங்கினாள். அவளின் வாயில் நீர் வற்றியது. அவள் முகம் வெளிறியது. என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே சிலை என நின்றுவிட்டாள்.

அவளின் தாய் சொன்னாள்:

“என்னோட உத்தரவு இல்லாம நீ இந்த வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது!”

அவளுக்கு கண்களும், காதுகளும் அடைத்துக்கொண்டு விட்டதுபோல் இருந்தது. “யா ரப்புல் ஆலமீன்...” என்று கூறியவாறு அவள் மயக்கமடைந்து கீழே விழுந்தாள்.

“மைதீனே! முத்நபியே! என் செல்ல மகளுக்கு என்ன ஆனது?” என்று கூறியவாறு அவளின் தாய் எழுந்தாள். அவளின் தந்தை வந்தார். தண்ணீர் தெளித்தல்! காற்று வீசல்! மொத்தத்தில்- ஒரே பரபரப்பு!

குஞ்ஞுபாத்தும்மா கண்களைத் திறந்தாள். மெல்ல எழுந்தாள். தன் தந்தையையும், தாயையும் உற்றுப் பார்த்தாள். அவளிடம் கேட்காமலே, அவளின் கருத்தைத் தெரிந்துகொள்ளாமலே அவளுக்கு அவர்கள் ஒரு கணவனைப் பார்த்திருக்கிறார்கள்!

“மகளே, குஞ்ஞுபாத்தும்மா...” -அவளின் தந்தை அழைத்தார்.

அவள் பேசவில்லை.

அவளின் தாய் கேட்டாள்:

“என் செல்ல மகளுக்கு என்ன ஆச்சு?”

குஞ்ஞுபாத்தும்மா வாய் திறக்கவில்லை.

“மைதீனே... ஏதாவது சைத்தானின் வேலையாக இருக்கும்!” அவளின் தாய் சொன்னாள்.

அதைக் கேட்டு குஞ்ஞுபாத்தும்மா விழுந்து விழுந்து சிரித்தாள். தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருந்தாள். பிறகு அவள் அழுதாள். நிறுத்தாமல் இதய வேதனையுடன் அவள் அழுதாள். இரவு நெடுநேரம் ஆகியும் உலகமெல்லாம் உறங்கிய பிறகும்கூட அவள் தன் அழுகையை நிறுத்தவே இல்லை.

அவள் படுத்தவாறே ஜன்னல் வழியே பார்த்தாள்.

மிகப்பெரிய கறுப்பு வண்ண எட்டுக்கால் பூச்சியின் வலையில் சிக்கிக் கொண்டு ஒளிர்ந்து கொண்டிருப்பவைதானோ இந்த கோடிக்கணக்கான நட்சத்திரங்களும்!

10

னவுகளின் காலம்

பகல் வருகிறது. இரவு வருகிறது. எதைப் பற்றியும் குஞ்ஞுபாத்தும்மாவால் தெளிவாக அறிந்துகொள்ள முடியவில்லை. அவள் சரியாக சாப்பிடுவதில்லை. ஒழுங்காகத் தூங்குவதில்லை. எல்லாமே அவளைப் பொறுத்தவரை ஒரு கனவுபோல இருக்கிறது. யாரெல்லாமோ வருகிறார்கள். என்னென்ன கேள்விகளையோ அவளைப் பார்த்துக் கேட்கிறார்கள். அவள் விழித்திருக்கிறாளா? இல்லாவிட்டால் உறங்கிக்கொண்டிருக்கிறாளா? ஆயிஷாவோ வேறு யாரோ ஏதோ கேட்டார்கள். திரும்பத் திரும்ப கேட்டார்கள். அவளும் அதற்கு பதில் கூறவே செய்தாள். பிறகும் அதே கேள்வியை அவளைப் பார்த்துக் கேட்டார்கள். அவள் அதற்கு இதயத்தில் வேதனை உண்டாக உரத்த குரலில் சொன்னாள்:

“துட்டாப்பி... என்னைக் கல்யாணம் செஞ்சு கொடுக்கப் போறாங்க!”

தொடர்ந்து கண்ணீர். கண்ணீரின் கடல். அவள் அதில் மூழ்கிப் போயிருந்தாள். இருண்டுபோன உலகத்தின் எல்லையில் நிற்கிறபோது திடீரென்று நெருப்பு கொழுந்துவிட்டு எரிகிறது. அது சூரிய உதயம்தான். ஆனால், காகங்களின் சத்தங்கள் இல்லை. கிளிகள் அசையவே இல்லை. ஆட்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவளின் தந்தையும் தாயும்தான். பிறகு... அவர்களுடன் யாரோ இருக்கிறார்கள். அது சூரிய உதயமல்ல. முற்றத்தில் இருக்கும் குழியில் தீக்கட்டைகள் எரிந்து கொண்டிருக்கின்றன. அதைச் சுற்றி மண் சட்டிகளில் சிறிய திரிகள் எரிந்துகொண்டிருக்கின்றன. குஞ்ஞுபாத்தும்மாவை அதற்கு அருகில் ஒரு பலகையில் உட்கார வைத்திருக்கிறார்கள். அவளுக்குப் பக்கத்தில் கையில் ஒரு பிரம்புடன் ஒரு மனிதன் நின்றிருக்கிறார்.

சைத்தானை “விரட்டும்” முஸ்லியார் அவர்!

குஞ்ஞுபாத்தும்மாவிற்கு வாழ்க்கையிலேயே முதல் முறையாக கோபம் வந்தது. பயங்கரமான கோபம். ஒரு யானையைப்போல பிளிற வேண்டும்போல் இருந்தது அவளுக்கு. ஒரு புலியைப்போல உறும வேண்டும்போல் இருந்தது அவளுக்கு. எழுந்து பாய்ந்து எல்லாரையும் கடித்து நார் நாராக்க வேண்டும்.

அவள் அசையாமல் உட்கார்ந்திருந்தாள். நல்ல ஒரு வாசனை அங்கு வந்தது. முஸ்லியார் தலையில் கைவைத்து எதையோ தீயில் போடுகிறார். அங்கு பத்தியும், சந்தனமும் இருந்தன. முஸ்லியார் “ஸுஹ், ஃபல, ஹல” என்று ஏதோ மந்திரிக்கிறார். சைத்தானை விரட்டுகிறார். இஃப்ரீத், ஜின், ருஹானி இப்படி பல சைத்தான்களையும் விரட்டியடித்த புகழ் பெற்ற பிரம்பு அது!

அதை வைத்து அவளை அவர் அடிப்பார். தலைமுடியைக் கொத்தாகப் பிடித்துக்கொண்டு அவள் உடம்பிலும் தொடையிலும் அவர் அடிப்பார். அப்படிச் செய்தால்தான் சைத்தான் ஓடுவான்! அதற்குப் பிறகும் சைத்தான் ஓடவில்லையென்றால், மிளகாயை அரைத்து கண்ணில் தேய்ப்பார். தீக்கட்டையை உள்ளங்கையில் வைப்பார். அப்போது தோல் கரியும். மூளையில் இருந்து உள்ளங்கால் வரை பயங்கர வேதனை இருக்கும். ஓ... வேதனை உண்டாகட்டும்! அவளின் தாயும் தந்தையும் அவள் வேதனையை அனுபவிக்கட்டும் என்றுதானே அனுமதித்திருக்கிறார்கள்.

“வாப்பா, என்னை அடிக்கக்கூடாதுன்னு சொல்லுங்க!”

முஸ்லியார் ஒன்றுமே பேசவில்லை. அவளின் தந்தையும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அவளின் தாயும்கூட வாயைத் திறக்கவில்லை.

“துட்டாப்பி, என்னை அடிக்கப் போறாங்கன்னு சொல்லு.” அவள் மனதிற்குள் கூறினாள். யாரிடம் சொல்லச் சொல்லி அவள் ஆயிஷாவிடம் கூறுகிறாள்?

“யார்னு சொல்லு...” முஸ்லியார் கட்டளை இட்டார்: “புகுந்திருக்கிறது யார்னு சொல்லு...”

யாராவது புகுந்திருந்தால் யார் என்று சொல்லலாம். அப்படி யாராவது புகுந்திருக்கிறார்களா என்ன?

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel