Lekha Books

A+ A A-

நன்மைகளின் சூரியன் - Page 7

nanmaigalin suriyan

நான் அந்த முகத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். எனக்கு அந்த கண்களை உற்றுப் பார்க்க பயமோ வெட்கமோ இல்லை. அவை என்னுடையவை. எனக்குச் சொந்தமானவை. இதயத்தின் இருப்பிடம்.

அவனுடைய முகத்திற்குப் பின்னால் ஜூன் மாத இரவு ஒரு தாமரை மலரைப் போல மலர்ந்து வந்து கொண்டிருந்தது. இடையில் அவ்வப்போது குளிர்ச்சியான காற்று அடித்தது. வானத்தில் நீண்ட நேரமான பிறகு ஒரு நட்சத்திரம் எரிந்து விழுந்தது.

"ஷம்ஸ்...'' நான் அழைத்தேன்.

"ம்...''

"ஷம்ஸ்...'' எனக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் இருந்தது.

"என்ன?''

"ஷம்ஸ்...'' நான் பொறுமையை இழந்தேன். "ஏதாவது சொல்லுங்க.''

"எனக்கு கூறுவதற்கு எதுவும் இல்லை.'' ஷம்ஸ் தயங்கித் தயங்கி சொன்னான்: "நான் உன்னுடைய பெயரின் அழகைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். டயானா! டயானா! டயானா... மேரி வயோலா டயானா!''

"ஓ... அது ஒரு மோசமான பெயர்.''

"அப்படியல்ல. அது மனிதர்களின் பெயராகவே தோன்றவில்லை.''

"பிறகு?''

"ஒரு தேவதையின் பெயர் என்று தோன்றுகிறது. நீ தேவதையாகவே இருக்கலாம். யாருக்குத் தெரியும்?''

என்னுடைய இதயம் நின்றுவிட்டது. நான் கண்களை மூடிக் கொண்டேன். ஒரு கடல் எனக்குள் இரைச்சல் எழுப்பிக் கொண்டு நுழைவதைப் போல தோன்றியது. அர்த்தமே இல்லாத இந்த உரையாடல் எப்படி என்னுடைய இதயத்தில் இவ்வளவு பெரிய உணர்ச்சி சூறாவளியை உருவாக்கி விடுகிறது? உணர்ச்சியை மறைப் பதற்காக நான் சொன்னேன்: "ஷம்ஸ், உங்களின் பெயர்தான் அழகாக இருக்கு... ஷம்ஸ்- என்- மஹாலி!''

அவன் எதுவுமே கூறாமல் வெறுமனே சிரித்தான். நான் ஒரு மந்திரத்தை உச்சரிப்பதைப் போல திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தேன்: "ஷம்ஸ் - என் - மஹாலி, ஷம்ஸ் - என்- மஹாலி, ஷம்ஸ்- என்- மஹாலி!''

என்னுடைய சிறுபிள்ளைத்தனம் அவனிடம் ஆர்வத்தை உண்டாக்கியதைப் போல தோன்றியது. சற்று சிரித்துக் கொண்டே ஷம்ஸ் சொன்னான்: "அது ஒரு சாதாரண அரேபியப் பெயர்.''

"அதன் அர்த்தம் என்ன?'' நான் கேட்டேன்.

"நன்மைகளின் சூரியன்.''

தரை விரிப்பில் வைக்கப்பட்டிருந்த கட்டிலில் ஒரே ஒரு டாலியா மலர் மலர்ந்து இருந்தது. மெல்லிய காற்றில் அது ஷம்ஸின் தலைக்குப் பின்னால் மோதிக் கொண்டிருந்தது. சிவப்பு நிறத்தில் அந்த மலர் அப்படியே விடாமல், நிறுத்தாமல் மோதிக் கொண்டே இருக்கக்கூடாதா? நான் ஆசைப்பட்டேன். என்னுடைய நன்மைகளின் சூரியனை மலர்கள் தொழுவதைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருக்க எனக்கு எப்போதும் முடிந்தால் எப்படி இருக்கும்?

"மிகவும் பொருத்தமான பெயர்'' என்றேன் நான்.

"எதனால்?''

"ஷம்ஸ்... நீங்க நன்மைகளுக்கு மட்டுமே சூரியன்.''

"எல்லாரும் நன்மைகளுக்கு மட்டுமே சூரியன்கள்தான்.'' ஷம்ஸ் சொன்னான்.

"இந்த... நன்மை என்று கூறுவது எதை?''

என்னால் பதில் கூற முடியவில்லை. அதனால் நான் கேட்டேன்: "என்ன? எனக்கு சொல்லுங்க?''

டாலியா மலர் மீண்டும் அந்த முகத்தில் வந்து மோதியது.

ஷம்ஸ் நாற்காலியைச் சற்று நகர்த்திப் போட்டு அமர்ந்து கொண்டு சொன்னான்: "ஒரு மனிதனைப் பொறுத்த வரையில் நன்மை என்று கூறுவது, அவனுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய சுவையான விஷயங்கள்தான். இன்னொரு மனிதனின் பார்வையில் மது அருந்துவது ஒரு பாவமாக இருக்கும். எனினும், மதுவை விரும்பக்கூடிய ஒரு மனிதனுக்கு, மது அருந்துவது நன்மையின் ஒரு அடையாளமாக இருக்கும். அவன் தன்னுடைய மனசாட்சியைத் திருப்திப்படுத்தாமல் இருப்பதுதான் பாவம்.''

"எது பாவம்? ஸின்...?''

"பாவம் என்று கூறுவது விருப்பமின்மையை...''

"எப்படி?''

"விருப்பமில்லாத காரியங்களைச் செய்ய வேண்டிய சூழ்நிலை வந்தால், அதுதான் பாவம். விருப்பப்படும் விஷயங்கள் எதையும் செய்ய முடியாமல், பயந்து பயந்து வாழக்கூடிய நிலைமையைத்தான் பாவம் என்று கூறுகிறேன்.''

நான் எதுவும் சொல்லவில்லை. ஷம்ஸ் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் என்னுடைய இதயத்திற்குள் நுழைந்தது. அவை ஆயிரம் அர்த்தங்களைக் கொண்ட மிகப் பெரிய நூல்களாக வளர்ந்து கொண்டிருப்பதைப் போல எனக்குத் தோன்றியது.

"எல்லாரும் நன்மைகளின் சூரியன்கள்தான்'' -ஷம்ஸ் சொன்னான்: "எல்லாரும்... பாவிகளும்கூட.''

நான் எதுவும் கூறாமல், தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தேன். என்னுடைய கண்களில் இருந்து எந்தவித காரணமும் இல்லாமல் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. எவ்வளவு கட்டுப்படுத்தியும் என்னால் அதை நிறுத்த முடியவில்லை. மெல்லிய இருட்டு சூழ்ந்திருந்ததால், ஷம்ஸ் அதைப் பார்க்கவில்லை.

பிறகு நாங்கள் எதுவும் பேசவில்லை. அப்படியே எவ்வளவு நேரம் இருந்தோம் என்று தெரியவில்லை. இறுதியில் மழை பெய்ய, நாங்கள் மழையில் குளித்தோம். அதற்குப் பிறகும் நாங்கள் அசையவில்லை.

மழையின் குளிர்ச்சி, ஆடைகளுக்கு நடுவில் உள்நோக்கி வேகமாகப் பாய்வதைப் போலவும், முகத்தின் வழியாகவும் ஆயிரம் ஆறுகள் பாய்ந்தோடுவதைப் போலவும் நான் உணர்ந்தேன். இறுதியில், ஷம்ஸ் கேட்டான்: "நாம போக வேண்டாமா?''

"போகணும்.'' நான் சொன்னேன்.

"அப்படியென்றால் எழுந்திரு.'' அவன் எழுந்தான்.

நான் அசையவில்லை. என்னுடைய உடலுக்கு அசைவதற்கான சக்தி இல்லாமல் போய்விட்டதைப் போல தோன்றியது. நடப்பதற்குத் தெரியாத ஒரு சிறு குழந்தையைப் போல, செயலற்ற நிலையில் நான் அந்த முகத்தையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

"எழுந்திரு'' -ஷம்ஸ் மீண்டும் சொன்னான். அந்தக் குரல், பல மைல்களுக்கு அப்பால் இருந்து கேட்கிறது என்று எனக்குள் நம்பிக்கை கொள்ள நான் முயற்சித்தேன்.

"எழுந்திருக்கவில்லையா?'' மீண்டும் அந்த குரல்.

"எனக்கு சோம்பலாக இருக்கு.'' நான் சொன்னேன்.

திடீரென்று அவன் என்னுடைய கைகளை இறுகப் பற்றினான். என்னை சர்வசாதாரணமாகத் தூக்கி எழுந்திருக்கச் செய்தான். எங்கள் உடல்கள் ஒன்றோடொன்று உரசிக் கொண்டிருந்தன. எதுவும் பேசாமல் ஒருவரையொருவர் கண்களால் பார்த்துக் கொண்டு நாங்கள் நின்றிருந்தோம். மழைநீர் கண் இமைகளைப் பிடித்து இறங்கி கீழ் நோக்கி பாய்ந்தோடிக் கொண்டிருந்தது. அதற்குப் பிறகும் இமைகளைச் சேர்க்க எங்களால் முடியவில்லை.

கீழே, சாலையின் வழியாக பாரம் ஏற்றப்பட்ட ஒரு லாரி, பெரிய சத்தத்துடன் கடந்து சென்றது. அதன் சத்தம் உச்ச நிலையை அடைவது வரை நாங்கள் காத்து நின்றிருந்தோம். பிறகு ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொண்டோம்.

அவன் என்னை முத்தமிட்டானா, இல்லாவிட்டால் நான் அவனை முத்தமிட்டேனா என்று என்னால் இப்போது கூற முடியாது. ஒருவேளை, என்மீது பரவிக் கொண்டிருந்த கைகள் பலத்துடன், என்னைப் பிடித்து நெருக்கமாகக் கொண்டு சென்றிருக்கலாம். அதே நிமிடத்தில் நான் முன்னால் சாய்ந்து கொண்டு, கழுத்தைப் பின்னால் சாய்த்து, கைகளால் அவனுடைய முகத்தைப் பிடித்து என்னுடைய முகத்தை நோக்கி நெருங்கச் செய்திருக்கலாம்.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

February 13, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel