Lekha Books

A+ A A-

நன்மைகளின் சூரியன் - Page 9

nanmaigalin suriyan

எங்கோ என்னவோ பிரச்சினை இருக்கிறது என்று அவளுக்கு புரிந்திருப்பதைப் போல தோன்றியது. அவளுடைய முகத்தில் ஒரு தாங்கமுடியாத வெறுமை இருப்பதைப் பார்த்தேன். பதைபதைப்பால் உண்டான வெறுமை. காப்பியைக் கொடுத்துவிட்டு ஆயா வெளியே நடந்து செல்லும்போது நான் எனக்குள் சிரித்துக் கொண்டேன். "இது என்னுடைய ரகசியம். என்னுடைய ஆனந்தம். சந்தோஷம். இதை நான் யாருக்கும் விட்டுத்தர மாட்டேன். மாட்டேன்... மாட்டேன்..."

7

வ்வொரு அதிகாலை வேளைகளுக்கும் எப்படிப்பட்ட காற்றுகளெல்லாம் சொந்தமாக இருக்கின்றன?

பல நேரங்களில் நான் அதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டு நின்றிருக்கிறேன். ஒவ்வொரு காற்றுடன் சேர்ந்து ஒவ்வொரு இனத்தைச் சேர்ந்த கிளிகளும் பறந்து வரும். முதலில் கிழக்கு திசையிலிருந்து சத்தம் உண்டாக்காமல் வீசும் மெல்லிய குளிர்ந்த காற்றில் சூரிய வெளிச்சமும் உணர்வும் கலந்து இருக்கின்றன. அது கடந்து செல்லும்போது மணல் துகள்கள் நடுங்குகின்றன. செடிகள் உறக்கத்தை நிறுத்துகின்றன. மனிதன் கண் விழிக்கிறான். அதன் இறுதியில் தோட்டத்தின் மூலையில் இருக்கும் குன்றிமணி மரத்தில், சிவப்பு நிற வாலைக் கொண்ட பறவை கத்திக் கொண்டே கண் விழிக்கிறது. தொடர்ந்து சிறகைச் சுத்தம் செய்துவிட்டுப் பறந்து செல்லும். பிறகு வரும் காற்றுக்கு குளிர்ச்சி அதிகமாகிறது. அதற்கு ஒரு மெல்லிய முனகல் சத்தம் இருக்கும். சாளரத்தின் திரைச் சீலைகள் மெதுவாக அப்போதுதான் அசையும். என்னுடைய அறை கண்விழிக்கிறது. அறைக்கு நேராக முன்னால் இருக்கும் மஞ்சள் நிற மலர்கள் கண் விழிக்கின்றன. தெளிவற்ற ஒரு சத்தத்தை தான் கடந்து செல்லும் ஒவ்வொரு இடங்களிலும் கேட்கும்படி செய்ய இந்தக் காற்றுக்கு முடிகிறது. அது சென்றவுடன், நாராயணக்கிளி கண் விழிக்கிறது. சத்தம் எழுப்பி உலகத்தை எழச் செய்து கொண்டே பறந்து வருகிறது.

இன்று அவை எதையும் கவனிக்க என்னால் முடியவில்லை. இந்த நனைந்த புலர்காலைப் பொழுதிலும் எனக்கு மிகவும் தெரிந்திருக்கும் சிறு சிறு பூச்சிகள் கடந்து போய்க் கொண்டிருக்கும். என்னுடைய தோழியான தங்கக்கிளி கண்விழித்து ஓசை உண்டாக்கிக் கொண்டிருக்கும். ஆனால், அவை எதுவும் எனக்குத் தெரியாது.

சாளரத்தின் அருகில் மிகவும் தூரத்தில் இருக்கும் மலைகளின் நிழல்களையே பார்த்துக் கொண்டு நான் உட்கார்ந்திருக்கிறேன். என்னுடைய இதயம் எதற்காகவோ அழுகிறது. கையை விட்டுப் போய்விட்ட நிமிடங்கள் போகாமல் இருந்திருக்கக்கூடாதா என்ற மனக் கவலையுடன் நான் இருந்தேன்.

கண் விழித்தவுடன் முதலில் செய்ய வேண்டியது- நேராக அப்பாவிடம் செல்வதுதான் என்று இதுவரை நான் மனதில் திட்டம் போட்டு வைத்திருந்தேன். தொடர்ந்து ஷம்ஸுக்கும் எனக்குமிடையே உண்டான ஒரு நாள் உறவைப் பற்றிப் பேச வேண்டும். எங்களுடைய திருமணத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நடத்தித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்ள வேண்டும். அப்பா அதற்கு சம்மதம் அளிக்க வேண்டும். இப்படியெல்லாம்...

ஆனால், நான் மாயாஜாலக் கதைகளில் வரும் இளவரசி அல்ல என்பதும், அப்பாவிடம் அந்த ஒரு விஷயத்தைக் கூறுவதற்கு என்னால் முடியவே முடியாது என்பதும் இப்போது மட்டுமே புரிந்தது. அவருடைய முகத்தைப் பார்ப்பதற்குக்கூட எனக்கு வெட்கமாக இருந்தது. நேற்று இரவில் என்னுடைய உதடுகளில் பதிந்த துக்கம் நிறைந்த உதடுகளின் கதையை அவர் ஒரே பார்வையில் படித்துத் தெரிந்து கொள்ள மாட்டாரா என்று அச்சப்படுகிறேன்.

நான் சாளரத்தின் அருகிலேயே கட்டிலைப் போட்டு ஒரு தலையணையில் சாய்ந்து கொண்டு படுத்திருந்தேன். ஆயா உள்ளே வந்து, நான் ஏன் இவ்வளவு தாமதமான பிறகும் எழுந்திருக்காமல் படுத்த நிலையிலேயே படுத்துக் கிடக்கிறேன் என்று விசாரித்தாள். ஒன்றுமில்லை என்று பல தடவை கூறிய பிறகும், ஆயா அதை நம்பவில்லை.

இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், ஒரு பொய்யைச் சொல்லி இன்னொரு ஆளை நம்பச் செய்வதற்கு என்னால் கொஞ்சம்கூட இயலாது என்பதுதான் உண்மை.

சூரியன் தோட்டத்திற்குள் வந்தது. செடிகள் கண் விழிப்பதை நான் சோர்வடைந்த கண்களால் பார்த்துக் கொண்டே படுத்திருந்தேன். தொடர்ந்து தோட்டக்காரன் தன்னுடைய ஊனமடைந்த காலால் நொண்டிக் கொண்டே நடந்து வந்து ஒரு செடியின் அடியில் உட்காருவதைப் பார்த்தேன்.

வெறுப்பைத் தரும் காட்சிகள். நான் இந்த வீட்டின் ஒரு உறுப்பினரே அல்ல என்று தோன்றிவிடுகிறது. வேறு ஏதோ உலகத்தில் வேறு ஏதோ ஒரு ஆளின் கட்டுப்பாட்டில் வாழும் ஒரு அதிர்ஷ்டசாலியான பெண் நான் என்று மனதில் தோன்றியது.

சொந்த வீட்டைப் பற்றி இந்த அளவிற்கு வெறுப்புடன் முன்பு எந்தச் சமயத்திலும் சிந்தித்ததில்லை என்பதை எண்ணியபோது குற்றஉணர்வு உண்டானது.

கேட்டைக் கடந்து அப்பாவின் கார் வெளியே சென்றது. இனி வரும்போது சாயங்காலம் ஆகிவிடும். எஸ்டேட்டில் என்னவோ வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சமீபகாலமாக பெரும்பாலான நாட்களில் அப்பா மிகவும் சீக்கிரமாகவே போவதைப் பார்க்கலாம்.

கீழே இடைவெளியில்லாமல் தொலைபேசி மணி அடித்துக் கொண்டே இருந்தது காதில் விழுந்தது. ஆயா குளியலறையில் இருப்பாள். சங்கரன் சமையலறையில் இருப்பான். அவர்களில் யாராவது ஒருவர்தான் பொதுவாக தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் கூறுவார்கள்.

எனக்கு எழுந்திருக்க வேண்டும் என்றே தோன்றவில்லை. அங்கே தொலைபேசி மணி அடிக்கட்டும். ஒருவேளை எஸ்டேட்டில் இருந்து சூப்பிரண்ட் அழைத்திருப்பார். அப்பா அங்கேதான் வந்து கொண்டிருக்கிறார் என்று மட்டும் கூறினால் போதும். அவர் தொலைபேசியை வைத்து விடுவார்.

நிறுத்தாமல் இருந்த தொலைபேசி அழைப்பைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. இவ்வளவு நேரமாக யார் அழைக்கிறார்கள்?

திடீரென்று அந்தத் தோணல் உண்டானது. ஒரு வேளை...

ஒருவேளை அழைப்பது ஷம்ஸாக இருந்தால்?

ஒரே நிமிடத்தில் நான் படிகளில் இறங்கிக் கீழே ஓடினேன். என்னுடைய இதயம் "படபட" என்று துடிப்பது காதில் விழுந்தது. தொலைபேசி இருக்கும் இடத்திற்கு அருகில் போன பிறகும், எனக்கு அதை எடுக்க வேண்டும் என்று தோன்றவில்லை. என்னுடைய மூச்சு விடும் ஓசையை ஷம்ஸ் கேட்டால் என்ன நினைப்பான்? மேலும் கீழும் மூச்சு விடுவது நிற்கட்டும்.

ஆனால், அதே நிலையில் நீண்ட நேரம் நின்று கொண்டிருக்க முடியவில்லை. சிறிது நேரம் முயற்சி செய்து பார்த்துவிட்டு, யாரும் பேசவில்லை என்று ஷம்ஸ் தொலைபேசியைக் கீழே வைத்து விட்டால்...?

நான் தொலைபேசியை எடுத்தேன். "ஹலோ?''

அந்த முனையிலிருந்து ஒரு இளம் பெண்ணின் குரல் கேட்டது.

"டயானா?''

"ஆமாம்.''

"அருணா பேசுகிறேன்.''

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

February 13, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel