Lekha Books

A+ A A-

நன்மைகளின் சூரியன் - Page 13

nanmaigalin suriyan

10

திரை அரங்கத்தின் மங்கலான வெளிச்சம், செயற்கையாகக் குளிர வைக்கப்பட்ட காற்றில் தொங்கிப் பிடித்து நின்று கொண்டிருந்தது. என்னுடைய உடல் குளிர்ந்து நடுங்கிக் கொண்டிருந்தது. வெளியே மழை பெய்யும் போதாவது, இவர்கள் ஏர் கூலரை நிறுத்தக் கூடாதா? "மிகவும் குளிர்ச்சியா இருக்கு'' -நான் சொன்னேன்.

"உண்மைதான். நாம் போனால் என்ன?'' -அருணா கேட்டாள்.

ஷம்ஸ் அபூர்வமாக மட்டுமே வெளியே காட்டக்கூடிய ஒரு தனித்துவ சிரிப்பைச் சிரித்தான். உலகத்தில் இருக்கும் மற்றவர்கள் எல்லாரும் வெறும் முட்டாள்கள் என்று அழைத்துக் கூறும் ஒரு சிரிப்பு ஷம்ஸிடம் இருக்கிறது. முதலில் நான் அதை அந்த அளவிற்கு கவனிக்கவில்லை. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக அந்தச் சிரிப்பும் ஷம்ஸின் வேறு பல சிறப்பு குணங்களுடன் என்னுடைய கவனத்தில் பட்டது.

நான் நடுவில் உட்கார்ந்திருந்தேன். என்னுடைய இடப் பக்கத்தில் ஷம்ஸும் வலப் பக்கத்தில் அருணாவும் உட்கார்ந்திருந்தார்கள்.

காலையில் காட்சிக்கு வரும்போதே அருணாவிடம் நான் விஷயத்தைக் கூறியிருந்தேன். அவள் என்னைப் பாராட்ட மட்டும் செய்தாள். திரை அரங்கத்தை அடைந்து, திரைப்படம் ஆரம்பமான பிறகு ஷம்ஸ் வரவில்லை என்றபோது எனக்கு கவலை உண்டாக ஆரம்பித்தது. அவமானப்பட்டு விட்டதைப் போல நான் உணர்ந்தேன். என்னுடைய வார்த்தைகளுக்கு அவன் தரும் விலை எவ்வளவோ குறைவு என்று எனக்குத் தோன்றியது. ஆனால், சற்று நேரம் தாண்டியவுடன், வாசல் திரைச்சீலைகளை விலக்கிக் கொண்டு ஷம்ஸ் நிற்பதை நான் பார்த்தேன். அவனுடைய கண்கள் இருக்கைகளில் தேடிக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடன், முதலில் அழைக்க வேண்டாம் என்று தோன்றியது. சற்று நேரம் நின்று பார்க்கட்டுமே! இவ்வளவு நேரமாக நான் இங்கு காத்திருந்ததைப் பற்றி சிறிதுகூட அவன் நினைத்துப் பார்க்கவில்லையே!

அருணா ஷம்ஸை இதற்கு முன்பு பார்த்ததில்லை. அதனால் வாசலில் வந்து நின்று கொண்டிருந்த இளைஞனைப் பற்றி அவள் கவனமே செலுத்தவில்லை.

ஆனால், என்னால் அப்படி இருக்க முடியாதே! நான் உரத்த குரலில் அழைத்தேன்: "ஷம்ஸ்...''

அவன் என்னைப் பார்த்தான். நான் கைக்குட்டையை உயர்த்திக் காட்டினேன். இருட்டில் தட்டுத்தடுமாறி வந்து ஷம்ஸ் என்னுடைய இடப் பக்கத்தில் உட்கார்ந்தான்.

நான் அருணாவை அறிமுகப்படுத்தினேன்: "அருணா... ஷம்ஸ்''.

அருணா புன்னகைத்துக் கொண்டே கையை நீட்டினாள். என்னுடைய இதயத்தில் முன்னால் அவர்களுடைய கைகள் ஒன்றோடொன்று இறுகப் பிடிப்பதைக் கண்டதும் ஏதோவொன்று உள்ளே நொறுங்குவதைப் போல தோன்றியது.

அந்த உணர்விற்குப் பெயர் என்ன?

பொறாமை? அப்படித்தான் இருக்க வேண்டும்.

"என்ன செய்றீங்க?'' -ஷம்ஸ் கேட்டான்.

அருணா குலுங்கிக் குலுங்கி சிரித்தாள். "திரைப்படம் பார்ப்பதற்காக வந்திருக்கிறேன்.''

ஷம்ஸ் அதைக் கேட்டுச் சிரித்துவிட்டான். எனக்கு சிரிப்பு வரவில்லை. எனினும், செயற்கையாக வரவழைக்கப்பட்ட ஒரு சிரிப்பை வெளிப்படுத்தி நானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டேன். அருணாவை என்னுடன் வரும்படி அழைத்துக்கொண்டு வந்தது முட்டாள்தனமாக ஆகிவிட்டதே என்ற தோணல் அந்த நிமிடத்தில் ஆரம்பிக்கவும் செய்தது.

திரைச்சீலையில் ஏதோ படங்கள் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருந்தன. பழைய படம். திரை அரங்கில் ஆட்கள் மிகவும் குறைவாக இருந்தார்கள்.

சாதாரணமாக எந்தத் திரைப்படமாக இருந்தாலும், நான் அப்படத்துடன் இரண்டறக் கலந்து விடுவேன். என்னையே அறியாமல் கதையிலும் கதாபாத்திரத்திலும் நான் போய் மூழ்கி விடுவேன். பிறகு, படம் முடிவது வரை என்னால் வேறு எதைப் பற்றியும் சிந்திக்க முடியாது. ஆனால், இன்று வாழ்க்கையில் முதல் தடவையாக திரைச்சீலையில் தோன்றி மறைந்து கொண்டிருப்பவை வெறும் படங்கள்தான் என்றும்; நிழல் வடிவங்களைப் போல உண்மையற்றவைதான் என்றும் நான் புரிந்துகொள்கிறேன். அதற்குக் காரணம்- என்னுடைய இதயம் அங்கு எங்கும் இல்லை. வேறு ஏதோ ஒற்றையடிப் பாதைகளின் வழியாக அது பயணித்துக் கொண்டிருந்தது.

ஷம்ஸ் ரகசியமாக என்னுடைய காதுக்கு அருகில் உதட்டை நெருக்கமாக வைத்துக்கொண்டு கேட்டான்: "தோழியையும் ஏன் அழைச்சிட்டு வந்தே?''

"என்ன?'' -அதைக் கேட்டபோது காரணமே இல்லாமல் சந்தோஷம் என்னுடைய இதயத்தில் நிறைந்து நின்றது.

"தேவையில்லை.''

சந்தோஷத்தை மறைத்துக்கொண்டு, பொய்யான வருத்தத்துடன் நான் சொன்னேன்: "அருணா என்னுடைய தோழி. அவள் இல்லாமல் எனக்கு எந்தவொரு விஷயமும் இல்லை.''

"என்ன செய்றாங்க? படிக்கிறாங்களா?''

"இல்லை... படிப்பை நிறுத்திவிட்டாள்.'' என்னுடைய இதயத்தில் உண்டான சந்தோஷம் என்ற ஈ சிறகுகள் சோர்வடைந்து தரையில் வந்து விழுவதை நான் பார்த்தேன்.

"நீங்கள் உறவினர்களா?'' -ஷம்ஸ் மீண்டும் கேட்டான்.

"இல்லை, அருணாவின் தந்தை பெரிய காண்ட்ராக்டர். ஒரு மேனன்'' -நான் மெதுவான குரலில் சொன்னேன். எங்களுடைய உரையாடலை அருணா கேட்கக் கூடாது என்று கட்டாயமாக நான் நினைத்தேன்.

நான் ஓரக் கண்களால் அருணாவைப் பார்த்தேன். அவள் திரைச் சீலையில் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தாள்; பாவம்!

என்னுடைய தோளில் ஷம்ஸின் கை மெதுவாக வந்து விழுந்தது. உடல் தளர்வதைப் போல தோன்றியது. அந்த தளர்ச்சியில், ஷம்ஸின் கைகள் கூறியபடி நடப்பதைப் போல நான் மெதுவாக அந்த மார்பின் மீது சாய்ந்து உட்கார்ந்தேன்.

"இந்த ஏர் கூலரைக் கொஞ்சம் ஆஃப் பண்ணியிருந்தால்...'' -பதைபதைப்பை மறைத்துக் கொண்டு நான் சொன்னேன்.

"உண்மைதான்'' -ஷம்ஸ் சொன்னான். தொடர்ந்து மெதுவாக என்னுடைய கழுத்தைப் பிடித்துத் திருப்பி உதடுகளில் அழுத்தி முத்தமிட்டான். எனக்கு பதிலுக்கு முத்தம் கொடுக்க வேண்டும் போல இருந்தது. எனினும், அதற்கு முடியவில்லை. ஒவ்வொரு சதையும் சுகமான சோர்வில் ஆழ்ந்துவிட்டிருந்தது.

என்னுடைய உதடுகளை என்னிடமே திருப்பித் தரும்போது ஷம்ஸ் மெதுவான குரலில் சொன்னான்: "நான் காதலிக்கிறேன்.''

"இப்போ சந்தேகமில்லையா?'' -நான் கேட்டேன்.

"சிறிதும் இல்லை.''

அதற்கு மேல் எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றே தோன்றவில்லை. வாழ்க்கையின் இறுதி லட்சியத்தை அடைந்துவிட்ட ஒரு திருப்தியான எண்ணத்துடன் நான் அவனுடைய தோளில் சாய்ந்து படுத்துக் கொண்டு கண்களை மூடினேன். இனி அடைவதற்கு எதுவும் இல்லை. என்னுடைய மனம் மெதுவான குரலில் சொன்னது: "நீ உன்னுடைய நன்மைகளின் சூரியனை அடைந்து விட்டிருக்கிறாய். கடந்து சென்ற நிமிடம் வரை ஒரு அனாதையாக மட்டுமே இருந்த நீ இப்போது அதுவல்ல.''

இடைவேளை விட்டபோது அருணா சொன்னாள்: "மிகவும் போரடிக்கிற திரைப்படமாக இருக்கிறதே, டயானா?''

நான் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். நான் இந்தத் திரைப்படத்தைப் பற்றி என்ன கருத்து கூறுவேன்?

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

March 18, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel