Lekha Books

A+ A A-

நன்மைகளின் சூரியன் - Page 15

nanmaigalin suriyan

நான் ஒரு விரலை உயர்த்தி அந்த கண்ணீர்த் துளியைத் தொட்டு உடைத்தேன்.

"ஏன் அழறே?'' -ஷம்ஸ் கேட்டான்.

"ஒண்ணுமில்ல...''

"அது பொய்.''

"ஆமாம்.''

"என்ன?''

"பொய்.''

"பிறகு ஏன்னு சொல்லு.''

"ஒண்ணுமில்ல...'' -அப்படி தொடர்ந்து கூறிக் கொண்டிருப்பது முட்டாள்தனமாக இருக்கும் என்று தோன்றியபோது, நான் சொன்னேன்: "என்னைக் காதலிக்கவில்லை.''

"யார்?'' -ஷம்ஸ் கேட்டான்.

"யாரும்.''

"பிறகு நான் யாரைக் காதலிக்கிறேன்?''

"அருணாவை...'' -என்னுடைய கட்டுப்பாட்டை இழந்து நான் பேச ஆரம்பித்திருக்கிறேன் என்பது அந்த நிமிடத்திலிருந்து தெரிந்தது.

அவன் என்னுடைய குற்றச்சாட்டை மறுக்க முயற்சிக்கவில்லை. எதுவும் கூறாமல் என்னுடைய கழுத்திற்கு மேலே விரலை வைத்தவாறு, கடலையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.

"என்னைத் திருமணம் செய்துகொள்ளுங்கள்.'' -நான் சொன்னேன். அறியாமல் வந்து போன வார்த்தைகள். எந்தச் சமயத்திலும் மனப்பூர்வமாக நான் கூற நினைத்த வார்த்தைகள் அல்ல அவை.

அதற்கு ஷம்ஸ் எந்த பதிலும் கூறவில்லை.

"என்னைத் திருமணம் செய்து கொள்வீர்களா?'' - அறிவின் பிடியை விட்டு வெளியே பாய்ந்து வந்த ஒரு கேள்வி.

"எனக்குத் தெரியாது.''

"என்னை ஏமாற்றுகிறீர்களா?''

"எனக்குத் தெரியாது.''

நான் அவன்மீது மேலும் அழுத்தமாக சாய்ந்தேன். "என்னைக் காதலிக்கிறீர்களா?''

"ம்...'' -ஷம்ஸ் மெதுவான குரலில் சொன்னான்: "ம்...''

எனக்கு அதற்கு மேல் எதுவும் கேட்கத் தோன்றவில்லை. மலரைப் போன்ற மென்மையான அந்த இதயத்தை நான் வேதனைப்பட வைத்துவிட்டேன் என்று தோன்றியது. எதையும் கேட்டிருக்க வேண்டியதில்லை. திருமணப் பிரச்சினையை எழுப்பியிருக்க வேண்டியதே இல்லை.

"நான் வேதனைப்படுத்தி விட்டேனா?'' -அதைக் கேட்டபோது என்னுடைய கண்கள் நிறைந்து வழிந்தன. ஷம்ஸ் பார்த்து விடக்கூடாது என்பதற்காக நான் மார்பின்மீது முகத்தை அழுத்தி வைத்துக் கொண்டேன்.

"எந்தச் சமயத்திலும் இல்லை.''

அது ஒரு பொய் என்று எனக்குத் தோன்றியது.

"மன்னித்துவிடுங்கள்'' -நான் மெதுவான குரலில் சொன்னேன்.

"எதற்கு?''

கேள்வியை வேண்டுமென்றே சட்டை பண்ணவில்லை. "எனக்கு எவ்வளவோ சொல்றதுக்கு இருக்கு.'' அதைச் சொன்னபோது எந்தவொரு காரணமும் இல்லாமல் நான் தேம்பித் தேம்பி அழுதேன். "இப்போது என்ன?''

"இப்போ... இப்போ... எனக்கு எதுவும் சொல்ல வரல...''

"சொல்லு.''

"இல்ல...''

"என்ன?''

"ஒரு நாள் முழுவதும் நான் சொல்லணும்.''

"எப்போது வேணும்னாலும் சொல்லலாம்.'' -அவன் புன்னகைத்ததைப் போல தோன்றியது. "எனக்கு விடுமுறை நாளாக இருந்தால், மிகவும் நல்லது.''

"விளையாட்டை விடுங்க.'' -நான் திடீரென்று அவனிடமிருந்து விலகி கடலைப் பார்த்துக் கொண்டு நின்றேன். இவ்வளவு நேரமும் என்னுடைய மார்பில் குளிர்ச்சி இல்லாமல் இருந்தது. இப்போது குளிர்ச்சியான கடல் காற்று ஆவேசத்துடன் வந்து மார்பில் மோதியது. குளிர்ந்து நடுங்கிப் போய்விட்டேன்.

ஷம்ஸ் சற்று நகர்ந்து, மணலின் மேற்பகுதியில் இருந்த குளிர்ச்சியைக் காலால் நீக்கிவிட்டு அங்கு உட்கார்ந்தான். நான் மேலும் சற்று கடலில் இறங்கி நின்றேன்.

காற்று என்னுடைய ஸ்கர்ட்டின் முன்பகுதியில் குறும்புத்தனத்தைக் காட்டியது. தலைமுடிக்கு நடுவில் நிரந்தரமாகத் தங்கிவிட்டதைப் போல தோன்றியது. முகத்தின்மீது ஈரமான உப்புச்சுவை கொண்ட காற்றும் மழைத்துளிகளும் தொடர்ந்து விழுந்து கொண்டிருந்தன.

சிறிதுகூட வெட்கம் தோன்றவில்லை. வேறு யாரும் இல்லையே! என்னுடைய நன்மைகளின் சூரியன் மட்டும்தானே பார்த்துக் கொண்டிருக்கிறான்! பரவாயில்லை.

எனக்கு எல்லாவற்றையும் மறந்துவிட்டு விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும்போல தோன்றியது. சந்தோஷம் ஒரு வண்ண பலூனைப் போல என் மனதிற்குள் மூச்சை அடைக்கும் அளவிற்கு நின்று கொண்டிருந்தது. சந்தோஷத்தின் எல்லையில் பாதங்களில் வந்து முத்தமிடும் அலைகளின் நீரை கை நிறைய அள்ளி நான் முகத்தில் தெளித்தேன். உப்புச் சுவை கொண்ட நீர் உதடுகள் வழியாக உள்ளே சென்றபோது, ஒரு சிறு குழந்தையைப் போல நாக்கை நீட்டி நான் அதை விரும்பிக் குடித்தேன்.

நான் பைத்தியக்காரியா?

ஆமாம்... ஆமாம்... ஆமாம்.

என்னுடைய நன்மைகளின் சூரியனின் உருவத்தை நானே அலங்கோலப்படுத்திவிட்டேன்.

எதற்காக நான் திருமண விஷயத்தைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தேன்? எந்தவொரு தேவையும் இல்லை. எனினும், என்னுடைய கட்டுப்பாட்டின் எல்லா எல்லைகளையும் தாண்டி, நான் அமைதியாகப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தபோது, அந்தப் பிரச்சினை வெளியே பாய்ந்து வந்துவிட்டது. அந்த நிமிடம் வரை அந்த ஒரு சிந்தனை என்னுடைய மனதில் இருந்ததில்லை என்று நான் சத்தியம் செய்கிறேன். அதற்குப் பிறகும் திருமணம் பற்றிய சிந்தனை என்னுடைய மனதில் இல்லை. எனினும், எப்படியோ தேவையே இல்லாத அந்த ஒரு பிரச்சினையைப் பிடித்து வெளியே கொண்டு வர என்னால் முடிந்திருக்கிறது.

எனக்கு என்னைப் பற்றியே எந்தவொரு மதிப்பும் இல்லாமற் போய்விட்டது.

ஏராளமான திருமண ஆலோசனைகளை அப்பா எனக்காகக் கொண்டு வந்தார். தாங்க முடியாத நிலை வந்தபோது நான் அப்பாவிடம், "எனக்கு ஐந்து வருடங்கள் கடந்த பிறகு திருமணம் செய்தால் போதும்" என்று கூறினேன். காரணம் என்ன என்று கேட்டதற்கு, "எனக்கு உங்களைப் பிரிந்து போவதற்கு முடியவில்லை" என்று அவரிடம் சொன்னேன். ஆனால், உண்மை அது அல்ல. நான் விளையாடித் திரிய நினைத்தேன். எந்தவொரு ஆணுக்கும் அடிமையாக ஆகாமல், சுதந்திரமாக- அழகும் உற்சாகமும் இல்லாமற் போவது வரை அப்படியே சந்தோஷம் நிறைந்த இதயத்துடன் சுகமாக வாழ்வது- இதுதான் என்னுடைய மனம்.

பிறகு- இப்போது எப்படி நானே திருமண விஷயத்தை ஷம்ஸிடம் சொன்னேன்? "என்னைத் திருமணம் செய்துகொள்ளுங்கள்" என்று கேட்டுக் கொண்டபோது, என்னுடைய மனதில் எந்த சைத்தான் வந்து புகுந்தது?

என்ன நடந்ததோ... எனக்குத் தெரியாது.

ஷம்ஸ் அதற்குப் பிறகும் பல தடவை வீட்டிற்கு வந்தான். ஒரு நாள் அப்பாவுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தான். அவ்வளவு நேரமும் எதுவும் கூறாமல், எனக்கு தெய்வம் ஒதுக்கி வைத்த நேரம் முழுவதும் வீணாக நகர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தவாறு, நான் அப்பாவின் நாற்காலியின் கையில் அமர்ந்திருந்தேன். அதற்குப் பிறகு அப்பா இல்லாத சந்தர்ப்பமாகப் பார்த்து மட்டுமே நான் ஷம்ஸை வரவழைத்தேன்.

நான் செய்து கொண்டிருப்பது தவறா? என்னால் உறுதியாகக் கூற முடியவில்லை. என்னுடைய கால்கள் தடுமாறுகின்றனவா? ஒரு தாய் இல்லாமலிருப்பதன் கவலையை இப்போது முதல் முறையாக நான் உணர்கிறேன். அம்மா இருந்திருந்தால் தேவையே இல்லாமல் வைக்கும் ஒவ்வொரு எட்டும் என்னைத் திட்டும். ஆயா ஷம்ஸைப் பற்றி எதுவுமே கூறுவதில்லை. ஒரு முறை மட்டும் "மிகவும் நல்ல இளைஞன்'' என்று கருத்துக் கூறினாள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

March 18, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel