Lekha Books

A+ A A-

நன்மைகளின் சூரியன் - Page 11

nanmaigalin suriyan

அவனுடைய உதடுகள் என்னுடைய காதிற்கு சற்று மேலே இருப்பதைப் போலவும், பேசும்போது மூச்சு என்னுடைய காதில் வந்து மோதும் என்றும் எனக்குத் தோன்றியது. அந்த நினைப்பு என் மனதைத் தளர்வடையச் செய்தது. ஒரு பெரிய உணர்ச்சி வசப்படல் என்னுடைய முழு உடம்பையும் வந்து ஆக்கிரமித்தது. அப்போது அந்த முனையில் இருந்து கேட்டது: "ஷம்ஸ்...''

நான் ஷாக் அடித்ததைப் போல நின்றுவிட்டேன். நான் என்ன கூறுவேன்? எதுவும் இல்லை. பிறகு, ஏன் அழைத்தேன்? எனக்கே தெளிவாகத் தெரியவில்லை.

"யார்?'' -மீண்டும் ஷம்ஸின் குரல்.

"நான்தான்... டயானா.''

"ஹலோ...'' ஷம்ஸ் குலுங்கிக் குலுங்கி சிரித்தான். "நான் அங்கு அழைக்கலாம் என்றிருந்தேன். ஒரு முறை அழைக்கவும் செய்தேன். அப்போது எங்கேஜ்ட் ஆக இருந்தது.''

"ஓ... அப்போது என்னுடைய ஒரு தோழி அழைத்திருந்தாள். அருணா. நாங்கள் வெளியே போகலாம் என்றிருந்தோம்.''

"எங்கே? இவ்வளவு காலையில்?''

"எங்கும் இல்லை. வெறுமனே... பொழுது போக வேண்டாமா?''

"அப்படின்னா நேராக இங்கே வாங்க.''

"அய்யோ... வேண்டாம்...'' நான் சொன்னேன்: "ஆண் பிள்ளைகள் தங்கியிருக்கும் ஹாஸ்டலுக்கா அழைக்கிறீங்க?''

"பிறகு, நான் வேறு எங்கு அழைப்பேன்?''

ஷம்ஸ் சிரித்தான்.

கேட்க வேண்டும் என்று இருந்தது: "எதனால் என்னை வாழ்க்கைக்கு அழைக்கக் கூடாது?"

ஆனால், எதுவும் கூற முடியவில்லை. நான் திடீரென்று சுய உணர்விற்கு வந்ததைப் போல சொன்னேன்:

"வைக்கட்டுமா?''

"நில்லு...'' -ஷம்ஸ் தடுத்தான். "எப்போ பார்க்கலாம்?''

"இப்போ... உடனடியாக..." என்று கூற இதயம் துடித்தது. அப்படிக் கூறினால் என்னுடைய மனதை ஷம்ஸ் படித்து விடுவான் என்ற பயம் உண்டானதால் நான் சொன்னேன்: "சாயங்காலம் வர்றீங்களா?''

"கட்டாயமா... நான் போரடிக்கவில்லையே?''

எதுவும் கூற முடியாமல் நான் சிரித்தேன். எனக்கு எப்படி உரையாடலைத் தொடர்வது என்று எந்தவொரு நிச்சயமும் இல்லாமல் போய்விட்டது. அதனால் பதைபதைப்புடன் நான் சொன்னேன்:

"சரி... சாயங்காலம் வரணும்!''

பிறகு நான் தொலைபேசியைக் கீழே வைத்தேன். திரும்பிப் பார்த்தபோது, மிகவும் அருகில் அருணா புன்னகைத்துக் கொண்டு நின்றிருந்தாள். அவளுடைய அழகான இரண்டு பற்களை வெளியே காட்டிக்கொண்ட குறும்புச் சிரிப்பு.

"யார் அது?'' -அருணா எடை போட்டதைப் போல கேட்டாள்.

"என்னுடைய ஒரு நண்பன்.''

"அது புரியுது. யாருன்னு கேட்டேன்?''

திடீரென்று உண்டான வெட்க ஓட்டத்தில் நான் முழுமையாக சிவந்து போய்விட்டேன். அதை மறைப்பதற்காக நான் சொன்னேன்:

"உனக்கு ஏற்ற ஒரு ஆளை நான் பார்த்து வைத்திருக்கிறேன். மிகவும் பொருத்தமாக இருப்பான்.''

"ஓஹோ! அப்படின்னா இப்போ எனக்காகத்தான் அழைச்சியா?''

"ம்... பிறகு வேறு யாருக்கு? எனக்காகவா?''

என்னுடைய குரல் நடுங்கியதை அருணா கவனித்துவிட்டாள் என்று தோன்றியது. காரணம்- ஒருமுறை காணாமல் போன புன்சிரிப்பு மீண்டும் மலர்ந்து வருவதைப் பார்க்க முடிந்தது.

வெட்கத்தை மறைப்பதற்காக, நான் நேராக ட்ரஸ்ஸிங் அறையை நோக்கி ஓடினேன்.

9

தோட்டத்தின் எல்லைகளில் ஒதுங்கி ஒரு ஈரக்காற்று துடித்துக் கொண்டு நின்றிருந்தது. முன்னிரவுப் பொழுது சாயங்காலத்தைப் பின்னால் தள்ளிக் கொண்டு எங்களைச் சுற்றிலும் வந்து விழுந்து களைப்புடன் மயங்கியது.

நாங்கள் குன்றிமணி மரத்தின் அடியில் அமர்ந்திருந்தோம். நனைந்திருந்த புல் பரப்பில் இதற்கு முன்பு தெரிந்திராத சத்தங்களை வெளிப்படுத்திக் கொண்டு சிறுசிறு பூச்சிகள்... தோட்டத்திலும் வெளியிலும் இருந்த மரங்களில் குளிரைத் தாங்க முடியாமல் இடையில் அவ்வப்போது புகார் கூறிக் கொண்டிருந்த கிளிகள்... காற்றில் மழைத்துளிகளின் கவலை...

எனக்கு என்ன கூற வேண்டும் என்று உறுதியாகத் தெரியவில்லை. இனம் புரியாத வெட்கத்தின் காரணமாக உடலும் மனமும் களைத்துப் போன ஒரு முட்டாளாக நான் இப்போது இருந்தேன்.

ஷம்ஸ் ஒரு சிவப்பு நிற ஸ்லாக் சட்டையும் தவிட்டு நிறத்தைக் கொண்ட பேண்ட்டையும் அணிந்திருந்தான். முன்பு பார்த்ததைவிட மிகவும் அதிகமான சிந்தனையும் வேதனையும் முகத்தில் இருப்பதைப் பார்க்க முடிந்தது.

நான் கேட்டேன்: "ஷம்ஸ்! என்னை எதற்காக காதலிக்கிறீங்க?''

மாலை நேரம் தேம்பி அழுவதைப் போல தோன்றியது. ஒரு வாசனை இல்லாத காற்று. கவலை இல்லாத விதவையைப் போல, ஷம்ஸின் ஆடைகளில் குளிர் பரவியது.

"எனக்கு உறுதியாகத் தெரியவில்லை'' -ஷம்ஸ் சொன்னான்: "காதல் இருக்கிறதா என்று கேட்டால், எனக்குத் தெளிவான பதில் இல்லை.''

"எனக்கும் தெரியாது.''

அவன் மீண்டும் அமைதியாக ஆகிவிட்டான். நான் அந்த முகத்தையே ஆர்வத்துடன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஷம்ஸ் கூறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் என்னை உணர்ச்சிவசப்படச் செய்ய முடியும் என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். இந்த நனைந்த மாலை நேரம்... கிச்சுக்கிச்சு மூட்டல்... புல் பரப்பில் இருந்து மேல் நோக்கி வரும் குளிர்... இவை அனைத்தும் என்னை வேறொரு ஆளாக மாற்றி விட்டிருக்கின்றன.

ஷம்ஸ் தரையிலிருந்து ஒரு குன்றிமணியைப் பொறுக்கி எடுத்து, இரண்டு விரல்களுக்கு மத்தியில் இறுக வைத்துக் கொண்டிருந்தான். எனக்கு அந்த சிவப்பு நிற அழகு குன்றிமணி மீது மதிப்பும் அத்துடன் பொறாமையும் தோன்றின. தொடர்ந்து என்னை நானே திருத்திக் கொண்டேன்.

இந்த ஒரு குன்றிமணிக்கு என்ன ஒரு தனித்தன்மை இருக்கிறது? எதுவுமே இல்லை. எங்களைச் சுற்றிலும் பச்சைப் புல் பரப்பில் இங்குமங்குமாக சிதறித் தெறித்துக் கிடக்கும் ஆயிரம் குன்றிமணிகளைப் போல இன்னொன்று. அவ்வளவுதான்.

ஷம்ஸ் தன்னுடைய கையில் இருந்த குன்றிமணியை என்னிடம் நீட்டிக்காட்டிக் கொண்டே சொன்னான்: "இந்தச் சிறிய அளவில் இருக்கும் காய்க்குள் நூறு யானைகளை வைக்கக்கூடிய சிற்பியைப் பற்றி உனக்கு என்ன தோணுது, டயானா?''

நான் பதில் கூறாமல் குன்றிமணியைக் கையில் எடுத்தேன்.

ஷம்ஸ் தொடர்ந்து சொன்னான்: "அது நடக்கக் கூடியதுதான் என்று நேரில் பார்ப்பது வரையில் நான் நம்பவில்லை. காதலைப் பற்றியும் கிட்டத்தட்ட இதே மாதிரியான அனுபவம்தான். இத்தனை வருடங்களாகக் கேட்டவை அனைத்தும் உண்மைதான் என்று இப்போதுதான் எனக்குப் புரிகிறது.''

"எப்படி?'' -நான் கேட்டேன்.

"காதலும் ஒரு குன்றிமணியைப் போலத்தான். பார்ப்பதற்கு ஆர்வத்தைத் தூண்டக் கூடிய ஒரு சிவப்பு நிற முத்து. ஆனால், அதற்குள் ஆயிரம் உணர்ச்சிகள். மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் உள்ள உண்மையான பைத்தியக்காரத்தனங்கள், முட்டாள்தனங்கள், கண்ணீர் கடல்கள், வாய்விட்டுச் சிரிக்கும் சிரிப்புகள், வேதனைகள்- இவை அனைத்தும் மறைந்து கிடக்கின்றன என்பதை இப்போதுதான் என்னால் தெரிந்துகொள்ள முடிந்தது.''

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

March 18, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel