Lekha Books

A+ A A-

நன்மைகளின் சூரியன் - Page 8

nanmaigalin suriyan

அவனுடைய உதடுகள் குளிர்ந்து போய் இருந்தன. எவ்வளவு நேரம் நாங்கள் அப்படியே நின்றிருந்தோம் என்று தெரியவில்லை. மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. முன்னால் பார்த்த டாலியா மலரின் தண்டு ஒடிந்து தொங்கிக் கொண்டிருப்பதுதான் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்தபோது முதலில் கண்களில் பட்டது.

"நான் புறப்படுகிறேன் டயானா'' -அவன் நெருப்பில் கால் வைத்ததைப் போல விலகி நின்றுகொண்டு சொன்னான்.

தொடர்ந்து ஏதாவது சொல்ல முயல்வதற்கு முன்பே நடந்து மறையவும் செய்தான். நான் சுய உணர்வை இழந்து நாற்காலியில் விழுந்தேன். எவ்வளவு கட்டுப்படுத்தியும் என்னால் அழாமல் இருக்க முடியவில்லை. எதற்காக அழுகிறேன் என்பதைக்கூட நான் சிந்திக்கவில்லை. புடவையின் நுனியை வாய்க்குள் வைத்துக் கொண்டு, நான் சத்தத்தை அடக்க முயற்சித்தேன். அதற்குப் பிறகும் ஒரு மெல்லிய அழுகைச் சத்தம் கேட்கத்தான் செய்தது. ஓ... ஓ... என்னுடைய ஷம்ஸ்! ஷம்ஸ்... ஷம்ஸ்...

இப்போதும் அந்த டாலியா மலர் அதே இடத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. நான் எழுந்தேன். என்னுடைய மடியில் இவ்வளவு நேரமாக இருந்தது என்று நான் கற்பனை பண்ணிக் கொண்டிருந்த ஷம்ஸின் கால்களை எடுத்து தள்ளி வைத்தேன். அந்த டாலியா மலரைக் கொய்து ஷம்ஸின் முடியில் வைக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு உண்டானது.

நான் அந்த பூவைப் பிடுங்கி, அவனுடைய தலைப் பகுதிக்கு கொண்டு வந்து, தலை இருக்கிறது என்று கற்பனை பண்ணிய இடத்தில் வைத்தேன். என்னுடைய கையிலிருந்து பிடியை விட்டு, அந்த மலர் கீழே விழுந்தது. எனினும், என்னால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் ஷம்ஸைப் பார்த்தேன். சுருண்டு கருமையான தலைமுடிக்கு மத்தியில் சிரித்துக் கொண்டிருக்கும் டாலியா மலரை நான் பார்த்தேன்.

அதே நிலையில் எவ்வளவு நேரம் நின்றேன்? மழைத்துளிகள் உடலில் விழுந்தபோதுதான் சுற்றுபுறத்தைப் பற்றிய புரிதலே உண்டானது. மீண்டும் மழை பெய்கிறது. நான் அந்த மலரை எடுத்து, மார்பில் சேர்த்து வைத்துக் கொண்டு படிகளில் இறங்கினேன். அந்த மலர்தான் ஷம்ஸ் என்று நான் கற்பனை பண்ணிக் கொண்டேன்.

அறைக்குள் வந்ததும் நான் படுக்கையறையின் விளக்கை "ஆன்" பண்ணினேன். மங்கலான வெளிச்சத்தில் நான் அந்த மலரைப் பார்த்தேன். இப்போது அது ஷம்ஸ் அல்ல என்று என்னால் நம்ப முடியவில்லை. என்னால் அதைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

நான் அந்த டாலியா மலரை மேஜையின்மீது வைத்தேன். மாலை நேரத்தில் தோட்டத்திலிருந்து பொறுக்கி எடுத்த மஞ்சள் நிற ரோஜா மலரின் இதழ்கள் அங்கு இருந்தன. நான் அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன். இருந்தவற்றிலேயே நிறம் குறைவாக இருந்த சுருண்ட ஒரு இதழ்... அதுதான் நான். மேரி வயோலா டயானா. ஒரு மிகப் பெரிய பணக்காரரின் யாருமே இல்லாத வளர்ப்பு மகள்.

மேஜைமீது இருந்த டாலியா மலரின்மீது நான் அந்த ரோஜா மலரின் இதழ்களை வைத்தேன். என்னுடைய விரல்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. அந்த மலரின் இதழ்கள் நான்தான் என்றும்; அந்த டாலியா மலர் ஷம்ஸ் என்றும் எனக்கு இப்போது முழுமையாகப் புரிந்தது. அவற்றை ஒன்றோடொன்று சேர்ப்பது என்று கூறும்போது...?

என்னுடைய உடல் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தது. இதயம் "படபட" என்று துடித்தது. யாராவது பார்க்கிறார்களா என்று நான் நான்கு பக்கங்களிலும் பார்த்தேன். இல்லை. யாரும் இல்லை. ஒரு பெரிய குறும்புத்தனத்தை வெளிப்படுத்துவதைப் போல, பூவிதழை டாலியா மலரின் நடுவில் இணைத்து வைத்தேன். சிவந்து மலர்ந்திருந்த டாலியாவின் மத்தியில் அந்த சிறிய ரோஜா மலரின் இதழ்கள் ஐக்கியமாகி விட்டதைப் போல எனக்குத் தோன்றியது.

மேஜைமீது இருந்த துண்டுத் தாளில் நான்கு என்று எழுதப் பட்டிருந்ததை அழித்து நான் ஐந்து என்று ஆக்கினேன். இன்று இரவில் ஐந்தாவது தடவையாக மழை பெய்து கொண்டிருந்தது. நான் உறங்காமல் படுத்திருந்தேன். ஒவ்வொரு முறை மழை பெய்யும்போதும் நான் அதைக் குறித்து வைத்தேன்.

கட்டிலில் வந்து படுத்தேன். ஆடைகள் நனைந்திருந்தன. எனினும், அதை மாற்றுவதற்கு சோம்பலாக இருந்தது. விளக்கை அணைக்காவிட்டால் சில நேரங்களில் ஆயா வந்து பார்ப்பாள் என்ற பயம் இருந்தாலும், நான் அதைச் செய்ய முயற்சிக்கவில்லை. இருட்டாகிவிட்டால் என்னால் அந்த மலர்களை எப்படிப் பார்க்க முடியும்? அவற்றைப் பார்க்காமல் என்னால் எப்படிப் படுத்திருக்க முடியும்?

மெத்தையில் கவிழ்ந்து படுத்துக் கொண்டே நான் மேஜையைப் பார்த்தேன். தூக்கம் என்ற விஷயத்தைப் பற்றி எனக்கு ஒரு நினைவே வரவில்லை. தலையணையை மார்புடன் சேர்த்து அழுத்தி வைத்துக் கொண்டு நான் படுத்திருந்தேன். என்னுடைய இதயம் அந்த தலையணையிடம் என்னவோ முணுமுணுப்பதைப் போல எனக்குத் தோன்றியது. மிகுந்த பாசத்துடன் நான் தலையணையின் மூலைப் பகுதியை முத்தமிட்டேன். "ஓ... என்னுடைய நன்மைகளின் சூரிய வடிவமே!" நான் தலையணையிடம் மெதுவான குரலில் சொன்னேன்: "நீங்கதான் கடவுள்!"

"நீ தேவதை" -தலையணை மெதுவான குரலில் கூறியது. தலையணை என்னைக் கட்டிப்பிடிப்பதைப் போல தோன்றியது. நான் அப்படியே படுத்துக் கொண்டு, மேஜை மேலே ஒன்றுக்கு மேல் ஒன்றாக இருக்கும் மலர்களையே பார்த்தேன். நாங்கள்... நாங்கள்... ஒரு ஆள் இன்னொரு ஆள்மீது கலந்து விட்டிருந்தோம்.

வெட்கம் தோன்றியது. உணர்ச்சி வசப்பட்டேன். உடலெங்கும் ஆயிரம் நாக்குகள் ஊர்வதைப் போல தோன்றியது. நான் கண்களை மூடிக் கொண்டேன். மூடிய கண் இமைகளுக்குள் ஏராளமான சூரியன்கள் உதித்து மேலே வந்து கொண்டிருந்தன.

6

காலையில் நீண்ட நேரம் ஆனபோது ஆயா என்னைத் தட்டி எழுப்பினாள். எனக்கு சரியான தூக்கம் இல்லை. அவள் எதுவும் புரியாமல் அறை முழுவதையும் வெறித்துப் பார்ப்பதை நான் பார்த்தேன். மேஜைமீது மலரும் மலருக்குள் ஒட்டிக் கிடந்த சுருண்ட பூவிதழ்களையும் பார்த்தால் அவளுக்கு எதுவும் புரியாது. ஒன்று முதல் எட்டு வரை எண்களை எழுதி அழித்திருக்கும் துண்டுத்தாள் இருந்தது. என்னுடைய கதையைத்தான் கூறுகிறேன் என்று ஆயாவிற்குத் தெரியாது. மழையில் நனைந்த என்னுடைய ஆடைகள், எந்த நிலையில் இருக்கும் ஒரு பைத்தியக்காரத்தனத்தின் அடையாளங்கள் என்று அவளுக்குப் புரியாது. என்னுடைய உறங்காத கண்களும் உறக்கக் களை விழுந்திருந்த கன்னங்களும் எதன் அடையாளங்கள் என்று ஆயாவிற்கு எப்படிப் புரியும்?

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

February 13, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel