Lekha Books

A+ A A-

நன்மைகளின் சூரியன் - Page 12

nanmaigalin suriyan

நாங்கள் மீண்டும் அமைதியானவர்களாக ஆனோம். மிகவும் தூரத்தில், நதிக்கு மேலே இருந்த பாலத்தின் வழியாக ஒரு புகைவண்டி ஓசை எழுப்பியவாறு கடந்து போய்க் கொண்டிருந்தது. அதன் சத்தம் குறைந்து குறைந்து, இறுதியில் நாத பிரம்மத்திலிருந்து வரும் ஒரு ஓசையாக மட்டும் என்று மாறியபோது ஷம்ஸ் மெதுவான குரலில் சொன்னான்: "நான் நேற்று தூங்கவேயில்லை.''

அதைச் சொன்னபோது அவன் தலை குனிந்திருந்தான். பார்ப்பதற்கு ஆர்வத்தைத் தூண்டக்கூடிய ஒரு வெட்கம் அந்தக் கழுத்தில் பரவி விட்டிருப்பதை நான் கவனித்தேன்.

ஷம்ஸ் நேற்று தூங்கவில்லை. இது நான் எதிர்பார்த்திராத ஒன்று என்று கூறுவதற்கில்லை. காரணம்- நேற்று இரவில் நான் அனுபவித்த மன வேதனைகளையும் குழப்பங்களையும் ஒரு குறைந்த அளவிலாவது அவனும் அனுபவித்திருப்பான் என்று எனக்கு எப்படியோ உறுதியாகத் தெரிந்திருந்தது.

"நான் புறப்படட்டுமா?'' -அவன் எழுந்தான்.

"உட்காருங்க'' -என்னால் கட்டாயப்படுத்தாமல் இருக்க முடியவில்லை. "இன்னும் கொஞ்ச நேரம் உட்காருங்க.''

"எதற்கு?''

"போய்விட்டால்... போய்விட்டால்... எனக்கு கவலை வந்திடும்.''

"எப்போதாவது போகாமல் இருக்க முடியாதே?'' ஷம்ஸ் சிரித்தான். அவனுடைய குரலில் என்னைக் குறித்து கொண்ட இரக்கம் வெளிப்பட்டது.

"உண்மைதான்'' -நான் முணுமுணுத்தேன். "ஆனால், என்னால் விடத் தோன்றவேயில்லை.''

என்னுடைய கண்களில், எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை- கண்ணீர் வந்து நிறைந்தது. கண்களின் அடிப்பகுதியில் சற்று நேரம் தங்கியிருந்துவிட்டு, அது மெதுவாகக் கீழ் நோக்கி வழிந்தது.

ஷம்ஸ், கேட்டை நோக்கி நடந்து கொண்டே சொன்னான்: "தாமதமானால் ஹாஸ்டலில் பிரச்சினை வரும். நான் நாளைக்கு வர்றேன்.''

நானும் அவனுடன் சேர்ந்து எழுந்தேன். இல்லை... எனக்கு அவனைப் பிடித்து நிறுத்துவதற்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை. அதைச் செய்ய என்னால் முடிந்திருந்தால், அந்த இடுப்பைச் சுற்றிப் பிடித்து இழுத்து, அந்த உடலை என்னை நோக்கி இணைத்திருப்பேன். இந்தப் புல் பரப்பும் தூங்கிக் கொண்டிருக்கும் குன்றிமணிகளும் இன்று இரவு முழுவதும், ஆழமான இன்பத்தின் அடிமைகளாக ஆகிவிட்டிருப்பார்கள்.

"காலையில் நான் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன்.'' வெளி வாசல் கதவை நெருங்கியபோது, ஷம்ஸ் சொன்னான். தொடர்ந்து சாலையில் கால் வைத்து, "நல்ல இரவு'' கூறிவிட்டு, நனைந்து உறங்கிக் கொண்டிருந்த விளக்குக் கால்களுக்கு அடியில் நேராக நடந்து சென்றான். இறுதியாக, வளைவில் திரும்பி மறைந்தும் போனான்.

நான் கேட்டிலேயே சாய்ந்துகொண்டு நின்றிருந்தேன். இதயம் தாழ்ந்த அளவில் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தது.

பாலைவனத்திற்கு மத்தியில் சிக்கிக் கொண்ட, தனிமைப்பட்டு விட்ட, பயணம் செய்யும் பெண்ணாக நான்...

யாருமே இல்லாத தீவில் மாட்டிக்கொண்ட நடனப் பெண்ணின் கவலை... இப்போது நான் அனுபவிக்கும் வேதனை.

என்னுடைய கைக்குள் ஒரு குன்றிமணி கிச்சுக்கிச்சு மூட்டிக் கொண்டு இருந்தது. அவனிடமிருந்து நான் வாங்கிய அழகான செல்வம்... அது என்னுடைய உயிராக ஆகிவிட்டது. அவனுடைய கைவிரல்களுக்குள் சிக்கிய அதிர்ஷ்டத்தைப் பெற்ற அழகுப் பொருள் அது.

நான் ஏங்கினேன். எனக்குக் கிடைக்காத உயர்ந்த செல்வங்களைச் சொந்தத்தில் வைத்திருக்கும் ஒரு உயிரற்ற பொருள்.

நான் அதையே நீண்ட நேரம் பொறாமை கலந்த விழிகளுடன் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். தொடர்ந்து மரக்கிளைகளில் காற்றின் இரைச்சல் சத்தம் அதிகமாவதையும், இரவு கோள்கள் மழையைத் தங்களுடைய படுக்கையறைக்கு ரகசியமான மொழியில் அழைத்து வரவழைப்பதையும் கேட்டதும் அவசர அவசரமாக வீட்டை நோக்கி நடந்தேன்.

வெளியே இரவு உறங்கிக் கொண்டிருந்தது. இடையில் அவ்வப்போது மழையின் குறும்புத்தனமான கைகள் நீண்டுகொண்டு வந்து கிச்சுக்கிச்சு மூட்டும்போது மட்டும் அது சற்று அசைந்து கொண்டிருந்தது. இரவைத் தட்டி எழுப்பும் மழையின் முத்தத்தைக் கேட்டேன். கண் விழித்து எழும் இரவின் வெப்ப மூச்சுகளைக் கேட்டேன். இரவு உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தது.

எனக்குத் தூக்கம் வரவில்லை. சாளரத்தின் அருகில், வெளியே இருட்டைப் பார்த்துக்கொண்டு, தவித்துக்கொண்டிருக்கும் இதயத்துடன் நான் நிற்கிறேன். என்னுடைய கையில் இருந்த குன்றி மணி, என்னுடைய நன்மைகளின் சூரியனைப் பற்றி எப்போதும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது.

நான் அந்தக் குன்றிமணியின்மீது முத்தமிட்டேன். அப்போது ஷம்ஸின் நீளமான சிவப்பு விரலின் வாசனை என்னுடைய மூளையில் வந்து நிறைவதைப் போல எனக்குத் தோன்றியது. ஆழமான ஒரு ஞாபகத்தைப் போல, இந்தக் குன்றிமணி என்னை சோர்வடையச் செய்கிறது. நான் இதை ஒரு தங்கத்தால் ஆன பெட்டிக்குள் வைத்து, விலை மதிப்புமிக்க காதல் பரிசைப் போல, இறுதி மூச்சு வரை பத்திரப்படுத்தி வைப்பேன்.

நிமிடங்கள் பைத்தியக்காரத்தனத்தை உருவாக்கிக் கொண்டிருந்தன. பைத்தியக்காரத்தனத்தின் ஆழம் நேரம் செல்லச் செல்ல அதிகரித்துக் கொண்டே வந்தது. எனக்கு என்ன காரணத்தாலோ அவசரம் தோன்றியது. அனாவசியமான சிந்தனைகள் மனதை நிறைக்கின்றன என்பதைத் தெரிந்துகொண்டே நான் அவற்றை உற்சாகப்படுத்தினேன்.

ஷம்ஸின் விரல்களுக்கு மத்தியில் இருந்து தவித்துக் கொண்டிருந்த இந்த சிவப்பு அழகு, என்னுடைய உடலின் ஒரு பகுதிதான் என்று தோன்றியது. நான் அதை எடுத்து, என்ன செய்கிறேன் என்பதைப் பற்றிய தெளிவான அறிவே இல்லாமல் ரவிக்கைக்குள், ப்ரேஸியருக்குள் வைத்தேன். என்னுடைய உடலில் இருந்து எப்படியோ பிரிந்து சென்ற உடலின் ஒரு பகுதி, சுற்றித் திரிந்துவிட்டு, அடைய வேண்டிய அனைத்தையும் அடைந்துவிட்டுத் திரும்பி வந்து அதன் ஆரம்ப இடத்தை அடைந்திருக்கிறது என்று எனக்குத் தோன்றியது.

என்னுடைய ஆடைகளுக்குள் இரண்டு விரல்கள் எதற்கோ தேடி ஊர்கின்றன என்றும்; என்னுடைய உடல் சுகமான ஏதோ சுய உணர்வற்ற பகுதியில் விழுந்து கிடக்கிறது என்றும் நான் எனக்குள் கூறி நம்ப வைக்க முயற்சித்தேன். அத்துடன் தாகமெடுத்து உறங்கிய இதயம் கண்விழித்து ஒரே மூச்சில் தாக நீர் முழுவதையும் வேகமாகக் குடித்து, மீண்டும் உறக்கத்தில் மூழ்கிவிட்டது.

திரும்பவும் கட்டிலில் வந்து படுத்து சந்தோஷத்தால் தேம்பித் தேம்பி அழுதபோது, வெளியே மூன்றாவது ஜாமத்தின் மழை, துளித் துளியாக வந்து விழுந்து கொண்டிருப்பதைக் கேட்க முடிந்தது.

உணர்ச்சிவசப்பட்ட நிலையில், இரவில் எனக்கு மட்டும் புரியக்கூடிய மொழியில் என்னவோ முணுமுணுத்துக் கொண்டிருந்தேன்- பொழுது புலரும் வரை.

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

March 18, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel