Lekha Books

A+ A A-

நன்மைகளின் சூரியன் - Page 10

nanmaigalin suriyan

எனக்கு ஏமாற்றம் உண்டானது. என்னுடைய மிகவும் நெருக்கமான தோழிதான் அழைக்கிறாள். எனினும், இந்தச் சந்தர்ப்பத்தில் அவள் அழைத்திருக்க வேண்டியதில்லை என்று தோன்றியது.

"அங்கே என்ன பண்ணுறே?'' அருணா கேட்டாள்.

"ஒண்ணுமில்ல... இப்பத்தான் கண்விழிச்சேன்.''

"இவ்வளவு நேரமாகியுமா?'' அவள் குலுங்கிக் குலுங்கி சிரித்தாள். "என்ன... ஏதாவது பிரச்சினையா?''

நான் கவலை நிறைந்த சிரிப்பு சிரித்தேன். அருணா மிகவும் குறும்புத்தனமான குணத்தைக் கொண்டவள். என்ன சொன்னாலும் அவளுடைய அறிவு மேலும் வளைந்திருக்கும் வழியில்தான் பயணம் செய்யும்.

"இன்னைக்கு என்ன திட்டம்?''

நான் சொன்னேன்: "ஒண்ணுமில்லை. வேணும்னா புக் ஸ்டாலுக்குப் போய் டெனிஸ் ராலின்ஸ் எழுதிய புதிய புத்தகங்கள் ஏதாவது வந்திருக்கிறதா என்று பார்க்கலாம்.''

"சரி... நான் அங்கே வர்றேன். நேரத்தைச் செலவிடுவதற்கு என்ன வழி என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.''

அவள் தொலைபேசியைக் கீழே வைத்தாள். அவள்மீது எனக்கு பரிதாப உணர்ச்சி தோன்றியது. பாவம்! என்னைப் போலவே கல்லூரிப் படிப்பை இடையில் நிறுத்திவிட்டு வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். ஆனால் ஒரு வேறுபாடு இருக்கிறது. என்னால் படிக்க முடியவில்லை என்று நான் படிப்பை நிறுத்தினேன். அருணாவைப் பொறுத்தவரையில், அவள் படிப்பதற்கு ஆசைப்பட்டாள். ஆனால், அவளுக்கு கல்லூரிக்குச் செல்ல முடியாத சூழ்நிலை உண்டானது. ஏதோ ஒரு நண்பனுடன் அவள் காதல் வயப்பட்டாள். அவர்கள் இருவரையும் ஒன்றாக ஒருநாள் திரை அரங்கில் இருக்கும்போது கல்லூரியில் படிக்கும் வேறு சில மாணவர்கள் பார்த்துவிட்டார்கள். அப்போதிலிருந்து அருணாவால் கல்லூரியின் படிகளில் ஏற முடியவில்லை. கேலியையும் கிண்டலையும் பொறுத்துக் கொள்ள முடியாது என்ற நிலை வந்தபோது அவள் படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டாள்.

அருணாவைப் போன்ற இளம்பெண்ணுக்கு இப்படி வெறுமனே உட்கார்ந்திருப்பது என்பது எந்த அளவிற்குத் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு விஷயமாக இருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. அவளைப் பொறுத்த வரையில் நேரத்தைக் கடத்துவது என்பது மிகவும் சிரமமான ஒரு விஷயம்தான். ஆனால், என்னுடைய கதை அது அல்ல. நேரம் முன்னோக்கிப் போகக்கூடாது என்ற பிரார்த்தனை மட்டுமே என்னிடம் உள்ளது. ஒவ்வொரு நிமிடம் முடியும்போதும் நான் நேற்று இரவில் இருந்து எந்த அளவிற்கு விலகிச் செல்கிறேன் என்றும்; அதன் நினைவுகள் என்னுடைய அனுமதி இல்லாமல் மூளையில் மறைந்து கொண்டிருக்கின்றன என்றும் எனக்குத் தோன்றியது.

வாழ்க்கை அந்த ஒரே ஒரு நிமிடத்திலேயே துடித்துக் கொண்டே நின்று கொண்டிருந்தால்...! முன்னோக்கி நகராமல், அணை கட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நீரைப் போல, ஓடிக் கொண்டிராத வாழ்க்கை நன்மைகளின் சூரியனைச் சுற்றிப் பிணைக்கப்பட்டு இருந்தால்...!

8

ருணா வந்தபோது நான் காலைச் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். இன்று அவள் மிகவும் அழகாக இருந்தாள். இளம் நீல நிறத்தில் இருந்த புடவையை இறுக்கமாகச் சுற்றியிருந்தாள். அடர்த்தியான நீல நிற ப்ளவ்ஸில் ஆங்காங்கே அவளுடைய வியர்வை பட்டிருந்தது தெரிந்தது.

அருணாவின் சிரிப்பு ஒரு தனி வகையைச் சேர்ந்தது. இந்த அளவிற்கு வசீகரிக்கக்கூடிய விதத்தில் சிரிக்கக்கூடிய எந்தவொரு இளம்பெண்ணையும் நான் இதுவரையில் சந்தித்ததில்லை.

அவளுடைய மேல்வரிசையில் நடுவில் இருக்கும் இரண்டு பற்களுக்கு மற்ற பற்களைவிட சற்று நீளம் அதிகம். எனினும் சிறிதும் வெளியே அவை உந்திக் கொண்டு தெரியவில்லை. மற்ற பற்கள் அவற்றுக்கு பின்புலம் அமைப்பதற்காக மட்டுமே வரிசையில் இருப்பதைப் போல தோன்றும்.

"இன்னைக்கு நாம் பேருந்தில் சென்றால் போதும்'' -அருணா வந்தவுடன் சொன்னாள்.

"கார் இருக்கு!''

"வேண்டாம்... பேருந்து போதும்... அதுதான் சுவாரசியமானது!''

அவள் எதற்காக அப்படிக் கூறுகிறாள் என்று எனக்குத் தெரியும். அருணாவைப் பொறுத்தவரையில், நான் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடிய ஒரே ஒரு விஷயம் இதுதான். கூட்டம் அதிகமாக இருக்கும் பேருந்தில், இளைஞர்களின் உடலில் உரசிக் கொண்டு நிற்பதில் அவளுக்கு விருப்பம் இருந்தது.

திரை அரங்கத்தில் இருக்கும்போதுகூட ஏதாவது கால்கள் பின்னால் இருந்து வந்து உரசினால், அவள் அந்தச் செயலை உற்சாகப்படுத்தவே செய்வாள். நான் பல நேரங்களில் இந்த விஷயத்தைச் சொல்லி அவளுடன் சண்டை போட்டிருக்கிறேன். அவள் ஒப்புக்கொள்ள மாட்டாள். அதனால் பெரிய இழப்பு ஒன்றும் உண்டாகிவிடப் போவதில்லையே என்று அவள் கூறுவாள்.

என்னைப் பொறுத்த வரையில், இந்தப் பேருந்துகளில் இருக்கும் கூட்டத்தைப் பொறுத்துக் கொள்ளவே முடியாது. முதலில் தயங்கித் தயங்கி... பிறகு... படிப்படியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பின்னால் இருந்து உரசும் ஆணின் உடல் எனக்கும் தெரிந்ததுதான். எனினும், சற்று நேரம் கடக்கும்போது அவர்களுடைய வியர்வையின் நாற்றமும் வெளிப்படும் ஆண்மைத்தனமும் என்னிடம் முழுமையான வெறுப்பை உண்டாக்கும்.

அருணா நேராக ஒப்பனை அறைக்குள் சென்றாள். தோல் பைக்குள் இருந்து உதட்டுச் சாயத்தை எடுத்து மீண்டும் ஒருமுறை உதடுகளுக்கு மேல் அதைப் பூசினாள்.

இந்த இளம் பெண்ணுக்கு அழகு விஷயத்தில் எந்த அளவிற்கு ஈடுபாடு இருக்கிறது என்று பல நேரங்களிலும் நான் ஆச்சரியப் பட்டிருக்கிறேன். ஒரு வகையான பைத்தியக்காரத்தனமான வெறி.

திடீரென்று நான் ஷம்ஸைப் பற்றி நினைக்க ஆரம்பித்தேன். எந்தச் சமயத்திலும் தன்னுடைய அழகான தோற்றத்தைப் பற்றிய எண்ணத்துடன் அவன் இல்லவே இல்லை என்று தோன்றுகிறது. மிகவும் சாதாரணமான ஆடைகளும் ஹேர் ஸ்டைலும் அதைத்தான் வெளிப்படுத்துகின்றன.

எனக்கு எதையும் சாப்பிட வேண்டும் என்றே தோன்றவில்லை. மனம் ஷம்ஸால் நிறைந்திருக்கிறது. பசியே தோன்றவில்லை. இப்போது என்னுடைய நன்மைகளின் சூரியன் என்ன செய்து கொண்டிருப்பான்? கல்லூரிக்குச் சென்றிருப்பானோ? இல்லாவிட்டால் அதற்கான தயாரெடுப்பில் இருப்பானா?

அடுத்த நிமிடம் நான் எழுந்து கையைக் கழுவி விட்டு, தொலைபேசிக்கு அருகில் சென்றேன். நேற்று, தான் தங்கியிருக்கும் ஹாஸ்டலின் தொலைபேசி எண்ணை ஷம்ஸ் என்னிடம் கூறியிருந்தான்.

அந்த நான்கு எண்களும் இதயத்தில் ஆணியடித்து பதிந்து விட்டதைப் போல தெளிவாக இருந்தன.

"யார் வேணும்?''

"ஷம்ஸ்- என்- மஹாலி. லெபனானில் இருந்து...''

"புரியுது...'' -அந்தப் பக்கத்திலிருந்து பதில் வந்தது.

"அறையில் இருக்கிறாரா என்று பார்க்கிறேன்''.

நான் எந்தவித அசைவும் இல்லாமல் நின்றுகொண்டிருந்தேன். எந்த நொடியிலும் தொலைபேசியின் இன்னொரு மூலையில் இருந்து ஷம்ஸின் குரல் என்னுடைய காதுகளில் வந்து விழும். நாங்கள் இருவரும் வேறு யாரும் கேட்காமல் நேரடியாகக் காதுகளுக்குள் ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ளப் போகிறோம்.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

February 13, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel