Lekha Books

A+ A A-

நன்மைகளின் சூரியன் - Page 14

nanmaigalin suriyan

"என்ன தோன்றியது?'' -அவள் ஷம்ஸிடம் கேட்டாள்.

அவனும் என்னைப் போலவே பதில் எதுவும் இல்லாமல் தத்தளிப்பதை நான் பார்த்தேன். பிறகு அவன் சொன்னான்.

"உண்மைதான். மிகவும் போர்தான்...''

அருணா மீண்டும் என்னை நோக்கித் திரும்பினாள்: "டயானா, உனக்கு என்ன தோன்றியது?''

"மோசமாக இருக்கு'' -நான் பொய் சொன்னேன். "அப்படியென்றால் நாம புறப்படுவோம். எனக்கு ரொம்பவும் தலை வலிக்குது.'' அவள் கூறியது பொய் என்றும்; என்மீது கொண்ட அதிகமான பொறாமையால் மட்டுமே அப்படிக் கூறினாள் என்றும் எனக்கு நன்கு தெரிந்தது.

"உட்காரு. அடுத்த பாதியையும் பார்த்து விடுவோம்- எப்படி இருக்கிறது என்று.''

"வேண்டாம். நான் அதற்குத் தயாராக இல்லை'' -அருணா சொன்னாள்: "அடுத்த பாதி இன்னும் மோசமாக இருக்கும். இதைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்க என்னால் முடியாது.''

அவள் அர்த்தம் வைத்துக்கொண்டு பேசுகிறாள் என்பதை நான் புரிந்து கொண்டேன். என்னுடைய தோழி என்னைப் பற்றி இப்படிக் கூறி விட்டாளே என்று நான் வருத்தப்பட்டேன். எதுவும் கூறாமல் தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

"நீங்கள் இரண்டு பேரும் வரவில்லையென்றால், வேண்டாம் நான் புறப்படுகிறேன்.''

"எப்படிப் போவாய்?'' -நான் கேட்டேன். என்னுடைய காரில்தான் அருணாவும் வந்திருந்தாள்.

"வாடகைக் கார் கிடைக்குமே!'' -அவள் எழுந்து விட்டாள்.

"அய்யோ... அது வேண்டாம்... நானே கொண்டு வந்துவிடுகிறேன்.''

"வேண்டாம்'' -அருணா நடக்க ஆரம்பித்தாள்.

நான் ஷம்ஸின் முகத்தையே பார்த்தேன். அவன் என்ன செய்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருந்தான்.

"அருணா எல்லாவற்றையும் பார்த்துவிட்டாள் என்று தோன்றுகிறது'' -நான் குரலை அடக்கிக் கொண்டு மெதுவான குரலில் சொன்னேன்.

"இனி எந்தவித காரணத்தைக் கொண்டும் நாம இருக்க வேண்டாம்'' -ஷம்ஸ் சொன்னான்.

"அடுத்த முறை வரும்போதாவது தோழிகளை அழைத்துக்கொண்டு வராமல் இருக்கணும்.''

நான் எழுந்தேன்: "அருணா...'' அருணா கதவை நெருங்கியிருந்தாள். அவள் திரும்பி நின்று ஒரு எதிரியைப் பார்ப்பதைப் போல என்னைப் பார்த்தாள்.

"நானும் வர்றேன்'' -நான் சொன்னேன். திரும்பவும் அவளுடைய வீட்டை அடையும் வரை நாங்கள் ஒருவரோடொருவர் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. தனக்குத் தாங்க முடியாத அளவிற்குத் தலைவலி இருக்கிறது என்றும்; மதியத்திற்குப் பின்னால் தொலைபேசியில் பேசுவதாகவும் சொன்ன அருணா தன் வீட்டிற்குள் சென்றாள்.

போகும் வழியில், கடற்கரையில், யாருமே இல்லாத, காற்று நிறைந்த சாலையை அடைந்ததும் நான் காரை நிறுத்தினேன். ஸ்டியரிங் வீலின் மீது தலையை வைத்துக்கொண்டு நீண்ட நேரம் அழுதேன்.

11

"எனக்கு அருணா ஃபோன் பண்ணினாங்க'' -ஒரு சாதாரண சம்பவத்தைக் கூறுவதைப் போல அவன் சொன்னான்.

"எப்போ?'' -நான் கேட்டேன்.

"நேற்று.''

"எதற்கு?''

"மன்னிப்பு கேட்குறதுக்காக...''

"ஏன்?''

"அன்னைக்கு திரை அரங்கில் இருக்குறப்போ அப்படி நடந்து கொண்டதற்காக.''

அதிர்ச்சியடைந்து விட்டேன். அருணா! அவள் மன்னிப்பு கேட்க வேண்டியது ஷம்ஸிடம் இல்லையே! அதற்குப் பிறகு என்னிடம் இதுவரை எதுவும் பேசவில்லை. பிறகு... இப்போது?

"நீ ஏன் ஒரு மாதிரி ஆயிட்டே?'' -ஷம்ஸ் கேட்டான்.

"ஒண்ணுமில்ல...'' -நான் அதற்கு மேல் பேச விரும்பவில்லை.

நாங்கள் மீண்டும் ஈரமான மணலின்மீது நடக்க ஆரம்பித்தோம். கடலுக்கு மேலே மழை பெய்து கொண்டிருந்தது. ஒரு மது அருந்திய மனிதனைப் போல சாரல் மழை இடையில் அவ்வப்போது கரையிலும் விழுந்து கொண்டிருந்தது.

என்னுடைய ஸ்கர்ட் முழுமையாக நனைந்துவிட்டிருந்தது. ஷம்ஸின் வற்புறுத்தல் காரணமாகத்தான் புடவைக்கு பதிலாக இதை எடுத்து அணிந்துகொண்டு வந்திருந்தேன். எந்தச் சமயத்திலும் எனக்கு இது பிடிக்கவே பிடிக்காது.

கடற்கரையில் யாரும் இல்லை. குளிக்கும் இடத்தில் இரண்டு வெள்ளைக்காரிகள் குளிக்கும் ஆடைகள் மட்டும் அணிந்து குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய உடம்பைப் பார்ப்பதற்காக மழைச்சாரலில் நனைந்தவாறு சில ஊர் சுற்றிச் சிறுவர்கள் நின்றிருந்தார்கள்.

"இவர்களைப் பார்க்குறப்போ...'' -ஷம்ஸ் அந்தச் சிறுவர்களைச் சுட்டிக் காட்டியவாறு சொன்னான்: "நான் செபாஸ்டியனை நினைக்கிறேன்.''

"எந்த செபாஸ்டியன்?''

"டென்னஸ்ஸி வில்லியம்ஸின் ஸடன்லி லாஸ்ட் ஸம்மரை வாசிக்கலையா? அதில் ஒரு கவிஞன் வருவான்- மனதில் அமைதி இல்லாமல்...''

ஷம்ஸ் அந்த கதாபாத்திரத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான். நான் இந்த மாதிரியான புத்தகங்கள் எதையும் வாசிப்பதில்லை. டெனீஸ் ராபின்ஸோ ரூபி எம். ஏயேர்ஸோ ஹரால்ட் ராபின்ஸோ எனக்குப் புரியும். மற்ற எதுவும்...

"நானும் அதைப் போல கவலையில் இருப்பவன். என்னுடைய பலத்தின்மீது எனக்கே நம்பிக்கை இல்லை. ஏதாவதொரு இளம் பெண் சிறிதளவு மனதைக் கவர்ந்துவிட்டால் நான் அவளுடைய அடிமையாக ஆகிவிடுவேனோ என்று எனக்கு பயம் வந்துவிடும்.''

கடலில் இருந்து ஒரு குளிர்ச்சியான காற்று கடந்து வந்தது. நாங்கள் நடந்து கொண்டிருந்த கரையின் வழியாக காற்றின் குளிர்ச்சி பாய்ந்து செல்வதைப் பார்த்தேன். ஒரு நனைந்த மதிய வேளை. அதனால் தென்னை மரங்களுக்கு மேலே சூரியனின் வெளிச்சம் தங்கி இருந்தது.

"மழை பலமா வருது'' -ஷம்ஸ் சொன்னான்.

"பலமா வரட்டும்.''

"நாம நனைந்து குளித்து விடுவோம்.''

"நனையட்டும்.''

"காய்ச்சல் வரும்.''

"வரட்டும்.''

"பிறகு... இறந்துவிட்டால்...?''

"இறந்து விட்டுப் போவோம்'' -நான் திடீரென்று ஷம்ஸின் கைகளைப் பற்றி நிறுத்திவிட்டு, அந்த முகத்தையே பார்த்தேன்.

நனைந்த சுருண்ட முடிகள் நெற்றியில் சிதறிக் கிடந்தன. மூக்கின் நுனியில் ஒரு மழைத்துளி கீழே விழாமல் தொங்கி, நடுங்கிக் கொண்டு நின்றிருந்தது.

ஆள் அரவமற்ற கடற்கரை. மதிய நேரத்தின் வெப்பத்தை உணராத உப்புக் காற்று. தொடர்ந்து பெய்துகொண்டு இரைச்சலிடும் மழை.

நான் அந்த மார்பின்மீது சாய்ந்தேன். என்னுடைய முகத்தை அந்த சட்டையின்மீது வைத்தேன். ஷம்ஸ் ஒரு முறை என்னுடைய முகத்தைப் பிடித்து உயர்த்த முயற்சித்தான். ஆனால், நான் அதற்கு சம்மதிக்கவில்லை. இந்த நிலை முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டிருந்தால்...! ஒரு முத்தம் இதற்கு ஒரு முடிவாக இல்லாமல் இருக்கட்டும்!

அப்படியே எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நின்று கொண்டிருக்கலாம் என்று தோன்றியது. உணவு இல்லாமல், தூக்கம் இல்லாமல், அசைவு இல்லாமல் ஏதோ சிற்பியின் கண்ணுக்குத் தெரியாத கை வண்ணத்தைப் போல ஒருவரையொருவர் இறுகக் கட்டியணைத்துக் கொண்டு கற்பனைக்கு எட்டாத காலம் வரைக்கும் இப்படியே நின்று கொண்டிருக்க இயலுமானால்...! இரைச்சலிடும் அலைகளாலும் அடித்து போய்க் கொண்டிருக்கும் காற்றாலும் எதுவும் செய்ய முடியாத அசைவே இல்லாத ஒரே ஒரு சிலையைப் போல-என்னுடைய கண்ணில் ஒரு துளி கண்ணீர் அரும்பி திரண்டு நின்றது. கீழே விழ சம்மதிக்காமல், கன்னத்திற்குச் சற்று மேலே அது நின்றிருந்தது.

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

March 18, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel