Lekha Books

A+ A A-

நன்மைகளின் சூரியன் - Page 18

nanmaigalin suriyan

நான் அவளுடைய மடியில் மல்லார்ந்து படுத்துக் கொண்டு ஒரு கதை கேட்கும் ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்தேன். நல்ல ஆயா. என்னுடைய நல்ல நல்ல ஆயா.

வெளியே வெயில் அதிகரித்துக் கொண்டிருந்தது. சாளரத்தின் வழியாக வானத்தின் ஒரு நீல நிறப் பகுதியைப் பார்க்க முடிந்தது. அங்கு இரண்டு பருந்துகள் வட்டம் போட்டுக் கொண்டிருந்தன.

"எழுந்து குளி.'' ஆயா சொன்னாள்: "இன்றைக்கு தேவாலயத்துக்கு செல்ல வேண்டாமா?''

அப்போதுதான் இன்று ஞாயிற்றுக்கிழமை என்ற விஷயமே எனக்குத் தெரிய வந்தது. கடந்த சில ஞாயிற்றுக்கிழமைகளில் நான் தேவாலயத்திற்குச் செல்லவே இல்லை. அப்பா அழைக்கும் போதெல்லாம் நான் ஏதாவது பொய்யைக் கூறிவிட்டு தப்பித்துக் கொள்வேன்.

"அப்பா போய் விட்டாரா?'' நான் கேட்டேன்.

"இல்லை. காப்பி குடித்துக் கொண்டிருக்கிறார்.''

"அப்படியென்றால் நானும் வருகிறேன் என்று சொல்றீங்களா?''

"சரி... சீக்கிரம் தயாராகு...''

ஆயா வெளியேறினாள். எனக்கு ஏதாவது தோழியை அழைக்க வேண்டும் போல இருந்தது. இப்போது நான் யாருடன் வேண்டுமானாலும் பேசலாம். ஷம்ஸுடன் கூட எந்தவொரு நடுக்கமும் இல்லாத குரலில் பேச முடியும் என்ற தைரியம் எனக்கு இப்போது இருக்கிறது.''

படிகளில் இறங்கிக் கீழே இருக்கும் அறைக்குள் சென்றேன். தொலைபேசிக்கு அருகில் சென்ற பிறகுதான் யாரை அழைப்பது என்ற விஷயத்தைப் பற்றிய சந்தேகமே தோன்றியது. ஷம்ஸ்? சிராங்கோ? ஜாஸ்மின்? கிரிஜா? விமலா? அருணா?

அருணா.

அருணா கேட்டாள்: "யாரு பேசுறது?''

"யார் என்று தோணுது?'' குரலை மிகவும் கம்பீரமாக ஆக்குவதற்கு எனக்கு எந்தவொரு சிரமமும் இருந்ததாகத் தெரியவில்லை.

"டயானா?'' அருணாவின் குரல் பதைபதைப்புடன் கேட்பதைப் போல இருந்தது.

நான் உரத்த குரலில் -மிகவும் உரத்த குரலில் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தேன். ஒரு நிமிடம்.

நான் தொலைபேசியை மேஜையின்மீது வைத்துவிட்டு, கதவை நோக்கி நடந்தேன். கதவை அடைத்து, தாழ்ப்பாள் போட்ட பிறகும் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்தேன்.

இன்னொரு முனையில் அருணாவின் பதைபதைப்பு ஒவ்வொரு நிமிடமும் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை என்னால் உணர முடிந்தது. அவளுடைய முகம் தாளின் நிறத்தில் இருக்கும். அதில் எனக்கு குரூரமான ஒரு திருப்தியும் சந்தோஷமும் தோன்றின.

"அருணா...'' நான் மீண்டும் தொலைபேசியை எடுத்தேன். தொடர்ந்து அவள் எதுவும் கூறத் தொடங்குவதற்கு முன்பு அவளை அழைத்துக் கேட்டேன்: "என்னுடைய காதலர் நலமாக இருக்கிறாரா?''

"வாட் டூ யூ மீன்?'' அருணாவின் குரலில் பதைபதைப்பு இருந்தது.

"என்னுடைய காதலரை நீ தட்டிப் பறித்துவிட்டாய் அல்லவா? அவர் எப்படி இருக்கிறார் என்று நான் கேட்கிறேன்.''

அந்த முனையிலிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை.

"அருணா, இது பாவம் இல்லையா? இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை அழிக்கக் கூடிய செயலை நீ செய்து விட்டாயே?''

"டயானா, நீ எந்த அளவிற்கு முட்டாள்தனமாகப் பேசிக் கொண்டிருக்கிறாய்?''

"எதுவும் முட்டாள்தனமில்லை.''

"ஷம்ஸ் என்னைக் காதலித்தது என்னுடைய குற்றமா?''

"இல்லை.... உன்னுடைய சாமர்த்தியம் மட்டுமே.''

அவள் நீண்ட பெருமூச்சை விடுவது காதில் விழுந்தது. நான் சீண்டிக் கொண்டு சிரித்தேன். "அந்த ஆளை இனிமேல் எனக்கு நீ விட்டுத்தர மாட்டாயா?''

"நான் தொலைபேசியை வைக்கப் போகிறேன்.''

"அதற்கு முன்பே... இதோ...'' -நான் தொலைபேசியைக் கீழே வைத்தேன். தொடர்ந்து மேஜையின்மீது தலையை வைத்துக் கொண்டு நீண்ட நேரம் சிரித்தேன்.

பாவம் அருணா.

அவள் நான் கடந்து சென்ற பாதையின் வழியாகப் பயணத்தை ஆரம்பித்திருக்கிறாள். அவ்வளவுதான். இனி கடந்து செல்வதற்கு எவ்வளவோ காலம் இருக்கிறது. அவளுடைய மனம் இப்போது ஒரு போராட்டக்களமாக இருக்கும். கடுமையான போர் அங்கு நடந்து கொண்டிருக்கும். இனி அது அமைதியாக ஆவதுவரை எப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனங்கள் எல்லாம் அவளை ஆட்சி செய்யப் போகின்றனவோ!

திடீரென்று எனக்கு அருணாமீது பரிதாபம் தோன்றியது.

15

தேவாலயத்திலிருந்து திரும்பி வரும்போது வழியில் ஷம்ஸைப் பார்த்தேன். தனியாக நடந்து போய்க் கொண்டிருந்தான். அப்பாவை வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு, நான் அப்போதே காரை எடுத்துக் கொண்டு போனேன். என்னுடைய கணக்கு தவறவில்லை. நான் மனதில் நினைத்த இடத்தை அடைந்தபோது, அவன் பேருந்திற்காக காத்துக் கொண்டு நின்றிருப்பதைப் பார்த்தேன்.

காரை ப்ரேக் போட்டு நிறுத்தினேன். ஷம்ஸ் என்னைப் பார்த்தான். அந்த முகத்தில் பதைபதைப்பு ஓடிப் பரவுவதைப் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருந்தது.

"ஹலோ...'' நான் கேட்டேன்: "காலை காட்சிக்கா?''

"இல்லை.'' ஷம்ஸ் சொன்னான்:"அப்படி குறிப்பா ஒரு இடத்திற்கும் இல்லை.''

"அப்படின்னா ஏறுங்க.'' நான் சொன்னேன்: "எனக்கு தனியா காரை ஓட்டுவதற்கு மிகவும் போராக இருக்கு!''

சற்று நேரம் தயங்கியவாறு நின்றிருந்த ஷம்ஸ் முன் இருக்கையில் ஏறினான்.

நாங்கள் அதிகமாக எதுவும் பேசிக் கொள்ளவில்லை. கார் மிகவும் வேகமாக வளைவுகளையும் திருப்பங்களையும் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. நகரத்தின் எல்லையைத் தாண்டி ஓட ஆரம்பித்தபோது ஷம்ஸ் கேட்டான்: "எங்கே?''

"அப்படி இலக்கு எதுவும் இல்லை.''

மீண்டும் நாங்கள் எதுவும் பேசவில்லை. கார் அதன் உச்ச வேகத்தை அடைந்தபோது நான் திடீரென்று கேட்டேன்: "புதிய காதல் எப்படி இருக்கு?''

அவன் உடனடியாக பதில் கூறவில்லை. கண்ணாடியில் விரலால் என்னவோ வரைய மட்டும் செய்து கொண்டிருந்தான்.

நான் மீண்டும் கேட்டேன்: "அருணாவிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும். இல்லையா?''

"அப்படித்தான் தோணுது.''

ஏரியின் கரையில் இருந்த சாலையின் வழியாக கார் ஓடிக் கொண்டிருந்தது. வானம் தெளிவாக இருந்தது. மெல்லிய வெயில் கண்ணாடியின் வழியாகக் கடந்து வந்து முகத்தில் அடித்துக் கொண்டிருந்தது.

ஆட்கள் யாரும் இல்லாத ஒரு பகுதியை அடைந்ததும், நான் காரை நிறுத்தினேன்.

"நாம் கொஞ்ச நேரம் உட்காருவோம்.''

"எதற்கு?''

"என்னைப் பார்த்து பயமா?'' கதவைத் திறந்து வெளியே இறங்கியவாறு சிரித்துக் கொண்டே கேட்டேன்.

"அப்படியொண்ணும் இல்லை.'' ஷம்ஸ் வெட்கப்பட்டுக் கொண்டே வெளியில் இறங்கினான்.

ஏரியில் இங்குமங்குமாகப் படகுகள் கடந்து போய்க் கொண்டிருந்தன. மூழ்கித் தேடி சிப்பிகளைப் பொறுக்கும் சிறுவர்கள் இடையில் அவ்வப்போது நீர்ப்பரப்பில் தலையை உயர்த்தினார்கள். மீண்டும் ஆழங்களுக்குள் போய் மறைந்து கொண்டார்கள்.

"இங்கு உட்காருவோம்.'' நீரில் சாய்ந்து கிடக்கும் கிளைகளுடன் நின்று கொண்டிருக்கும் ஒரு வயதான மரத்தின் அடிப்பகுதியை அடைந்தவுடன் நான் சொன்னேன்.

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

March 18, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel