Lekha Books

A+ A A-

நன்மைகளின் சூரியன் - Page 17

nanmaigalin suriyan

13

குளிக்காமலும் சரியான நேரத்தில் சாப்பிடாமலும் சிறிது நாட்கள் கடந்து சென்றன. ஆயாவிற்கு தினமும் பதைபதைப்பும் மனக் கவலையுமாக இருந்தது. ஒரு நாள் அப்பா என்னிடம் காரணம் என்ன என்று கேட்டார்.

சிறிது நேரம் யோசித்துவிட்டு, ஒன்றுமில்லை என்று பதில் கூறினேன்.

நான் கூறியதுதான் உண்மை. கூறுகிற அளவிற்கு என்ன நடந்துவிட்டது? எதுவும் இல்லை. இன்னொரு ஆள் கேட்க நேர்ந்தால், இதில் பிரச்சினை இருக்கிறது என்று தோன்றவே தோன்றாது என்பதை உறுதியாக நான் கூறுவேன். என்னைக் காதலிக்காத ஒரு ஆணை நான் காதலித்திருக்கிறேன்.

முட்டாள்களான வேறு எத்தனையோ இளம் பெண்களைப் போல நானும் இப்போது கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

இரண்டாவது முறையாக சிந்தித்துப் பார்க்கும்போது, ஷம்ஸிற்கு என்மீது காதல் இல்லை என்பதை நம்புவதற்கு சிரமமாக இருந்தது. அந்த இதயத்தின் இனிமையான பல நேரங்களும் என்னுடைய ஆடைகளுடன் ஒட்டிக்கொண்டு நிற்கும்போது நானும் சேர்ந்து பங்கு போட்டு அனுபவித்திருக்கிறேன்.

எங்கோ ஏதோ தகராறு இருக்கிறது. அப்படியென்றால், அது எங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதற்கு என்னால் முடியவில்லை. அங்குதான் என்னுடைய தோல்வியே இருக்கிறது. அதைக் கண்டு பிடித்துவிட்டால், என்னுடைய கவலைகள் அனைத்தும் போய் விடும் என்பதும்; நான் மீண்டும் பழைய நானாக மாறி விடுவேன் என்பதும் உறுதியாகத் தெரிந்தது.

ஒரு சாயங்கால வேளையில் நான் தோட்டத்தில் இருந்த பெஞ்சில் உட்கார்ந்திருந்தேன். மழைக் காலத்தின் முடிவு நெருங்கியிருந்தது. தோட்டத்தின் இன்னொரு மூலையில், பரந்து விரிந்திருந்த புல் பரப்பில் என்னைப் போலவே தனிமையாக இருந்த ஒரு பறவை அமர்ந்து அழுது கொண்டிருந்தது.

ஷம்ஸ்... என்னுடைய இதயம் தேம்பி அழுதது. என்னைக் காப்பாற்றுங்கள். என்னை மீண்டும் பழைய நானாக ஆக்குங்கள். நீங்கள் சேதப்படுத்திய என்னுடைய பழைய ஓவியத்தை எனக்கே திருப்பித் தந்துவிடுங்கள்.

ஆனால், அது எளிதான விஷயம் அல்ல என்பதும்; நான் மட்டுமே நினைத்தால் அது நடக்கக் கூடியது அல்ல என்பதும் அந்த கிளியின் அழுகைச் சத்தத்தைக் கேட்டபோதுதான் எனக்கே புரிந்தது.

பாவம்... அது தனிமையில் உட்கார்ந்து கொண்டு எவ்வளவு நாட்களாக அழுது கொண்டிருக்கிறது! பல சாயங்கால வேளைகளிலும் நான் அதைக் கேட்டிருக்கிறேன். ஒருவேளை, ஏதாவது ஆண் கிளியை அழைத்துக் கொண்டிருக்கலாம். இல்லாவிட்டால் தனிமையில் இருக்கும் வாழ்க்கையில் வெறுப்பு உண்டாகி, தானே உட்கார்ந்து புலம்பிக் கொண்டிருக்கலாம்.

நான் எழுந்து அதை நோக்கி நடந்து சென்றேன். நான் அருகில் சென்ற பிறகும் அது அசையவே இல்லை. தனிமையில் இருக்கும் ஒரு இதயம்... என்னை மாதிரியே தனிமையின் மூச்சுவிட முடியாத நிலையை அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்னொரு இதயத்தைக் கண்டுபிடித்திருக்கிறேன் என்று எனக்குத் தோன்றியது.

புல் பரப்பில் சற்றுத் தள்ளி உட்கார்ந்து கொண்டு நான் குரலைத் தாழ்த்தி வைத்துக் கொண்டு கேட்டேன்: "ஏன் அழறே?''

கிளி அழுவதை நிறுத்திவிட்டு, என்னைப் பார்த்தது. பிறகு அது குதித்துக் குதித்து சற்றுத் தள்ளி உட்கார்ந்தது.

"கவலையா?'' நான் கேட்டேன்.

"ஆமாம்...'' கிளி பதில் சொன்னது. பிறகு சிறகை விரித்துக் கொண்டு அது பறந்து சென்றுவிட்டது.

உயரத்தில் உயரத்தில் பறந்து செல்லும் அந்தப் பறவையை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தபோது, என்னுடைய கவலைகள் அனைத்தும் ஓடி மறைந்து கொண்டிருந்தன. கவலை என்பது எந்த அளவிற்குப் பெரிய, எந்த அளவிற்கு நல்ல ஒரு உணர்ச்சியாக இருக்கின்றது!

ஜோடியைப் பிரிந்ததால் உண்டான துக்கம் ஒரு துக்கமா? துக்கம்தான் என்று தோன்றுவது வெறும் தவறான எண்ணம் மட்டும்தானே? உண்மையிலேயே துக்கம் இருந்தால் உடலுக்கும் மனதிற்கும் ஒரே நேரத்தில் சோர்வு உண்டாகுமல்லவா? துக்கம்தான் என்று என்னிடம் பொய் சொன்ன பறவை, எந்தவொரு கவலையும் இல்லாமல் சிறகுகளை வீசிக் கொண்டு பறந்து உயர்ந்து செல்கிறது.

"திருடி" - மேகங்களில் சிறகை அசைத்துக் கொண்டிருக்கும் அந்தப் பறவையிடம் நான் சொன்னேன்: "என்னிடம் பொய் சொல்லிவிட்டாய் அல்லவா? இங்கே வா. நான் உன் மூக்கை அறுக்கிறேன்."

பறவை அப்போதும் அழுதது. அதைக் கேட்டபோது எனக்கு சிரிக்கத்தான் தோன்றியது.

நான் குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டே எழுந்தேன். கடந்து சென்ற நாட்களில் என்னை பாதித்திருந்தது வெறும் ஒரு பைத்தியக்காரத்தனம் மட்டுமே என்பதையும்; நான் இப்போது மீண்டும் பழைய நானாகவே இருக்கிறேன் என்பதையும் திடீரென்று புரிந்து கொண்டேன்.

வீட்டை நோக்கி சுறுசுறுப்புடன் ஓடும்போது என்னுடைய உதடுகள் ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்தன.

14

னித்துகள்கள் அள்ளி நிறைக்கப்பட்ட புலர்காலைப் பொழுது. நீண்ட காலத்திற்குப் பிறகு நான் நேற்று இரவு சுகமாக உறங்கினேன் என்ற தகவலை அந்த பனித்துளிகளிடம் கூற வேண்டும் போல எனக்கு இருந்தது. ஆனால், அதைக் கூறுவதற்கு தயார் பண்ணிக் கொண்டு வந்தபோது, அவை அனைத்தும் எங்கோ மறைந்து போய் விட்டன.

ஆயா காப்பியுடன் வந்தபோது, நான் வழக்கத்திற்கு மாறாக சிரித்தேன். ஆரவாரம் செய்தேன். ஆயாவைப் பிடித்துக் கட்டிலில் உட்காரவைத்து, அவளையே காப்பி பாத்திரத்தைப் பிடிக்கச் செய்து காப்பியைப் பருகினேன்.

"நேற்று சுகமாக உறங்கினாய் என்று தோன்றுகிறது.'' ஆயா சொன்னாள்.

"ம்...''

"கடந்த சில நாட்களாக உனக்கு என்ன ஆனது, குழந்தை?''

"ஒண்ணுமில்ல...'' நான் சிரித்தேன்.

"நாங்க எல்லாரும் ரொம்பவும் பயந்துட்டோம்.''

"எதற்கு?''

"குழந்தை, உனக்கே தெரியாமல் நான் பல இரவு வேளைகளிலும் இந்த அறையில் வந்து பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஒண்ணு நீ அழுது கொண்டிருப்பாய். இல்லாவிட்டால் சாளரத்தின் அருகில் போய் நின்று கொண்டு என்னவோ சிந்தித்துக் கொண்டிருப்பாய். உனக்கு என்ன ஆச்சு என்று நான் பதைபதைத்துக் கொண்டிருந்தேன்.''

நான் ஆயாவின் இடுப்பைச் சுற்றிப் பிடித்துக் கொண்டு, குலுங்கிக் குலுங்கிச் சிரித்தேன். அவளுடைய மென்மையான வயிற்றின்மீது முகத்தை வைத்துப் படுத்துக் கொண்டே நான் சொன்னேன்:

"பைத்தியம் பிடித்திருந்தது.''

ஆயா எதுவும் கூறாமல் சிறிது நேரம் என்னவோ சிந்தித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கைகள் என்னுடைய தலை முடியிலும் வெளியேயும் வருடிக் கொண்டிருந்தன.

"இப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனங்கள் நல்லதுதான்.'' ஆயா சொன்னாள். அவளுடைய குரல் அழுத்தமாகவும் தெளிவாகவும் இருந்தது. "ஒரு பெண்ணின் வாழ்க்கை முழுமை அடைவது இப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனங்களால்தான். இவை எதுவும் இல்லாவிட்டால், பிறகு அவர்கள் வாழ்வதில் பெரிய அர்த்தமே இல்லை.''

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

March 18, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel