Lekha Books

A+ A A-

நன்மைகளின் சூரியன் - Page 16

nanmaigalin suriyan

இரவு நேரங்களில் நான் பல தடவை அழுதிருக்கிறேன். எல்லாரும் தூங்கிய பிறகுகூட, தூங்க முடியாமல், படுக்கையில் இப்படியும் அப்படியுமாகப் புரண்டு கொண்டு படுத்திருப்பது என்பது சிறிதும் புதுமையே இல்லாத ஒரு அனுபவமாக மாறியது.

தெய்வமே, நான் பல நேரங்களில் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டு அமைதியாகப் பிரார்த்தனை செய்தேன். எனக்கு வேறு யாரிடமும் குற்றத்தை ஒப்புக்கொண்டு கூறுவதற்கு இல்லை. அம்மா இல்லை. அப்பா இல்லை. அண்ணனும் அக்காவும் இல்லை. எல்லாம் நீ மட்டுமே. நான் வேறு எதுவும் செய்யவில்லையே! செய்தால் நீ தடை விதிப்பாயா? எப்படி வேண்டுமானாலும் தடை போடலாம். நேரில் வந்து கூறுவதற்கு முடியவில்லை. அதனால், தவறு செய்தால் என்னுடைய கண்களில் பார்க்கும் சக்தியை இல்லாமல் செய்துவிடு. எப்படியாவது தவறு என்ற ஆழமான குழியில் விழாமல் என்னை பத்திரமாகப் பார்த்துக் கொள்.

தவறு செய்தேன் என்று எனக்கு எந்தச் சமயத்திலும் நம்பிக்கை வரவில்லை. காரணம்- என்னுடைய கன்னித் தன்மையை நான் இப்போது பத்திரமாகக் காப்பாற்றி வைத்திருக்கிறேன். ஒரு ஆணின் அணைப்பில் இருந்ததாலோ, ஒரு ஆண் முத்தமிட்டதாலோ மட்டுமே ஒரு இளம்பெண் கன்னித்தன்மை இல்லாதவளாக ஆகிவிடுவாளா?

எனக்கே பதில் தெரியாத ஏராளமான கேள்விகளில் ஒன்றாக அது இருந்தது.

"நான் தொல்லை கொடுக்கிறேனா?'' -வில்ஃப்ரட் சிராங்கோ கேட்டான்.

"எந்தச் சமயத்திலும் இல்லை. எந்தச் சமயத்திலும் இல்லை.'' நான் பதைபதைப்புடன் சொன்னேன். "சமீப காலமாக ஏன் இந்தப் பக்கம் வரவில்லை?''

"நான் எதற்கு வரவேண்டும்?''

சிராங்கோவின் குரலில் ஏமாற்றம் துடித்து நின்று கொண்டிருக்கிறது என்று எனக்குத் தோன்றியது.

"என்னுடைய வருகையை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும், டயானா.''

"அப்படி எதுவும் இல்லை.'' நான் நடுக்கத்தை மறைத்துக்கொண்டு பதில் கூறினேன். இதுவரை தோன்றியிராத ஒரு வகையான பயம் எனக்கு இப்போது சிராங்கோவிடம் தோன்றுகிறது. அவன்தான் அழைக்கிறான் என்ற விஷயம் தெரிந்திருந்தால், நான் எந்தச் சமயத்திலும் தொலைபேசியை எடுத்திருக்க மாட்டேன்.

"ஷம்ஸ் வருவதில்லையா?''

"ம்...''

"இன்றைக்கு வந்திருந்தானா?''

அவனுடைய கேள்வி எனக்குப் பிடிக்கவில்லை. எனினும், ஒரு காரணமும் இல்லாமல் அவனை ஏன் வெறுப்படையச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் நான் பதில் சொன்னேன்:

"இல்லை...''

"நேற்று?''

"இல்லை...''

"இங்கே வந்து சில நாட்கள் ஆகிவிட்டனவோ?''

"ம்...''

தொலைபேசியில் அந்த முனையில் நீண்ட நேரம் உரத்த சிரிப்புச் சத்தம் கேட்டது. நான் பயந்து நடுங்கிக் கொண்டே ஒரு பெரிய பாம்பினைப் பிடிக்கும் அதே வெறுப்புடன் தொலைபேசியை அழுத்திப் பிடித்தேன்.

"என்ன? ஏன் சிரிக்கிறீங்க?''

சிராங்கோ சிரமப்பட்டு சிரிப்பை நிறுத்தினான்.

"அவனுக்கு புதிய சினேகிதி கிடைத்திருக்கும் விஷயம் தெரியாதா?''

எனக்கு எதுவும் கூறத் தோன்றவில்லை.

"புதிய சினேகிதி யார்?'' உணர்ச்சியே இல்லாத குரலில் கேட்டேன்.

"உங்களுடைய பழைய தோழி.''

நான் முகத்தில் அடி விழுந்ததைப் போல அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டேன். பெருவிரலில் இருந்து தலைமுடி வரை நெருப்பு பற்றி எரிவதைப் போல உணர்ந்தேன்.

எனக்கு பேச்சே வரவில்லை. நாக்கிற்கு செயல்படும் சக்தி இல்லாமற் போய்விட்டது. உடலில் உயிருடன் இருந்த ஒரே ஒரு உறுப்பு காது மட்டும்தான் என்று தோன்றியது. என்னால் எல்லாவற்றையும் கேட்க முடிந்தது. கேட்கக்கூடிய சக்தி மட்டுமே இப்போது எனக்குக் கிடைத்திருக்கும் ஒரே வரப்பிரசாதம்.

நான் ரிஸீவரை மேலும் அழுத்திப் பிடித்தேன்.

"ஹாஸ்டலில் இதேதான் பேச்சு.'' சிராங்கோ குரூரமான சந்தோஷத்துடன் தொடர்ந்து சொன்னான்: "அவள் ஒன்றிரண்டு தடவை ஷம்ஸின் அறைக்கு வந்திருந்தாள். இப்போது வார்டன் வரக்கூடாது என்று தடை போட்டிருக்கிறார்.''

என்னால் அதற்கு மேல் ஒரு நிமிடம்கூட நிற்க முடியாது என்று தோன்றியது. என்ன செய்வது என்றுகூட தெளிவாகத் தெரியாமல் நான் ரிஸீவரை கிரேடில் மோதுகிற மாதிரி வைத்தேன்.

ஒரு நிமிடம் அதே நிலையில் நின்றுவிட்டு மீண்டும் தொலைபேசியை எடுத்து காதில் வைத்துப் பார்த்தேன். இல்லை... சிராங்கோவிடம் மன்னிப்பு கேட்பதற்கு இன்னொரு சந்தர்ப்பத்தைப் பார்க்க வேண்டியதிருக்கிறது.

எனினும்...

எனினும்... அருணா?

நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன்.

12

ம்ஸைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களுக்குத் தோன்றவில்லை.

பல நேரங்களில் தொலைபேசியின் அருகில் சென்று சற்று அழைத்தால் என்ன என்று நினைத்துவிட்டு, பிறகு அது தேவை இல்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.

அப்படி இருக்கும்போது ஒரு நாள் திடீரென்று ஷம்ஸ் வருவான் என்றும்; என்னை இறுகக் கட்டிப் பிடிப்பான் என்றும் நான் மனதிற்குள் ஆசைப்பட்டேன். ஏழு வருடங்களின் கனத்தைக் கொண்ட ஒரு வாரம் கடந்து செல்ல, வாழ்க்கை மீண்டும் சாதாரண நிலையை அடைந்துவிட்டது என்று எனக்குள் நானே நம்பிக்கை கொண்டிருந்தபோது எனக்கு ஒரு உண்மை புரிந்தது.

என்னால் அவனைப் பார்க்காமல் இருக்க முடியாது. எனக்கு ஷம்ஸைப் பார்த்தே ஆக வேண்டும். என்னுடைய தனிமையை இல்லாமற் செய்வதற்கு இருக்கும் ஒரே ஒரு நண்பன் அவன் மட்டுமே. வேறு எதுவும் வேண்டாம். வாரத்தில் ஒரு நாளாவது என்னுடன் சிறிது நேரம் அவன் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதும்.

ஒரு நாள் பிரதான சாலையில் வெறுமனே காரை ஓட்டிக்கொண்டு செல்லும்போது, அருணாவின் காரில் ஷம்ஸ் இருப்பதைப் பார்த்தேன். சிறிது நேரம் வண்டியைப் பின்னால் விட ஆரம்பித்தவுடன், எனக்கு அதை ஓவர்டேக் செய்ய வேண்டும் என்று தோன்றியது. முழுமையான வெறி பிடித்த வேகத்துடன் நான் அதைச் செய்யவும் செய்தேன். அதே வேகத்திலேயே நீண்ட நேரம் காரை ஓட்டி விட்டுத் திரும்பிப் பார்த்தபோது, அருணாவின் காரைக் காணவே காணோம்.

அவள் வளைவில் திரும்பி வேறொரு பாதையில் போயிருக்க வேண்டும். என்னுடைய கார் கடந்து போவதைப் பார்த்ததும் அவர்கள் இருவரும் ஒருவர் கண்களை ஒருவர் பார்த்துப் புன்னகைத்திருப்பார்கள்.

என்ன ஒரு கோமாளித்தனமான செயலை நான் செய்திருக்கிறேன் என்பதை நினைத்தபோது தாங்க முடியாத அளவிற்கு வெறுப்பு தோன்றியது.

எந்த வகையிலும் என்னால் அருணாவுடன் போட்டி போட முடியாது. அழகிலும் பணத்திலும் நகைச்சுவை உணர்விலும் உரையாடலிலும் அவள் என்னைவிட எவ்வளவோ தூரம் முன்னால் இருந்தாள்.

என்னால் உரிமை கொண்டாட முடிந்தது ஒரே ஒரு விஷயம்தான்- புனிதம். மனதின், உடலின் புனிதம். அதை எந்தச் சமயத்திலும் அவள் உரிமை கொண்டாடவே முடியாது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

ஆனால், அது யாருக்கு வேண்டும்?

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

March 18, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel