Lekha Books

A+ A A-

நன்மைகளின் சூரியன் - Page 19

nanmaigalin suriyan

ஷம்ஸ் குறிப்பிட்டு எதுவும் கூறாமல், ஒரு பெரிய கல்லின்மீது போய் உட்கார்ந்தான். நான் சற்று தூரத்தில் நீரை நோக்கிக் கட்டி விடப்பட்டிருந்த இடிந்த கல்லாலான படிகளில் உட்கார்ந்தேன்.

"எனக்கு ஒரு சந்தேகம் கேட்பதற்கு இருக்கு.'' நான் திடீரென்று கேட்டேன்: "நாம் ஒருவரையொருவர் காதலித்தோமா?''

"ம்...'' ஷம்ஸ் கீழே பார்ப்பதைப் பார்த்தேன்.

"நீங்கள் எந்தச் சமயத்திலும் தெளிவான பதில் தராத கேள்வியாக இது இருந்தது. இப்போதாவது இப்படியொரு பதில் கூற வேண்டும் என்று தோன்றியதே! நன்றி.'' நான் வெறுமனே சிரித்தேன்.

ஷம்ஸின் முகம் மலர்ந்தது.

"என்னிடம் ஏதோ தவறு செய்திருக்கிறோம் என்று தோன்றியிருக்கிறதா, ஷம்ஸ்?''

"ம்...''

"அப்படியென்றால் அந்த மாதிரி நினைக்க வேண்டாம். நான் இப்போதும் பழைய நான்தான்.''

ஷம்ஸ் என்னுடைய முகத்தையே ஒருமுறை பார்த்தான். மீண்டும் தலையைத் தாழ்த்திக் கொண்டான்.

"ஒரே ஒரு வருத்தம் மட்டுமே எனக்கு இப்போது இருக்கிறது. என்னுடைய கன்னித் தன்மையை நீங்க பாழாக்கிட்டீங்க.''

"நான்?'' ஷம்ஸ் அடி விழுந்ததைப் போல அதிர்ச்சியடைவதைப் பார்த்தேன். "ஆமாம்... என்னுடைய இதயத்தின் கன்னித் தன்மை. உடலின் புனிதத் தன்மையில் எனக்கு முழுமையான நம்பிக்கை இல்லை. ஆனால், என்னுடைய மனம் இருக்கிறதே! அது இனி எந்தக் காலத்திலும் புனிதத் தன்மைக்கு உரிமை கொண்டாட முடியாது. எனக்கு வருத்தமாக இருக்கு!''

ஏரியில் அலைந்து கொண்டிருந்த ஒரு படகில் இருந்து ஒரு படகோட்டி சற்று தூரத்தில் இருந்த இன்னொரு படகைப் பார்த்து என்னவோ உரத்த குரலில் கூறுவது காதில் விழுந்தது.

வாழ்க்கை. நான் அந்த கறுத்த உருவத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டே நினைத்தேன் - எந்த அளவிற்கு துன்பங்கள் நிறைந்த வாழ்க்கை! வேறு எந்தக் கவலைகளும் இல்லாத மனிதன் வெறும் சுவாரசியத்திற்காக தானே கண்டுபிடிக்கும் ஒரு நீர்க்குமிழி மட்டும்தானே காதல் தோல்வி என்பது. ஆசைகள் வெறும் ஏமாற்றங்களாக ஆகும்போது, அவற்றின் நொறுங்கலில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?

"நாம போக வேண்டாமா?'' ஷம்ஸ் கேட்டான்.

எனக்கு அந்த இளைஞனைப் பற்றி மெல்லிய கிண்டல் தோன்றியது. முட்டாள்... என்னை ஏமாற்றிவிட்டோம் என்று தவறாக நினைத்துக் கொண்டு இவ்வளவு காலமாக நடந்து திரிந்திருக்க வேண்டும்.

"போகத்தான் வேண்டும். முன்பு எனக்கு ஒரு பரிசு தந்தது ஞாபகத்தில் இருக்கிறதா?''

"பரிசு...'' ஷம்ஸ் கேட்டான்: "நான் அப்படியெதுவும் தரவில்லையே!''

"அது சரிதான். ஆனால், விலை மதிப்பற்ற ஒரு பொக்கிஷத்தைப் போல நான் இதை இவ்வளவு காலமாக பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்.''

நான் அந்த பழைய குன்றிமணியை ஷம்ஸிடம் நீட்டினேன்: "இதோ... திரும்பவும் வாங்கிக்கோங்க.''

"எனக்கு வேண்டாம்.'' ஷம்ஸ் சொன்னான்: "நான் இதைத் தந்தபோது, இப்படி எதையும் மனதில் நினைக்கவில்லை.''

"உண்மைதான். பல நேரங்களில் பெண்கள்தான் அதிக முட்டாள்தனங்களை நினைக்கிறார்கள்.''

நான் அந்த குன்றிமணியையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். எப்படிப்பட்ட உணர்ச்சிகளையெல்லாம் உண்டாக்கிவிட்ட ஒரு திருடன் இது! இப்போது உண்மையான வெளிச்சத்தில் ஒரு தவறு செய்தவனைப் போல அது குறுகிப் போய் இருக்கிறது.

நான் குலுங்கிக் குலுங்கி சிரித்தேன்.

"என்ன? ஏன் சிரிக்கிறே?''

"என்னைப் பற்றி நினைத்து... உங்களைப் பற்றி நினைத்து... காதலைப் பற்றி நினைத்து... உலகம் முழுவதும் இருக்கும் காதலிகளையும் காதலர்களையும் பற்றி நினைத்து... நாம எந்த அளவிற்கு முட்டாள்களாக இருக்கிறோம்!''

ஷம்ஸ் நெளிந்து கொண்டே எழுந்தான்.

"நம்முடன், நம்முடைய வயதுடன், வாழ்க்கையின் இந்த காலகட்டத்துடன்... எனக்கு இப்போது காதல் இருக்கிறது. இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், எனக்கு இப்போது காதல் இருப்பது, காதல் என்ற உணர்வின்மீது மட்டுமே. இப்போது அனுபவித்த அதே வேதனைகளுடன் இனி எந்தச் சமயத்திலும் அதை அனுபவிக்க என்னால் முடியாதே என்பது மட்டும்தான் என்னுடைய இப்போதைய உணர்வாக இருக்கிறது.''

நாங்கள் காரை நோக்கி நடந்தோம். ஏரியில் இருந்து வீசிய குளிர்ச்சியான காற்றில், புடவையின் தலைப்பு ஒரு கொடியைப் போல பறந்து கொண்டிருந்தது.

"அப்படியென்றால் உங்களுக்கு இது திரும்பவும் வேண்டாமா?'' நான் குன்றிமணியை ஷம்ஸை நோக்கி நீட்டிக் காட்டினேன்.

"வேண்டாம். அதை வீசி எறி டயானா.''

அவனுடைய பதைபதைப்பைப் பார்த்தபோது சிரிக்காமல் இருக்க முடியவில்லை. இந்த ஆண்கள் எந்த அளவிற்கு பாவங்களாக இருக்கிறார்கள் என்பதையும் நினைத்துப் பார்த்தேன்.

நான் அந்த குன்றிமணியை நீருக்குள் வீசி எறிந்தேன். நீல நிற நீரில், அந்த சிவப்பு நிறக் குன்றிமணி சுற்றியவாறு கீழ் நோக்கிப் போவதையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். ஒரு கன்னிப் பெண்ணின் இதயம் எங்கோ ஆழங்களில் போய் மறைந்துவிட்டது என்று தோன்றியது.

கண்களில் நீர் நிறைந்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. என்னுடைய முட்டாள்தனங்கள் நிறைந்த காலம் முடிந்திருக்கிறது. அந்த வயதின் தழும்பை மட்டுமே நான் இப்போது நீரில் எறிந்திருக்கிறேன்.

ஒருவேளை, சிப்பி பொறுக்கும் ஏதாவது மீனவ சிறுவனுக்கு அந்த குன்றிமணி கிடைக்கும். நான் வெறுமனே சிந்தித்தேன். அவன் அதை விலை மதிப்பற்ற ஒரு கொடையைப் போல தன்னுடைய காதலிக்குப் பரிசாகக் கொடுப்பான். அந்தப் பெண், கனவுகளின் முத்தைப் போல பத்திரமாக வைத்துக் கொஞ்சுவாள். அதன் அர்த்தமற்ற தன்மை புரிய வரும்போது, அவளும் அதை வீசி எறிவாள். அந்த சக்கரம் அப்படியே திரும்பத் திரும்ப சுற்றிக் கொண்டிருக்கும்.

உள்ளுக்குள் மெல்லிய ஒரு சிரிப்பு சிறிய அலைகளை மலரச் செய்து, விரிந்து வந்து கொண்டிருந்தது.

Page Divider

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

February 13, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel