Lekha Books

A+ A A-

நன்மைகளின் சூரியன் - Page 6

nanmaigalin suriyan

அப்படிச் சொன்னது பொய் என்று எங்களுக்குப் புரிந்தது. திடீரென்று எனக்கு சிராங்கோமீது வெறுப்பு தோன்றியது. என்னிடமிருந்து ஷம்ஸை விலக்கிக் கொண்டு செல்வதற்காக அவன் ஏன் முயற்சிக்கிறான் என்பதற்கான காரணத்தை என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. அவனுடைய முயற்சி வீணான ஒன்று என்று நான் மனதிற்குள் கூறிக் கொண்டேன். இனி இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எந்தவொரு சக்தியாலும் விலக்கி வைக்க முடியாத அளவிற்கு நாங்கள் நெருக்கமாகி விட்டோம் என்று சத்தம் போட்டுக் கூற வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டானது.

"ஓ... அப்படியென்றால் சிராங்கோ... நீங்க கிளம்புங்க'' நான் சொன்னேன்: "அப்பாயிண்மென்ட்டை தவற விட்டு விடக்கூடாது. ஷம்ஸ், உங்களுக்கு அவசரமாகப் போக வேண்டும் என்றில்லையே?''

"இல்லை.''

"தனியாக இருந்து எனக்கு போரடித்துவிட்டது. அப்பா வர்றப்போ, மிகவும் தாமதமாகிவிடும். இன்னும் கொஞ்ச நேரம் இருக்கக்கூடாதா?'' - நான் கேட்டேன்.

"கட்டாயம் இருக்கிறேன். எனக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விஷயமே அது.''

"அப்படியென்றால் வாங்க நாம மொட்டை மாடியில் போய் இருப்போம்.'' தொடர்ந்து வேலைக்காரனை அழைத்தேன். "சங்கரா, மொட்டை மாடியில் இரண்டு நாற்காலிகளைக் கொண்டு போய்ப் போடு.''

சிராங்கோவின் முகத்தில் கோபமும் தோல்வியும் ஒன்றொடொன்று பிணைந்து வெளிப்படுவதை நான் பார்த்தேன். தடிமனான உதடுகள் சற்று துடித்துக் கொண்டிருந்தன.

"குட்நைட்... நான் போறேன்.'' சிராங்கோ நடக்க ஆரம்பித்தான்.

"குட்நைட்.'' நாங்கள் உரத்த குரலில் சொன்னோம். எங்கள் இருவரின் குரல்களிலும் சந்தோஷம் ஒரு வசந்த கிளியைப் போல சிறகடித்துக் கொண்டிருந்தது.

4

வில்ஃப்ரட் சிராங்கோ, உங்களுக்கு நன்றியும் புண்ணியமும். நீங்கள் என்னுடைய நன்மைகளின் சூரியனை எனக்கு அளித்தீர்கள். எவ்வளவோ இரவு வேளைகளில் நான் தேடிக் கொண்டிருந்த ஒரு மனிதனை நீங்கள் எனக்கு அறிமுகம் செய்து வைத்தீர்கள். என்னுடைய கைகளில் ஒப்படைத்துவிட்டு, நீங்கள் அறிவாளித் தனத்துடன் நடந்து சென்று விட்டீர்கள். எனக்கு வழிபடுவதற்கு ஒரு தெய்வம் கிடைத்துவிட்டது. தனிமையில் இருக்கும் குழந்தைக்கு உடன் விளையாடுவதற்கு ஒரு நண்பன் கிடைத்ததைப் போல, இன்று நான் சந்தோஷப்படுகிறேன்.

இரவு வேளையில், இருள் நிறைந்திருக்கும் அறையில், கட்டிலில் இப்படியும் அப்படியுமாகப் புரண்டுகொண்டு படுத்திருக்கும்போது, நான் எனக்குள் சொன்னேன்:

"வில்ஃப்ரட் சிராங்கோ, உங்களைப் பார்த்து நான் வெறுப்படையவும் பயப்படவும் செய்கிறேன். நீங்கள் என்னுடைய வாழ்க்கையை அமைதியற்றதாக ஏன் ஆக்கினீர்கள்? நேற்று வரை சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்த எனக்கு இப்போது... இதோ... தூக்கமே வர மறுக்கிறது. இனிமேல் என்னால் தூங்க முடியாது. என்னுடைய அமைதியற்ற இரவுகள் ஆரம்பமாகத் தொடங்கியிருக்கின்றன. என்னுடைய மனம் இனிமேல் எந்தக் காலத்திலும் அமைதியானதாக இருக்காது. வெறுமையாக இருக்காது. சந்தோஷம் நிறைந்திருக்கும் இதயத்திற்கு இந்த அளவிற்கு கனம் இருக்கும் என்பதையே இப்போதுதான் நான் தெரிந்து கொள்கிறேன். நீங்கள் எனக்கு ஷம்ஸை அறிமுகப் படுத்தியிருக்கவே வேண்டாம்."

அப்பா வரும்போதுகூட நான் தூங்கியிருக்கவில்லை. கேட்டில் காரின் ஹார்ன் சத்தம் கேட்பதையும் சங்கரன் ஓடிச் சென்று கேட்டைத் திறப்பதையும் ஷெட்டின் வாசற்கதவு பூட்டப்படுவதையும் கீழே அப்பாவின் படுக்கையறையில் விளக்கு எரிவதையும் அணைவதையும் நான் கவனித்துக் கொண்டே படுத்திருந்தேன். அப்பா க்ளப்பில் இருந்து திரும்பி வருவதை முன்பு எந்தச் சமயத்திலும் நான் கேட்டதே இல்லை. இப்போது... இதோ... முதல் தடவையாக நான் அதைக் கேட்கிறேன்.

இடைவெளி விட்டுப் பெய்வதும் பிறகு சிறிது நேரம் நிற்பதுமாக இருக்கும் மழை தோட்டத்தில் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருப்பதை நான் கேட்டேன். மழை நின்றபோது, வாசலில் இருந்த மரங்களில் கிளிகள் கத்தின. என்னுடைய மனம், மழையின் இசைக்கு விளக்கம் கொடுப்பதற்கு முயற்சி செய்து பரிதாபப்படும் வகையில் தோல்வியைத் தழுவியது. ஒரே ஒரு இசைதான் என்னுடைய மனதிற்குள் இருந்தது. ஒரே ஒரு நாதம். ஒரே ஒரு தாளம். அதற்கு மழையுடன் தொடர்பு இல்லை. கடந்து சென்ற மாலை நேரத்தில் மழை இல்லாமலிருந்த ஏதோ ஒரு பொழுதில் அது ஆரம்பமானது. இப்போதும் அது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இனி அது நிற்காது. மழைக்காலம் முடிந்த பிறகு வெயில் வரும். வசந்தங்களும் குளிர் காலங்களும் நடனமாடிக் கொண்டு கடந்து செல்லும். என்னுடைய இசை, எனக்கு மட்டுமே கேட்கக்கூடிய என்னுடைய இதயத்தின் இசை, அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கும்- என்னுடைய மரணம் வரை- என்னுடைய இதயம் நெருப்பில் எரியும் வரை. நான் அந்தப் பாடலுக்கு ஒரு பெயர் வைக்கிறேன்: "நன்மைகளின் சூரியன்.

5

ரவில் மழை நின்ற பிறகு, ஓசை உண்டாக்காமல் நான் எழுந்தேன். எனக்கு உடனடியாக மொட்டை மாடிக்குச் செல்ல வேண்டும் போல இருந்தது. நானும் ஷம்ஸும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த இடத்தில், வெறும் தரையில் போய் உட்கார்ந்து கொண்டு அழ வேண்டும்போல தோன்றியது. இருட்டின் காற்றுக்கும் என்னுடைய கவலை புரியும். அது என்னுடைய வேதனையை ஷம்ஸிடம் கொண்டு போய் சேர்க்கும்.

அசையாமல் ஒரு திருடியைப் போல நான் மொட்டை மாடிக்குச் செல்லும் படிகளில் ஏறினேன். தரை ஈரமாக இருந்தது. தலைக்கு மேலே நனைந்த வானம் பரந்து விரிந்து கிடந்தது. மழை நின்று விட்டிருந்தும் ஒன்றோ இரண்டோ சிறு சிறு துளிகள் இடையில் அவ்வப்போது விழுந்து கொண்டுதான் இருந்தன. அவை என்னுடைய மூக்கிலும் காதுகளிலும் வந்து விழுந்து கொண்டிருந்தன. சாயங்காலம் நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்திற்குச் சென்று நின்றேன். இங்கு இருந்து கொண்டுதான் ஷம்ஸும் நானும் பேசிக் கொண்டிருந்தோம். தரை விரிப்பை ஒட்டி ஷம்ஸின் நாற்காலி போடப்பட்டிருந்த இடத்தில், வெறும் தரையில் உட்கார்ந்தேன். தரை ஈரமாக இருந்ததால் என்னுடைய ஆடைகளும் கொஞ்சம் ஈரமாயின. எனக்கு அப்போது அது ஒரு பெரிய விஷயமாகப் படவில்லை. அப்போதும் ஷம்ஸ் அந்த நாற்காலியில் உட்கார்ந்திருப்பதைப் போலவும், அவனுடைய கால்களை என்னுடைய மடியில் வைத்திருப்பதைப் போலவும் நான் மனதில் கற்பனை பண்ணினேன். எங்களுக்கு ஒருவரோடொருவர் கூறுவதற்கு எதுவும் இல்லாமலிருந்தது. எதுவும் பேசாமல் வெறுமனே கண்களைப் பார்த்துக் கொண்டு நாங்கள் உட்கார்ந்திருந்தோம். சாயங்காலமும் இதே மாதிரிதான் இருந்தது.

சாயங்காலம் மொட்டை மாடியை அடைந்தபோது எங்களுக்கு எப்படி உரையாடலைத் தொடங்குவது என்பது தெரியாமல் இருந்தது. சிராங்கோ சென்றவுடன் நாங்கள் தனியாகி விட்டோம். எனினும், அவன் இருந்தபோது ஏதாவது கூறுவதற்கு இருந்தது. இப்போது எங்களுக்கிடையே பேசுவதற்கு விஷயங்கள் இல்லாததைப் போல தோன்றியது.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

February 13, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel