Lekha Books

A+ A A-

நன்மைகளின் சூரியன் - Page 2

nanmaigalin suriyan

கல் முழுவதும் மழை பெய்து கொண்டிருந்தது. எப்போது ஆரம்பமானது என்று தெரியவில்லை. காலையில் கண் விழித்தபோது வெளியே மழை விழுந்து கொண்டிருந்தது. கடந்த இரவின் தொடர்ச்சியாக இருக்க வேண்டும். மதியம் சற்று அது நின்றிருந்தது. மெல்லிய வெயில் தோல்வியடைந்த உணர்வுடன் நகர்ந்து வந்து இலைகளைக் காய வைப்பதை நான் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். கீழேயிருந்த புல்பரப்பில் பிரகாசங்கள் தெரிந்தன. மரங்கள் குளித்து முடித்து துவட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

அப்போது மீண்டும் மழை வந்தது. நீர்த் துளிகள் மறைந்து விட்டிருந்த இலைகளின் வழியாக மீண்டும் நீர் வழிந்தது. என்னுடைய அறையின் கண்ணாடி சாளரத்தின் வழியாக மழை நீர் வாய்க்கால்கள் அவற்றின் ஓட்டத்தை மீண்டும் ஆரம்பித்திருந்தன. கதவுகளின் இடைவெளிகள் வழியாக பலமான மழைக்காற்று நுழைந்து வந்தது.

சாப்பிட்டு முடித்து மீண்டும் தூங்குவதற்காகப் படுத்தேன். மழையின் இசையைக் கேட்டுக் கொண்டே படுத்திருப்பது என்பது மிகவும் சுவாரசியமானது. மிகவும் கவனம் செலுத்தி உருவாக்கப்பட்ட ஒரு பாடலைக் கேட்கக்கூடிய சுகம் இருக்கும். நான் அதற்கு எனக்கென்று இருக்கும் ஒரு விளக்கத்தைக் கொடுத்தேன். பயங்கரமான காடுகளின் வழியாக தனியாக அலைந்து திரியும் ஒரு மரம் வெட்டுபவன். அவன் தான் பார்க்கும் மரங்கள் அனைத்தையும் ஒவ்வொரு முறை வெட்டிப் பார்க்கிறான். கோடரி மரத்தில் விழும்போது காடு முழுவதும் கேட்கும். அப்போது மிகவும் தூரத்தில் ஒரு ஆரவாரம் கேட்கிறது. மரக்கிளைகளுக்கு மத்தியில் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. எனினும், அவனுக்கு அந்த சத்தத்தை அடையாளம் கண்டுபிடிக்க முடிகிறது. குதிரைகளின் குளம்படிகள் உறுதியான தரையில் தாளலயத்துடன் பதிக்கும் சத்தம்- டுப், டுப், டுப்... சத்தம் நெருங்கி நெருங்கி வருகிறது. ஒரு கூட்டம் குதிரை வீரர்கள்... குதித்துக் கொண்டு வரும் அவர்களுக்கு மத்தியில், ஒரு குதிரை மேல் கட்டப்பட்ட நிலையில் ஒரு அழகான பெண்... அவளைப் பிடித்துக் கொண்டு இன்னொரு ஆளும் அந்த குதிரையின்மீது இருக்கிறான். அழகான இளம் பெண்ணின் வேதனைக் குரல் காடுகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. பரிதாபமான முனகல் சத்தம். குதிரைகளின் குளம்படிகள் அதை மூடிக் கொண்டு உரத்து ஒலிக்கின்றன. கோபத்தை மரம் வெட்டுபவன் அடக்க முடியாமல் அருகில் இருந்த மரத்தை நோக்கி கோடரியை ஓங்குகிறான். மீண்டும் அந்த முனகல். மீண்டும் டுப், டுப்... அது அதே மாதிரி இடைவெளி விட்டு விட்டு ஒரு தனியான தாளத்தில் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறது.

கண் விழித்தபோது மழை நின்று விட்டிருந்தது. நான் ஞாபகப்படுத்திப் பார்க்க முயற்சித்தேன். அந்த குதிரை வீரர்கள் எங்கு போனார்கள்? அழகான பெண் எங்கே? மழையின் இசை எங்கே? எதுவும் இல்லை. என்னைச் சுற்றிலும் அமைதி மட்டும்... எல்லாரும் போய்விட்டார்கள்.

மழை நிற்காமல் இருந்தால் எப்படி இருக்கும்? நான் ஆசைப்பட்டேன். பகலிலும் இரவிலும், இரவிலும் பகலிலும் நிற்காமல் பெய்திருந்தால் எப்படி இருக்கும்? மேகங்களின் கண்ணீர் பூமியில் விழும் சத்தத்தைக் கேட்டுக் கொண்டு, அவற்றின் இசையைக் கேட்டுக் கொண்டு, மென்மையாக இருக்கும் மெத்தையைக் கட்டிப் பிடித்துக் கொண்டு குப்புறப்படுத்திருக்க என்னால் முடிந்திருந்தால் எப்படி இருக்கும்?

சாளரத்தைத் திறந்து விட்டேன். வெளியே குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருக்கிறது. மரங்களுக்கு மேலே வானம் அஸ்தமனத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

என்னுடைய கண்கள் நிறைந்தன. இது எதற்கு என்று எனக்குத் தெரியவில்லை. காரணமே இல்லாமல் பல வேளைகளில் நான் அழுவதுண்டு. யாராவது பார்த்தால் நிலைமை மிகவும் மோசமாகிவிடும். அப்பா அவ்வப்போது கூறுவார்: "பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதில் உண்மையிலேயே அவர்களுக்குத் தெரியாமலே பைத்தியம் இருக்கும். அப்போது காரணமே இல்லாமல் அவர்கள் குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பார்கள். கதறி அழுவார்கள். அன்பு செலுத்துவார்கள். வெறுப்பார்கள். எல்லாவற்றையும் செய்வார்கள். அந்த வயது கடக்கும்போதுதான் தான் செய்தவை அனைத்தும் முட்டாள்தனமாக இருந்தன என்பதே அவர்களுக்குத் தெரியவரும்."

"அப்போது அவர்களுக்கு வருத்தம் தோன்றாதா அப்பா?" -நான் கேட்டேன்.

"கட்டாயம் வருத்தப்படுவார்கள். தாங்கள் நடந்து கொண்டதைப் பற்றி கொண்ட வெட்கத்தையும், வருத்தத்தில் உண்டான குற்ற உணர்வையும்தான் மற்றவர்கள் "அடக்கமும் ஒழுக்கமும்" என்று குறிப்பிடுகிறார்கள்."

"அப்படியென்றால் எனக்கு இன்னும் அந்தப் பருவம் தாண்டவில்லை. அப்படித்தானே?" -நான் கேட்டேன். எந்தச் சமயத்திலும் இந்த வயதைத் தாண்டவே கூடாது என்ற ஆழமான ஒரு பிரார்த்தனையும் எனக்குள் இருந்தது.

"இல்லை." அப்பா சொன்னார்: "உன்னிடம் அடக்கமும் ஒழுக்கமும் வந்துவிட்டால், பிறகு எனக்கு உன்னைப் பிடிக்காமல் போய்விடும். உன்னுடைய இந்தக் குறும்புத்தனங்கள்தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பக்குவம் வந்துவிட்டால் நீ என்னிடமிருந்து விலகிப் போய்விடுவாய் அல்லவா?"

"இல்லை இல்லை... அப்பா... நான் எந்தக் காலத்திலும் உங்களை விட்டு விலகிப் போக மாட்டேன்." நான் அவருடைய தோளில் கையைச் சுற்றி வைத்துக் கொண்டு சொன்னேன். என்னுடைய கண்கள் நிறைந்திருந்தன.

எனக்கு இப்போதே அப்பாவைப் பார்க்க வேண்டும்போல இருந்தது. அவர் வெளியே போயிருப்பார் என்ற விஷயம் ஏறக்குறைய எனக்குத் தெரியும். எனினும், நான் முடிந்தவரையில் வேகமாகப் படிகளில் இறங்கிக் கீழ்நோக்கி ஓடினேன். இல்லை. அப்பா போய்விட்டிருந்தார். அவருடைய காரைக் காணோம். ஷெட்டில், எனக்காக அவர் வாங்கித் தந்திருந்த வெள்ளை நிற ஃபியட் கார் மட்டும் நின்றிருந்தது.

எனக்கு என்மீதே வெறுப்பு தோன்றியது. இந்த அளவிற்கு அதிக நேரம் எதற்காக உறங்கினேன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். தேவையில்லை. அதனால்தானே அப்பாவைப் பார்க்க முடியாமல் போய்விட்டது. இனி அவர் திரும்பி வரும்போது, இரவில் அதிக நேரம் ஆகியிருக்கும். க்ளப்பிற்குத்தான் போயிருப்பார் என்றால், இன்று இனிமேல் பார்க்க முடியும் என்ற எதிர்பார்ப்பே வேண்டாம். சீட்டு விளையாட்டு முடியும்போது நேரம் அதிகமாக ஆகிவிடும். ஒரு கையின் விரல்களை எண்ணிக் கணக்கிடக்கூடிய ஏதாவது ஒரு நேரம் அப்போது ஆகியிருக்கும்.

நான் வெறுமனே தோட்டத்தில் நடந்தேன். செடிகள் அனைத்தையும் மழை அழித்துவிட்டிருக்கிறது. பூக்கள் நிறத்தை இழந்தும் காம்பு ஒடிந்தும் கிடந்தன. இதழ்கள் அனைத்தும் உதிர்ந்து போன ஒரு மஞ்சள் நிற ரோஜா மலர் என்னை மிகவும் ஈர்த்தது. கீழே புல்வெளியில் மழை நீரின் உதைகள் விழுந்து கீழே விழுந்த பூக்களின் இதழ்கள்...

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

February 13, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

தோழி

தோழி

August 8, 2012

மமதா

மமதா

May 23, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel