Lekha Books

A+ A A-

நன்மைகளின் சூரியன் - Page 5

nanmaigalin suriyan

"நாம போவோம்'' -சிராங்கோ சொன்னான்: "ஷம்ஸுக்கு இப்படிப்பட்ட ஆட்களைப் பிடிக்காது.''

நான் அவனுடைய முகத்தைப் பார்த்தேன். அங்கு என்ன தெரிகிறது என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. சிராங்கோ அந்த மனிதனுக்காகப் பேசியதை நான் சிறிதும் விரும்பவில்லை. கட்டுப்பாடற்ற சிந்தனை கொண்ட அந்த நீக்ரோ இளைஞனுக்கு என்மீது என்ன எண்ணம் இருக்கிறது என்பது எனக்கு கிட்டத்தட்ட தெரியும். ஒருமுறை வீட்டில் இருக்கும்போது முத்தம் தரக்கூட முயன்றிருக்கிறான். அவை நான் நினைத்துப் பார்ப்பதற்கு கூட விரும்பாத சம்பவங்களாக இருந்தன.

"அப்படியென்றால் நீங்கள் போகலாம்...''

ஷம்ஸ் சொன்னான். தொடர்ந்து நடக்க முயற்சித்தான்.

அது ஒரு இக்கட்டான நிமிடமாக இருந்தது. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அப்படிப்பட்ட நிமிடம் ஒருமுறை மட்டுமே வரும் என்று தோன்றுகிறது. தன்னையே வேறு ஒருவரிடம் பார்க்க முடிகிற அபூர்வ அழகான நிமிடம்.

ஒரு பெண்ணால் எப்படி தன்னுடைய உருவத்தை இன்னொரு ஆளிடம் பார்க்க முடிகிறது? தன்னுடைய மன ஓட்டத்தை அதே மாதிரி வெளிப்படுத்தக்கூடிய இன்னொரு நபரைச் சந்திக்கும்போது மட்டுமே அவளுக்கு தன்னுடைய நண்பனைக் காண முடிகிறது. சிராங்கோவைப் போன்ற ஏராளமான நண்பர்கள் எனக்கு இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தங்களுடைய தனிமையைத் தவிர்ப்பதற்காக என்னைத் தேடி வருகிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. தனிமை என்ற சிப்பிக்குள் அடைத்துக் கொண்டு இருப்பதற்கு விரும்பும் என்னை அவர்கள் யாரும் கண்டு பிடிக்கவில்லை. இந்த அரேபியனும் என்னைக் கண்டுபிடித்தானா என்ற விஷயத்தில் எனக்கு சந்தேகம் இருக்கிறது. எனினும் ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாகக் கூற முடியும். அவனும் என்னைப் போலவே, தன்னுடைய தனிமை என்ற சிப்பியின் ஓட்டிற்குள் உறங்கிக் கொண்டிருக்க விரும்புகிறான் என்பதே அது.

எனக்கு அந்த இளைஞனிடம் போக வேண்டாம் என்று கூற வேண்டும் போல தோன்றியது. நடந்து செல்லும் அவனைச் சிறிது நேரம் பார்த்தவாறு அமர்ந்திருந்த நான் அழைத்தேன்:

"ஷம்ஸ்!''

அவன் திரும்பி நின்றான். அந்த கறுத்த கண்களில் ஒரு கேள்வி நிழலிட்டு நின்றது.

"வாங்க...'' நான் சிராங்கோவிற்கு முன்னால் கையை நீட்டி, முன்பக்கக் கதவைத் திறந்து அழைத்தேன்: "வாங்க... நானே ஹாஸ்டலில் கொண்டு வந்து விடுகிறேன்.''

"வேண்டாம்'' என்று கூறி விடுவான் என்று பயந்தேன். ஆனால், அப்படி நடக்கவில்லை. அவனுடைய முகம் திடீரென்று மலர்வதை நான் கவனித்தேன். அகலமான எட்டுக்களுடன் காரை நோக்கி நடந்து கொண்டே அவன் சொன்னான்: "என்னுடைய மாலைப் பொழுது மிகவும் சோர்வு தரும் ஒன்றாக ஆகிவிடும் என்று நான் பயந்திருந்தேன்.''

3

பெண்களைவிட அதிகமான பொறாமை ஆண்களுக்குத்தான் இருக்கிறது. மிகப் பெரிய திறமைசாலிகள் என்பதைப் போல அவர்கள் நடந்து கொள்வார்கள். எனினும், தாங்கள் விருப்பப்படும் இளம் பெண் அதிகமான ஆர்வத்துடன் இன்னொரு இளைஞனுடன் பேசிக் கொண்டிருப்பதைப் பார்ப்பதற்கு அவர்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். அவர்கள் அந்த இளம் பெண்ணிடமிருந்து அப்போது மனதளவில் விலகிச் சென்றிருப்பார்கள்.

இவை அனைத்தும் எனக்கு நன்கு தெரிந்த விஷயங்கள்தான். எனினும், சிராங்கோவின் முகத்தில் பொறாமை அடையாளம் போடுவதைப் பார்த்த பிறகும், எனக்கு ஷம்ஸின் முகத்திலிருந்து கண்களை எடுக்க முடியவில்லை. அவன் கூறுவது எதையும் நான் காதுகளிலேயே போட்டுக் கொள்ளவில்லை. அனைத்தும் புரிகின்றன என்பதைப் போல தலையை ஆட்டிக் கொண்டிருந்தேன். உரையாடலின் ஒவ்வொரு எல்லையை அடையும்போதும், ஷம்ஸ் என்னிடம் சில கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தான். அப்போதுதான் இதுவரை கேட்டவை எதுவும் தலைக்குள் நுழையவேயில்லை என்ற விஷயத்தையே நான் தெரிந்து கொண்டேன். அதை மறைப்பதற்காக நான் இடையில் அவ்வப்போது ஒரு முட்டாளைப் போல சிரித்துக் கொண்டிருந்தேன்.

ஷம்ஸ் பெரும்பாலும் சிரிக்கவில்லை. சிராங்கோ தன்னுடைய வழக்கமான பார்ட்டி நகைச்சுவைத் துணுக்குகளையும் இந்தியாவை அடைந்த பிறகு தனக்கு உண்டான சில சுவாரசியமான அனுபவங்களையும் கூறிக் கொண்டிருந்தான். என்னால் அவை எதையும் ரசிக்க முடியவில்லை. என்னுடைய கண்கள் இரண்டு நீளமான கண்களை நோக்கிப் பறந்து போய் விட்டிருந்தன. என்னுடைய இதயம் அறிமுகமில்லாத இன்னொரு இதயத்துடன் இதுவரை பேசியிராத ஏதோ ஒரு தனி மொழியில் உற்சாகத்துடன் உரையாடலை நடத்திக் கொண்டிருந்தது.

மாலை நேரம் தாண்டிவிட்டிருந்தது. தோட்டத்தில் விளக்குகள் குளிர்ச்சியான பிரகாசத்தைப் பரவச் செய்தன. அறைக்குள் மின்மினிப் பூச்சிகள் பறந்து வந்தன. அவை விளக்கைச் சுற்றிப் பறந்து கொண்டிருந்தன. ஒரு மின்மினிப் பூச்சி ஷம்ஸின் சுருண்ட தலைமுடிக்குள் சிக்கிக் கொண்டு சிறகை அடித்தது. நான் அந்தச் சிறிய உயிரினத்தையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். எப்போதும் அசைந்து கொண்டிருக்கும் சிறகுகள் அந்த முகத்திற்குத் தனியான ஒரு பிரகாசத்தை அளித்ததைப் போல தோன்றியது.

என்னால் இந்த மின்மினிப் பூச்சியாக மாற முடிந்திருந்தால் எப்படி இருக்கும்? மனம் ஆசைப்பட்டது. அப்படியென்றால் நான் அந்த முகத்தைச் சுற்றிப் பறந்து விளையாடிக் கொண்டிருப்பேன். அபூர்வமான பிரகாசத்தை அளித்துக் கொண்டு, அந்த முடிச்சுருள்களுக்கு மத்தியில் மறைந்து விளையாடிக் கொண்டிருப்பேன். ஷம்ஸின் பொத்தான்களுக்கு நடுவில் நுழைந்து சென்று, ரோமம் படர்ந்த அந்த மார்பில் கிச்சுக் கிச்சு மூட்டிக் கொண்டிருப்பேன்.

ஷம்ஸும் என்னையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். அவனுடைய மனதில் என்னைப் பற்றிய சிந்தனைகள் ஓடிக் கொண்டிருக்கும் என்று நான் நினைத்தேன்.

அப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்பட்டேன். அந்த கண்களில் பிரகாசம் உண்டாக்குபவை, என்னைப் பற்றிய சிந்தனைகளாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன்.

சிராங்கோவிற்கு மிகவும் போரடித்து விட்டதைப் போல தோன்றியது. அவன் திடீரென்று எழுந்து கொண்டு சொன்னான்: "நாம போகலாம். இந்த அறை முழுவதும் இந்தப் பூச்சிகள் வந்து நிறைந்துவிடும்.''

"போக வேண்டாம்.'' - நான் மெதுவான குரலில் சொன்னேன்: "போய் விட்டால் நான் தனியாக இருக்க வேண்டியதிருக்கும்.'' இதைச் சொன்னபோது என்னுடைய கண்கள் ஷம்ஸின் முகத்தில் இருந்தன. அவனுக்கு நான் கூறியது புரிந்து விட்டதைப்போல தோன்றியது. அந்தக் கண்கள் ஒருமுறை இமைகளைத் தாழ்த்தின. தொடர்ந்து மலர்ந்தன.

"நான் போக மாட்டேன்" என்பதுதான் அப்படிக் கூறியதற்கு அர்த்தம் என்று எனக்கு தோன்றியது.

"ஸாரி... நான் போயே ஆக வேண்டும்.'' சிராங்கோ சொன்னான்: "எனக்கு ஏழரை மணிக்கு அப்பாயிண்ட்மென்ட் இருக்கு.''

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

February 13, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel