
அவள் அதற்கும் ஒப்புக் கொள்வாள் என்பதில் உறுதி இருந்ததால், அவள் ஏதாவது புதிதாகக் கூறுவதற்கு முன்னால், அவர் தன் பக்கத்தில் இருந்து மேலும் ஒரு காயை நகர்த்தினார். அவ்வளவு பணத்தையும் தந்தால்தான் சிலையைக் கொண்டு செல்ல முடியும். ஆனால், கொண்டு போனாலும், ஒரு நாள் கழித்துத் திரும்பவும் கொண்டு வரவேண்டும்.
ராஜகுமாரியின் பைத்தியக்காரத்தனம், ஒருவேளை ஒரு வெற்றி அறிவிப்பில் போய் முடிந்தாலும் முடியலாம் என்ற எண்ணமும் இருந்ததால்தான் அவர் அப்படியொரு நிபந்தனையை துணிச்சலாக முன்னால் வைத்தார்.
இளம்பெண் அதைக் கேட்டு மிகவும் கோபப்பட ஆரம்பித்தாள். மீண்டும் வாதங்களும் பதில்களும் தொடர்ந்தன. கேல்குலேட்டர் பல முறை செயல்பட்டன. சிலையால் தனக்கு ஒவ்வொரு நாளும் கிடைக்கக்கூடிய வருமானத்தையும், இனி வரப்போகும் நாட்களில் கிடைக்கப் போகிற லாபத்தையும் மிகவும் சரியாகக் கணக்குப் போட்டு கூறி, அது இல்லாமல் போனால், தனக்கு ஒவ்வொரு நாளும் உண்டாகப் போகிற இழப்பைக் சுட்டிக்காட்டி அவர் விலை பேசினார். ஒரே நாளாக இருந்தாலும் கூட, அது அங்கிருந்து மறைந்தால், அந்த சிலையின்மீது கொண்டிருக்கும் நம்பிக்கையையும் மதிப்பையும் இழக்க வேண்டியதிருக்கும் என்று அவர் வாதிட்டார். அதிக நாட்கள் அது அங்கு இல்லாமலிருந்தால், அந்த அளவிற்கு அதற்கும் அதன் மூலம் நிறுவனத்திற்கும் இருக்கும் மதிப்பில் குறைபாடு உண்டாகும் என்றார் அவர். இப்படியொரு அற்புதத்தை அங்கு கொண்டு வருவதற்கு தான் செலவழித்த மிகப்பெரிய தொகையையும் கணக்கில் எடுத்து, அதற்கும் விலை பேச வேண்டும் என்றார் அவர்.
அந்த வகையில் இறுதியாக நாட்களின் எண்ணிக்கையைப் பற்றிய தர்க்கத்தில் வந்து நின்றது.
வருடங்களில் இருந்து மாதங்களுக்கும், மாதங்களில் இருந்து வாரங்களுக்கும் இறங்கி வந்த அந்தக் கணக்கு மூன்று நாட்களில் வந்து முடிந்தது.
போட்டியில் ராஜகுமாரி வெற்றி பெற்றால், சிலையை மூன்று நாட்களுக்கு ராஜகுமாரி கொண்டு செல்வாள். நான்காவது நாள் காலையில் திரும்பவும் கொண்டு வருவாள். தோல்வியைச் சந்தித்தால், தீருலால் கூறிய தொகையைத் தந்துவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுவாள்.
தீருலாலிற்கு அந்த ஒப்பந்தம் பிடித்திருந்தது. ஜெனரல் மேனேஜரை வரவழைத்து, அது சம்பந்தப்பட்ட பேப்பர்களில் கையெழுத்துப் போடுவதற்கான கட்டளைகளைப் பிறப்பித்துவிட்டு, இளம் பெண்ணையும் உடன் அனுப்பி வைத்த பிறகுதான் அவருக்கு நிம்மதியே உண்டானது. அத்துடன் போட்டிக்கு ஏற்ற வகையில் பெரிய அளவில் விளம்பர ஆர்ப்பாட்டங்கள் செய்வதற்காக விளம்பரப் பிரிவினரை வரவழைத்து கூற வேண்டியவற்றைக் கூறினார்.
கோட்டையில் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டிருக்கும் நிறைய தமாஷான விஷயங்களில் ஒன்றாக, அந்த நேரத்தில் நடைபெற்ற அந்த சம்பவமும் கடந்து சென்றது. தீருலாலும் அதை அவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை.
இரண்டு நாட்கள் கழித்து கோட்டைக்குள் இருந்த புல்வெளிகளுக்கு மத்தியில் காலை நேர சவாரியில் ஈடுபட்டிருந்த தீருலால், விளம்பரத்திற்காகத் தயார் பண்ணப்பட்டிருந்த ஆரம்ப சுவரொட்டிகளைப் பார்த்தார். எதிர்பார்த்த விஷயம்தான் என்றாலும், போட்டி ஒரு உண்மைச் செயலாகக் கண்களுக்கு முன் நின்று கொண்டிருப்பதைக் கற்பனை பண்ணியதைத் தொடர்ந்து, அவருடைய மனதிற்குள் இனம்புரியாத ஒரு மயக்கம் உண்டானது.
ராஜகுமாரியை நேரில் பலமுறை பார்த்திருந்தாலும், சுவரொட்டியில் இருந்த அவளுடைய உருவம் அவருக்கு ஒரு புதிய அச்சத்தைத் தந்தது. முன்பு ஏதோ வருடத்தில் உலக அழகிப் பட்டத்திற்காகப் போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்ட அவளுடைய சிரிப்பில் இருந்த கவர்ச்சி, புகைப்படத்திற்குள்ளிருந்து கீழே இறங்கி வருவதைப்போல அவருக்குத் தோன்றியது. அவளுடைய சிரிப்பில் தன்னுடனான ஒரு சவால் நிறைந்திருப்பதையும் அவர் உணர்ந்தார்.
எதற்கும் தயங்காதவள் ராஜகுமாரி என்ற உண்மை, இதற்கு முந்தைய அனுபவங்களில் இருந்து தீருலாலுக்குத் தெரியும். அதுதான் அவருடைய குழப்பமான மன நிலைக்குக் காரணமாக இருந்தது.
சிலை அங்கு வந்த நாளிலிருந்து அதைப் பார்த்துக் கொண்டிருப்பவள் ராஜகுமாரி என்ற விஷயம் தீருலாலிற்குத் தெரியும். அதன்மீது அவள் வைத்திருக்கும் ஈடுபாடு சிறிதும் மேலோட்டமானது அல்ல என்பதும் அவருக்குத் தெரியும்.
சிலையை அங்கு உருவாக்குவதற்கு முன்பே, தமாஷ் கோட்டையில் வந்து ராஜகுமாரி தங்கியிருக்கிறாள். கோடீஸ்வரரான மகாராஜாவின் அழகான வைப்பாட்டி என்ற நிலையில், அந்த இளம்பெண் அங்கு விரும்பி வரவேற்கப்பட்டவளாகவும் இருந்தாள். நடுத்தர வயதைக் கொண்ட மகாராஜாவுடன் பாடல்களைப் பாடிக் கொண்டும், அளவுக்கும் அதிகமாக மது அருந்திக் கொண்டும், விளையாடிக் கொண்டும் தங்கியிருந்த அந்த அழகின் சந்தோஷத்திற்குத் தேவையான எதையும் செய்து கொடுக்க தீருலால் அந்தச் சமயத்தில் கடமைப்பட்டிருந்தார். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றினால் மட்டுமே ராஜாவைத் தன்னால் விருந்தாளியாக அடைய முடியும் என்று புத்திசாலியான அவருக்கு நன்கு தெரிந்திருந்தது.
சிலையைத் திறந்து வைப்பதற்கு மகாராஜாவை அழைத்தது தான் ஆபத்துக்கெல்லாம் காரணம். திறப்பு விழாவிற்கு வந்த ராஜாவுடன், "ஹெர் ஹைனஸ்" என்று தாழ்ந்த நிலையில் இருப்பவர்களும், "ராஜகுமாரி" என்று சாதாரண நிலையில் இருப்பவர்களும், "அருந்ததி" என்று ராஜாவும் அழைத்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணும் வந்திருந்தாள்.
சிலையாக ஆக்கி நிறுத்தியிருந்த சிலையையே அன்று அவள் பார்த்த பார்வையை தீருலால் இறுதி மூச்சு இருக்கும் வரை மறக்க மாட்டார். சிலை திறப்பு விழா நாளன்று உண்டான பல கவலைகளில் ஒன்றாக அருந்ததியின் விரிந்த கண்களில் இருந்த ஆச்சரியமும் சேர்ந்தது.
அன்று இரவு, தீவின் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் அருந்ததி தீருலாலை ரகசியமாகப் பிடித்து நிறுத்தினாள். துவார பாலகன் சிலை அல்ல என்றும், அது ஒரு மனிதன் என்ற உண்மை தனக்குத் தெரியும் என்றும் அவள் சொன்னாள். அப்போது சிரித்துக் கொண்டு நகர்ந்துவிட்டாலும், ராஜாவும் அவருடன் இருந்தவர்களும் திரும்பிச் சென்ற பிறகு, பல நாட்கள் அவளுடைய அந்த வார்த்தைகள், இனம் புரியாத ஒரு அச்சுறுத்தலைப் போல அவருடைய நினைவில் இருந்து கொண்டே இருந்தன. அதிகமாக மது அருந்தியதால், பெண் என்னவோ புலம்பியிருப்பாள் என்று நினைத்து அப்போதெல்லாம் அவர் சமாதானப்படுத்திக் கொண்டார்.
ஆனால், ஒரு வருடத்திற்குப் பிறகு மகாராஜாவும் வைப்பாட்டியும் திரும்பவும் வந்த நாளன்று, தன்னுடைய எண்ணம் தவறானது என்பதை தீருலால் உணர்ந்தார்.
அந்த முறை ராஜாவிற்கு முன்னால் இருந்து கொண்டே அவள் ஆவேசமாகப் பேசினாள். கேட்டில் நின்று கொண்டிருந்த மனிதன் கடந்த ஒரு வருட காலமும் அங்கேயே நின்று கொண்டிருக்கிற என்பதைத் தெரிந்து அவள் ஒரேயடியாகத் துள்ளினாள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook