Lekha Books

A+ A A-

சிலையும் ராஜகுமாரியும் - Page 9

silayum rajakumariyum

அதேசமயம் பொழுது புலர்வதற்குமுன் திரும்பி வர வேண்டும் என்பதால், சிலை அவ்வளவு தூரம் போவதற்கு வாய்ப்பில்லை என்றொரு சிறிய எண்ணம் மனதில் இருந்ததால்,

பின்வாங்கிப் போகாமல், களைப்பையும் தளர்ச்சியையும் மறந்துவிட்டு அவன் சைக்கிளை மிதிப்பதைத் தொடர்ந்தான்.

இரு பக்கங்களிலும் மணல் வெளியின் தன்மை மாறி வருவதை வைரம் பார்த்தான். ஆங்காங்கே கள்ளிச் செடிகளும் மணல் வெளிகளில் மட்டுமே இருக்கக்கூடிய சில விசேஷமான தாவரங்களும் வளர்ந்து நின்றிருந்தன. சுற்றி இருந்த இடங்களில் எங்கேயோ மனித வாழ்க்கை இருப்பதற்கான அடையாளங்கள் காற்றில் மணக்க ஆரம்பித்திருப்பதைப் போல தோன்றியது.

அப்படிப்பட்ட சாலையின் வழியாக நீண்ட நேரம் பயணித்து, ஒரு பக்கத்தில் இருந்த ஒற்றையடிப் பாதைக்குள் சைக்கிள் திரும்பியவுடன் வைரத்திற்கு நிம்மதி தோன்றியது. இனி அதிக தூரம் இருக்காது.

அந்த பாதை பயணம் செய்வதற்கு மேலும் சிரமமாக இருந்தது. தார் போட்ட சாலையில் இருந்த சிரமமற்ற தன்மையில் இருந்து தாறுமாறான மணல் காட்டிற்குள் நுழைந்தவுடன், நீளமாக இருந்த ஒரு பாதையை அவன் பார்த்தான். மனிதர்களும் ஒட்டகங்களும் நடந்துபோகக்கூடிய அந்த நடைபாதை, சமீபத்தில் எங்கோ மனித வாசனை இருக்கிறது என்பதை உறுதியாகச் சொன்னது. அதைப் பார்த்தவுடன் வைரத்திற்கு மனதில் சிறிது அமைதி உண்டானது.

பாதையின் ஓரத்தில் ஈச்ச மரங்களும் கள்ளிச் செடிகளும் வளர்ந்து நின்றிருந்த ஒரு இடத்தில், சிலை சைக்கிளை நிறுத்தியது. அதைப் பார்த்ததும் வைரமும் நின்றான்.

5. சிலையின் இரவு நேர விளையாட்டுகள்

ற்று தூரத்தில் மணலில் சில கறுத்த புள்ளிகள் தெரிந்தன. நிலவுடன் கண்கள் மேலும் பழக்கமானவுடன், அவர்கள் மனிதர்கள் தான் என்ற விஷயம் வைரத்திற்குப் புரிய ஆரம்பித்தது. கனமான கயிற்றால் வலை போன்ற ஏதோ ஒரு பொருளை நெய்து கொண்டிருந்த ஒரு கூட்டமாக அது இருந்தது. மணல்வெளியில் பல வகைப்பட்ட உயிரினங்களையும் வளைத்துப் பிடிக்கக்கூடிய ஒரு வலையை அவர்கள் உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற விஷயம் வைரத்திற்கு புரிந்தது.

நாக்கையும் உதடுகளையும் வளைத்து ஒரு சீட்டியடிக்கும் சத்தத்தை உண்டாக்கியவாறு சிலை, அந்தக் கூட்டத்தை நோக்கி சைக்கிளை மிதித்துச் சென்றது. நிலவிக் கொண்டிருந்த அமைதியில் அந்தச் சத்தம் காதுகளைத் துளைத்தது.

அங்கு கூடியிருந்த கூட்டம் அவனை சந்தோஷ ஆரவாரத்துடன் வரவேற்பதை வைரம் பார்த்தான்.

ஒரு புதருக்குள் வைரம் தன்னுடைய சைக்கிளுடன் நுழைந்து சென்றான். மூச்சுவிடும் சத்தம் வெளியே கேட்காமல் இருப்பதற்காக அவன் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது.

பரபரப்பு அடங்கியதும் அவன் சிலையின் இன்னொரு முகத்தைப் பார்த்தான். அசையும் சுதந்திரத்தை ஒரு திருவிழாவைப் போல அது கொண்டாடுவதை வைரம் உணர்ந்தான்.

சிலை மிகவும் சுதந்திர நிலையில் இருந்தது. வலை நெய்து கொண்டிருந்த மனிதர்களின் கூட்டத்தில் சிலர் எழுந்து அதனுடைய சைக்கிளுக்குப் பின்னால் ஓடினார்கள். அவர்களுக்கும் பிடி கொடுக்காமல் வட்டம் சுற்றி சைக்கிளை ஓட்டிக் கொண்டிருந்த போதும், அவன் உரத்த குரலில் சத்தம் போட்டுக் கொண்டிருந்தான். அப்போது அவர்கள் எல்லாரும் சேர்ந்து ஒன்றாகச் சத்தம் உண்டாக்கினார்கள். எல்லா சத்தங்களுக்கு மத்தியிலும் சிலையின் சத்தத்தைத் தனியாகப் பிரித்து எடுக்க வைரத்தால் முடிந்தது. அவனுடைய கூவல் சத்தத்திற்கும், குலுங்கிக் குலுங்கி சிரித்தலுக்கும், அவற்றைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் பதிலுக்கு ஏதாவது சத்தம் போடக்கூடிய அளவிற்கு ஏதோ ஒரு மந்திரத்தன்மை இருப்பதைப்போல வைரத்திற்குத் தோன்றியது. அந்த சத்தங்களின் பெரு வெள்ளத்தைக் கேட்டதால் இருக்கவேண்டும்- எங்கிருந்து என்பது தெரியவில்லை, மணல்வெளி குழந்தைகள், பெண்கள் ஆகியோரைக் கொண்டு நிறைந்தது. வலை நெய்து கொண்டிருந்த ஆண்கள் அனைவரும், தங்களின் வேலைகளை நிறுத்திவிட்டு அவனைச் சுற்றி ஓடி நின்றவுடன், நிலவு வெளிச்சத்தில் ஒரு ஆரவாரிக்கும் மக்கள் கூட்டம் தெரிந்தது. அவர்களில் பலரும் நன்கு குடித்திருக்கிறார்கள் என்பதை வைரம் புரிந்து கொண்டான். பெரும் பாலானவர்களின் கைகளில் புட்டிகள் இருந்தன. அவர்களுடன் சேர்ந்து அவன் விளையாட ஆரம்பித்தவுடன், வைரமும் அதில் மூழ்கிவிட்டான். வயதானவர்கள், குழந்தைகள் ஆகியோரின் கைகளில் அவன் ஒரு விளையாட்டு பொம்மையாக மாறினான். சைக்கிளில் பல வேலைகளையும் செய்து காட்டி, அவன் அவர்களை ரசிக்கச் செய்தான். நம்ப முடியாத அடக்கத்தையும் திறமையையும் அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் அவன் வெளிப்படுத்துகிறான் என்ற விஷயத்தை வைரம் குறிப்பாக கவனித்தான். சில இளம் பெண்கள் அவனைத் தொட்டுத் தடவ முயற்சி பண்ணினார்கள். ஆனால், அவர்களின் கைகளில் சிக்காமல், அவன் விலகிப் போய்க்கொண்டிருக்கிறான் என்பதை மிகவும் கூர்மையாக கவனித்த போது, வைரத்தால் புரிந்து கொள்ள முடிந்தது. பலரும் புட்டிகளை நீட்டினாலும், அவன் மது அருந்துவதில்லை என்ற உண்மையும் கவனிக்கக் கூடியதாக இருந்தது.

இடையில் சில முரட்டு மனிதர்களின் தாக்குதல்களும் உண்டாயின. ஆனால், அவை அனைத்தும் விளையாட்டுகள் என்பதையும், அப்படிப்பட்ட மோதல்களில் ஒருவரோடொருவர் கொண்ட கோபம், பகை ஆகியவற்றின் நிழல்கூட இல்லை என்பதையும் வைரம் தெரிந்து கொண்டான். பிடிவாதம் கொண்ட அப்படிப்பட்ட மோதல்களின்போது, இரண்டு பக்கங்களில் உள்ளவர்களையும் உற்சாகப்படுத்திக் கொண்டு ஆண்களும் பெண்களும் பைத்தியம் பிடித்தவர்களைப் போல உரத்த குரலில் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள். எல்லா போட்டிகளிலும் அவன் தான் எதிரில் இருந்தவர்களைத் தரையில் விழ வைத்துக் கொண்டிருந்தான். தனியாகவும் கூட்டமாகவும் தன்னை எதிர்த்து வந்த எதிராளிகளை அவன் புல்லைப்போல தோல்வியடையச் செய்தான்.

ஒருமுறை அவர்களில் சில சிறுவர்கள் சேர்ந்து அவனை ஒரு குழிக்குள் கொண்டு போய் படுக்க வைத்து, மணலைப் போட்டு மூடினார்கள். அவனை அடக்கம் செய்த இடத்தில் பெண்கள் பூக்களையும் கண்ணீரையும் வைத்து அபிஷேகம் செய்தார்கள். இறந்தவனின் நல்ல குணங்களைக் கூறி அவர்கள் பேசி முடித்தவுடன், ஒரு வெடி குண்டு வெடித்ததைப் போல வானம் முழுவதிலும் மணலை வாரி எறிந்தவாறு பூமிக்குக் கீழேயிருந்து அவன் குதித்து மேலே வந்தான்.

இதற்கிடையில் நிலவு, பந்தங்கள் ஆகியவற்றின் வெளிச்ச வட்டத்திற்கு வெளியே- சில பிரகாசித்துக் கொண்டிருக்கும் கண்கள் வந்து சேர்ந்திருப்பதை வைரம் பார்த்தான். இருட்டில் ஒவ்வொன்றாக அவை ஒளிரத் தொடங்கியதைப் பார்த்தபோது, முதலில் அவன் சற்று பயப்பட்டான். மணல்வெளியில் இருந்து வந்த குள்ள நரிகள்தான் அவை என்பதைத் தெரிந்து கொண்ட பிறகுதான், அவனுக்கு நிம்மதியே உண்டானது. மனிதர்களின் ஆரவார சத்தங்களும், கூப்பாடுகளும் உயர்ந்து ஒலித்ததற்கேற்றாற் போல அவையும் சேர்ந்து ஊளையிட்டன.

 

+Novels

சபதம்

சபதம்

March 10, 2012

வேதகிரி

வேதகிரி

March 13, 2012

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel