Lekha Books

A+ A A-

சிலையும் ராஜகுமாரியும் - Page 10

silayum rajakumariyum

சந்தோஷம் நிறைந்து நின்றிருந்த அவற்றின் ஊளைச் சத்தத்தைக் கேட்டபோது, அவையும் விளையாட்டுகளில் பங்கு பெற்றவையாக ஆகிவிட்டன என்பதைப்போல வைரத்திற்குத் தோன்றியது. ஆரவார சத்தங்கள் அதன் உச்ச நிலையை அடைந்திருந்த நிமிடங்களில், பார்வைக்கு அப்பால் இருக்கும் இடங்களில் இருந்து பாலைவனச் சிறுத்தைகள் கர்ஜிக்கும் சத்தத்தை அவன் தெளிவாகக் கேட்டான்.

எத்தனையோ முகங்கள் கண்களுக்கு முன்னால் கடந்து போனாலும், அங்கிருந்தவர்களில் இரண்டு பேரை மட்டும் வைரம்- குறிப்பாக கவனித்தான். அவர்களிடம் அவன் காட்டிய தனிப்பட்ட ஆர்வமும் பிரியமும், அவர்கள் அவன்மீது காட்டிய இரக்கம் கலந்த பாசமும்தான் அப்படியொரு கவனத்திற்கு வழி உண்டாக்கியது.

அவர்கள் ஒரு பெண்ணும் ஒரு ஆணும். பெண்ணுக்கு ஐம்பத்தைந்துக்கு மேல் வயது இருக்கும். ஆண் அவளுடைய கணவன்.

அவர்களுடைய முகம் மணல் வெளியின் காற்றுபட்டு சுருக்கங்கள் விழுந்து காணப்பட்டன. மூடியிருந்த கறுப்பு நிறக் கம்பளிமீது மண்ணும் தூசியும் படிந்திருந்தன. ஆணின் நரைத்த தாடியில் ஏதோ காட்டுச் செடியின் வேர்கள் ஒட்டி இருந்தன. பெண்ணின் பெரிய கண்களில் நிலவு பிரகாசித்தது. அவனுடைய ஆச்சரியப்பட வைக்கும் வித்தைகளுடன் சேர்ந்து, உண்மையும் பெருமையும் கலந்த உரத்த குரலில் சத்தம் போட்டுக் கைகளைத் தட்டிக் கொண்டு நின்றிருந்த அவர்கள்- சிலையின் தந்தையும் தாயுமாக இருக்கலாம் என்று வைரத்திற்கு சந்தேகம் உண்டானது.

அந்த விளையாட்டுகள் நடந்து கொண்டிருந்த இடத்திற்குள் காலடி எடுத்து வைத்து, சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையை வரவழைக்க சிறிதும் தைரியம் தோன்றாததால், அவன் தன்னுடைய புதருக்குள் இருந்து அசையவே இல்லை.

அதிகாலைப் பொழுதின் ஆரம்பத்தை அறிவித்தவாறு, பாலைவனத்தின் தூரத்து மூலையில் சந்திரன் நிறத்தை மாற்றிக் கொண்டு, மஞ்சள் நிறம் மறைந்து சிவப்பு நிறத்திற்கு வந்ததும், தொடர்ந்து எரிக்கக்கூடிய நெருப்பு நிறத்தை எடுத்துப் பூசிக் கொண்டதும் மிகவும் வேகமாக நடந்தன.

அதை கவனித்ததால் இருக்க வேண்டும், சிலை உதட்டையும் நாக்கையும் வளைத்து வேறொரு விசேஷ சத்தத்தை உண்டாக்கியது. விளையாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அடையாளம் அது என்று தோன்றியது. காதுகளைத் துளைக்கும் கூர்மையுடன் வெளியே கேட்ட அந்த சத்தத்தில், இனம்புரியாத கட்டளைக் குரல் கலந்திருந்தது. முதலில் ஓடியவை இருட்டில் தெரிந்த கண்கள்தான். உரத்த குரலில் கத்திக் கொண்டே விளையாட்டை நிறுத்திவிட்டுப் பிரிந்து செல்லும் சிறுவர்களைப்போல அவை பாலைவனத்தில் போய் மறைந்தன. அவற்றுக்குப் பின்னால் மக்கள் கூட்டமும் பிரிந்தது. கடைசி கடைசியாக பிரிந்து சென்றவர்களின் கூட்டத்தில் அந்த வயதான தம்பதிகளும் இருந்தார்கள்.

எங்கிருந்து வந்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியாததைப் போலவே, அவர்கள் எங்கு போய் மறைந்தார்கள் என்பதையும் வைரத்தால் தெரிந்து கொள்ள முடியவில்லை.

எல்லாரும் போனதும், மணல்வெளி முற்றிலும் யாரும் இல்லாமல் ஆனது. சிறிது நேரம் சந்திரனுக்கு நேராக வெறுமனே பார்த்து நின்றுவிட்டு, சிலை மணலில் கால்களை நீட்டிப் படுத்தது. அந்த மனிதன் அப்போதுதான் சற்று முதுகை நிமிர்த்திக்கொண்டு படுக்கிறான் என்பதை நினைத்தபோது வைரத்திற்கு சிலைமீது பயம் கலந்த ஈடுபாடு உண்டானது.

அந்த ஓய்வுப் பொழுது அதிக நேரம் நீடித்திருக்கவில்லை. சந்திரன் சிவப்பு நிறத் தட்டின் நிறத்தை மாற்றத் தொடங்கியதைப் பார்த்து, சிலை மீண்டும் வேகமாக எழுந்தது. இவ்வளவு நேரமும் அது உறங்கிக் கொண்டிருந்ததா, இல்லாவிட்டால் வெறுமனே கண்களை விழித்துக்கொண்டு படுத்திருந்ததா என்பதையே வைரத்தால் புரிந்து கொள்ள முடியவில்லை. அருகில் போய் பார்ப்பதற்கு தைரியமும் உண்டாகவில்லை.

முக்கியமான அன்றாடச் செயல்களை அது அங்கேயே நிறைவேற்றுவதைப் பார்த்த பிறகுதான் வைரத்திற்கு மீண்டும் தைரியம் திரும்ப வந்தது. எது எப்படி இருந்தாலும், இயற்கையிலேயே உள்ள அப்படிப்பட்ட தேவைகளை வெளிப்படுத்துவதால் அது ஒரு மனிதனாகத்தான் இருக்க வேண்டும்!

அன்றாட செயல்பாடுகளைச் செய்து முடித்து, நட்சத்திரங்களின் திசையைப் பார்த்து நேரத்தைக் கணக்கிட்டு, மீண்டும் அது சைக்கிளில் ஏறிப் புறப்பட ஆரம்பித்தபோது, வெளியே வரலாமா உள்ளேயே இருந்து விடலாமா என்ற குழப்பமான மனதுடன் இருந்த வைரம், தான் மறைந்திருந்த இடத்தை விட்டு வெளியே வந்து சிலையைச் சந்தித்தான்.

இதற்கு முன்னால் தனக்குத் தெரிந்திருந்த ஒரு மனிதனை அந்த ஆள் ஆரவாரமற்ற இடத்தில் பார்த்ததால் உண்டான திகைப்பு இயல்பாகவே சுப்பனுக்கு உண்டானது. எனினும் அவனுடைய முகத்தில் அப்படிப் பெரிய அளவில் மாறுதல் எதுவும் தெரியவில்லை.

சென்றவுடன் வைரம் சுப்பனின் கால்களில் விழுந்தான். அவனுக்குத் தெரியாமலே பின் தொடர்ந்து வந்ததற்காகவும், இரவில் நடைபெற்ற விளையாட்டுகள் முழுவதையும் மறைந்திருந்து பார்த்ததற்காகவும் மன்னிப்பு கேட்டான். தொடர்ந்து இதைப் போன்ற ஒரு வித்தை காட்டுபவனைத் தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்ததே இல்லை என்று கூறி அவன் சுப்பனைப் புகழ ஆரம்பித்தான். வாழ்நாள் முழுவதும் உடலால் ஆகக்கூடிய பலவிதப்பட்ட வித்தைகளைக் காட்டிய தனக்கு சுப்பனின் சிஷ்யனாகச் சேர்த்து மீண்டும் எல்லாவற்றையும் ஆரம்பத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் போலத் தோன்றுகிறது என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டு அவன் தன்னுடைய புகழுரைகளுக்கு இனிமை கூட்டினான்.

ஆனால், அந்தப் பாராட்டுரைகளுக்கோ கால் பிடித்தலுக்கோ சுப்பனிடம் எந்தவொரு மாறுதலையும் உண்டாக்க முடியவில்லை. அவன் உயர்ந்த நிலையை ஏற்றுக்கொள்ளக்கூடிய இயல்புடையவன் அல்ல என்று தான் கண்டுபிடித்த விஷயம் வைரத்தைப் பொறுத்த வரையில் பெரிய ஒரு உற்சாகத்தைத் தரக்கூடியதாக இருந்தது. புதிதாகப் பெற்ற தைரியத்தைப் பயன்படுத்தி, துவாரபாலகனும் சுப்பனும் ஒரே ஆள்தான் என்ற ரகசியத்தைத் தான் தெரிந்து கொண்டதை அவன் சுப்பனிடம் சொன்னான். அதற்கும் எதிர்பார்த்த மாதிரி அதிர்ச்சியோ, கோபமோ வரவில்லை. வேலை நேரத்திற்கு முன்பே கோட்டையை அடையவேண்டும் என்ற கடமை உணர்வு மட்டுமே அந்த நேரத்தில் சுப்பனிடம் இருந்தது.

ஆபத்து எதுவும் இல்லை என்ற விஷயம் உறுதியாகத் தெரிந்தவுடன் வைரம் தன்னுடைய தேவை என்ன என்பதை வெளியிட்டான். சுப்பனுக்கு எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் கொடுக்கலாம். என்ன வசதிகள் வேண்டுமானாலும் செய்து தரலாம். தன்னுடன் வரவேண்டும். சுப்பனும் தன்னுடன் இருந்தால், இரண்டு பேரும் சேர்ந்து சுதந்திரமாக வர்த்தகத்தில் ஈடுபடலாம் என்றும், அப்படிச் செய்தால் பணத்தை குவியச் செய்ய முடியும் என்றும் அவன் ஆதாரங்களுடன் விளக்கிச் சொன்னான்.

ஆனால், சுப்பனுக்கு அதில் சிறிதும் ஆர்வம் உண்டாகவில்லை. அவனைத் தன் பக்கம் இழுக்க வேண்டும் என்பதற்காக, தன் கையில் இருந்த பணம் முழுவதையும் அவன் வெளியே எடுத்துக் காட்டினான்.

 

+Novels

சபதம்

சபதம்

March 10, 2012

வேதகிரி

வேதகிரி

March 13, 2012

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel