Lekha Books

A+ A A-

சிலையும் ராஜகுமாரியும் - Page 36

silayum rajakumariyum

ராஜகுமாரிக்கு அந்த நேரத்தில் எந்தவொரு அச்சம் கலந்த கலக்கங்களும் உண்டாகவில்லை என்பதுதான் உண்மை. அவனுடைய கைகளால் உண்டாகும் இறுதி முடிவு அவளுக்கு ஒரு இறுதி முடிவாகத் தோன்றவேயில்லை. அதனால்தான் அவளுடைய முகத்தில் அந்த இறுதி நிமிடத்திலும் தெய்வீகமான ஒரு புன்னகை மட்டுமே மலர்ந்து தெரிந்தது. மொட்டை மாடியில் பதினாறு மாடிகளுக்குக் கீழே இருந்து மேலே வந்த வெளிச்சத்தில் அவளுடைய முகத்தைப் பார்த்ததும் அவனுடைய கைகள் அடுத்த நிமிடம் தயங்கி, என்ன செய்வது என்று தெரியாத திகைப்புடன் அவளை சுதந்திரமாக ஆக்கின. தொடர்ந்து சங்கு ஒலிப்பதைப் போன்ற ஒரு உரத்த ஓசையை எழுப்பியவாறு அவன் மொட்டை மாடியிலிருந்து பதினாறு மாடிகளுக்குக் கீழே விழுந்தான். அவனுடைய சத்தம் ஆழங்களில் எங்கோ போய் ஒலித்து நின்றதைக் கேட்டதும், ராஜகுமாரி மயக்கமடைந்து விழுந்துவிட்டாள்.

ஆனால், திடீரென்று உண்டான அந்த மயக்கத்தைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டு அவள் எழுந்தாள். நடப்பதற்கு சக்தி கிடைத்தது என்பதை அறிந்த நிமிடம், அவள் பதினாறு மாடிகளின் படிகளிலும் இறங்கி கீழே ஓடினாள்.

அங்கு, புல் பரப்பில், வெளிச்சம் குறைவாக இருந்த ஒரு பகுதியில் கோவிந்த் கிடந்தான். அவனுடைய உடல் குப்புறக் கிடந்தது.

ஒரு உரத்த அலறல் சத்தத்துடன் ராஜகுமாரி அவனுடைய உடலின்மீது விழுந்தாள். அவனுடன் சேர்ந்து மரணத்தைத் தழுவ வேண்டும் என்ற தீவிர பிரார்த்தனையுடன்தான் அவள் அப்படிச் செய்தாள். ஆனால், அவளை திகைக்க வைத்துக் கொண்டு, யார் தன் மீது வந்து விழுந்தது என்பதை அறிவதற்காக என்பதைப் போல கோவிந்த் தலையைத் திருப்பிப் பார்த்தான்.

அவன் இறக்கவில்லை. இறக்கவில்லை என்பது மட்டுமல்ல- அவனுக்கு ஒரு காயமும் உண்டாகவில்லை. மரக்கிளைகளில் எங்கோ மோதி, கிளை ஒடிந்து, ஆங்காங்கே கொஞ்சம் ரத்தம் கசிந்திருந்தது. அவ்வளவுதான்.

அவளை அடையாளம் தெரிந்ததும், அவன் மீண்டும் மண்ணுக்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டான். அவன் அப்படியே படுத்தவாறு அழுது கொண்டிருக்கிறான் என்பதை ராஜகுமாரி தெரிந்துகொண்டாள்.

அவனுக்கு அழவும் முடியும் என்று அப்போது முதல் முறையாக ராஜகுமாரிக்குத் தெரிய வந்தது.

அவனுடைய அழுகை நிற்பதற்காக காத்துக்கொண்டு, முன்பு பல நேரங்களிலும் செய்ததைப் போல, அவனுடைய கால்களில் முகத்தை வைத்துக்கொண்டு அவள் படுத்தாள். அழுகைச் சத்தம் குறைந்தாலும், அவனுடைய மனம் குமுறிக் கொண்டுதான் இருக்கிறது என்பதை அவள் புரிந்துகொண்டாள்.

நிலவு மறைய ஆரம்பித்தபோது, அவனை அமைதி வந்து மூடத் தொடங்குவதைப் போல அவளுக்குத் தோன்றியது. தூங்கியதைப் போல நடித்துக்கொண்டு படுத்திருந்த அவளைத் தொந்தரவு செய்யாமல், அவளுடைய கைகளில் இருந்து தன்னுடைய கால்களைப் பிரித்து எடுத்து அவன் எழுந்து நின்றான். அவனுடைய பார்வை தூரத்தில், பார்வைக்கு அப்பால் இருக்கும் எங்கோ போய் பதிவதை அவள் தெளிவாகப் பார்த்தாள். அங்கேயே பார்வையைப் பதிய வைத்துக்கொண்டு, மூன்று அடி முன்னால் வைத்து அவன் ஒரு இடத்தில் நின்றான்.

அங்கேயிருந்து பிறகு அவன் அசையவே இல்லை. அருந்ததியின் கண்ணீருக்கோ கூப்பாடுகளுக்கோ மன்னிப்பு கேட்டல்களுக்கோ அவனிடம் அசைவு எதையும் உண்டாக்க முடியவில்லை.

காலம் எவ்வளவோ கடந்தோடிய பிறகும், கடல் எவ்வளவோ கோபப்பட்டு எழுந்த பிறகும் அந்த சிலை அங்கேயே நின்றிருந்தது- நிரந்தரமாக. உப்புக்காற்று அடித்து அவனுக்கு காலப்போக்கில் பாசி பிடித்தது. அவனுடைய பார்வை சென்று மோதிய இடத்தில், வெளியே தள்ளிக் கொண்டிருந்த ஓரப்பகுதி கடலில், அவனை ஒரு முறை பார்ப்பதற்காக ஆர்வத்துடன், அவ்வப்போது நீர்க் கன்னிகள் தலையை உயர்த்திக் கொண்டிருந்தார்கள்.

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel