Lekha Books

A+ A A-

சிலையும் ராஜகுமாரியும் - Page 5

silayum rajakumariyum

அந்தச் சம்பவத்தைப் பற்றிய ரகசியத்தைக் காப்பாற்றி வைப்பதில் இருக்கும் சிரமங்கள், நேரடியாகத் தலையிடுதல் என்ற விஷயங்கள் தனி. எது எப்படியோ படுக்கையறையில் வேறு யாருக்கும் தெரிவிக்காமல் ஒரு செடியையோ கிளியையோ வளர்ப்பதைப் போல, தனி கவனம் செலுத்தி தீருலால் சிலையைப் பாதுகாத்துக் கொண்டிருந்தார்.

எங்கிருந்து வருகிறது என்பதோ எங்கே போகிறது என்பதோ தெரியாததைப் போலவே தீருலாலுக்கு சிலையின் உண்மையான பெயரும் தெரியாது. அவர் அவனுக்கு சுப்பன் என்று பெயர் வைத்திருந்தார். நேரடியாகப் பார்ப்பதற்கோ, உரையாடுவதற்கோ உரிய சூழ்நிலை வராததால், அப்படி அழைக்க வேண்டிய சந்தர்ப்பம் வரவில்லை என்பதுதான் உண்மை.

சுப்பனுக்கும் தீருலாலுக்குமிடையே உள்ள உறவு ஆரம்பமானது சிறிய நாடகத்தைப் போன்ற சம்பவத்தின் மூலம்தான். அது அப்படித்தானே நடந்திருக்க முடியும்?

ஏழு... ஏழரை வருடங்களுக்கு முன்னால் "தமாஷ் கோட்டை"யில் "கோட்டை"யின் மதிப்பு என்று குறிப்பிட்டுக் கூறப்படும் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸின் தொடக்க விழா நடக்கும் நாள்.

அப்போது "கோட்டை"க்குள் இலவசமாகவே நுழையலாம். எல்லா நிகழ்ச்சிகளுக்குள்ளும் நுழையலாம். அப்படி நுழைந்த கூட்டத்தில் ஒருவன்தான் சுப்பன்.

ஒரு மத்திய அமைச்சரும் ஒரு சூப்பர் திரைப்பட நட்சத்திரமும் ஒரு முன்னாள் மன்னரும் சேர்ந்து பல பிரிவுகளாகத் தொடங்கி வைத்த அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காகப் பல நாடுகளில் இருந்தும் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தார்கள்.

மார்க்கெட்டிங் காம்ப்ளெக்ஸை மத்திய அமைச்சரும் இன்னொரு நடன காம்ப்ளெக்ஸை திரைப்பட நட்சத்திரமும் திறந்து வைக்கிறார்கள். கேட்டில் இருக்கும் துவாரபாலகனின் சிலையைத் திறந்து வைக்கும் பொறுப்பு முன்னாள் மன்னரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

புகழ் பெற்ற ஒரு சிற்பியைத்தான் சிலையை செய்ய சொல்லிஇருந்தார்கள். தீருலாலின் ஜாடையில் இருக்கும் ஒரு துவார பாலகனின் தோற்றத்தை அவரும் சிற்பியும் கலந்து பேசி முடிவு செய்திருந்தார்கள்.

சிலை தயாரிப்பின் பல்வேறு தருணங்களிலும் தீருலால் நேரில் சென்று வேலையின் முன்னேற்றத்தைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தார். எனினும், சிலை திறப்பிற்கு முந்தைய நாள், வேலை முற்றிலும் முடிவடைந்த சிலையைப் பார்த்ததும் அவருக்கு பைத்தியமே பிடித்துவிட்டது.

சப்பை மூக்கையும் அளவுகள் தவறிப்போன தோள்களையும் கொண்டு மிகவும் மோசமான நிலையில் இருந்த அந்த வெங்கலத்தால் ஆன சிலையைப் பார்த்து அவருக்கு கடுமையான கோபம் வந்தது. கோபம் வந்தால் கண், மூக்கு எதையும் பார்க்காத குணத்தைக் கொண்ட மனிதரான தீருலால் முதலில் சிலையையும் பிறகு சிற்பியையும் தாக்க ஆரம்பித்தார். சிற்பி ஓடித் தப்பித்து விட்டார். அது முடியாது என்பதால் முகத்தில் பாதிப்பை ஏற்றுக் கொண்டு சிலை அங்கேயே நின்றிருந்தது.

அதன் உதட்டின் ஒரு பகுதியும் தாடை எலும்பு ஒடிந்தும் சுருங்கியும் பார்க்கவே சகிக்க முடியாத அளவிற்கு இருந்தது.

அதைப் பார்த்தபோதுதான் தீருலாலிற்கு மறுநாள் அதைத் திறக்கும் விழா இருப்பதே ஞாபகத்திற்கு வந்தது.

தான் செய்த முட்டாள்தனமான காரியத்தைப் பற்றி நினைத்துப் பார்த்த அந்த மனிதர் முழுமையாக ஒடிந்து போய்விட்டார். சற்று தோற்றத்தில் குறைபாடுகள் இருந்தாலும் முதலில் இருந்த சிலையையே திறந்து வைத்திருந்தால், அவமானம் உண்டாகாமலாவது இருக்கும் என்பதை நினைத்து, இனி என்ன, எப்படி என்று யோசித்துக் கொண்டு முற்றிலும் குழம்பிப் போய் இருந்த அந்த நேரத்தில்தான் தீருலாலிற்கு முன்னால் சுப்பன் வந்து நின்றான்.

முழு கோபமும் முடிவடைந்து, மனம் மிகவும் அமைதியாக இருந்ததால், அவரால் சுப்பனைப் பார்த்து கோபமாக எந்த வார்த்தைகளையும் கூற முடியவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல், அவன் கூறியது முழுவதையும் அவர் கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதிருந்தது.

இன்னொரு சந்தர்ப்பமாக இருந்தால், அவனை அவர் விரட்டியடித்திருப்பார். காரணம் - தினமும் எண்ணற்ற நபர்கள் நேரிலும், கடிதங்கள் மூலமும் குறிப்பிடக்கூடிய அதே தேவையைத் தான் சுப்பனும் முதலாளிக்கு முன்னால் வைத்தான்.

ஒரு வேலை வேண்டும்.

தனக்கு சைக்கிளில் சில வேலைகளைக் காட்டத் தெரியும் என்றும், சிறுவர்கள் பூங்காவில் ஒரு வேலை தந்தால், குழந்தைகளை சந்தோஷப்படுத்த தன்னால் முடியும் என்றும் சுப்பன் சொன்னான். அவற்றுக்கு வேறு ஆட்கள் இருக்கிறார்கள் என்று கூறியபோது, அப்படியென்றால் முதலாளி கூறும் எந்த வேலையாக இருந்தாலும் செய்வதற்கு தான் தயார் என்று சுப்பன் அமைதியான குரலில் சொன்னான்.

கையற்ற நிலை, அவமானம் ஆகியவற்றின் உச்சத்தை அடையும் போது, மனிதனுக்கு தோன்றக்கூடிய வரண்ட சேடிஸத்தின் வெறுப்புடன், "அப்படியென்றால் உன்னால் ஒரு சிலையாக அரை மணி நேரம் நிற்க முடியுமா?" என்று தீருலால் கேட்க, எந்தவொரு தயக்கமும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் "நிற்கிறேன்" என்று சம்மதிக்க, அப்படியென்றால் நிற்குமாறு கூறி தீருலால் ஒரு போஸ் கொடுக்க, சுப்பன் அதே மாதிரி நிற்க, இன்னொரு பைத்தியக்காரன் என்று நினைத்து மறுநாளைய இக்கட்டான சூழ்நிலையை எப்படி சரி பண்ணுவது என்பதைப் பற்றி சிந்திப்பதற்காக தீருலால் எங்கோ போய்விட்டு, அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ கடந்த பிறகு அந்த வழியே சிறிதும் எதிர்பாராமல் கடந்து சென்றபோது, தான் கூறிய போஸில் அப்போதும் சிலையாக நின்று கொண்டிருந்த சுப்பனை அவர் பார்த்து ஆச்சரியப்பட்டு நிற்க, அதற்கு மேலும் பலமுறை நிற்க வைத்துப் பார்த்த பிறகு, மறுநாள் நடக்கும் தொடக்க விழாவின்போது சிலை திறந்து வைக்கப்பட்ட பிறகு, அரைமணி நேரம் சிலையாக நிற்பதற்கு சுப்பன் கேட்டுக்கொள்ளப் பட... மறுநாள் ஒரு ஆளுக்குக்கூட அது சிலை அல்ல... என்று தோன்றாத அளவிற்கு பனி உறைந்து போய் விட்டதைப் போல அசைவே இல்லாமல் நின்றிருந்த சுப்பன் தன்னுடைய பணியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அந்த உறவு தொடங்கியது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel