Lekha Books

A+ A A-

சிலையும் ராஜகுமாரியும் - Page 3

silayum rajakumariyum

இப்படிப்பட்ட ஏராளமான அற்புதங்களின் மேற்கு எல்லையில் ஒரு ஹெலிபேட் இருந்தது. அதிகமாகப் பணம் வைத்திருப்பவர்கள் அங்கே இருந்து ஹெலிகாப்டரில் ஏறி, பதினேழு கிலோமீட்டர்களுக்கு அப்பால் இன்னும் மூன்று கிலோமீட்டர்கள் கடலுக்கு மேலே தாண்டி ஒரு தீவில் இறங்கலாம். அங்கு "பாரடைஸ் ஆன் ஐலாண்ட்" என்ற பெயரில் தீருலால் குடும்பத்திற்குச் சொந்தமான இன்னொரு பொழுதுபோக்கு மையமும் இருக்கிறது. நிறைய பணம் வைத்திருக்கும்

கோடீஸ்வரர்கள் மட்டுமே அங்கு போக முடியும். சென்றுவிட்டு வந்தவர்களிடமிருந்து தெரிந்து கொண்ட விஷயம் "தீவில் சொர்க்கம்"- சொர்க்கத்தில் சொர்க்கத்தைப் படைக்கிறது என்பதுதான். ஆண்களும் பெண்களும் முழு நிர்வாணமாக மட்டுமே நடக்க அனுமதிக்கும் "ந்யூட் பீச்"களும், "லைவ் ஷோக்கள்" உள்ள இரவு நேர க்ளப்களும் இருப்பதால் இருக்க வேண்டும் - சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக அங்கு வரும் வசதி படைத்தவர்கள்தான் அந்தத் தீவிற்குச் சென்று தங்குவார்கள். பணத்தைத் தண்ணீரைப்போல செலவு செய்ய முடிந்தவர்களால் மட்டுமே தங்க முடியும் "தீவில் சொர்க்க"த்திற்குப் போவதாக இருந்தாலும் ஐந்து ரூபாய்க்கான நுழைவு டிக்கெட்டைக் கட்டாயம் எடுத்தே ஆக வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளும் போதுதான், தீருலாலின் வியாபாரத் திறமைகளின் ஆழத்தைப் பற்றி நாம் நினைக்கத் தொடங்கி விடுவோம். அதனால்தான் "கோட்டை" யின் பிரதான வாயிலின் முக்கியத்துவமும் சிந்தனைக்கான விஷயமாக ஆகிறது.

பிரதான நுழைவு வாயிலின் முக்கியத்துவத்தை வேறு யாரையும் விட தெரிந்து வைத்திருப்பவர் அதன் உரிமையாளராகத்தானே இருக்க முடியும்! அதனால்தான் "கோட்டை"யைத் தேடி வரும் எந்தவொரு விருந்தாளியையும் சிறிது நேரம் பிடித்து நிறுத்தக்கூடிய ஒரு தந்திரச் செயலை அங்கு ஏற்படுத்த அவர் திட்டமிட்டார். காரணம்- "கோட்டை"யின் ஏராளமான தமாஷ்களில் உங்களுடைய மனதை இழந்தாலும், திரும்பி வந்து பல வருடங்கள் கடந்த பிறகும், மறையாத நினைவு என்று எஞ்சி இருப்பது அந்த ஞாபகச் சின்னமாகத்தான் இருக்க வேண்டும் என்று அவர் உறுதியாக நினைத்தார். அத்துடன் அதைப் பார்ப்பதற்காகவாவது நீங்கள் மீண்டும் அங்கு திரும்பி வர வேண்டும் என்றும் அவர் நினைத்தார். அந்தக் கணக்கு கூட்டல்கள் தவறவில்லை. பிரதான வாயிலுக்குள் நுழைந்தால், யாருடைய கண்களாக இருந்தாலும் அவை முதலில் பதிவது, அந்த அற்புதச் சிலையின் மீதாகத்தான் இருக்கும்.

அசாதாரணமான உடலமைப்பைக் கொண்ட ஒரு துவாரபாலகன்! தலையில் சிவப்பு நிற தலைப்பாகை, நெற்றியில் சிவப்பு வண்ணத்தில் வட்ட வடிவமான பொட்டு, முறுக்கி விடப்பட்ட அடர்த்தியான மீசை, தோளில் சிவப்பு நிறத்தில் துண்டு, இடுப்பில் சிவப்பு நிற சில்க் துணி, காதுகளிலும் கையிலும் இருக்கும் வெள்ளி வளையங்களும், கழுத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் வைர மாலையும், இடுப்பில் வேட்டியின் மீது சுற்றப்பட்டிருக்கும் தங்க இடுப்புச் சங்கிலியும் சேர்ந்து அதற்கு ஒரு தனிப்பட்ட கம்பீரத்தையும் பிரகாசத்தையும் அளித்தன. கையில் ஆயுதமாக ஒரு நீளமான, ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஈட்டி இருந்தது.

அந்த ஈட்டிதான் சிலையிலேயே மறக்க முடியாத விஷயம். நீங்கள் உள்ளே செல்லும்போது, ஒரு பக்கமாகச் சாய்த்து இறுகப் பிடித்திருக்கும் ஈட்டி, திரும்பி வரும்போது உங்களைப் பார்த்து சுட்டிக் காட்டுவதைப் போல நிற்பதைப் பார்த்தால் எப்படி இருக்கும்? சென்ற மாதம் நீங்கள் வந்தபோது, தரையில் கிடக்கும் ஏதோ மிருகத்தையோ எதிரியையோ கொல்வதற்காக ஓங்கியதைப் போல இருந்த ஈட்டியின் முனைப்பகுதி, இந்தத் தடவை வரும்போது வானத்தில் பறப்பதற்குத் தயார் நிலையில் இருப்பதைப் போல கண்டால் எப்படி இருக்கும்?

நீங்கள் உண்மையாகவே ஆச்சரியப்படுவீர்கள்.

இந்த எல்க்ட்ரானிக்ஸ் யுகத்தில் இப்படிப்பட்ட விஷயங்களெல்லாம் ஞாபகச் சின்னங்களாக எப்படி ஆகும் என்று கேள்வி கேட்கும் நாகரீக மனிதர்களுக்கு அது ஒரு ஆச்சரியமான விஷயமாக இருப்பது- உண்மையிலேயே சிலை, சிலை அல்ல என்பதும் அது ஒரு மனிதன்தான் என்பதும் தெரிய வரும்போதுதான்.

துவாரபாலகன் உயிருள்ள ஒரு மனிதன்தான் என்பது ஒரு ரகசியமே அல்ல. மாறாக, அங்கு பார்ப்பதற்காக வரும் சிறு குழந்தை களுக்குக்கூட அந்த விஷயம் நன்றாகத் தெரியும். அதுதான் அதன் விளம்பரமும் பெருமையும். "தமாஷ் கோட்டை"யின் நூற்றுக்கணக்கான காட்சிப் பொருட்களிலேயே மிகவும் புகழ் பெற்றது அந்த உயிருள்ள சிலைதான்.

துவாரபாலகனின் இந்தப் புகழை சரியான விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக உரிமையாளர் அங்கு ஒரு போட்டியையே ஏற்படுத்தினார். சிலை வடிவத்தில் நின்று கொண்டிருக்கும் அந்த மனிதனை சிரிக்க வைக்கவோ கவலைப்பட வைக்கவோ கோபப்பட வைக்கவோ- அவ்வளவு ஏன்- முகத்திலோ உடலிலோ ஏதாவதொரு அசைவைக்கூட உண்டாக்குபவர்களுக்கு "கோட்டை"க்குள் பயணித்துக் கொண்டிருப்பதற்கு மத்தியில் ஆயிரம் ரூபாய்களுக்கான டிக்கெட்டுகள் பரிசாக அளிக்கப்படும் என்பதுதான் அந்தப் போட்டி. அது தவிர, ஒரு இரவு வேளையில் "ஃபன் காட்டேஜி"ல் இலவசமாகத் தங்குவதற்கான வசதியும்.

பரிசு என்ற ஈர்ப்பு விஷயமும் இருந்ததால், சிலைக்கு முன்பு எப்போதும் ஆட்கள் கூடிய வண்ணம் இருந்தனர்.

சிறு குழந்தைகளும் மற்றவர்களும் அருகில் சென்று தொட்டுத் தொந்தரவுகள் உண்டாக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக, சிலையைச் சுற்றி சதுரமாக முள் கம்பிகளால் ஆன வேலி அமைக்கப்பட்டது. வெயிலும் மழையும் விழாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நான்கு தூண்கள் தாங்கிக் கொண்டிருக்க அமைக்கப்பட்ட வட்ட வடிவமான மேற்கூரைக்குக் கீழே, சற்று உயரமாகக் கட்டப்பட்டிருந்த பீடத்தின் மீது நின்று கொண்டிருந்த அந்த சிலையில் ஏதாவது ஒரு அசைவை உண்டாக்க இன்று வரை யாராலும் முடியவில்லை.

வேறு சில சிலைகளுக்குக் கீழே சரஸ்வதி, விஷ்ணு, கிறிஸ்து, ஜடாயு என்று எழுதப்பட்டிருப்பதைப் போல, அந்தச் சிலையின் கால் பகுதியில் "துவாரபாலகன்" என்று எழுதப்பட்டிருந்தது.

"உயிருள்ள சிலை"யை விட தமாஷான விஷயம்- "சிலையைப் போன்றிருக்கும் உயிரை"ப் படைக்க முடியும் என்பது தீருலால் குடும்பத்திற்குத் தெரியும்.

2. துவாரபாலகன்

"தமாஷ் கோட்டை"யில் ஆண்களும் பெண்களுமாக மொத்தம் கிட்டத்தட்ட ஐந்நூறு பேர் வேலை செய்கிறார்கள். ஐந்து இலக்கங்கள் வரக்கூடிய சம்பளம் வாங்கும் ஜெனரல் மேனேஜர் முதல், நூறு ரூபாய் சம்பளம் வாங்கக்கூடிய தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள் வரை அதில் இருந்தார்கள். அலுவலக ஸ்டாஃப், சமையலறை ஸ்டாஃப், தோட்டக்காரர்கள், சாலைப் பணியாளர்கள், பொறியியல் வல்லுனர்கள், டிரைவர்கள், செக்யூரிட்டி ஸ்டாஃப், எலக்ட்ரிஷியன்கள், பப்ளிக் ஸ்டாஃப், குஸ்திச் சண்டை போடுபவர்கள், கோமாளிகள், பெயிண்டர்கள், ஆசாரிகள், சேல்ஸ் பெண்கள், நடனமாடும் பெண்கள், பேரர்கள் என்று பல பிரிவுகளில் இருக்கும் அனைவரும் "கோட்டை"க்குள் இருக்கும் க்வார்ட்டர்ஸ்களிலேயே தங்கியிருந்தார்கள்.

 

+Novels

சபதம்

சபதம்

March 10, 2012

வேதகிரி

வேதகிரி

March 13, 2012

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel