Lekha Books

A+ A A-

சிலையும் ராஜகுமாரியும் - Page 4

silayum rajakumariyum

ஆண்களில் பெரும்பாலானவர்கள் குடும்பத்தை ஊரில் இருக்கச் செய்துவிட்டு, இங்கு வந்து கிடப்பவர்கள். அதிகமாக வேலை செய்பவர்களுக்கு அதிகமான சம்பளம் என்ற ஒரு வழக்கம் நடைமுறையில் இருந்ததால், பொதுவாகவே எல்லாரும் எலும்பு ஒடிய வேலை செய்தார்கள். வேறு எதைப் பற்றிய சிந்தனையும் இல்லாமல் ஒரு வகையான அடிமைகளைப் போல உழைத்துக் கொண்டிருந்த அவர்களுக்கு "கோட்டை"யில் நடக்கும் தமாஷ்கள் எதுவும் தமாஷ்களாக தோன்றாது என்பது மட்டுமல்ல - தினந்தோறும் நடக்கக்கூடிய விஷயங்கள் என்பதால் பொதுவாகவே மிகவும் சலிப்பு அளிக்கக்கூடியவையாகவும் அவை இருந்தன. வேறு பொழுதுபோக்குக்கான வழிகள் எதுவும் அவர்களுக்கு இல்லை. அதாவது - அப்படியே இருந்தால்கூட, பெரிய அளவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதில் கண்களைப் பதிய வைத்துக் கொண்டிருந்த அவர்களை ஈர்ப்பதற்கு அவற்றால் சிறிதுகூட முடியவில்லை என்பதே உண்மை. இடையில் சில காதல் திருமணங்கள் நடக்காமல் இல்லை. எனினும், அந்த மாதிரியான விஷயங்களையெல்லாம் எப்போதாவது ஒருமுறை, வருடங்கள் அதிகமாகி பிறந்த ஊர்களுக்குச் செல்லும்போது மட்டுமே நடத்த வேண்டும் என்று அவர்கள் ஒதுக்கி வைத்திருந்தார்கள். இரண்டு மூன்று வருடங்கள் கடக்கும்போது வரக்கூடிய அப்படிப்பட்ட விடுமுறைகளின்போது மட்டுமே அவர்கள் வெளி உலகத்தைப் பார்ப்பதிலும், சாதாரண மனிதரின் விளையாட்டுக்களிலும், செயல்பாடுகளிலும் ஆர்வத்துடன் கவனத்தைச் செலுத்துவார்கள். அப்போது மட்டுமே அவர்களுக்கு அதற்கு அனுமதி இருந்தது. இல்லாவிட்டால், அவர்களால் முடியாது.

அதே நேரத்தில், அதிலிருந்து மாறுபட்டவனாக, எல்லா நாட்களும் வந்து போகக்கூடிய அனுமதி உள்ளவனாக ஒருவன் மட்டும் அங்கு வேலை பார்ப்பவர்கள் மத்தியில் இருந்தான். அது- அந்த துவாரபாலகனின் சிலைதான்.

ஆனால், அந்த விஷயம் அங்கு வேலை பார்ப்பவர்களில் ஒரு ஆளுக்குக்கூட தெரியாது. அதை அறிந்திருப்பவர்கள் தீருலாலும் சிலையும் மட்டுமே.

வேலை பார்ப்பவர்களில் வேறு ஒரு ஆளுக்குக்கூட தெரியாமல் இது எப்படி நடக்கிறது என்பதுதான் கேள்வி என்றால், அதற்கு பதில் - அவர்கள் யாருக்கும் இதைப்பற்றி தனிப்பட்ட ஆர்வமோ ஈடுபாடோ இல்லை என்பதுதான். மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும் ஆமையும் விளையாடிக் கொண்டிருக்கும் டால்ஃபின் மீன்களும் வேலை நேரம் முடிந்த பிறகு என்ன செய்கின்றன என்று அவர்கள் விசாரிக்காததைப் போல, சிலையைப் பற்றியும் விசாரிப்பதில்லை.

அதே நேரத்தில், சிலை எங்கு போகிறது என்பதோ எங்கிருந்து வருகிறது என்பதோ தீருலாலுவிற்குக்கூட தெரியாது. ஆரம்பத்தில் திரும்பி வராமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற பயம் இருந்தது. ஆனால், இயந்திரத்தின் இயல்புத் தன்மையுடன் அது வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கும் என்பதைப் புரிந்து கொண்ட பிறகு, அவருக்கு அந்த கவலை இல்லாமல் போனது.

அதிகாலை நான்கு மணிக்கும் ஐந்து மணிக்கும் நடுவில் எப்போதாவது அது கோட்டைக்குள் வந்துவிடும். ஒரு சைக்கிளில்தான் வரும். அந்த நேரத்தில் கேட்டில் பால்காரர்கள், பத்திரிகை போடுபவர்கள், க்யாஸ் கொண்டு வருபவர்கள், இரவு நேர விளையாட்டுக்களை முடித்துவிட்டுத் திரும்பி வருபவர்கள் ஆகியோரின் வாகனங்கள் நின்று கொண்டிருக்கும். பால்காரனின் அட்டைதான் சிலைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. சைக்கிளுக்குப் பின்னால் அலுமினியத்தால் ஆன ஒரு பெரிய பால் பாத்திரம் தொங்கிக் கொண்டிருக்கும்.

ஏழு வருடங்களுக்கும் அதிகமாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் பழைய பால்காரனின் அட்டையை, மாறி மாறி வந்து கொண்டிருக்கும் செக்யூரிட்டிகள் சோதிக்கவே மாட்டார்கள். அங்கு வேலை பார்ப்பவர்களுக்கு மத்தியில் பெரிய அளவில் அறிமுகமோ, நட்போ அங்கு அனுமதிக்கப்படாததால், ஒருவரோடொருவர் தெரிந்தது மாதிரி காட்டிக் கொள்ளாமல் இருந்தாலும் கூட, அவர்கள் எல்லாருக்கும் அந்த முகம் நன்கு தெரிந்தே இருந்தது.

கோட்டைக்குள் சிலைக்கு என்றே, சிலைக்கு மட்டுமே தெரியக்கூடிய ஒரு அறை இருக்கிறது. அதன் சாவியும் அதன் கையில்தான் இருக்கிறது. வேறு யாருக்கும் தெரியாமல் அறைக்குள் நுழைந்து சைக்கிளை நிறுத்திப் பூட்டிவிட்டு, அங்கு சலவை செய்து அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஆடைகளில் ஒரு சட்டையை எடுத்து அணிந்து ஆடை மாற்றம் செய்து முடித்த பிறகு, அவனுடைய முகத்திற்கும் தோற்றத்திற்கும் நம்பமுடியாத அளவிற்கு மாற்றம் வந்து சேரும். சுவரில் தேய்த்து மினுமினுப்பு உண்டாக்கப்பட்ட புதிய ஈட்டிகளில் ஒன்றைக் கையில் எடுத்தவுடன், அவன் மனரீதியாகவும் சிலையாக மாறிவிடுவான். சற்று முன்பு கேட்டின் வழியாக கடந்து வந்த பால்காரனின் முகத்துடன் அப்போது ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சிலைக்கும் அந்த முகத்திற்கும் எந்தவொரு தோற்ற ஒற்றுமையும் இருக்காது.

தோற்றத்தை மாற்றும் அறைக்குள்ளிருந்து போய் நிற்கும் பீடத்திற்குச் செல்லும் வழி பூமிக்கு அடியிலேயே செல்கிறது. அதன் சாவிகளும் சிலையின் கையிலேயே இருக்கும். இருள் நிறைந்த, சிறிது வழுக்கல் இருக்கக்கூடிய அந்த பூமிக்குக் கீழே இருக்கும் குகையின் நீளம் எவ்வளவு இருக்கும் என்று இந்த ஏழரை வருடங்களாக அதன் வழியாக தினமும் வந்து போய்க் கொண்டிருக்கும் சிலைக்குத் தெரியவே தெரியாது. பாதி வழியை அடையும்போது, மூச்சு விடுவதற்கு சற்று சிரமமாக இருக்கும் என்ற விஷயம் தெரியுமாதலால், உள்ளே நுழைந்து விட்டால் எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியேறிவிட வேண்டும் என்ற ஒரே சிந்தனைதான் அதற்குள் இருக்கும்போது உண்டாகும். அதற்கு மத்தியில் வழி, நேரம் ஆகியவற்றின் அளவைப் பற்றி நினைத்துப் பார்க்கக்கூட முடியாது.

சிரமங்கள் நிறைந்த வழி பீடத்திற்குச் செல்லும் படிகளில் போய் முடியும்.

அந்த வகையில் சூரியன் உதயமாவதற்கு முன்பே பூமியைப் பிளந்து கொண்டு வருவதைப் போல சிலை அங்கு மேலே வருகிறது.

அங்கு பணியாற்றுபவர்களைப் பற்றி முன்பே கூறப்பட்டு விட்டதே! அதைப் பார்ப்பதற்கு அந்த நேரத்தில் அங்கு யாரும் இருக்க மாட்டார்கள்.

அது முடிந்து, சிலை முழுமையாக தன்னுடைய இடத்தில் போய் நின்ற பிறகு, ஆறு மணிக்கு மேல்தான் பார்வையாளர்களுக்கான நேரம்.

மாலை ஆறரை மணிவரை.

ஏழு மணியை நெருங்கியவுடன் சிலை தன்னுடைய வேலையிலிருந்து விடுபடும். இயல்பாகவே அந்த நேரத்திலும் அதைப் பார்க்க யாரும் இருக்க மாட்டார்கள்.

பிரயோஜனம் இருப்பதென்னவோ உண்மை. எனினும் தீருலால் சிலைக்காக நல்ல ஒரு தொகையை செலவழிக்கிறார் என்ற விஷயம் பகல் போல தெளிவாகத் தெரிந்தது. பூமிக்குக் கீழே இருக்கும் குகைக்கும் தினமும் மாறிமாறிப் பயன்படுத்தப்படும் ஈட்டிகளையும் ஆடைகளையும் தயார் பண்ணி வைப்பதற்காகவும் நிறைய செலவு பண்ணியாக வேண்டும்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel