Lekha Books

A+ A A-

சிலையும் ராஜகுமாரியும் - Page 7

silayum rajakumariyum

சம்பளம் வாங்குவதற்கு சுப்பன் எங்கும் போக வேண்டாம் என்று தீருலால் சொன்னார். எல்லா மாதங்களிலும் முதல் தேதியன்று காலையில் அறைக்கு வரும்போது, அன்று எடுத்துக் கொண்டு போக வேண்டிய ஈட்டியின்மேல் அது கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும்.

எல்லா நிபந்தனைகளையும் இருவரும் ஒப்புக்கொண்ட பிறகு, சிலைக்கு பால்காரனின் அடையாள அட்டை தரப்பட்டது. அதில் பெயர்: எஸ். சுப்பன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

முதல் ஒரு வருடம் சுப்பன் சிலையாக மட்டும் நின்றால் போதும்.

ஒரு வருடம் முடிந்ததும், பெரிய விளம்பர ஆரவாரங்களுடன் தீருலால் அந்த ரகசியத்தை வெளிப்படுத்தினார்.

ஏராளமான பயணிகளை ஒரு வருடம் முழுவதும் ஏமாற்றிக் கொண்டு சிலையாக நின்ற மாமனிதனைப் பார்ப்பதற்காக அந்த வருடம் வந்த பயணிகள் முழுவதும் திரும்பவும் வந்தார்கள். உலகெங்கிலும் உள்ள செய்தி ஊடகங்கள் "சிலை"க்கு மிகப் பெரிய அளவில் முக்கியத்துவம் தந்தார்கள்.

பதவி மாறுதலுக்கேற்றபடி சுப்பனுக்கு சம்பளத்திலும் குறிப்பிடத்தக்க ஒரு மாறுதல் உண்டானது.

அந்த ரகசியத்தை எதற்காக வெளிப்படுத்த வேண்டும் என்று பதைபதைப்புடன் கேட்ட சுப்பனிடம், கடந்த ஒரு வருடம் கிட்டத்தட்ட பயிற்சியாக மட்டுமே இருந்தது என்றும், இப்போது மட்டுமே தனக்கு சுப்பன் மீது நம்பிக்கை வந்திருக்கிறது என்றும் தீருலால் சொன்னார்.

ஆனால், உண்மை அதுவல்ல.

4. வைரம்

"தமாஷ் கோட்டை"யின் எண்ணற்ற வித்தைகள் காட்டுபவர்களில் ஒருவன் வைரம். ஒருநாள் திடீரென்று அவன் வேலையிலிருந்து விடுவிக்கப்பட்டான்.

கோட்டைக்கு வரும் பார்வையாளர்களுக்கு முன்னால் எடை தூக்குவது, அப்படிப்பட்ட சில கனமான பொருட்களை வைத்து வித்தைகள் காட்டுவது ஆகியவைதான் அதுவரை வேலைகளாக இருந்தன. மார்பின்மீது பலகையை வைத்து மோட்டார் சைக்கிள், ஜீப் ஆகியவற்றை ஓட்டுவது, தூக்க முடியாத எடையைத் தூக்குவது மட்டும் இல்லாமல் சிறு சிறு மந்திர வித்தைகளையும் அவன் செய்தான்.

எத்தனையோ வருடங்களாக அப்படிப்பட்ட வித்தைகளை அவன் செய்து காட்டிக் கொண்டிருந்தான். அதனால் சமீப காலமாக அவனுடைய உடல், மனம் இரண்டும் சோர்வடைந்து போயிருந்தன. இனிமேல் அந்த மனிதனால் பிரயோஜனமில்லை என்ற விஷயம் தீருலாலிற்குப் புரியத் தொடங்கியுடன், ஒருநாள் ஒரு வித்தைக்கு மத்தியில் எலும்பு முறிவு உண்டாகி சிகிச்சை முடிந்து திரும்பி வந்த வைரத்திடம், இனி தனக்கு அவனுடைய சேவை தேவையில்லை என்றும், அதுவரை வரவேண்டியவற்றைப் பெற்றுக் கொண்டு விலகிப் போய் விடும்படியும் தீருலால் அறிவித்தார்.

மறுத்துப் பேசுவதற்கு எதுவும் இல்லாததால் வைரம் மிகுந்த கவலையையும் அவமானத்தையும் உள்ளுக்குள்ளேயே மறைத்து வைத்துக்கொண்டு கூறியதைப் போல செய்தான்.

வைரத்திற்கு போவதற்கு உறவினர்கள், நண்பர்கள் என்று கூறுவதற்கு யாரும் இல்லை. இளமையின் ஆரம்பத்தில் எப்போதோ அவன் கோட்டையில் வந்து சேர்ந்தான். அங்குள்ள இயந்திரத் தனத்தில் சிக்கிக் கொண்டு எடை தூக்குவது, மாயஜால வித்தைகள் செய்வது என்று ஈடுபட்டு காலம் போய்விட்டதால், நடுத்தர வயது தாண்டியும் அவன் திருமணத்தைப் பற்றியோ வேறு விஷயங்களைப் பற்றியோ நினைத்துப் பார்க்கவே இல்லை. பணம் சம்பாதிப்பதில் இருந்த வெறி விடுமுறை எடுத்து வேறு ஊர்களுக்குச் சென்று திருமணம் செய்வது என்ற விஷயத்தில் அவனை விலகி இருக்கச் செய்துவிட்டது.

அதனால் வேலையை விட்டு வெளியே வரும்போது, அவனுடைய கையில் இதர தொகை மற்றும் சம்பாத்தியம் என்று ஒரு நல்ல தொகை இருந்தது. அந்தப் பணத்தை வைத்து இனி என்ன செய்யலாம் என்று சிந்தித்தவாறு அவன் கோட்டைக்குள் இருந்த காட்சிகளைப் பார்த்துக் கொண்டே வெறுமனே சுற்றிக் கொண்டிருந்தான். வேலையை விட்டு விலகியிருந்தாலும், நான்கைந்து நாட்கள் கோட்டைக்கு உள்ளேயே இருக்க அவனுக்கு அனுமதி கிடைத்திருந்தது.

வைரத்திற்கு மொத்தத்தில் தெரிந்திருந்தவை, சில உடல் வித்தைகள் மட்டுமே. படிப்பறிவு குறைவாக இருந்த அவனுக்கு தெரிந்திருந்த அந்த விளையாட்டுக்கள் மட்டுமே துணையாக இருந்தன. ஆனால், மக்களை நிறுத்திக் கட்டிப்போட வைக்கும் அளவிற்குத் திறமைகளைக் காட்டுவதற்கு, உடலில் பல இடங்களில் பல நேரங்களில் உண்டான காயங்களும் முறிவுகளும் அவனை அனுமதிக்கவில்லை. கூட்டத்தில் நின்று கொண்டு வித்தைகளைக் காட்டுவது அல்ல- தனியாக நின்று திறமைகளைக் காட்டுவது என்பதை நன்கு உணர்ந்திருந்தான் அவன். அதனால்தான், தனியாக நின்று வித்தைகளைக் காட்டக்கூடிய தன்னம்பிக்கை இல்லாமற் போயிருந்தது.

எதிர்காலத்தைப் பற்றிய கவலைகளைத் தலைக்குள் வைத்துக் கொண்டு முதல் இரண்டு மூன்று நாட்கள் ஒருவித மயக்க நிலையிலேயே அவன் இருந்தான் என்பதைத் தவிர, குறிப்பிட்டுக் கூறுகிற அளவிற்கு எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு வைரத்தால் முடியவில்லை. கையில் தேவையான அளவிற்குப் பணம் இருந்தது. அதை வைத்துக்கொண்டு எதையாவது ஆரம்பிக்க வேண்டியதுதான். எனினும், தனக்குத் துணையாகவும் ஆதரவாகவும் யாராவது தன்னுடன் இருந்தால் மட்டுமே காரியங்கள் ஒழுங்காக நடக்கும் என்று அவன் நினைத்தான்.

இவ்வளவு விஷயங்களையும் அமைதியாகச் சிந்தித்து முடிவு எடுப்பதற்கே அவனுக்கு இரண்டு நாட்கள் ஆனது. அப்போது உயர்வைப் பற்றிச் சிந்திப்பதற்கு ஒரு பாதையைக் கண்டு பிடித்துவிட்டோமே என்ற நிம்மதி உண்டானது.

திறமைசாலியான வைரம் யாருக்கும் சந்தேகம் தோன்றாத வகையில், நம்பிக்கைக்குரிய பல வித்தைகள் செய்பவர்களிடமும் தன்னுடன் வரமுடியுமா என்று விசாரித்துப் பார்த்தான். அதிகமான வாக்குறுதிகளை அளித்தும், யாரும் அவனுடன் வருவதற்குத் தயாராக இல்லை. கோட்டையில் வேலை தரும் பாதுகாப்பை விட்டுவிட்டு, முதுகெலும்பு ஒடிந்த வித்தை செய்யும் மனிதன் கூறும் நிச்சயமற்ற தன்மைக்குள் குதிப்பதற்கு அவர்கள் யாருக்கும் பைத்தியமொன்றும் இல்லையே!

எனினும், ஏமாற்றமடையாத அந்த மனிதன் தன்னுடைய முயற்சியைத் தொடர்ந்து கொண்டேயிருந்தான்.

நான்காவது நாள், கோட்டைக்குள் இனிமேல் தட்டுவதற்கு கதவுகள் எதுவும் மீதமில்லை என்ற சூழ்நிலை வந்தபோது, வைரத்தின் கண்ணில் சிலை பட்டது.

முன்பே வைரம் துவாரபாலகனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான். ஒன்றிரண்டு முறை பார்க்கவும் செய்திருக்கிறான். கோட்டைக்குள் இருக்கும் மனிதர்களுக்கு அதற்குள் இருக்கும் அற்புதங்களைப் பார்த்து ஆச்சரியங்கள் எதுவும் இல்லாததால், வைரத்தின் மனதிலும் சிலை இடம் பிடிக்கவில்லை. ஆனால், இன்று எல்லா நம்பிக்கைகளையும் இழந்து, தூணையும் துரும்பையும் பிடித்துக் கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் எதிர்பாராமல் அதைப் பார்த்ததும், அவனுடைய மனதில் பலவிதமான திட்டங்களும் நிகழ்ச்சிகளும் தோன்றிவர ஆரம்பித்தன.

ஒரு பிற்பகல் நேரத்தில்தான் வைரம் சிலைக்கு அருகில் போய் நின்றான். அதற்கு முன்னால் நின்றிருந்த மக்கள் கூட்டந்தான் அவனை அந்தப் பக்கமாக ஈர்த்தது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel