Lekha Books

A+ A A-

வருவேன் நான் உனது... - Page 9

கல்யாணம் பண்ணிக்கறதாவும் சொல்லல. ஏகாந்த் நல்லவன். நம்ப வச்சுக் கழுத்தறுக்கற கெட்ட குணமெல்லாம் அவனுக்குக் கிடையாது. நீயாவே உன் மனசுல காதல், கல்யாணங்கற கற்பனையை வளர்த்திருக்க. அவன் இன்னொரு பெண்ணுக்குத் தாலி கட்டி, எல்லாம் முடிஞ்சாச்சு. இன்னமும் அதைப்பத்திப் பேசறது வீணான விஷயம்.”

“என் வாழ்க்கை வீணாகிப் போச்சு. என்னை இப்படித் தவிக்க விட்டுட்ட ஏகாந்த் மச்சானைப் பழிவாங்கணும். நான் படற வேதனையைப் போல நூறு மடங்கு வேதனையை அவரும் படணும். இந்த நிமிஷத்துல இருந்து அவரைப் பழி வாங்கறதுதான் என்னோட வேலை. என் மனசை மாத்திடலாம்னு கனவு காணாதீங்க.”

“ஒரு பெண்ணான உனக்கு இப்படிப் பழிவாங்கற எண்ணமெல்லாம் வரக் கூடாது. இது தப்பு. பழி வாங்கறேன், குழில தள்றேன்னு நீயே உன் தலைல மண்ணை வாரிப்போட்டுக்காதே. ஒழுங்கா எழுந்திருச்சு, சாப்பிட வா!” பொறுமையாகப் பேசிக் கொண்டிருந்த அகல்யா பொறுமையை இழந்து கடுமையாகப் பேசினாள்.

“சரி, சரி, சாப்பிட வரேன். ஆனா கல்யாணம் கில்யாணம்னு ஏதாவது நடவடிக்கை எடுத்தீங்கன்னா எனக்குக் கருமாதிதான் செய்ய வேண்டி இருக்கும்.”

வருணா உறுதியான குரலில் பேசியதைக் கேட்ட அகல்யா திகைத்தாள். ‘கொஞ்சம் இவள் போக்கில் விட்டுத் தான் பிடிக்க வேண்டும்.’ மனதிற்குள் எண்ணங்கள் ஓடின. கூடவே கவலையும் கூடியது.

7

“என்னப்பா ஏகாந்த்? உன்னோட முதலிரவு முடிஞ்சு மறுநாள் காலையிலேயே மிருதுளாவைக் காணோங்கற? எத்தனை மணிக்கு அவளைக் காணோம்னு பார்த்த? உன்னோட மாமனார் எங்கே?” மிருதுளா காணவில்லை என்ற செய்தியைக் கேட்ட சீதா பதறினாள். கேள்விக் கணைகளை வீசினாள். “உன் மாமனார் எங்கே?”

“மாமா இடிஞ்சி போய் உட்கார்ந்திருக்கார்.”

“கல்யாணம் முடிஞ்ச கையோட காலங்கார்த்தால இப்படி ஒரு குண்டைத் தூங்கிப் போடறியே... என்னதான் நடந்துச்சு...?”

“நானும் மிருதுளாவும் விடியக்காலம் மூணு மணி வரைக்கும் பேசிக்கிட்டிருந்தோம். அதுக்கப்புறம் தூங்கிட்டோம். காலையில எழுந்திரிச்சுப் பார்த்தா அவ என் பக்கத்துல இல்லை. குளிக்கப் போயிருப்பாள்ன்னு காத்திருந்தேன். ரொம்ப நேரமாகியும் வரலை. பாத்ரூம்லயும் அவ இல்லை. வெளியே போய்ப் பார்த்தேன். ‘இன்னுமா மாப்பிள்ளை மிருதுளா தூங்கறா?’ன்னு மாமா கேட்டார். எனக்கு அதிர்ச்சி ஆயிடுச்சு. வீடு, தோட்டம் முழுவதும் தேடியும் மிருதுளா இல்லை. எதுவும் புரியலைம்மா.”

“நீ இப்ப உடனே புறப்பட்டு நம்ப வீட்டுக்கு வா. நேர்ல பேசிக்கலாம்.”

“சரிம்மா.” தளர்ந்த குரலில் சொல்லிவிட்டு ரிஸீவரை வைத்தான் ஏகாந்த். ஹால் ஸோஃபாவில் துயரத்துடன் உட்கார்ந்திருந்த மோகன்ராமின் அருகே சென்றான்.

“மாமா, கவலைப் படாதீங்க. மிருதுளா எங்கேயும் காணாமப் போயிருக்க மாட்டா. வந்துருவா. நான் போய் அம்மா, அப்பாவைப் பார்க்கணும். போயிட்டு வந்துடறேன்.” சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

“என்னோட காரை எடுத்துக்கிட்டுப் போங்க மாப்பிள்ளை.” மோகன்ராம் எழுந்து வந்து கார் சாவியை எடுத்துக் கொடுத்தார். சாவியை வாங்கிக் கொண்ட ஏகாந்த் புறப்பட்டான். காரைத் தன் வீட்டை நோக்கிச் செலுத்தினான்.

8

புது மணமகனுக்குரிய சந்தோஷமான, த்ரில்லிங்கான மனநிலையில் இருக்க வேண்டிய ஏகாந்த் மனக் குழப்பத்தில் இருந்தான். சோகத்தில் மூழ்கினான் என்றாலும் எச்சரிக்கை உணர்வுடன் காரை ஓட்டிச் சென்றான். சாலையின் ஓரமாக ப்ளாட்ஃபார்ம் மீது சற்று வயதான பெண்மணியுடன் வருணா பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். வருணா மிகவும் சீரியஸாகக் கையை ஆட்டிப் பேசிக் கொண்டிருந்தாள்.

‘வருணா யார் கூடப் பேசிக்கிட்டிருக்கா...? அந்தம்மாவை இதுக்கு முன்னால பார்த்ததே இல்லையே?’ யோசித்தவன், காரை வருணாவின் அருகே நிறுத்தினான். காரின் கதவைத் திறந்தான். கீழே இறங்கினான்.

“என்ன வருணா, இங்கே நிக்கறே? இவங்க யாரு?”

“இவங்க என் ஃப்ரெண்ட் நளினியோட சித்தி. கோயம்புத்தூர்ல இருந்து வந்திருக்காங்க. அவங்களை வழி அனுப்பலாம்னு அவங்க கூட வந்தேன். நீங்க போங்க மச்சான். பக்கத்துலதானே பஸ் ஸ்டேண்ட்? நான் இவங்களை அனுப்பிட்டு வீட்டுக்குப் போய்க்கறேன்.”

அந்தப் பெண்மணியை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தான் ஏகாந்த். பாமரத்தனமாய்ச் சிகப்புக் கல் மூக்குத்தியும், வெள்ளைக் கற்கள் நிறையப் பதித்த கம்மலும் அணிந்திருந்தாள். தலைமுடியைச் சீராகச் சீவாமல் அள்ளிச் செருகிக் கொண்டை போட்டிருந்தாள். அவள் உடுத்தி இறந்த புடவை ஏகப்பட்ட சுருக்கங்களோடு காணப்பட்டது. ‘மொத்தத்தில், அந்தப் பெண்மணியின் தோற்றம் மரியாதைக்குரியதாக இல்லை. இந்தப் பெண்மணியைத் தன்னுடன் படித்த ஃப்ரெண்ட் நளினியின் தோற்றம் மரியாதைக்குரியதாக இல்லை. இந்தப் பெண்மணியைத் தன்னுடன் படித்த ஃப்ரெண்ட் நளினியின் சித்தி என்றாள் வருணா.’ மனதில் தோன்றிய எண்ணங்களுக்குத் தற்காலிகத் தடை விதித்த ஏகாந்த், வருணாவிடம் எதுவும் கூறாமல் மறுபடியும் காரில் ஏறி, காரைக் கிளப்பினான்.

9

“அம்மா, மிருதுளா எங்கேம்மா போயிருப்பா...?” குரல் கம்மியது ஏகாந்த்திற்கு. மகனின் சோகமான குரலால் மனம் உடைந்த சீதா, அவனுடைய தலையை மெதுவாகத் தடவிக் கொடுத்தாள்.

“நீ இப்படி அழறாப்ல பேசினா, என் மனசு தாங்கலை ஏகாந்த். ஆண்பிள்ளை இப்படித் தைர்யம் இழந்து போலாமா, நேத்து உன் முகத்துல எவ்வளவு சந்தோஷம் பொங்குச்சு! இப்ப துக்கத்துல மூழ்கி இருக்கற உன் முகத்தைப் பார்க்க என் பெத்த வயிறு எரியுதுப்பா. ஏப்பா, அந்த மிருதுளாவுக்கு உன்னைப் பிடிக்கலையா?”

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லைம்மா. அவளுக்கு என்னைப் பிடிச்சிருக்கு. என்னை ரொம்ப விரும்பறதா சொன்னா. நானும் மிருதுளாவை என் உயிருக்குயிரா விரும்பறேன்மா. ரெண்டு பேருமே இதைப் பத்திப் பேசிக்கிட்டோம்.”

“நான் கேக்கறேன்னு தப்பா நினைக்காதப்பா. கல்யாணத்துக்கு முன்னால மிருதுளா வேறை யாரையாவது காதலிச்சிருப்பாளா? அதை உன்கிட்ட சொல்லப் பயந்துக்கிட்டு...?”

சீதா பேசி முடிக்கு முன் அவளது வாயைத் தன் விரல்களால் மூடினான் ஏகாந்த்.

“இல்லைம்மா. மிருதுளாவுக்குக் காதல் கீதல்னெல்லாம் எதுவும் கிடையாது. அவ வெளிப்படையா எதையும் பேசக் கூடிய பொண்ணும்மா. அவ காதலிச்சது என்னை மட்டும்தான். அதுவும் கூட எங்க நிச்சயதார்த்தத்துக்கப்புறம்தான். ப்ளீஸ்... அவளைத் தப்பா நினைக்காதீங்கம்மா.”

“அப்படின்னா அவ இவ்வளவு அலட்சியமா வீட்டை விட்டுப் போக என்ன காரணம்?”

“அதுதான்மா எனக்குத் தெரியலை...” ஏகாந்த் பேசிக் கொண்டிருக்கும் போதே மோகன்ராம் அங்கே வந்தார். அவரது முகத்தில் ஏகப்பட்ட கவலை ரேகைகள்!

“வாங்க மாமா....”

“வாங்க சம்பந்தி. உட்காருங்க.” சீதாவும், ஏகாந்தும் மோகன்ராமை வரவேற்றனர்.

 

+Novels

வேதகிரி

வேதகிரி

March 13, 2012

தாபம்

தாபம்

June 14, 2012

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel