Lekha Books

A+ A A-

வருவேன் நான் உனது... - Page 10

அதே சமயம் மாடியறையில் இருந்து கோபாலும் இறங்கி வந்தார்.

“என் கூடவே வந்திருக்கலாமே மாமா. நீங்க ரொம்ப டல்லா இருந்தீங்க. அதனாலதான் நான் மட்டும் கிளம்பி வந்தேன். உங்க காரை நான் எடுத்துட்டு வந்துட்டேன். நீங்க...”

“அதனால என்ன மாப்பிள்ளை? ஆட்டோவில வந்துட்டேன். மனசு கேக்கலை. சம்பந்தியைப் பாத்துப் பேசறது என்னோட கடமையாச்சே!”

“மிருதுளா ஏன் போனா? எங்கே போனா? எதுவும் எங்களுக்குப் புரியலை. புதுசா கல்யாணம் ஆன பொண்ணு, முதல் இரவு முடியறதுக்குள்ள இப்படி வீட்டை விட்டு வெளியே போனா தொண்ணூத்து ஒன்பது சதவீதம் காதல் தான் காரணமா இருக்கணும். அதை அவ கல்யாணத்துக்கு முன்னாடியே முடிவு பண்ணி இருக்கணும். இப்படிக் கழுத்துல தாலியை வாங்கிட்டு பொழுது விடியறதுக்குள்ள வேலி தாண்டிப் போறது கண்ணியமான பெண் செய்ற காரியமா?” கோபால் சற்றுக் கடுமையாகப் பேச ஆரம்பித்தார். எதிலும் ஒரு ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கை உடையவர். இந்த விஷயங்களில் கண்டிப்பானவர்.

“ஸாரி சம்பந்தி. எதிர்பார்க்காம இப்படி நடந்துடுச்சு. அவளுக்குச் செல்லம் குடுத்து வளர்த்தேன். சுதந்திரம் குடுத்து வளர்த்தேன். ஆனாலும் அவ அதையெல்லாம் ‘மிஸ்யூஸ்’ பண்ணியதில்ல. அவ நல்ல பொண்ணு, சம்பந்தி...’ மோகன்ராம் பரிதாபமாகப் பேசினார். சீதாவிற்கு அவரைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

அதைப் பொருட்படுத்தாத கோபால் பேச்சைத் தொடர்ந்தார். “எங்க மகன் மனம் உடைஞ்சு போய் இருக்கான். புது மாப்பிள்ளையா... ஏகப்பட்ட ஆசைகளைச் சுமந்துக்கிட்டிருக்கற என் பையனை இப்படி வேதனைகளைச் சுமக்க வச்சுட்டா உங்க பொண்ணு. இந்த விஷயம் வெளில தெரிஞ்சா குடும்ப கெளரவம் என்ன ஆகிறது? ஊர் உலகமும், உற்றார் உறவும் என்னவெல்லாம் பேசவாங்க? படிச்ச பொண்ணு இதையெல்லாம் நினைச்சுப் பார்க்காம இப்படிப் பண்ணிட்டா. உங்க பொண்ணு செஞ்ச இந்தக் காரியத்தால நாங்க ரொம்ப அப்ஸெட் ஆகி இருக்கோம்.”

பெண்ணைப் பெற்றவன் தலை குனிந்துதான் இருக்கணுங்கறது நியதியாகவே ஆகிவிட்ட தமிழ்நாட்டுக் கலாச்சாரம், உயர் படிப்பெல்லாம் படித்து வியாபாரத் துறையில் பெரிய புள்ளியான மோகன்ராமையும் விட்டு வைக்கவில்லை. அதிலும் பெண்ணைக் காணவில்லை என்ற பிரச்னை வேறு சேர்ந்து கொள்ள, விதியே எனக் கேட்டுக் கொண்டு மெளனமாக இருந்தார். கண்களில் கண்ணீர் தளும்பி நின்றது.

இதைப் பார்த்த சீதாவிற்குத் தர்மசங்கடமாக இருந்தது. கோபால் அதிகக் கோபத்துடன் பேசியதைக் கண்ட சீதா, நிலைமையைச் சமாளிக்க முன் வந்தாள்.

“அட... என்னங்க நீங்க... மிருதுளாவிற்கு என்ன நடந்ததுன்னே தெரியாம நம் மனம் போன போக்குல, வாய்க்கு வந்தபடி பேசறது நியாயமில்லங்க. நாம யாருமே எதிர்பார்க்காம நடந்த இந்த விஷயத்துக்குச் சம்பந்தி என்னங்க பண்ணுவாரு?”

“ஆமாப்பா. மாமா கலங்கிப் போயிருக்கார். இந்த நேரத்துல நாமதான்ப்பா அவருக்கு ஆறுதல் சொல்லணும்.” சீதாவும் ஏகாந்த்தும் பேசியதைக் கேட்ட கோபாலுக்குக் கோபம் குறைந்தது.

 “சரி. நடந்தது நடந்துருச்சு. இனி நடக்கப் போறது என்ன? இந்தப் பிரச்னைக்குத் தீர்வு என்ன? விஷயம் வெளியே தெரியறதுக்கு முன்னால வீட்டை விட்டுப் போன மிருதுளா திரும்ப வரணும். அவ ஏன் இப்படிப் போனாங்கறது தெரிஞ்சாகணும்.” கோபால் உறுதியாகக் கூறினார்.

“அப்பா, மிருதுளா உங்களுக்கு மருமகள். என்னோட மனைவி. தாலி கட்டினப்புறம் நாங்க பேசினது சில மணி நேரங்கள்தான். ஆனாலும் அவளை நூத்துக்கு நூறு சதவீதம் புரிஞ்சுக்கிட்டேன். அவளை என் உயிருக்குயிரா நேசிக்கறேன். அவளும் அப்படித்தான். அவளைத் தேடிக் கண்டுபிடிச்சு அவ மேல ஏற்பட்ட களங்கத்தைத் துடைப்பேன். அவ நல்ல பொண்ணுன்னு நிரூபிப்பேன். நம்ப குடும்ப கெளரவத்தையும் காப்பாத்துவேன். அவ எனக்கு வேணும். அவள் இல்லாத வாழ்க்கை இனி எனக்கு இல்லை. அவ எங்கே போயிருப்பா, ஏன் போயிருக்கான்னு தெரியாம கண்ணைக் கட்டிக் காட்டில விட்டாப்ல இருந்தாலும் என் கண்ணும், மனசும் அவளைத் தேடிக்கிட்டேதான் இருக்கும்...”

“இவ்வளவு தூரம் பேசிறியேப்பா, மூணு மணி வரைக்கும் மிருதுளா உன் கூடப் பேசிக்கிட்டு இருந்தாள்னு சொன்னே. அவ வீட்டை விட்டு வெளியே போறதுக்கு என்ன காரணம்னு ஏதாவது ஒரு சின்னப் பொறி கூட உன் மனசுக்குத் தோணலியா? உனக்கு ஏதோ கொஞ்சமாவது இதைப் பத்தித் தெரிஞ்சிருக்கணும்னு நான் நினைக்கறேன்.”

“நீங்க நினைக்கறது சரிதான்மா. எங்க ரெண்டு பேருக்குள்ள சில விஷயங்கள்ல வாக்குவாதம் நடந்துச்சு. ஆனா... அதை நான் வெளியே சொல்ல விரும்பலை. நாலு சுவத்துக்குள்ள நடந்த அந்த விஷயம் நாலு பேருக்குத் தெரிய வேண்டாம். அதனால அதைப் பத்தி எதுவும் கேக்காதீங்க. எனக்கும் என் மனைவி மிருதுளாவுக்கும் இடையில நடந்த தனிப்பட்ட விஷயம் எல்லாத்தையும் நான் என் மனசுச்குள்ள பூட்டி வைக்கத்தான் விரும்பறேன். ஆனா... அவ கோவிச்சுக்கிட்டு வெளியே போற அளவுக்கு எங்களுக்குள்ள பெரிய பிரச்னையா எதுவும் நடக்கல... அம்மா, நான் மிருதுளாவைக் கண்டு பிடிச்சு அவ கூட சந்தோஷமா வாழத்தான் போறேன். நீங்க அதைப் பார்க்கத்தான் போறீங்க.”

“அதுக்காக, நீ என்ன செய்யப் போற? போலீஸ்ல சொல்லப் போறியா? அப்படியெல்லாம் எதுவும் பண்ணிடாதேப்பா...” கோபால் கூறினார்.

“என்னப்பா நீங்க? போலீஸ்ல போய் கம்ப்ளெயிண்ட் குடுப்பேனா? அவங்க பேப்பருக்கு நியூஸ் குடுத்துருவாங்க. வெறும் வாயையே மெல்லற ஊர், அவல் கிடைச்சா சும்மா விடுமா? கண், மூக்கு, காது வச்சு டைரக்டரே இல்லாம சூப்பரா திரைக்கதை அமைச்சு ரீல் சுத்துவாங்க. மிருதுளாவை நானே கண்டுபிடிப்பேன். என்னோட முயற்சிக்கு நீங்களும் ஒத்துழைக்கணும்.”

“உன்னோட கஷ்டத்துல எங்களுக்கும் பங்கு இல்லையாப்பா? நாங்க என்ன செய்யணும்னு சொல்லுப்பா. எல்லா உதவியும் செய்யறோம்...” சீதா கூறினாள்.

“மிருதுளாவைத் தேடிக் கண்டுபிடிக்கற முயற்சியில நான் எங்கே போறேன், ஏன் போறேன்னு யாரும் கேக்காதீங்க. இதுதான் நீங்க எனக்குச் செய்யற பெரிய உதவி. அப்பா, ஆபீஸைப் பார்த்துக்கணும்.”

“அது ஒரு பெரிய விஷயமாப்பா? அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ கவலைப்படாதே.”

“மணியாச்சுப்பா. இன்னும் ஒரு காபி கூடக் குடிக்காம இருக்கே. மாமாவும் எதுவும் சாப்பிடலை. வாங்க, எல்லோரும் ரெண்டு இட்லியாவது சாப்பிடலாம்.”

“வேணாம் சம்பந்தியம்மா. எனக்கு மனசு சரி இல்லை...”

“யாருக்குத்தான் மனசு நல்லா இருக்கு இந்தச் சூழ்நிலையில? அதுக்காக வயித்தைப் பட்டினி போட்டா மட்டும் சரியாயிடுமா?

 

+Novels

வேதகிரி

வேதகிரி

March 13, 2012

தாபம்

தாபம்

June 14, 2012

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel