Lekha Books

A+ A A-

வருவேன் நான் உனது... - Page 6

“இல்லை மிருதுளா. இயல்பா நான் கூச்ச சுபாவம் உள்ளவன். சொந்தக்காரங்க எங்க வீட்டுக்கு வந்தாக்கூட என் ரூமுக்குள்ள ஓடி ஒளிஞ்சுக்குவேன். அம்மாதான் படிச்சு இழுத்துக்கிட்டு வந்து பேச வைப்பாங்க. அப்ப கூட சும்மா ‘ஹலோ’ சொல்றதோட சரி. எங்க அப்பாவைப் போல நான். எங்க அப்பா அதிகமா யார் கூடயும் பேச மாட்டார். எங்க அம்மா கூடத்தான் நிறையப் பேசுவார். அது மாதிரி... நானும் உன் கூட நிறையப் பேசணும். பேசிக்கிட்டே இருக்கணும். சமீபகாலமா நிச்சயத்தார்த்தம் முடிஞ்சுட்டா கல்யாணம் வரைக்கும், பொண்ணும் மாப்பிள்ளையும் ஃபோன்ல பேசிக்கறது ஒரு வழக்கமாயிடுச்சு. வழக்கம்னு சொல்றதை விட ஒரு பேஷன் ஆயிடுச்சுன்னே சொல்லலாம். ஆனா நான் உன் கூடப் பேசவே இல்லை. இதைப் பத்தி நீ ஏதாவது யோசிச்சியா?”

“ஆமாம். அப்பா கிட்ட கூடக் கேட்டேன். ஏகாந்த் போன் பண்ணினார்னா நீ பேசு. நீயாவே போன் போட்டுப் பேச வேண்டாம்னு சொல்லிட்டார். சரி, காத்திருந்து மணிக்கணக்கா பேசற த்ரில் இருக்கட்டுமேன்னு நானும் உங்க கூடப் பேசலை. இப்ப நாம பாட்டுக்குப் பேசிக்கிட்டே இருந்ததுல ஹார்லிக்ஸைக் குடிக்கலை. பழங்களும் சாப்பிடலை. இந்தாங்க. குடிங்க.” மிருதுளா தனக்கு ஒரு க்ளாஸ் ஹார்லிக்ஸ் எடுத்துக்கொண்டு, ஏகாந்திற்கு ஒரு க்ளாஸைக் கொடுத்தாள்.

இருவரும் குடித்தனர்.

“ஐஸ் காபி மாதிரி, ஐஸ் ஹார்லிக்ஸ் ஆயிடுச்சு.” காலியான க்ளாஸை மேசை மீது வைத்தபடி சிரித்தாள் மிருதுளா.

“உன் பல் வரிசை ரொம்ப அழகா இருக்கு, மிருது. இன்னொரு விஷயம் உன்கிட்ட சொல்லணும். நீ என்னை ஏகாந்த்ன்னு என் பெயரைச் சொல்லியே கூப்பிடலாம். ‘என்னங்க, இந்தாங்க’ இதெல்லாம் வேணாம். ‘என்னங்க’ன்னு கூப்பிட்டா ஒரு அந்நிய உணர்வுதான் தோணுதே தவிர ஒரு அந்யோந்யமான உணர்வே வரலை. அதனால ப்ளீஸ் நீ என்னை ‘ஏகாந்த்’ன்னே கூப்பிடேன்.”

“சரிடா ஏகாந்த்.” மிருதுளா சிரித்தபடியே கூறினாள்.

“ஏய், இது ரொம்ப ஓவர்.” மிருதுளாவின் கன்னத்தைக் கிள்ளினான் ஏகாந்த். அந்தக் கையை மெல்லத் தாழ்த்தி அவளது கழுத்தில் வருடிக் கொடுத்தாள். பிறகு அவளது நெற்றியில் அன்புடன் முத்தமிட்டான்.

 “ஏகாந்த்... இன்னிக்கு இது போதும். ஏற்கெனவே நான் சொன்ன மாதிரி நம்ப ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கணும். அதுக்கப்புறம்தான் நமக்குள்ள மத்ததெல்லாம்.”

 “மத்ததென்னாம்ன்னா?” குறும்பாகக் கண் அடித்தபடி கேட்டான் ஏகாந்த்.

 “மத்ததெல்லாம்ன்னா மத்ததெல்லாம்தான்...” அழகாகச் சிரித்த மிருதுளாவின் கண்களிலும், கன்னத்திலும் நாணம் மின்னியது. அவளை அணைத்துக் கொண்டான் ஏகாந்த். அவனது அணைப்பிற்கும் அடங்கிக் கொண்டாள் மிருதுளா. சில நிமிடங்கள் கரைந்தன.

அவனுடைய தோள் மீது சாய்ந்தபடியே மிகச் சன்னமாகப் பேசினாள் மிருதுளா.

 “எங்க அப்பா வச்சிருக்கற ஆப்பிள்ல்ல ஒண்ணு கூடச் சாப்பிடாம இருக்கோம். இப்ப சாப்பிடலாமா?”

 “ஓ... சாப்பிடலாமே... ஆனா ஆப்பிள் சாப்பிட்டா ஆதாம், ஏவாள் மாதிரி ஆகிட மாட்டோமே?...” கலகலவெனச் சிரித்தாள் மிருதுளா.

“கட்டுப்பாடு வேற எங்கயும் இல்ல. இங்க இருக்கு!” கூறிய ஏகாந்த், மிருதுளாவின் நெஞ்சில் விரலை வைத்தான்.

 “ஏன்? அதை இங்க இருக்குன்னு சொல்லக் கூடாதா?” ஏகாந்த் நெஞ்சில் தன் கையை வைத்தாள் மிருதுளா. இருவரும் வாய்விட்டுச் சிரித்தனர். மிருதுளா ஆப்பிளைத் துண்டுகளாக நறுக்கிக் கொடுக்க, ஏகாந்த் சாப்பிட்டான். மிருதுளாவையும் சாப்பிட வைத்தான்.

 “தூங்கலாமா? குட் நைட்...”

“குட் நைட்டா? குட் மார்னிங் ஆகப் போகுது. மணியைப் பாருங்க. மூணாகப் போகுது.” பஞ்சு மெத்தை மீது ஒரு பஞ்சுப் பொதி போலப் படுத்தாள் மிருதுளா. ஏகாந்த்தும் படுத்தான். அவனுடைய கையைத் தலையணையாய் அணை கொடுத்துப் படுத்துக் கொண்டாள் மிருதுளா. அவளைத் தன் இன்னொரு கையால் அணைத்துக் கொண்ட ஏகாந்த் கண்களை மூடினான். இருவரும் தூக்கத்தில் ஆழ்ந்தனர்.

ஒரு மணி நேரம் ஆனது. திடீரென ஏதோ சப்தம் கேட்டு விழித்துக் கொண்டாள். மிருதுளா. அது சப்தம் இல்லை, பாடல் என்று புரிந்து கொள்ளச் சில விநாடிகள் ஆயின. பக்கத்தில் எடுத்திருந்த ஏகாந்த்தைப் பார்த்தாள். மிக ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அவனை எழுப்ப மனமின்றித் தன்னை அணைத்திருந்த கைகளை மெல்ல விடுவித்தாள். பாடலைக் கூர்ந்து கவனித்தாள். ‘வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே... ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வான் உலகே...’ காற்றில் மிதந்து வந்த பாடலைத் தொடர்ந்து கேட்டாள் மிருதுளா.

‘காதலே கனவு எனும் கவிதைகளை வாழ்நாளில் ஓர் முறை பாடியே...’ பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

மிருதுளா ஏகாந்த்தை எழுப்பினாள்.

“என்ன மிருது?” கஷ்டப்பட்டுக் கண் விழித்தான் ஏகாந்த்.

“கிஃப்ட் பார்சல்ல ரெக்கார்ட் பண்ணி அனுப்பியிருந்த ‘வருவேன் நான் உனது’ பாட்டு கேக்குது. கவனிங்க.”

“என்ன?... பாட்டா?”

“ஆமாங்க. ‘வருவேன் நான் உனது’ பாட்டு. கவனிச்சுக் கேளுங்க.”

“எனக்கு எதுவும் கேக்கலியேம்மா. முதல்ல உன்னோட ஆடியோ ப்ளேயரை ஆஃப் பண்ணிட்டினான்னு பாரு.”

“அதெல்லாம் பாட்டுக் கேட்டு முடிச்ச உடனேயே ஆஃப் பண்ணிட்டு ஸி.டி.யையும் வெளியே எடுத்துட்டேன்.”

“நீதான் பாட்டு பாட்டுங்கற. எனக்கு ஒண்ணுமே கேக்கல!” என்று கூறிய ஏகாந்த்தைக் கோபமாகப் பார்த்தாள் மிருதுளா.

“எனக்குக் கேக்கற பாட்டு உங்களுக்கு மட்டும் எப்படிக் கேக்காம இருக்கும்?”

“நிஜமா எனக்கு எந்தப் பாட்டும் கேக்கல மிருது. நீ அந்த கிஃப்ட் பார்சலையும் அந்தப் பாட்டையும் நெனச்சுக்கிட்டே படுத்திருப்ப. அதனால ஏற்பட்ட பிரமையா இருக்கும். வந்து படு. வா.”

அவளை இழுத்து அணைத்தான்.

“விடுங்க. நீங்க பொய் சொல்றீங்க. இந்தப் பாட்டுக்கும் உங்களுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு...”

“இல்லை மிருது. நான் உன்கிட்ட எதையும் மறைக்கல. எந்தப் பாட்டுமே எனக்குக் கேக்கல. நீதான் ஏதோ கனவு கண்டுட்டு உளர்ற...”

“நீங்க என் மேல உயிரை வச்சிருக்கறது நிஜம்னா அந்தப் பாட்டைப் பத்தின விஷயத்தை என்கிட்ட சொல்லிடுங்க...”

“நான் உன்னை உயிருக்குயிரா நேசிக்கறது எப்படி நிஜமோ அதுபோல அந்தப் பாட்டைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாதுங்கறதும் நிஜம்.”

ஏகாந்த்திற்குத் தூக்கம் கண்களைச் சுழற்றியது. மிருதுளாவையும் படுக்க வைத்துத் தானும் தூங்க ஆரம்பித்தான். மிருதுளாவைத் தன் பக்கம் இழுத்து அணைக்கும்பொழுது அவள் தடுத்தாள். அவனுக்கு முதுகைக் காட்டியபடி மறு பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel