Lekha Books

A+ A A-

வருவேன் நான் உனது... - Page 3

“இட்டாலியன் மார்பிளில் செஞ்சிருக்காங்க. வெளிநாட்டுத் தயாரிப்பா இருக்கு!” என்று கூறிய ஏகாந்த், அதை அனுப்பியவரின் பெயரைக் கவனித்தான். ‘வித் பெஸ்ட் விஷஸ்’ என்று அச்சடிக்கப்பட்டிருந்த லேபிள் மீது ‘ஸ்டெல்லா’ என்று எழுதப்பட்டிருந்தது.

“உன்னோட ஃப்ரெண்ட் ஸ்டெல்லா அனுப்பியிருக்காங்க. குட் ஸெலக்ஷன்!” ஏகாந்த் பாராட்டியதை விடத் தன் சிநேகிதியை மரியாதையாக குறிப்பிட்ட அவனது நாகரிகம், மிருதுளாவின் மனதைத் தொட்டது.

அடுத்த பார்சலைப் பிரித்தாள் மிருதுளா. அது ரேகா கொடுத்தது. அழகான ப்ளாஸ்டிக் டப்பாவில் பத்து ஆடியோ ஸி.டி.க்கள் அடக்கமாகவும், நேர்த்தியாகவும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஸி.டி.யின் கவர் மீது அந்தந்த ஸி.டியில் என்னென்ன பாடல்கள் பதிவாகியுள்ளன... அவை எந்தப் படத்தின் இடம் பெற்ற பாடல் என்பது அழகாக ‘டைப்’ செய்யப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது. அத்தனை பாடல்களும் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களால் இசை அமைக்கப்பட்டவை என்பதால் பாடல்கள் வரிசைக்கு மேல் ‘மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்’ என்று டைப் செய்யப்பட்டிருந்தது. இதைப் பார்த்து ஆச்சர்யமடைந்த ஏகாந்த் கேட்டான்.

“என்ன மிருதுளா... உன்னோட ஃப்ரெண்ட் ரேகா நிறையப் பழைய பாடல்களை ரெக்கார்ட் பண்ணி அனுப்பியிருங்காங்க, எல்லாம் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைச்ச பாட்டாவே இருக்கு?!”

“ஆமாங்க. எனக்குப் பழைய பாடல்கள்தான் பிடிக்கும். அதுவும் எம்.எஸ்.வி.ஸாரோட பாடல்கள்ன்னா உயிர். என்னோட ரசனை புரிஞ்சு, கஷ்டப்பட்டுப் பாடல்களைத் தேடித் தேடி ரெக்கார்ட் பண்ணியிருக்கா ரேகா. நிறைய அட்வான்ஸ்ட் டெக்னாலஜி வந்தப்புறம் புதுப்பாடல்கள் சிறப்பாக இருந்தாலும் பழைய காலத்துப் பாட்டெல்லாம் திரும்பத் திரும்பக் கேக்கற மாதிரி இருக்கு.”

“கே.வி. மகாதேவன், சுதர்ஸனம், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, டி.ஆர். பாப்பா... இவங்களைப் போல இசை மேதைகள் இசை அமைச்ச பாட்டு ஸி.டி.க்கள் நிறைய வச்சிருக்கேன். அதனால ரொம்ப வருஷத்துக்கு முந்தின பாட்டெல்லாம் கூட எனக்கு நல்லாத் தெரியும். என்னோட டேஸ்ட் தெரிஞ்ச நம்ப கல்யாணத்துக்காக எவ்வளவு ஆசையா ஸி.டி.க்களை கிஃப்ட் பண்ணி இருக்கா ரேகா?! ஆனா... என்னாலதான் அவ கேட்ட முக்கியமான உதவியைச் செய்ய முடியல... அவளோட அக்கா குழந்தைக்கு ஹார்ட் ஆபரேஷன் பண்றதுக்காகப் பணம் கேட்டா. கல்யாணச் செலவு பட்ஜெட்டுக்கு மேல போயிருச்சுன்னு அப்பா சொல்லிக்கிட்டிருந்தார். அதனால அவளுக்கு ஹெல்ப் பண்ண முடியல...”

அவள் பேசிக் கொண்டிருக்கும்போது, அவளுடைய அழகையும், அந்த அழகான முகத்தில் வெளிப்படும் கவிதை போன்ற பாவனைகளையும் கண் கொட்டாமல் ரசித்துக் கொண்டிருந்தான் ஏகாந்த்.

“என்ன அப்படிப் பார்க்கறீங்க?!” தலையைச் சாய்த்துக் கேள்வி கேட்டாள் மிருதுளா. அவளது பெண்மையின் இயல்பான நாணம் வெளிப்பட்டது.

“நான் கவனிச்ச வரைக்கும் எல்லா விஷயங்கள்லயும் நீ வித்தியாசமானவளா இருக்க மிருது... உன்னோட ரசனைகள் வித்தியாசமானதா, உயர்ந்ததா இருக்கு. காலையில கல்யாணத்தப்ப நீ கட்டியிருந்த முகூர்த்தப் புடவை முந்தானையில அழகான மணிகள் கோத்திருந்துச்சே... அது ரொம்ப சூப்பர். இப்ப... நீ... உடுத்தி இருக்கற துப்பட்டாவில கூட அதே மாதிரி மணிகள் கோத்திருக்கு. ரொம்ப அழகா இருக்கு...” என்றவன், அவளது துப்பட்டாவை எடுத்துப் பார்க்கும் சாக்கில் அவளது தோளைத் தொட்டான். செல்லமாக முறைத்தாள் மிருதுளா. அவனுடைய கையை வெட்கம் மாறாமல், மென்மையாகத் தள்ளி விட்டாள்.

“இந்த மணிகளெல்லாம் நான் பெங்களூர் போயிருந்தப்ப அங்க வாங்கினது. எனக்கு ரொம்பப் பிடிச்சதுனால நிறைய கலர்ல வகை வகையா வாங்கிட்டு வந்தேன். என்னுடைய புடவை, சுரிதார், துப்பட்டா எல்லாத்துலயும் இந்த மணிகளைக் கோத்திருக்கேன்.”

மீண்டும் கிஃப்ட் பார்சல்களைப் பிரித்தனர். அதிலுள்ள பொருட்களையும், அதை அனுப்பியவர்கள் யார் என்பதையும் பார்த்து மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.

“உங்களோட ஃப்ரெண்ட்ஸ் கொடுத்திருக்கற எல்லா கிஃப்ட்டும் நல்லா இருக்கு!” மிருதுளா கூறினாள்.

“நானும் கவனிச்சேன்...”

“ஆனா மிருதுளா. அப்பாவோட பிஸினஸை நான் கவனிக்க ஆரம்பிச்சப்புறம் என் கூடப் படிச்ச நண்பர்களோட தொடர்பு கொஞ்சம் கொஞ்சமா விட்டுப் போச்சு. சில ஃப்ரெண்ட்ஸ் வெளியூர்ல வேலை கிடைச்சு செட்டில் ஆயிட்டாங்க. அதனால இப்போதைக்கு எனக்குன்னு இருக்கற ஃப்ரெண்ட்ஸ் நம்ப கல்யாணத்துக்கு, ரிஸப்ஷனுக்கு வந்த மூணு பேர்தான். அவுங்களையும் தினமும் போய்ச் சந்திக்கிற வழக்கமெல்லாம் கிடையாது. பத்து மணிக்கு எங்க ஆஃபீசுக்குப் போனா, ராத்திரி எட்டு மணிக்குத்தான் வீட்டுக்கு வருவேன்.”

“அவ்வளவு வேலை இருக்குமா?”

“ஆமா மிருதுளா. நான் எம்.பி.ஏ. முடிக்கற வரைக்கும் அப்பாவே எல்லாம் பார்த்துக்கிட்டாரு. இப்ப நான் ஆஃபீஸ் பொறுப்பை எடுத்துக்கிட்டேன். எங்க அம்மாவும் அப்பாவும் சந்தோஷமா இருக்கணும். அதுதான் என்னோட ஆசை. இப்ப எனக்காக என் மனைவியா நீ வந்திருக்க... உன்னையும் உன் மனம் கோணாமல், முகம் மாறாமல் எப்பவும் சந்தோஷமா இருக்கற மாதிரிப் பார்த்துக்குவேன்.”

“உங்க அம்மா அப்பாவை இந்த அளவுக்கு நேசிக்கற உங்க பண்பு பாராட்டுக்குரியது.”

“பாராட்டு வெறும் வார்த்தையால மட்டும்தானா? கைகுலுக்கிப் பாராட்டக் கூடாதா?”

ஏகாந்த் கண்களைச் சிமிட்டியபடி குறும்பாகக் கேட்டதும் மிருதுளாவின் உடம்பில் ஓடிய இரத்தம் முழுவதும் கன்னத்திற்கு வந்தது போல் சிவந்தது வெட்கத்தால்.

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி அவனிடம் பேச ஆரம்பித்தாள்.

“உங்களைப் பத்தி ஓரளவுக்குச் சொல்லிட்டிங்க. என்னைப் பத்தி நானும் சொல்லணும். அம்மா இல்லாத எனக்காக, என்னோட எதிர்கால நலன் கருதி மறுமணம் பண்ணிக்காமலேயே வாழ்ந்துட்டார் எங்க அப்பா. இதெல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சதுதான். இருந்தாலும் என்னோட கோணத்துல என் எண்ணங்களை நான் உங்ககிட்ட சொல்லணும். என் இஷ்டப்படி என்னை எம்.ஏ. ஸோஷியாலஜி படிக்க வச்சாரு எங்க அப்பா. எனக்கு முழுச் சுதந்திரம் குடுத்து வளர்த்தார். விளையாட்டுத்தனமா காதல், பையன்களோட சினிமா, டிஸ்கொதேன்னு சுத்தறது இதுக்கெல்லாம் அப்பாற்பட்ட அறிவுபூர்வமான சிந்தனைகள் செய்யற பெண் நான். எந்தப் பிரச்னையா இருந்தாலும் அதை நானே சந்திச்சுத் தீர்வு காணணும்னு நினைக்கறவ. எதையும் ஈஸியா எடுத்துப்பேன். ஆனா அதுக்காக என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட நீங்க எப்படி வேண்ணாலும் போகட்டும்னு விட்டுட மாட்டேன். என் மேல் யார் அன்பு வச்சாலும் அந்த அன்பு நூத்துக்கு நூறு உண்மையானதா இருக்கணும்னு எதிர்பார்ப்பேன். எங்க அம்மா மேல உயிரையே வச்சிருந்தார் என்னோட அப்பா. எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் அவங்க ரெண்டு பேரும் கடுமையாப் பேசி நான் பார்த்தது இல்லை.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel