Lekha Books

A+ A A-

வருவேன் நான் உனது... - Page 8

நிச்சயமா அவ என்னைக் காதலிப்பா. அதை எப்படி நான் தெரிஞ்சுக்கறது? அவ சொல்வாளா? அவ சொல்லாட்டி என்ன? நான் சொல்லணும். நிச்சயமா... மிருதுளா என்னை விரும்புவா. மத்தவங்ககிட்ட பேசறதை விட என்கிட்ட நிறையப் பேசறா. சிரிச்சுப் பேசிப் பழகறா. போன வாரம் என்னோட பிறந்த நாளுக்கு ரோஜா பொக்கே குடுத்து வாழ்த்துச் சொன்னா. ப்ராஜெக்ட் வொர்க் முடிஞ்சு அவ கிளம்பறதுக்குள்ள அவகிட்ட இதைப் பத்தி பேசணும். அவ ‘நோ’ சொல்லிட்டா... என்னால தாங்கவே முடியாது!’ தன் இதயத்தில் எழுப்பிய காதல் கோட்டைக்கு வர்ணங்கள் தீட்டிக் கொண்டிருந்தான் அரவிந்த்.

5

றுநாள், மிருதுளாவிடம் தன் காதலை வெளிப்படுத்திய அரவிந்த், அவளிடம் இருந்து எதிர்பார்த்த பதில் வராததால் நெஞ்சம் ஏமாற்றத்தால் அதிர, வாய்மொழி எதுவும் பேச இயலாமல் தவித்தான். அவன் அதிர்ந்து போனதையோ, ஏமாற்றம் அடைந்ததையோ அறிந்து கொள்ளாத மிருதுளா தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.

“எதை வச்சு உங்க மனசுக்குள்ள இப்படி ஒரு எண்ணம் வந்துச்சுன்னு எனக்குத் தெரியலை, அரவிந்த். நீங்களே பார்த்திருப்பீங்க. நான் எல்லார் கூடயும் சகஜமா பழகறதை. நட்புக்கு ஆண் பெண் பேதம் கிடையாது. நட்புக்குத் தேவை களங்கமில்லாத மனசு மட்டும்தான். நான் நட்பைப் பெரிசா மதிக்கறவ. உங்க மேல எனக்கு நட்பு மட்டும்தான். நாம பழகியது நண்பர்களைப் போலத்தான். காதல்ங்கற உணர்வு இன்னும் என் இதயத்தை எட்டிக்கூடப் பார்க்கலை. இந்தப் பெங்களூர்ல எனக்குக் கிடைச்ச நல்ல நண்பர் நீங்க. நம்ம நட்பு இன்னும் தொடரணும். உங்க காதலை நான் மறுத்துப் பேசிட்டேன்னு அந்த நட்புக்கு ஒரு முற்றுப் புள்ளி வச்சுடாதீங்க. ஒரு நண்பரா நான் உங்களை விரும்பறேன். புரிஞ்சுக்கோங்க. உங்க மனசு தெளிவா இருக்கும்னு நம்பறேன். நான் நாளைக்குச் சென்னை கிளம்பிடுவேன். அப்பப்ப உங்களுக்கு இ.மெயில் அனுப்பறேன். நீங்களும் எனக்கு இ.மெயில் அனுப்புங்க.”

மிருதுளா பேசியதற்குப் பதில் கூறும் விதமாகத் தன் உள் உணர்வுகளை மறைத்து உதடுகளால் ஒரு சிரிப்பை மட்டும் எதிர்த்தான் அரவிந்த். அந்தச் சிரிப்பிலும் ஜீவன் இல்லை. போட்டோவில் அழகிய பல்வரிசை தெரியச் சிரித்துக் கொண்டிருந்தாள் மிருதுளா.

அரவிந்த்தின் ‘ஃப்ளாஷ் பேக்’ முடிந்தது.

கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு வந்தான். ‘மிருதுளா என் கூடப் பழகினது காதலாகத்தான் இருக்கும்னு நம்பினேன்... ஏமாந்துட்டேன். அவளோட கல்யாணத்துக்குக் கண்டிப்பா வரணும்னு பல முறை போன் பண்ணிச் சொன்னா. என்னை வருந்த வச்சுட்டு அவளோட கல்யாண விருந்துக்கு வருந்தி வருந்தி அழைச்சா. அவளோட அழகும், பழகற விதமும் என் நெஞ்சுல ஏக்கத்தைத் தேக்கி வச்சிருச்சு... என்னை ஏங்க வச்சுட்டு எவனோ ஒரு ஏகாந்த்தைக் கல்யாணம் பண்ணிக்கப் போறா. அவ சந்தோஷமா, நிம்மதியா வாழக் கூடாது. மிருதுளா என்னை மிருகமாக்கிட்டா.’

காதல் புகுந்திருந்த மனதில் கள்ளமும் கபடமும் புகுந்து கொண்டன. ‘தான் காதலிக்கிறவள் எங்கிருந்தாலும் நல்லா வாழணும்’னு நினைக்கறவனோட காதல்தான் உண்மையான காதல். அரவிந்த்தின் காதல்? தன் அழகிய தோற்றத்திற்கு, செல்வச் செழிப்பான அந்தஸ்திற்கு மயங்கி, தன்னுடைய காதலை ஏற்றுக் கொண்டே தீரவேண்டும் என்ற அகம்பாவம் கொண்ட காதல்! இது உண்மையான காதல் அல்ல.

மிருதுளாவிடம் அவளது மறுப்பை சகஜமாக ஏற்றுக் கொள்வது போல் நடித்தான். அவள் அனுப்பும் இ.மெயிலுக்குப் பதில் அனுப்பி அவளுடைய தன் மதிப்பைப் பெற்றான். ‘இனி என்ன செய்வது?’ தீவிரமாக யோசித்ததான். யோசிக்க... யோசிக்க... தலை வலித்தது.

6

“ஏ, வருணா.... ரிஸப்ஷன்ல கூட நீ சாப்பிடாம கிளம்பிட்ட. அங்கே கொஞ்ச நேரம் இருந்து, என் கூடவே வந்திருக்கலாம்ல. என்ன அவசரம்னு ஓடி வந்த? அதுவும் சாப்பிடாம கொள்ளாம? உன் மாமா மகன் ஏகாந்த் அந்த மிருதுளாவைக் கட்டிக்கிட்டான்னு... இப்படி அங்கே சாப்பிடாம வந்தது மரியாதைக் குறைவான விஷயம் இல்லையா? நீ பட்டினி கிடந்தா மட்டும் நடந்த கல்யாணம் இல்லைன்னு ஆயிடுமா? ரிஸப்ஷன்ல அந்த மிருதுளாட்ட நீ சகஜமா பேசினதைப் பார்த்ததும் உன் மனசு மாறிடுச்சுன்னு நினைச்சேன். இப்ப என்னடான்னா. இப்படி லேடி தேவதாஸ் மாதிரி வெறிச்சுப் பார்த்துக்கிட்டு உட்கார்ந்துக்கிட்டிருக்க! தாடி மட்டுந்தான் முளைக்கலை.” வருணாவைச் சிரிக்க வைக்கும் முயற்சியில் இறங்கினாள் அகல்யா.

“அம்மா... உங்களால என்னைச் சிரிக்க வைக்க முடியாது. என்னோட மனசு எரிஞ்சுக்கிட்டிருக்கு. ஏகாந்த் மச்சானைக் கல்யாணம் பண்ணிக்கணுங்கற என்னோட ஆசையில மண் விழுந்துடுச்சு. இனிமேல் என் வாழ்க்கையில என்ன இருக்கு?”

“இனிமேல்தான் உன் வாழ்க்கையில எல்லாமே இருக்கு. நீ எனக்கு ஒரே பெண்ணு. நீ கல்யாணமாகிக் குடும்பம் நடத்தறதைப் பார்க்கணும்னு எனக்கு ஆசை இருக்காதா?...”

“என்னோட ஆசையே நிராசையாயிடுச்சு. உங்க ஆசையை என்னால நிறைவேத்த முடியாது.”

“இவ்வளவு அலட்சியமாப் பேசற உன்னை என்ன பண்றது? உங்க அப்பா இறந்துக்கப்புறம் நீதான் உன் உலகம்னு வாழ்ந்தேன். வாழ்ந்துக்கிட்டிருக்கேன். நீ இப்படிப் பிடிவாதமாப் பேசறதைக் கேக்கறதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டேன்?...”

“உங்க கஷ்டத்தை மட்டும்தான் பெரிசா பேசறீங்க. என் வாழ்க்கையில கல்யாணங்கறதே இருக்காது. ஏகாந்த் மச்சானை மனசுல சுமந்து வாழ்ந்தேன். இப்ப ‘அவர் எனக்கு இல்லை’ங்கற ஏமாற்றத்தைச் சுமந்துக்கிட்டிருக்கேன். நெஞ்சுல ஆசைகளைத் தேக்கி வச்சு வாழற சாதாரணப் பெண்ணு தானே நானும்?”

மகள் சோகமாகப் பேசுவதைப் பார்த்து மிகவும் வேதனைப்பட்டாள் அகல்யா. தாய் மனம் தவித்தது. என்றாலும் சமாளித்து வருணாவைச் சமாதானம் செய்யும் விதமாய்ப் பேசினாள்.

“இவ்வளவு பேசறியே... ஒரு விஷயத்தை நினைச்சுப் பார்த்தியா? பல வருஷ காலமா, மாமா வீட்லதானே நாம இருந்தோம்? என்னிக்காவது ஏகாந்த் உன்னைக் காதலிக்கறதாவோ கல்யாணம் பண்ணிக்கறதாவோ சொல்லி இருக்கானா?...”

“சொன்னாத்தான் காதலா? எனக்கு ரோஜாப்பூன்னா பிடிக்கும்னு எத்தனை நாள் ரோஜாப் பூ வாங்கிட்டு வந்திருக்கார்? எனக்குப் பிடிச்ச கலர்ல சுடிதார் வாங்கிட்டு வந்திருக்கார்? எனக்கு உடம்பு சரியில்லாதப்ப எத்தனை நாள் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போயிருக்கார்? எனக்குப் புடிச்ச புத்தகங்கள் எத்தனை வாங்கிக் குடுத்திருக்கார்? ஒரு நாளைக்கு எத்தனை தடவை வருணா, வருணான்னு கூப்பிட்டுக்கிட்டிருப்பார்...?”

“நீ சொல்ற இதையெல்லாம் ஒரு அண்ணன் ஸ்தானத்துல இருக்கறவன் கூடத்தான் செய்வான். மனம் விட்டு, வாய் விட்டு அவன் உன்னைக் காதலிக்கறதாவும் சொல்லல.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel