Lekha Books

A+ A A-

கனவு ராஜாக்கள் - Page 12

kanavu-rajaakkal

வாழ்வு கொடுத்த தயாரிப்பாளரை மறந்துவிட்ட விஜயகாந்த்தும், எஸ்.ஏ.சந்திரசேகரும்!

சுரா

டலூர் சேஷசாயி தொழிற்சாலையில் பணியாற்றி, பின்னர் தொழிலாளர் சங்கத்திற்குத் தலைவராக ஆனவர் சிதம்பரம். மார்க்சியத்தைக் கரைத்துக் குடித்திருக்கும் மனிதர். சினிமாவுக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை. எனினும், 1980ஆம் ஆண்டில் சென்னை அண்ணாசாலையில் நடந்து போய்க் கொண்டிருந்த அவரின் கண்களில் கடலூர் புருஷோத்தமன் எழுதி, இயக்கிய 'நான் குடித்துக் கொண்டே இருப்பேன்' படத்தின் விளம்பர பேனர் பட்டது. கடலூர் புருஷோத்தமன் என்ற இடத்தில் வடலூர் சிதம்பரம் என்ற பெயர் வந்தால் எப்படி இருக்கும் என்று அவர் கற்பனை பண்ணிப் பார்த்தார்.

அடுத்த நாளே அதற்கான வேலையில் இறங்கிவிட்டார். தன்னுடைய சொந்தப் பணத்துடன், தொழிலாளர்களிடமும் பணத்தைத் திரட்டினார். ஒரு குறிப்பிட்ட தொகை சேர்ந்தது. அதை வைத்து 'வடலூரான் கம்பைன்ஸ்' என்ற பெயரில் பட நிறுவனத்தை ஆரம்பித்தார். அப்போது விஜயகாந்த் பல தோல்விப் படங்களில் நடித்து முடித்திருந்தார். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரும் அப்படித்தான். 'அவள் ஒரு பச்சைக் குழந்தை' என்றொரு தோல்விப் படத்தைக் கொடுத்துவிட்டு, படமெதுவும் இல்லாமல் தன்னுடைய மாமனார் வீட்டில் அவர் தங்கி இருந்தார். வங்கி ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்த முருகேசன் என்பவர் வடலூர் சிதம்பரத்திற்கு எஸ்.ஏ.சந்திரசேகரை அறிமுகப்படுத்தி வைத்தார். சந்திரசேகர் ஒரு கதையைக் கூறினார். சிதம்பரத்திற்கு அந்தக் கதை பிடித்து விட்டது. சட்டத்திலிருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி எப்படி ஒருவன் தப்பிக்கிறான் என்பதுதான் கதை. அந்தக் கதையின் நாயகனாக விஜயகாந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்தப் படம்தான் 'சட்டம் ஒரு இருட்டறை'. அந்தப் படம் திரைக்கு வந்து 100 நாட்கள் ஓடியது. விஜயகாந்த், எஸ்.ஏ.சந்திரசேகர் இருவருக்கும் படவுலகில் கிடைத்த முதல் வெற்றி அதுதான். எங்கோ இருந்து சிறிதும் எதிர்பாராமல் வந்த வடலூர் சிதம்பரத்தால் அந்த வெற்றி அவர்களுக்குக் கிடைத்தது.

தமிழில் வெற்றி பெற்ற 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தை பல மொழிகளிலும் ரீ-மேக் பண்ணுவதற்காக போட்டி போட்டார்கள். இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் அந்தப் படம் தயாரிக்கப்பட்டது. எல்லா மொழிகளிலும் அந்தப் படம் வெற்றிப் படமாக அமைந்தது. எனினும், அந்தப் படம் வேறு மொழிகளுக்குச் சென்ற வகையில், அதன் தயாரிப்பாளர் வடலூர் சிதம்பரத்திற்கு எந்தவொரு பிரயோஜனமும் இல்லை. சினிமாவைப் பற்றி எதுவும் தெரியாமலிருந்த வடலூர் சிதம்பரத்தைக் கையெழுத்துப் போட வைத்து, அதன் முழு பயனையும் எஸ்.ஏ.சந்திரசேகரே அனுபவித்துக் கொண்டார். எத்தனையோ கோடிகள் சம்பாதித்திருக்க வேண்டிய வடலூர் சிதம்பரம், தான் ஏமாற்றப்பட்டு விட்டதை பல நேரங்களில் என்னிடம் கூறி வேதனைப் பட்டிருக்கிறார்.

'சட்டம் ஒரு இருட்டறை' படத்தைத் தொடர்ந்து சிதம்பரம் தயாரித்த படம் 'சாதிக்கொரு நீதி'. கோமல் சுவாமிநாதன் 'செக்கு மாடுகள்' என்ற பெயரில் எழுதிய நாடகம் அது. விவசாயத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு போராடும் கதை. விவசாயிகளுக்காக போராடுபவராக விஜயகாந்த் நடித்தார். அப்படத்தை 'மல்லிகை பதிப்பகம்' சங்கரன் இயக்கினார். விஜயகாந்த்துக்கு அந்தப் படத்தில் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. எனினும் அட்வான்ஸ் தொகையாக கொடுக்கப்பட்ட ஆயிரம் ரூபாய்க்குப் பிறகு அவர் எந்தப் பணத்தையும் வாங்கவில்லை. மிகவும் குறுகிய காலத்தில் அப்படம் எடுக்கப்பட்டது. முற்போக்கான கதை. நல்ல படம் என்ற பெயர் கிடைத்தது. எனினும், படத்தின் இறுதியில் விஜயகாந்த் இறந்து விடுவதைப் போல காட்சி இருந்ததால், மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் படம் படுதோல்வி அடைந்துவிட்டது. சிதம்பரத்திற்கு மிகப் பெரிய பண இழப்பு உண்டானது.

அடுத்து கே.விஜயனை இயக்குநராகப் போட்டு 'நீறு பூத்த நெருப்பு' என்ற படத்தை சிதம்பரம் ஆரம்பித்தார். அதில் விஜயசாந்தி கதாநாயகியாக நடித்தார். விஜயகாந்த்தான் அதில் கதாநாயகனாக நடித்திருக்க வேண்டும். ஆனால், நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால், அவரால் அந்தப் படத்திற்கு கால்ஷீட் தர முடியவில்லை. கோபமடைந்த சிதம்பரம், கராத்தே போட்டியில் உலக அளவில் தங்க மெடல் வாங்கிய ரமேஷ் என்ற இளைஞரை கதாநாயகனாக அந்தப் படத்தில் அறிமுகப்படுத்தினார். இப்போது பிரபல தயாரிப்பாளராக இருக்கும் ஏ.எம்.ரத்னம் அப்படத்தில் விஜயசாந்தியின் ஒப்பனையாளராக பணியாற்றினார். இப்போது பல வெற்றி பெற்ற டி.வி. தொடர்களை இயக்கிக் கொண்டிருக்கும் சுந்தர் கே.விஜயன் அதில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

'நீறு பூத்த நெருப்பு' திரைக்கு வந்து ஒரே வாரம்தான் ஓடியது. சிதம்பரத்திற்கு அதில் பெரிய அளவில் நஷ்டம் உண்டானது.

அதற்குப் பிறகு பல வருடங்கள் கடந்தோடின. சிதம்பரம் படம் எதுவும் தயாரிக்காமல் வெறுமனே இருந்தார். திடீரென்று விஜயகாந்தும், எஸ்.ஏ.சந்திரசேகரும் இணைந்து அவருக்கு ஒரு படம் பண்ணித் தர தீர்மானித்திருப்பதாக ஒரு தகவல் வந்தது. உடனே அவர்களைப் போய் பார்த்தார் சிதம்பரம். அவர்களைப் பார்க்கப் போகும் போதெல்லாம் நானும் அவருடன் செல்வேன். இரண்டு பேரும் சிதம்பரத்தைப் பந்தாடினார்கள். அமைதியாக வீட்டில் உட்கார்ந்திருந்த சிதம்பரத்தை அவர்கள் அலைக் கழித்தார்கள் என்பதுதான் உண்மை. சிதம்பரம் தன் நிலையை எண்ணி வேதனைப்பட்டார். விஜய்காந்திற்கு தன் மன வேதனையை வெளிப்படுத்தி காட்டமாக ஒரு கடிதம் எழுதி, பதிவுத் தபாலில் அனுப்பி வைத்தார். சிதம்பரத்திடம் படத்தை இயக்குவதற்காக தான் வாங்கிய அட்வான்ஸ் தொகையை வாசலிலேயே அவரை நிற்க வைத்து கொடுத்து, கதவை மூடினார் எஸ்.ஏ.சந்திரசேகர். இந்தச் சம்பவம் நடந்த அன்று இரவில் என்னிடம் கண்ணீர் விட்டு அழுதார் சிதம்பரம்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிதம்பரம் மன்சூர் அலிகானைக் கதாநாயகனாகப் போட்டு 'ஜனா' என்ற படத்தை ஆரம்பித்தார். அஸ்வினி குமார் அப்படத்தை இயக்கினார். முக்கால் பகுதி வளர்ந்த படம், பணம் இல்லாததால் அப்படியே நின்று விட்டது.

அதற்குப் பிறகு சிதம்பரம் படமெதுவும் தயாரிக்கவில்லை. படம் தயாரிக்க பணம் இருந்தால்தானே! இதற்கிடையில் அவருடைய மகள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு எதிர்பாராத மரணத்தைத் தழுவினார். சிதம்பரம் தொழிற்சங்கத் தலைவராக இருந்த சேஷசாயி தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்பட்டது. அதில் பணியாற்றிய தொழிலாளர்கள் வறுமையில் வாடினார்கள். பலர் நடுத்தெருவிற்கு வந்தார்கள். பலர் மரணத்தைத் தழுவினார்கள். சில வருடங்களுக்கு முன்னால் பழைய விஷயங்களையெல்லாம் மறந்து விட்டு சிதம்பரம் விஜயகாந்தையும், எஸ்.ஏ.சந்திரசேகரையும் சந்தித்து தொழிலாளர்களின் நலனுக்காக படம் பண்ணித் தரும்படி கேட்டார். ஆனால், சிதம்பரம் நினைத்தது நடக்கவில்லை. இதை சிதம்பரமே ஒரு நாள் என்னிடம் கூறினார்.

வளசரவாக்கத்தில் ஒரு வாடகை வீட்டில் மனைவியுடன் குடியிருந்த சிதம்பரத்தைக் காப்பாற்றியது அவருடைய மகன் செல்வம்தான்.

சில வருடங்களுக்கு முன்னால் வடலூர் சிதம்பரம் மாரடைப்பில் மரணத்தைத் தழுவி விட்டார். விஜயகாந்தும் எஸ்.ஏ.சந்திரசேகரும் நினைத்திருந்தால், ரஜினிகாந்த் 'அருணாச்சலம்' படத்தின் போது தன்னுடைய வளர்ச்சிக்குக் காரணமான பலரையும் தயாரிப்பாளர்கள் என்று போட்டு பல லட்சங்கள் கொடுத்து உதவியதைப் போல வடலூர் சிதம்பரத்திற்கு உதவியிருக்கலாம். அவர்கள் இருவரையும் வளர்த்துவிட்ட வடலூர் சிதம்பரம், பி.எஸ்.வீரப்பா போன்றோர் இறுதிக் காலத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டு இறந்திருக்கிறார்களே என்பதை நினைக்கும்போது, மிகவும் வேதனையாக இருக்கிறது.

விஜயகாந்த்தும், எஸ்.ஏ.சந்திரசேகரும் நடந்துக் கொண்டதைப் போல படவுலகில் உள்ள மற்ற நடிகர்களும் இயக்குநர்களும் நடந்து கொள்ளாமல் இருக்க வேண்டும். முன்னணி நிலையை அடைந்திருக்கும் கதாநாயகர்களும் இயக்குனர்களும் தங்களை வளர்த்துவிட்ட தயாரிப்பாளர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் மோசமான நிலையில் இருக்கும் பட்சம், அவர்களுக்கு கால்ஷீட் கொடுத்து, அவர்கள் படங்களைத் தயாரிக்கும் வகையில் உதவி வாழ்க்கையில் அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டியது தங்களுடைய தலையாய கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel