Lekha Books

A+ A A-

விழி மூடி யோசித்தால்... - Page 34

Vizhi Moodi Yosithaal

     மிதுனா சிரித்தாள். “பழைய ஏமாளியாக இருந்தால் உடனே கிளம்பிப் போயிருப்பீங்க...!”

     “அது வந்து மிதுனா...!”

     “பெரிய இன்டஸ்ட்ரீஸை ‘ஜஸ்ட் லைக் தட்’ மேனேஜ் பண்ற நீங்க, உங்களோட மனசுலேயும், இயல்பிலேயும் இருக்கிற ஸாஃப்ட் கார்னர்ல ஏடாகூடமா எதையாவது பண்ணிடறீங்க. இரக்க சுபாவத்துக்கும் ஒரு அளவு, சூழ்நிலை, காரணம் இதெல்லாம் உண்டு... யாருக்கு என்ன செய்யறோம்கிறதையும் பொறுத்தது.”

     “ஸாரி மிதுனா...”

     “சரி... பழசை ‘போஸ்ட்மார்ட்டம் ‘பண்றதுனாலே என்ன ஆகப் போகுது? இனி என்ன ஆகணும்? நீங்க இன்னொஸென்ட்டா இல்லையான்னு தெரியணும்...”

     “நீ.. என்னை ஃபிப்டி பெர்ஸென்ட் இப்போ நம்பறே. இனி ஹண்ட்ரட் பெர்ஸெண்ட் நம்பற மாதிரி உண்மைகள் வெளிவரும். அது சரி... மிதுனா, பெங்களூருல வேற என்ன நடந்துச்சு?”

     “பெங்களூருல அந்த அப்பார்ட்மென்ட் கதவு பூட்டிக் கிடந்ததைத் தவிர பலன் தர்ற விஷயமா வேற எதுவும் நடக்கலை. இதைத்தான் போன்லேயே உங்ககிட்டே சொன்னேனே...?”

     “உங்க அம்மா என்ன சொன்னாங்க?”

     “அவங்க என்ன சொல்லுவாங்க? மகளோட வாழ்க்கை இப்படி... இதுவா? அதுவாங்கிற மாதிரி இருக்கே... கல்யாணம் பண்ணி மகள் குடும்பம் நடத்தறதைப் பார்க்க ஆசைப்பட்டோமே... அவ என்னடான்னா அவளுக்குப் பிடிக்காத  ‘பொய் பேசற விஷயத்துக்கு உடந்தையாக இருந்து பெங்களூருக்குப் போய் வந்துக்கிட்டு இருக்காளே!’ன்னு நெஞ்சு நிறைய வேதனையைச் சுமந்துகிட்டு இருக்காங்க.

     “இப்படிக் கவலைப்பட்டுக்கிட்டு இருக்கிற ஒரு சூழ்நிலையிலே அவங்க கூடவே ஆறுதலா இருக்க முடியாத நிலைமை எனக்கு. அருணாவுக்கும், எங்க அப்பாவுக்கும் எதுவும்தெரியாமல் மறைச்சு வெச்சுக்கிட்டு... ‘என் அம்மா இப்படிக் கவலைப்படும்படியாக ஒரு கல்யாணம் நடந்துருக்கே’ன்னு நானும் கவலைப்பட்டு... என் அம்மாவும் கவலைப்பட்டு... இந்த நிலைமை எப்போ மாறுமோன்னு இருக்கு...”

     “ஸாரி மிதுனா...”

     “எங்க அம்மா மேலே நான் உயிருக்குயிராகப் பாசம் வெச்சிருக்கிற மாதிரி... நீங்க, உங்கம்மா மேலே வெச்சிருக்கிற பாசத்துனால இப்படி ஒரு செய்யக்கூடாத... மிகப்பெரிய தப்பைப் பண்ணிட்டீங்க. நூறு தடவை ‘ஸாரி’ சொல்றதுனால என்ன ஆகப் போகுது? யோசிக்காம நீங்க செஞ்ச தப்புக்கு ‘என்ன செய்றது’ என்ன செய்யறது’ன்னு நான் யோசிச்சுக்கிட்ருக்கேன்.

     “ஸாரி மிதுனா...”

     “மறுபடியும் ஸாரியா? என் அம்மா அங்கே தனியா, அருணாகிட்டேயும் எதுவும் பேச முடியாமல், எங்கப்பாகிட்டேயும் எதுவும் பேச முடியாமல், துயரத்தீ சுடுற மனசை ஆத்திக்க முடியாம அழுதுக்கிட்டு இருப்பாங்க. இந்த மாதிரி சமயத்துல அவங்க கூட இருக்க முடியாம, கல்யாணச் சம்பிரதாயங்கள், சாஸ்திரங்கள், புகுந்த வீட்டுப் பழக்க வழக்கங்கள்னு... நான்  இங்கே இருக்க வேண்டி இருக்கு... இதுக்கும் ஸாரி சொல்லாதீங்க, ப்ளீஸ்.... தூங்குங்க குட் நைட்...!”

     மிதுனா. தூங்க முயற்சித்தாள்.

     “குட்நைட் மிதுனா!” என்ற ஜெய்சங்கர், சோகம் நிரம்பிய முகத்துடன் படுக்கச் சென்றான். யாருடைய துன்பத்தையும், இன்பத்தையும் எதையும் பொருட்படுத்தாமல் இயற்கையின் விளைவால் இருள் இறகு விரித்தது.

 

44

     கையில் சிறிய சூட்கேஸ், பணம் வைக்கும் ஹேண்ட் பேக் சகிதம் நின்றிருந்த ஜெய்சங்கரைக் கேள்விக்குறியுடன் பார்த்தாள் மிதுனா.

     “அ... அது... வந்து மிதுனா... பெங்களூரு ஆஃபீஸ்ல ஒரு அவசர வேலை. உடனே கிளம்பி வரச்சொல்றாங்க...”

     “அப்படியா? அவ்வளவு அவசரமான வேலையா?”

     “ஆமா... இன்னும் ஒரு மணி நேரத்துல நான் ஏர்போர்ட்ல இருக்கணும்...!”

     “சரி... கிளம்புங்க. நான் வேணும்னா உங்க கூட வரட்டுமா? ஏதாவது ஹெல்ப் பண்ணுவேன்ல?”

     “அ... அ... அது... வேண்டாம், மிதுனா.”

     “அதுக்கு ஏன் இவ்வளவு தயங்குறீங்க? தடுமாறிப் பேசுறீங்க? ஏதாவது பிரச்சனைன்னா சொல்லுங்க நானும் வரேன்...”

     அப்போது அங்கிருந்த அனுசுயா, “ஏம்ப்பா... மிதுனாதான் உன் கூட வர்றேன்னு சொல்றால்ல? கூட்டிக்கிட்டுப் போயேன்பா...”

     “அம்மா... ப்ளீஸ்... புரிஞ்சுக்கோங்கம்மா. நான் அவசர அவசரமாப் போயிட்டு இருக்கேன். நிதானமா, ரிலாக்ஸ்டாப் போனால், மிதுனாவைக்கூட கூப்பிட்டுக்கிட்டுப் போறதுல அர்த்தம் இருக்கு. நான் போயிட்டு சீக்கிரம் வந்துடுவேன்மா...”

     “சரிப்பா... நீ கிளம்பு, வாசுவைக் காரை நிதானமாகக் கவனமாக ஓட்டச் சொல்லு...”

     “சரிம்மா.. மிதுனா, நான் கிளம்பறேன்.”

     “சரி...”

     “மிதுனா, அவனை வாசல் வரைக்கும் போய் வழி அனுப்பிட்டு வாம்மா...”

     “சரி அத்தை...!” என்ற மிதுனா, வாசலில் நின்ற காரை நோக்கி நடந்த அவனுடன் மிதுனாவும் போனாள்.

     காரில் ஏறிக் கொண்ட ஜெய்சங்கர், கையசைத்து மிதுனாவிடம் விடை பெற்றுக் கிளம்பினான்.

     ‘இவர் ஏன் இவ்வளவு அவசரமாகப் பெங்களூரு கிளம்பறார்...? ஒண்ணுமே புரிய மாட்டேங்குதே...!’ என்று யோசித்தபடியே பங்களாவிற்குள் வந்தாள் மிதுனா.

     “அக்கா, உங்க மொபைல் அடிச்சுக்கிட்டே இருந்துச்சுக்கா...!” என்றபடி அவளிடம் மொபைலைக் கொடுத்தாள் வேணி.

     “தேங்க்ஸ் வேணி...”

     “எதுக்கெடுத்தாலும் தேங்க்ஸ் கொல்றீங்கக்கா... என்னை எந்த வேலையும் செய்ய விட மாட்டேங்கிறீங்கக்கா...!” வேணி இவ்விதம் சொன்னதைக் கேட்ட மிதுனா புன்னகைத்தாள்.

     “எனக்குத் தேவைப்பட்டா உன்னைத்தான் வேணி கூப்பிடுவேன். நீ போய் அத்தைக்குத் தைலம் தடவி கால் தேய்ச்சு விடு! நான் மாடி ரூமுக்குப் போயிட்டு வந்துடறேன்...”

     “சரிக்கா..!” வேணி சென்றதும் மிதுனா, மாடி அறைக்குப் போனாள்.

     மிஸ்டுகால் பார்த்தாள்... சாரதாவின் மொபைல் நம்பர் காணப்பட்டது.

     ‘அடடா... அம்மா கூப்பிட்டிருக்காங்களே...!” என நினைத்தபடிபே, சாரதாவின் மொபைல் நம்பரில் அழைத்தாள்.

     “ஹலோ...” மறுமுனையில் அருணாவின் குரல் கேட்டது.

     “அருணா... எப்படிம்மா இருக்கே...?”

     “நல்லா இருக்கேன்கா... நீங்க எப்படி இருக்கீங்க...?”

     “நான் நல்லா இருக்கேன்டா அருணா. அம்மா, என்னோட மொபைல்ல கூப்பிட்டிருக்காங்க...”

     “அம்மா கூப்பிடலைக்கா... நான்தான் கூப்பிட்டேன். மச்சான் நல்லா இருக்காராக்கா? உன் மேலே பிரியமா இருக்காராக்கா? நீங்க சந்தோஷமா இருக்கீங்களாக்கா? உங்க மாமியார் எப்படி இருக்காங்க...?”

     “என்ன அருணா... பெரிய மனுஷி மாதிரி அடுக்கடுக்காகக் கேள்வி கேட்கிறே? நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம். அப்பா எப்படி இருக்கார்...?”

     “அப்பா நல்லா இருக்காருக்கா... நீங்க பெஙகளூருல இருந்து வாங்கிட்டு வந்த சுடிதார். ரொம்ப சூப்பரா இருக்குக்கா... தேங்க்ஸ்க்கா...!”

     “ச்சே... நமக்குள்ளே என்ன தேங்க்ஸ்? சரி, நல்லாப் படிக்கிறியா?”

     “ஓ... சூப்பரா படிக்கிறேன்க்கா. ஆனால், கணக்குத்தான்கா நீ சொல்லித் தராம மண்டையிலே ஏற மாட்டேங்குது...!”

     “ஸ்கூல்ல என் கூட வேலை பார்த்தாங்களே... ஸ்டெல்லா மிஸ்...? அவங்களை உனக்குக் கணக்கு டியூஷன் எடுக்கச் சொல்றேன். வாரத்துக்கு மூணு கிளாஸ் எடுக்கட்டும்... எனக்காக அவங்க... டியுஷன் ஃபீஸ் அதிகமாகக் கேட்க மாட்டாங்க..."

     “சரிக்கா. அம்மாகிட்டே கொடுக்கட்டாக்கா?”

     “கொடும்மா...” சாரதா லைனில் வந்தார்.

     “ஹலோ மிதுனா... என்னம்மா, எப்படி இருக்கே? உன் அத்தை நல்லா இருக்காங்களா?”

     “எல்லாரும் நல்லா இருக்கோம்மா. உங்க மருமகன் பெங்களூரு போயிருக்காரு. என்னமோ அவசர வேலையாம்...”

     “என்ன மிதுனா...? நீ பெங்களூரு போறே... இப்போ அவர் போறார்ங்கிறே? என்ன நடக்குது...?”

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

மகாலட்சுமி

March 22, 2013,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel