Lekha Books

A+ A A-

மந்திரப் பூனை - Page 30

mandhira-poonai

பாத்திரம் கொதித்தது. இன்னும் சிறிதுநேரம் அடுப்பில் அது இருக்கட்டும் என்று காத்திருந்தார் சந்நியாசி. கொஞ்ச நேரத்தில் வெந்தது போதும் என்று நினைத்த அவர், மூடியைத் திறந்தார். வெளியே வந்த ஆவி எங்களின் மூக்குத் துவாரத்திற்குள் நுழைந்தது. ஆஹா... என்ன வாசனை! சிம்ப்ளி கிராண்ட்!

மிக முக்கிய விருந்தாளி என்ற முறையில் முதலில் நீலகண்டனுக்கு சந்நியாசி சோற்றை எடுத்து வைத்தார். அடுத்து ஒயிட் லெகான் சேவலுக்கும், அவனின் மனைவிமார்களுக்கும், குஞ்சுகளுக்கும்! அதற்குப் பிறகு, நாய்க்கு. தொடர்ந்து பசுக்களுக்கு.

நாங்கள் பெரிய இரண்டு வாழை இலையும், சிறிய ஒரு வாழை இலையும் மரத்திலிருந்து அறுத்தோம். சந்நியாசி அதில் சோறு பரிமாறினார். மீதியை பாத்திரத்துடன் சமையலறையில் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வந்தார். மகளின் கையையும், என் கையையும் கழுவிவிட்டார். சில நிமிடங்கள் மவுனமாக தியானித்த பிறகு, சந்நியாசி தன் கைகளையும் கழுவினார். அங்கேயே உட்கார்ந்து நாங்கள் சாப்பிட் டோம். உணவை வாயில் வைத்தபோது, எங்களுக்குத் தோன்றியது - தக்காளியை அறுத்து இதில் போடவில்லை. இரண்டு துண்டு எலுமிச்சம் பழம் இதில் போட்டிருக்கலாம். சரி... இப்போது என்ன செய்வது!

“எல்லாமே ப்ரம்மமயம்தான்.'' சந்நியாசி சொன்னார்: “இந்தத் தக்காளி சாப்பிடக்கூடாது. எலுமிச்சம் பழம் இங்கேயே இருக்கட்டும்!''

உணவு சாப்பிட்டு முடித்து, எச்சில் இலைகளைத் தூரத்தில் எறிந்து, கை கழுவி, மீதி இருந்த தக்காளிப் பழங்களையும், எலுமிச்சம் பழங்களையும் எடுத்துக்கொண்டு சௌபாக்யவதிகள் இருந்த பக்கம் போனேன். எங்களின் சமையல் கலையைப் பற்றி அவர்களிடம் நான் எதுவும் கேட்கவில்லை. குற்றத்தையும், குறையையும் அவர்கள் சொல்ல, அதைக்கேட்டு நாம் ஏன் மனம் வேதனைப்பட வேண்டும்? சர்வ சமையல் விஷயங்களின் ஒரே அத்தாரிட்டி யார்? சௌபாக்யவதிகள் தானே!

அவர்களிடம் தக்காளிப் பழங்களைத் தந்தேன். அறுத்த எலுமிச்சம் பழங்களையும்தான்.

“தக்காளியைக் கடிச்சுத் தின்னுங்க. எலுமிச்சம் பழத்தைப் பிழிஞ்சு மூணு துளிகளை சோத்துல விட்டு சாப்பிடுங்க'' என்று கூறிவிட்டு, சந்நியாசியைத் தேடி வந்தேன். மகள் இன்னொரு பாதை வழியாக சமையலறைக்குப் போயிருந்தாள். நாயையும் அங்கு காணோம். ஆனால், ஒயிட் லெகான் சேவலும், நீலகண்டனும் மட்டும் சந்நியாசிக் குப் பக்கத்திலேயே நின்றிருந்தார்கள். சந்நியாசியும் நானும் தலா ஒரு அவுன்ஸ் பால் கலக்காத தேநீர் குடித்தோம். ஆளுக்கு ஒரு சிகரெட் டைப் புகைத்தவாறு ஸ்டைலாக மூக்கின் வழியே புகையை விட்டோம். கத்தியைத் தீட்டி கூர்மையாக்கிக் கொண்டிருந்தபோது, சந்நியாசி கேட்டார்:

“மனித சமுதாயத்துல இருக்குற கலைகளிலேயே மகத்தான கலை எது தெரியுமா?''

“சமையல் கலை!''

இதற்கு எதிராக வேறு ஏதாவது இருக்கிறதா என்று நாங்கள் சிந்தித்துப் பார்த்தோம். அப்படியொன்றும் இதைவிட பெரிதாக இருப்பதாகத் தெரியவில்லை. சிந்தனை ஒரு பக்கம் இருக்க, என் கண்களுக்கு பார்வை சக்தி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டு வருகிறது. பக்கத்தில் இருக்கிற பொருட்களை மட்டும்தான் தெளிவாகப் பார்க்க முடிகிறது. உலகத்தை அழிக்க வருகிற கடலைப் போல, என்னைச் சுற்றியுள்ள மரங்களும், மற்றவைகளும் என்னை மூட வருவதுபோல் என் கண்களுக்குப் படுகிறது. இதன் காரணம் என்ன?

“சுவாமிஜி, உங்களோட கண் பார்வை எப்படி? எல்லாம் சரியாத் தெரியுதா?''

சந்நியாசியின் கண்களில் எந்தவித பிரச்சினையும் இல்லை. அவரை விட வயதில் குறைந்தவன் நான். இருந்தாலும், என் கண்களில் சரியான பார்வை சக்தி இல்லை. இதற்கு என்ன காரணம்? குடும்ப வாழ்க்கை வாழ்வதுதான் காரணமாக இருக்குமா? அப்படியென்றால்... முன்பு கறுப்பு வண்ண போர்வையையும், கையில் ஒரு குச்சியையும், லங்கோட்டையும், சடையையும் வைத்துக்கொண்டு வாழ்ந்த வாழ்க்கையை உதறி எறிந்துவிட்டு, எந்தவித இலட்சியமும் இல்லாமல், கண்பார்வைக் குறைவுடன், வழுக்கைத் தலையுடன் வாழும் இப்போதைய வாழ்க்கை... ம்... என்ன செய்வது?

நான் என்றோ பார்த்த மலைகளே, பாலைவனங்களே, அடர்ந்த காடுகளே, என்னுடைய கடைசி பயணத்திற்கான நேரம் நெருங்கி விட்டது. சலாம்!

“ஒரு விஷயம் ஞாபகத்துல வருதா?'' சந்நியாசி கேட்டார்: “இந்த பூமியில வாழ்ற மனிதர்கள்ல எத்தனை பேருக்கு சொந்தமா சமையல் பண்ணத் தெரியும்?''

“எத்தனை சதவிகிதம் பேருக்கு சமைக்கத் தெரியும்ன்றது தெரியல, சுவாமிஜி. எதற்காக இதைக் கேட்டீங்க?''

“இது ஒரு சிந்திக்க வேண்டிய விஷயம். உணவுன்றது அவசியம் தேவைப்படுற ஒரு விஷயமாச்சே! அதைச் சமையல் பண்ண ஆயிரத்துல ரெண்டு பேரு தயாரா இருப்பாங்களா? எல்லாரும் ஆசைப் படுறது என்னன்னா... மத்தவங்க சமையல் செஞ்சு அவங்களுக்குப் பரிமாறணும். சமையல் பண்ற ஆளுக்கு ஏதாவது தொத்து நோய்கள் இருக்குமா, சுத்தமும் சுகாதாரமுமா அவங்க இருக்காங்களா... இதுபத்தியெல்லாம் அவங்க கவலைப்படுறதே இல்ல. இதுபோலத்தான் எல்லா விஷயங்கள்லயும். சிந்தனை, மதம், அரசியல்... எல்லா விஷயங்களையும்- மத்தவங்க சொல்றதை அப்படியே கேட்டுக்குவாங்க. அவுங்களுக்குன்னு சொந்தக் கருத்து எதுவும் இருக்காது!''

“எல்லாரும் சொந்தமா சமையல் பண்ணி சாப்பிடுறதுக்கும், வாழ்க்கையில இருக்குற பல விஷயங்களைப் பத்தி சிந்திச்சிப் பார்த்து ஒரு தீர்மானத்திற்கு வர்றதுக்கும் நேரம் இருக்குதா, சுவாமிஜி?''

“எல்லாரும் கூட்டம் கூட்டமா எங்கோ போறாங்க! மரணம் அவங்களுக்கு சமீபத்துலயே நின்னுக்கிட்டு இருக்கு!''

உண்மைதான். மரணம் நமக்குப் பக்கத்திலேயே நின்று கொண்டிருக்கிறது.

சிறிது நேரம் கழித்து சந்நியாசி சொன்னார்:

“நான் சொன்னது நம்மோட விஷயத்தைத்தான். மருத்துவ விஞ்ஞானம் நாளுக்கு நாள் ரொம்பவும் முன்னேறிக்கிட்டு இருக்கு. இனி வரப்போற ஐநூறு வருடங்கள்ல என்னவெல்லாம் மாற்றங்கள் வரப்போகுது தெரியுமா? ஒரு ஆள் ஐநூறோ அறுநூறோ வருடங்கள் கூட உயிரோட இருக்குற மாதிரி சூழ்நிலை வந்தாலும் ஆச்சரியப் படுறதுக்கில்ல...''

பிறக்க இருக்கிற ஆயிரமாயிரம் வருடங்களே, சலாம்!

சந்நியாசி, நீலகண்டனைப் பிடித்து மடியில் வைத்து, அதை செல்லமாகத் தடவிக் கொடுத்தார்.

சௌபாக்யவதிகள் மூவரும், சந்நியாசி உணவைச் சாப்பிட்டு முடித்து அடக்க ஒடுக்கமாக நடந்து போனார்கள்.

கடைசி முறையாகச் சொல்லிவிட்டு போகத்தான் வருவதாகக் கூறிய சந்நியாசி இடத்தை விட்டு நீங்கினார். மந்திரப் பூனையைப் பொறுத்தவரை சொல்கிற மாதிரி ஒன்றும் விசேஷங்கள் இல்லை. அதன் உணவு, உறக்கம் எல்லாமே என்கூடவேதான். கொடுமை என்றுகூடக் கூறலாம். சௌபாக்யவதிகள் நீலகண்டன்மீது அத்தரில் முக்கி எடுத்த பரிவான பார்வை எதையும் செலுத்தவில்லை என்பது மட்டும் உண்மை.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel