Lekha Books

A+ A A-

மந்திரப் பூனை - Page 34

mandhira-poonai

ஜூபிட்டரும், ராயும்... அந்த தெய்வங்களின் இடத்தை புதிய தெய்வங்கள் பிடித்துக் கொண்டன. புதிய மதங்கள் வந்து சேர்ந்தன. புத்தகத்தில் சில பெரிய மரங்களின் புகைப்படங்களும் இருந்தன. ஆகாயத்தையே தொடக்கூடிய அளவிற்கு உயரமானதாகவும், பெரிதாகவும் அவை இருந்தன. அந்த ஆள் சொன்னார்:

“அந்த மரங்களுக்கு வயசு என்ன தெரியுமா? ஆயிரத்து நானூறோ மூவாயிரத்து நூறோ வருடங்களுக்குமேலே இருக்கும்னு கணக்குப் போட்டிருக்காங்க!''

அவர் சொன்னதைக் கேட்டு நான் ஆச்சரியப்படாமல் எப்படி இருக்க முடியும்? மரத்தைப் பற்றிய சிந்தனையில் இருந்தபோது, கொஞ்சமும் எதிர்பாராமல் அவர் மந்திரப் பூனையைப் பற்றி கேட்டார். கைஸுக்குட்டி என்ற நீலகண்டனைப் பற்றி சிறிதுநேரம் பேசிய நான் சொன்னேன்:

“பெண்கள்னு சொல்லப்படுற சௌபாக்யவதிகள் செய்த ஒரு தவறாமல் உண்டானதுதான் இந்த மந்திரப்பூனை. இவங்கதான் எதையுமே சீக்கிரம் நம்பிடுவாங்களே! எது இருந்தாலும் அதை உடனடியா நம்பி, சொர்க்கத்திற்குப் போறதுக்குக் காத்திருக்கிற தங்கக் குடங்களாச்சே இந்தப் பெண்மணிகளான சௌபாக்யவதிகள்! மாயா மோகினிகள்! அவங்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்!''

“கடவுள்...?''

“ஆமா...''

“கடவுள்ன்ற ஒண்ணு உலகத்துல இருக்குதா என்ன? கடவுள் இல்லைன்னு சொல்றதுதானே முற்போக்கான கண்ணோட்டம்! எத்தனையோ லட்சம் வருடங்களுக்கு முன்னால வாழ்ந்த காட்டுவாழ் மக்களோட கற்பனையில பிறந்ததுதானே கடவுள்ன்ற விஷயம்?''

“கடவுள்ன்றது அழகான, வலிமையான ஒரு உருவகம். கற்பனைன்னு கூட எடுத்துக்கலாம். கடவுள்ன்றது பெரிய ஒரு சக்தி... அதுதான் உலகத்தோட ஆரம்பம்... காலாகாலத்திற்கும் வெவ்வேறு வடிவங்கள்ல கடவுள்ன்ற இந்தக் கற்பிதம் மனித சமுதாயத்தோட நரம்புலயும் இரத்தத்திலயும் கலந்திருக்கும்ன்றது மட்டும் உண்மை. ஆரம்ப காலத்துல இருந்து கடவுளைப் பத்திய நினைப்பு மனிதர்கள்கிட்ட தொடர்ந்து இருந்துக்கிட்டுதான் இருக்கு. லட்சக்கணக்கான வருடங்களுக்கு முன்னாடியே கடவுள்ன்ற ஒண்ணு இல்லைன்னு மனிதர்கள் சொல்லத்தான் செஞ்சிருக்காங்க. அப்பவும் கடவுள் இருக்குறார்னு சொல்லவும் ஆளுங்க இருந்திருக்காங்க. இப்பவும் கடவுள் இல்லைன்னு சிலரும், அவர் இருக்குறார்னு சிலரும் சொல்லிக் கிட்டுத்தான் இருக்குறாங்க. இதுல முற்போக்கு, வளர்ச்சின்னு எதைச் சொல்லமுடியும்? எதிர்காலத்துல - ஐயாயிரம் வருடங்களுக்கு அப்புறம் இருக்கப்போற மனிதர்கள் நம்மளைப் பத்தியும் காட்டு மனிதர்கள்னு தான் சொல்லுவாங்க. என்ன சொல்றீங்க?''

“கடவுளை நாம நம்ப வேண்டிய அவசியம்?''

“அவசியம்...? எனக்கு நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியல. நம்பிக்கை நமக்கு வரலைன்னா அதுல என்ன தப்பு இருக்கு? சூரியன் மறையிறதும், அது உதயமாகுறதும் உலகத்துல நடந்துக்கிட்டுத்தான் இருக்கும். பெய்ய வேண்டிய காலத்துல மழை பெய்யும். செடிகள் முளைக்கும். பூக்கள் மலரும். அதுக்கு அழகு இருக்கும். மணம் இருக்கும். பிறகு... பிரபஞ்சங்களான பிரபஞ்சங்களுக்கெல்லாம் ஒரு படைப்பாளி இல்லைன்னு சொல்றதுக்கு கொஞ்சம் தைரியம் வேணும்... எனக்கு அந்த தைரியம் இல்ல. தைரியசாலிகள் கடவுள்ன்ற ஒருத்தர் இல்லைன்னு சொல்லத்தான் செய்றாங்க. நான் தைரியசாலி இல்லை. நான் ஒரு சாதாரண கோழை மனிதன். கடவுள்ன்ற சக்தியை முழுமையா நம்புற மனிதன் நான்!''

“கடவுள் எதுக்காக இந்த உலகத்துல அமைதியும், சமாதானமும் நிலவும்படி செய்யல?''

“மனிதர்களான நாமதான் அமைதியாகவும், சமாதானத்துடனும் இருக்கனும்னு கடவுள் கட்டளை இட்டிருக்காரு. ஆனா, இங்கு நடக்குறதென்ன? ஒவ்வொரு நிமிடமும் எத்தனையோ மக்கள் மரணத்தைத் தழுவிக்கிட்டு இருக்காங்க! ஒரு மனிதன் இன்னொரு மனிதனைச் சாப்பிட்டு வாழுறான். எல்லாம் நிறைஞ்ச ஒரு அழகான காட்சி பங்களாதான் இந்த பூமி!''

“காட்சி பங்களா! யார் அதைப் பார்ப்பது?''

“நாமளும் மத்த மனிதர்களும்தான். மனிதர்களைவிட சுத்தமும், சுகாதாரமும், அறிவும், பலமும், அழகும் கொண்ட பிறவிகள் இந்த உலகத்துல இருக்கலாம். ராத்திரி நேரங்கள்ல நாம வானத்தைப் பார்க்குறப்போ, லட்சக்கணக்கான நட்சத்திரங்களை நம்மோட கண்கள் பார்க்குதுல்ல...! எண்ண முடியாத சூரிய சந்திரர்கள்! கிரகங்கள்! அங்கே நம்மைவிட உயர்ந்த பிறவிகள் இருக்கலாம்னு சொல்றாங்க. அவங்க நம்மை வந்து பார்க்க மாட்டாங்கன்னு யாருக்குத் தெரியும்?''

அடுத்த சில நிமிடங்கள் நாங்கள் எதுவுமே பேசாமல் மவுனமாக அமர்ந்திருந்தோம். அவர் புறப்படுவதற்கு முன்பு, மந்திரப் பூனையைப் பற்றிச் சொல்லிவிட்டு நான் சொன்னேன்:

“உங்க வீட்டுக்கு மந்திரப்பூனை வந்தா, அதுக்குச் சாப்பிட ஏதாவது கொடுங்க. பாசத்தோட நீங்க கைஸுக்குட்டின்னோ நீலகண்டான்னோ கூப்பிட்டா, "ம்யாவோ ம்யாவோ'ன்னு அடுத்த நிமிடம் அது சத்தம் கொடுக்கும்.''

“சரி... நான் பாக்குறேன்'' என்று சொல்லியவாறு அந்த ஆள் கிளம்பினார். இனி கனவுகள்தாம். இப்போது இரவு கிட்டத்தட்ட ஒரு மணி இருக்கும். நானும், மரணமும் ஒரு தமாஷான கதையைப் படித்துக்கொண்டு கிடக்கிறோம். மரணம் எனக்கு மிகவும் நெருக்கமாக நின்றுகொண்டிருப்பதை என்னால் உணர முடிகிறது. மின்விசிறி மெதுவாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது. படிக்கப் பயன்படுத்தும் விளக்கால் யாருக்கும் எந்தவித தொந்தரவும் இல்லை. மகளும், மகளின் தாயும் கொசு வலை வழியாகத் தெரிகிறார்கள். இரண்டு பேரும் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். வெளியே இருட்டில் கலந்திருக்கும் உலகம் படு நிசப்தமாக இருக்கிறது. ஆனால், கடல் மட்டும் பயங்கரமான சத்தத்துடன் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு மட்டும் உறக்கம் என்பதே இல்லை. நான் படித்துக்கொண்டு படுத்திருக்கிறேன். தூரத்தில் ஒரு இரைச்சல் ஒலி... புகைவண்டி வந்து கொண்டிருக்கிறது... அது பாலத்தின்மேல் ஓசை எழுப்பிக்கொண்டு போவதை இங்கிருந்தே என்னால் உணர முடிகிறது. சந்நியாசி அனேக மாக இப்போது உறங்கிக் கொண்டிருப்பாரா? நான் வெறுமனே கடிகாரத்தை எடுத்துப் பார்த்தேன். அற்புதமான ஒரு கண்டுபிடிப்பு! கருஞ்சிவப்பு நிறத்தில் செகண்ட் முள் வேகமாக வெள்ளை டயலில் சுற்றிக்கொண்டிருந்தது. இவன் எவ்வளவு முக்கியமானவன்! செகண்ட் முள்ளோடு சேர்ந்து என்னுடைய இதயமும் மரணத்தை நோக்கி வேகவேகமாகப் பாய்ந்து கொண்டிருந்தது. மரணம் எப்போது வரும்?

திடீரென்று மின்னுகிற அரிவாளுடன், புரண்டு எழுந்து நின்றாள் மகளின் தாய். அவளின் கண்கள் தீப் பந்தங்கள்போல் இருந்தன.

“என்னை ஒரு வழி பண்ணணும்னு நினைச்சா, பண்ணிக்கோ. நான் தயாரா இருக்கேன். பிரபஞ்சமே சலாம்!''

அரிவாள் படுக்கையில் விழுந்தது!

நடந்தது இதுதான்: இருண்டுபோன கடல். அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றன. நல்ல வெளிச்சம். ஒவ்வொரு அலையிலும் ஒவ்வொரு மந்திரப்பூனை. இப்படி ஆயிரக்கணக்கில் மந்திரப் பூனைகள். ஒவ்வொரு மந்திரப்பூனையாக அலையைவிட்டு, வீட்டுமேல் தாவுகின்றன. தாவிக்கொண்டே இருக்கின்றன.

இதுதான் மகளின் தாய் கண்ட கனவு!

“மனைவிமார்கள் கனவு காண வேண்டியது கணவர்களை. கண்ட பூனைகளையும் கனவு கண்டா எப்படி?''

அரிவாளை எடுத்து நான் தலைப்பக்கத்தில் வைத்தேன்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel