Lekha Books

A+ A A-

மந்திரப் பூனை - Page 31

mandhira-poonai

"நீலகண்டனைக் கரை கடத்தணும்' என்றொரு கருத்து சௌபாக்யவதிகள் மத்தியில் நிலவிக்கொண்டிருப்பதை நான் அறிந்தேன். கரை கடத்துவதா? இரண்டு வாழை மட்டைகளை ஒன்று சேர்த்து மிதவைபோல ஆக்கி, அதில் நீலகண்டனைக் கட்டி, ஆற்று நீரின் போக்கில் போகவிடுவது! பக்கத்திலேயே ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் கடல் இருக்கிறது. அங்கே நீலகண்டனைப் போட்டால், அவன் எப்படியும் இங்கே வந்துவிடுவான். இது பற்றியெல்லாம் எண்ணாமல் நான் சொன்னேன்:

“சூர்ய புத்திரன் அவனாகவே இங்கு தேடி வரல. நீங்கதான் பாசமா இவனை இங்கு கொண்டு வந்தீங்க. நெய்யும் பாலும் கொடுத்து அன்பா வளர்த்தீங்க. பிறகு என்ன நினைச்சீங்களோ, எல்லாரும் சேர்ந்து இவனை வெளியே துரத்திட்டீங்க. நீலகண்டனைப் பொறுத்தவரை, இவன் யாருக்கும் கெடுதல் செய்யல... இவனைக் கரை கடத்தணும்னு சொல்றது நீதிக்கும் தர்மத்துக்கும் அடங்கிய ஒரு செயல்தானா? சிந்திச்சுப் பாருங்க...''

“ராஜலாவுக்கு ரெண்டு மாசம் கர்ப்பம்னு நான் சொன்னேன்ல? அவ நீலகண்டனைப் பார்த்து பயப்படுறா!''

ராஜலா கர்ப்பமாக இருப்பதற்கும், நீலகண்டனைக் கரை கடத்துவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? நினைத்துப் பார்க்கும் போதே இது ஒரு வினோதமான விஷயமாகத்தான் இருக்கிறது. வேறு சிலரும்கூட இங்கு கர்ப்பமாக இருக்கிறார்கள். மூன்று மாதத்திற்கும் மேலேகூட அவர்கள் கர்ப்பம் தரித்திருக்கிறார்கள். கர்ப்ப சம்பந்தமான கணக்குகளை கணவன்மார்கள் எந்த அளவிற்கு கவனமாக மனதில் வைத்திருக்கிறார்கள்? நான் கேள்விப்பட்டவரை எந்தவொரு கணவனும் இந்த மாதிரி விஷயங்களை ஞாபகத்தில் வைத்திருப்பதே இல்லை என்பதுதான் உண்மை. "கர்ப்பமா! சரி... இனி இது உங்க பாடு” என்றுதான் பொதுவாக எல்லா கணவன்மார்களுமே சொல்வார்கள். அவர்கள் எப்போதுமே கூறும் டயலாக் இதுவாகத்தான் இருக்கும். ஆனால், நான் அப்படிச் சொல்ல முடியுமா? இருபத்து நான்கு மணி நேரமும் ஒரு கணவனாக- இதே இடத்தில் நான் இருக்கிறேன். அதனால் "மகத்தான கர்ப்பம் 150- ஆம் நாள்' என்று எழுதி வைக்க வேண்டி இருக்கிறது. இருந்தாலும், பார்வைக் குறைவு ஒரு பக்கம் இருக்க, ஞாபக சக்தியும் மிகவும் குறைவாகவே இருக்கிறது என்ற உண்மையையும் கொண்டு நான் என் வாழ்க்கையின் நாட்களைத் தள்ளிக் கொண்டிருக்கிறேன். நான் சொல்வது பெண் காதில் ஏறுமா என்ன? இங்கு ராஜலா கர்ப்பமாக இருப்பதற்கும், நீலகண்டனுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

“எனக்கும் பயமா இருக்கு.'' அசரீரி மாதிரி உள்ளே இருந்து மகளின் தாயின் குரல்: “நான் தலைக்குப் பக்கத்துல கத்தியை வச்சுக்கிட்டுத்தான் தினமும் உறங்குறேன்!''

இந்த விஷயம் எனக்கு இதுவரை தெரியாமலே இருந்தது. பிறகென்ன? வரவேற்பறை, நீலகண்டனின் படுக்கும் இடமாக ஆனது.

நாட்கள் இப்படிப் போய்க்கொண்டிருந்தபோது மூன்று சிங்கங்கள் எதிரில் வந்து நிற்கின்றன. சௌபாக்யவதிகள் மூன்று பேரின் மரியாதைக்குப் பாத்திரமான அவர்களின் கணவன்மார்கள். முன்னால் வாசுதேவன், நடுவில் அஸன்குஞ்ஞு (அஸன்குஞ்ஞி என்றுதான் பொதுவாக எல்லாரும் அழைப்பது), கடைசியில் ராமகிருஷ்ணன். ஞாயிற்றுக்கிழமை என்பதால் மூன்று பேருமே படு உற்சாகமாக இருந்தார்கள். மூன்று பேருமே சிவப்புக் கோடுகள் போட்ட அரைக்கை சட்டை அணிந்திருந்தார்கள். காலருக்கு அடியில் ஒரே மாதிரியான கைக்குட்டை. மூன்று பேருமே சிவப்புக் கரை போட்ட இரட்டை வேஷ்டி கட்டியிருந்தார்கள். ராமகிருஷ்ணன் மட்டுமே செருப்பு அணிந்திருந்தான். (காலை பத்துமணிக்கு கோவணம் கட்டிக் கொண்டு மூவரும் கிணற்றுக்குப் பக்கத்தில் நின்று குளித்துக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன். சோப், நனைந்த துண்டுகள் அருகில் கல் திண்டில் வைக்கப்பட்டிருந்தன. அவர்கள் குளித்துக் கொண்டிருக்கும்போது சௌபாக்யவதி ராஜலா தண்ணீர் எடுத்துக்கொண்டு போனாள். குளிக்கும்போதே அவர்கள் மத்தியில் வாக்குவாதங்கள், சிரிப்பு எல்லாமே இருந்தன.) குளித்து முடித்து, ஆடைகள் அணிந்து, காப்பி குடித்து முடித்து இங்கு வந்து நின்றிருக்கிறார்கள். என்னுடன் ஏதோ பேசுவதற்கு வந்திருக்கிறார்கள் என்பதை மட்டும் புரிந்து கொண்டேன். வேறு எதைப் பற்றி இருக்கும்? மந்திரப்பூனையைப் பற்றித்தான். இவர்கள் மூவருமே நிறைய படிப்பவர்கள், நிறையத் திரைப்படங்கள் பார்ப்பவர்கள். அடி, இடி, இரட்டை வேடங்கள் கொண்ட படங்களை இவர்கள் விரும்பிப் பார்ப்பார்கள். புத்தகங்களில் விக்கிரமாதித்தன் கதை, அரபிக் கதை ஆகியவற்றை ஆர்வத்துடன் படிப்பார்கள். நாரதர், உமரய்யா, விக்கிரமாதித்தன், பட்டி, வேதாளம் ஆகியோர் இந்த மூன்று பேருக்கும் பக்கத்து வீட்டுக்காரர்கள் மாதிரி. விக்கிரமாதித்தன் கதையைத் தொண்ணூற்று இரண்டாம் முறை படித்து முடித்திருக்கிறார்கள். ஒரு ஆள் கதையைப் படிப்பான். மற்ற இருவரும் கதையைக் கேட்டு, தங்களின் கருத்தைக் கூறுவார்கள். மந்திரப் பூனையும் நானும் ஒரே ஆள்- இங்கு நான் இரட்டை வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்ற எண்ணம் இவர்களுக்கு. சிங்கங்களுக்கு தலா ஒரு அவுன்ஸ் தேநீர் கொடுத்தேன். பிறகு, அவர்களை வரவேற்பு அறைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு வந்ததும் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி! அவர்கள் நினைத்தது மாதிரி டபுள் ரோல் எதுவும் கிடையாது. நாற்காலியில் நீலகண்டன் படுத்திருக்கிறான்!

நான் நீலகண்டனின் இடது பக்கத்தில் போய் உட்கார்ந்தேன். அவர்கள் மூன்று பேரும் சில கேள்விகளை, தாளில் எழுதி வைத்திருந்தார்கள். இடையில் தங்களுக்குள் மெதுவான குரலில் அவர்கள் ஏதோ பேசிக்கொண்டார்கள். ஒரு ஆள் மட்டும் கேள்வியைக் கேட்டான்:

“கைஸுக்குட்டின்ற முஸ்லிம் பெண் பூனை எப்படி நீலகண்டன்ற இந்து ஆண் பூனையா மாறுச்சு?''

அதற்கு நான் சொன்னேன்: “அது ஏற்கெனவே ஆண் பூனைதான். பெண் பூனை இல்ல...''

தொடர்ந்து பல கேள்விகள். பாம்பு விஷயம், இளவங்காய் சமாச்சாரம், பலாப்பழ வினோதம், பஸ் நிகழ்ச்சி எல்லாவற்றையும் விவரமாகக் கேட்டார்கள்.

“எல்லாமே எதேச்சையா நடந்தது'' என்று நான் சொன்னதை அவர்கள் ஏற்றுக் கொள்வதாக இல்லை. அப்போது அவர்கள் பக்கத்தில் இருந்து ஒரு கேள்வி:

“சாதாரணமா பெண் ஆணாக மாறுவதையும், ஆண் பெண்ணாக மாறுவதையும் பத்திரிகைகள்ல நாம படிக்கிறோமே?''

நான் சொன்னேன்: “நானும் படிச்சிருக்கேன். ஆனா, அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.''

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது நீலகண்டன் மெல்ல எழுந்து, உடலை நிமிர்த்தினான். உட்கார்ந்திருந்த மூன்று பேரையும் உற்றுப் பார்த்தான். பிறகு என்ன நினைத்தானோ, கீழே ஓடிச்சென்று அவர்களின் கால்களில் உரசிவிட்டு, சற்று தள்ளிப்போய் நின்றான். யாரும் அவனைக் கையில் எடுக்கவில்லை. ஏன்... தொட்டுப் பார்க்கக்கூட இல்லை. சில ஆண்கள் மனதிலும் அன்பு, பாசம் எல்லாமே காலப்போக்கில் மறைந்து வருகின்றதோ? அவர்கள் ஏன் கருங்கல் சிலைகளைப்போல உட்கார்ந்திருக்கிறார்கள்?

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

கிளி

கிளி

July 25, 2012

மாது

May 16, 2018

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel