Lekha Books

A+ A A-

மந்திரப் பூனை - Page 26

mandhira-poonai

“அஜ்மீர் ஷரீஃபைத் தாண்டி, பாலைவனத்தின் வழியே பயணம் செஞ்சு போனால், புஷ்கர் சாகர்ன்ற குளம் வரும். அந்தப் பெரிய குளத்துல நிறைய மீன்கள் இருக்கும். ஆண்களும் பெண்களும் நேர்த்திக்கடனா அங்குள்ள மீன்களுக்கு உணவு தருவாங்க!''

“உலகத்தில் புனிதமான விஷயங்கள்தாம் எவ்வளவு இருக்கின்றன! புனிதச் செய்திகள்... புனித மீன்கள்... புனித பாம்புகள்... புனித நகரங்கள்... புனித நதிகள்... புனித மரங்கள்... புனித பசுக்கள்... புனித காளைகள்... புனித மலைகள்... புனித குகைகள்.. புனித நிறங்கள்...''

“புனித திமிங்கிலங்கள்...''

“சுவாமிஜி, நீங்க அதை எங்கே பார்த்தீங்க?''

“கராச்சியில ஒரு தேவாலயத்துக்குப் பக்கத்துல ஒரு பெரிய கிணறு இருக்கு. அதுல இருந்த ஒரு திமிங்கிலத்திற்குப் பக்த ஜனங்கள் நேர்த்திக்கடனா மாமிசத் துண்டுகளைத் தர்றதை நான் பார்த்திருக்கேன்!''

“அவங்க மனசுல நினைக்கிற காரியங்கள் நடக்கும்ன்ற நம்பிக்கை காரணமா இருக்கலாம். அந்தப் புண்ணிய திமிங்கிலங்கள் ஏதாவது அற்புதக் காரியங்கள் காட்டியிருக்கலாம். அற்புதங்கள் எதுவுமே இல்லாம இந்த உரோம மதங்கள்...''

“உரோமம் இல்லாத மதங்கள் இந்த உலகத்துல இருக்குதா சுவாமிஜி?''

“இதுவரை இல்லைன்னுதான் சொல்லணும்!''

“உரோமம் ஒரு அடையாளம்- அவ்வளவுதான். நண்பர்களையும், விரோதிகளையும் வித்தியாசம் கண்டுபிடிக்கிறதுக்கு.''

“இந்த ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் கடவுள் பேர்லதான் நடக்குது. அவங்களோட லட்சியம் மோட்சத்துக்குப் போகணும்ன்றது. இப்போ பகைன்றது எதுக்கு? எல்லாருமே நண்பர்கள்தான். உலகத்துல இருக்குற எல்லாருமே சகோதரர்கள்தான்- சகோதரிகள்தான். கடவுளை எந்தப்பேர்ல அழைச்சாலும், அது கடவுள்தான். கடவுள்ன்றது எல்லா உலகங்களுக்கும், உலகத்துல நடக்குற எல்லாச் செயல்களுக்கும் ஆதாரமா இருக்குற மிகப்பெரிய சக்தி... ஆரம்பமும் முடிவுமா இருக்குற அந்தக் கடவுள் எந்த ஒரு தனிப்பட்ட மதத்துக்கும் சொந்தம் கிடையாது!''

“உண்மை தெய்வம்! உண்மை மதம்!''

“சுவாமிஜி, பிரச்சினை பெரிசா போயிடுச்சு. இதோட நிறுத்திக்கு வோம். உலகத்துல உள்ள எல்லாரையும் கடவுள் காப்பாத்தட்டும்...''

சந்நியாசி நீலகண்டனை மடியில் வைத்துக்கொண்டு என்னவோ சிந்தித்துக் கொண்டிருந்தார். அவரின் கைகள் பூனைக்குட்டியைத் தடவிக்கொண்டிருந்தன.

கடல் பயங்கரமாக ஓசை எழுப்பி ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது. இரவில் நடுக்கடலில் மீன் பிடிக்கப் போனவர்கள் மறுநாள் மதியத்திற்கு முன்பு படகு நிறைய மீன்களுடன் திரும்பி கரைக்கு வந்தபோது, அவர்களின் வீடுகளை கடல் கொண்டு போயிருந்தது. நான் ஃப்ளாஸ்க்கில் இருந்து இரண்டு டம்ளர்களில் பால் கலக்காத தேநீரை ஊற்றி னேன். சந்நியாசியிடம் ஒரு டம்ளரை நீட்டினேன். இன்னொரு டம்ளரை நான் என் கையில் எடுத்தேன். ஒயிட் லெகான் சேவல் நாங்கள் பேசிக் கொண்டிருந்ததை மிகவும் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தது. தேநீர் குடித்து முடிந்ததும், நாங்கள் ஆளுக்கு ஒரு பீடியைப் பிடிக்கத் தொடங்கினோம்.

நான் கேட்டேன்.

“சுவாமிஜி, பிரச்சினை பெரிதானது எப்படி? எல்லாத்துக்கும் அறிவுதான் காரணமா?''

நான் சொன்னதைக் கேட்காத மாதிரி, சந்நியாசி சொன்னார்:

“மகாவிஷ்ணு மீனாக அவதரிச்சார். ஆமையாகவும், பன்றியாகவும், நரசிம்மமாகவும்கூட அவதரிச்சார். வாமனன், பரசுராமன், ஸ்ரீராமன், பலராமன், ஸ்ரீகிருஷ்ணன், கல்கி- இப்படிப் பல அவதாரங்கள். இதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?''

“இதைப் பத்தி நான் என்ன சொல்றது?''

அவர் தொடர்ந்தார்: “புத்தபகவானைப் பத்தி என்ன சொல்றீங்க? நான் சொல்றேன். அவர் ஒரு மாமனிதர். இந்தியா, சீனா, ஜப்பான், திபெத்- இந்த நாடுகள்ல அவருக்கு எத்தனையோ கோடி சீடர்கள் உருவானாங்க. புத்த மதம் உண்டாச்சு. உன்னதமான, உயர்ந்த உபதேசங் கள். சாகும் வரை புத்தர் எந்த ஒரு அற்புதக் காரியங்களையும் செஞ்சு காட்டல. எண்பதாவது வயசு நடக்குற சமயத்துல அவர் இந்த உலகத்தை விட்டுப் போயிட்டாரு. புத்தரோட பேர்ல அவரோட சீடர்கள்தான் அற்புத காரியங்கள் பலவற்றையும் செஞ்சு காண்பிச்சுக்கிட்டு இருக்காங்க. அவங்க புத்தரை தெய்வமா ஆக்கிட்டாங்க. புத்தர் இறந்து போய் ரெண்டாயிரம் வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு. இப்பவும் புத்த மதத்தைச் சேர்ந்தவங்களுக்கு புத்தர் தெய்வம்தான். அவருக்குப் பல அவதாரங்களும் இப்போ இருக்காங்க. தலாய்லாமா இப்போ இருக்குற புத்தர். அதாவது- ரெண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னாடி மறைஞ்சு போன புத்தரோட அவதாரமாம் இவர்! இப்படியொரு நம்பிக்கை இருக்குறதைப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?''

“நீங்க சொன்னதை நானும் சிந்திச்சுப் பாக்குறேன், சுவாமிஜி...''

“ஏதாவது சொல்லணும்னு ஒண்ணும் அவசியம் இல்ல.'' அவர் சொன்னார்.

“சிந்திச்சா போதும். ஆதாம் முதல் மோசஸ், டேவிட், இயேசு கிறிஸ்து, முஹம்மது நபி... இவங்களைப் பத்தி நீங்க என்ன சொல்றீங்க? இவங்கள்ல யாரை மனித சமுதாயம் பின்பற்றிப் போகணும்? இவங்கள்ல உண்மையான மதபோதகர் யார்?''

“யார்னு மனசுக்குள்ள நினைச்சா போதும்.'' அவர் தொடர்ந்தார்: “இப்ப நாம சில மகத்தான நூல்களை எடுத்துக்குவோம். இறந்துபோன ஆத்மாக்களைப் பற்றிய நூல்கள். செயின்ட் அவேஸ்தா... வேதங்கள், உபநிஷத்துகள், நினைவுச் சின்னங்கள், தர்ம சாஸ்திரங்கள், இதிகாசங்கள், புராணங்கள், தோரா, மும்மூர்த்திகள், பைபிள், புதிய ஏற்பாடு, குர்-ஆன், மார்மன் நூல், கேப்பிட்டல், உண்மை விளக்க நூல், ஆதிநூல்- இவற்றில் மனித சமுதாயம் எந்த நூலைப் பின்பற்றி நடக்க வேண்டும்? இவற்றில் உயர்ந்த நூல் எது?''

எந்த நூல் உயர்ந்தது என்று சொல்வதற்காக நான் வாயைத் திறந்தேன். அதற்குள் "ஒண்ணுமே சொல்ல வேண்டாம்' என்று கையால் சைகை காட்டித் தடுத்தார். தொடர்ந்து அவர் சொன்னார்:

“மனித சமுதாயத்தோட உணவு விஷயத்தைப் பத்திப் பார்ப்போம். என்னைப் பொறுத்தவரை உணவுப் பிரச்சினையை நான் எப்பவுமே பெரிசா எடுத்துக்குறது இல்ல...''

“சுவாமிஜி, நீங்க அப்படிச் சொல்றீங்க. ஆனா, உலகத்துலயே இன்னைக்கு பெரிய பிரச்சினையா இருக்குறது இதுதானே? உலக ஜனத்தொகை கடல் மாதிரி நாளுக்கு நாள் பெருகிக்கிட்டே இருக்கு. மக்களுக்கு உணவு கிடைப்பதே பெரிய விஷயமா இருக்கு. இதை எப்படி முக்கியமான ஒண்ணா எடுக்காம இருக்க முடியும்?''

“மக்களுக்கு வாயைப் படைச்ச கடவுள், அதற்கு என்ன தேவையோ அதைத் தராமலா இருப்பான்?''

“மக்கள் முறையிடுவது கடவுள்கிட்டயா என்ன?''

“பிரச்சினை உண்மையிலேயே பெரியதுதான். நீர்வாழ் பிராணிகள், பறவைகள், ஊர்ந்து திரியும் பிராணிகள், மிருகங்கள், பட்டாம்பூச்சி கள், புழுக்கள், கண்ணுக்குத் தெரியாத சிறு அணுக்கள்- சுவாமி, நீங்க எப்பவும் சொல்றது மாதிரி இந்த உயிரினங்கள் எல்லாம் இந்த பூமிக்கு சொந்தமானவைதாமே. இவை எல்லாமே கடவுளோட படைப்புகள் தாம். நியாயமாகப் பார்க்கப்போனா, இந்த உயிரினங்கள் எல்லாத்துக் கும் உணவுன்றது முக்கியமான ஒரு பிரச்சினையே.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

பர்ர்ர்!!!

பர்ர்ர்!!!

February 15, 2012

புன்னகை

புன்னகை

November 14, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel