Lekha Books

A+ A A-

மந்திரப் பூனை - Page 25

mandhira-poonai

நல்ல வேளை... இந்த நேரத்தில் என் குடை வந்த சேர்ந்தது. ஒரு ஆள் அதைக் கொண்டு வந்தார். “இங்கே இதைத் தரச் சொன்னாங்க'' என்றார் வந்த ஆள். குடையை நான் கையில் வாங்கினேன்.

“ரொம்ப சந்தோஷம்.''

இரவில் நீலகண்டனை மகளும் மகளின் தாயும் கொசு வலைக்குள் படுக்க வைக்கவில்லை. அதை வெளியே விட்டு, எல்லாக் கதவுகளையும் அடைத்துவிட்டார்கள். ஆதரவு இல்லாத அனாதையைப்போல் நீலகண்டன், உலகமே கேட்கிற மாதிரி "ம்யாவோ ம்யாவோ” என்று கத்தியவாறு வீட்டையே சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருந்தது.

"இவ்வளவு கடினமானதா பெண்ணோட இதயம்!”

மின் விசிறியின் சத்தத்தில் நான் சொன்னது சரியாகக் கேட்காமல் போயிருக்கலாம். இந்த நேரத்தில் ஒரு ஆணின் கடமை என்னவாக இருக்கும்? சிந்தித்துப் பார்த்தேன். இரண்டு பீடிகளை எடுத்துப் புகைத்தேன். நீளமான ஒரு அரிவாளைக் கையில் எடுத்தேன். இரவு நேரத்தில் வெளியே வந்தால் கையில் ஒரு ஆயுதம் இருப்பது எப்போதுமே நல்லது. டார்ச் விளக்கு எங்கே என்று தேடினேன். அப்போது ஒரு சீறல், ஒரு அழுகை, ஒரு குரைக்கும் சத்தம்! உரத்த குரலில் கத்தியவாறு நீலகண்டன் ஜன்னல் பக்கத்தில் உட்கார்ந்திருந்தான். அவன் கத்துவது நியாயம்தானே! அவன் வேதனைப்படுவதில்கூட ஒரு அர்த்தம் இருக்கவே செய்தது. டார்ச் விளக்கைத் தேடி கையில் எடுத்து, கதவைத் திறந்தேன். விளக்கை அடித்துப் பார்த்தேன். அடுத்த நிமிடம் இருளில் நடந்தேன். குரைத்துக் கொண்டிருந்த நாயை "ஷட் அப்” என்று அதட்டியவாறு, நீலகண்டனைக் கையில் எடுத்தவாறு நடந்தேன். இருட்டில் ஒரு இடத்தில் நின்றேன். வானத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன. சுற்றிலும் ஒரே இருட்டு. வெட்டுக்கிளிகள் கத்துவது எங்கும் கேட்டுக்கொண்டிருந்தது. நீலகண்டனைக் கையில் பிடித்தவாறு கோடிக்கணக்கான நட்சத்திரங் களையும் தாண்டி பார்வையைப் பதித்தவாறு அந்த இருட்டில் நீண்ட நேரம் நான் நின்றிருந்தேன். ஆஹா... என்ன அழகான உலகம்! சில நிமிடங்களில் நீலகண்டனுடன் வீட்டுக்குள் நுழைந்த நான் கதவைத் தாழ்ப்பாள் போட்டு மூடினேன். கால்களை மீண்டும் கழுவி, படுக்கையில் போய் படுத்தேன். நீலகண்டன் மெதுவாக ஊர்ந்து போய் கொசு வலைக்குள் நுழைந்தது. எல்லாம் நன்றாகவே நடந்தது. ஆனால் அவனால் முழுமையாகக் கொசு வலைக்குள் போக முடியவில்லை. அவன் உடம்பில் ஒரு பகுதி கொசு வலைக்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. நீலகண்டன் என்ற இந்துப் பூனை கொஞ்சம் கொஞ்சமாகக் கொசு வலைக்குள் நுழைந்தது. அடுத்த நிமிடம் உள்ளே படுத்திருந்தவர்கள் கால்களால் தள்ளிவிட, மீண்டும் நீலகண்டன் கொசு வலைக்கு வெளியே வந்தான். இப்படியே கொசு வலைக்குள் நுழைவதும், வெளியே வருவதுமாக சுமார் நூற்றியொரு முறை... அல்லல்பட்டுக் கொண்டிருந்தான் நீலகண்டன். இந்தப் போராட்டத்தில் களைத்துப்போன அந்தப் பூனைக்குட்டி கடைசியில் என் கால்களுக்கு அருகில் படுத்தவாறு கண்களைச் சிறிதுகூட இமைக்காமல் என்னையே உற்றுப் பார்த்தது. அந்தப் பார்வையில், "இப்படியெல்லாம் நடப்பதற்குக் காரணம் என்ன?' என்ற கேள்வி தொக்கி நிற்பதை என்னால் உணர முடிந்தது. நான் சொன்னேன்:

“நீ இப்போ ஒரு நல்ல மந்திரப் பூனையா ஆயிட்டே! உன்னை இப்போ யாருக்கும் வேண்டாம். பேரு- நீலகண்டன். நீ இதைப் பத்தியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாதே. உன்னை நான் பார்த்துக்குறேன். இந்துப் பூனையே, ஏன் கவலைப்படுறே? நான் உன்னைக் காப்பாத்துறேன்.''

நீலகண்டன் நான் சொன்னதில் திருப்தியடைந்த மாதிரி கண்களை மூடியது. அவனுக்குச் சரியாக உறக்கம் வரவில்லை. எனக்கும்தான்.

பொழுது புலர்ந்தது முதல் நீலகண்டன் ஒரு புதிய தோற்றம் கொண்டவனாகி விட்டான். அவன் ஒரு மந்திரப் பூனை! அவனுக்கு இப்போது பாத்திரமில்லை. உணவு இல்லை. செண்ட் மணம் கமழும் முத்தங்கள் இல்லை. அவனுக்கு எதுவுமே தராமல் பட்டினி போட்டு விட்டார்கள். இவன் வெளுத்தவனாக இருந்ததால், பார்க்க சுமாராகத் தான் இருந்தான். இவனே கறுப்பு வண்ணத்தில் இருந்திருந்தால், பார்ப்பதற்கே மிகவும் கம்பீரமாக இருந்திருப்பான்! இவனைக் கறுப்பாக்க என்ன வழி? மீசை கறுப்பாக்கப் பயன்படும் பொடியை ஒரு வாளி தண்ணீரில் கலக்கி, அதில் நீலகண்டனை முழுமையாக முக்கி எடுக்க வேண்டும் என்று நான் தீர்மானித்தேன். அப்படிச் செய்தால் நீலகண்டன் கறுப்புப் பூனையாகிவிடுவான். கடவுளே! கறுப்பனான நீலகண்டனைப் பார்த்தால், எல்லா சௌபாக்யவதிகளும் மயக்கம் போட்டு நிச்சயம் கீழே விழுந்துவிடுவார்கள். வேண்டாம்... மந்திரப் பூனை வெண்மை நிறத்திலேயே இருக்கட்டும்.

நான் சாப்பிட்டுவிட்டு, நீலகண்டனுக்குக் கொஞ்சம் சோறு போட்டேன். அப்போது என்மீது ஒரு குற்றச்சாட்டு வருகிறது- பெண்களின் கடுமையான இதயத்தைப் பறைசாற்றுவதற்காகவே இதை நான் சொல்கிறேன்.

“இது ரேஷன் காலம். அரிசி கிடைப்பதே கஷ்டமா இருக்கு. இந்தப் பூனைக்குட்டிக்கெல்லாம் எதற்கு சோறு போடணும்? கோழிகளுக்கு சோறு போட்டா அது முட்டையாவது போடும்...''

அவர்கள் சொன்னதில் ஒருவிதத்தில் நியாயம் இருக்கவே செய்கிறது. பசி அடங்க வேண்டும் என்றால் பூனைக்கு வேறு எதைத்தான் கொடுப்பது? வேண்டுமானால் அது போய் எலியைப் பிடிக்கலாம். ஆனால், நீலகண்டன் பிடிக்க முயற்சி பண்ணிக்கொண்டிருந்தது அணிலைத்தான். என்னதான் முயற்சி செய்தாலும் அவனால் ஒரு அணிலைக்கூட பிடிக்க முடியவில்லை. மரத்தின்மேல் சிறிது தூரம் ஏறி நீலகண்டன் அணிலைப் பார்ப்பான். அணில்களோ தலைகீழாகத் தொங்கிக்கொண்டு வால்களை ஆட்டியவாறு நீலகண்டன் என்ற இந்துப் பூனையை கேலியாகப் பார்த்துக்கொண்டிருக்கும். ஒரு மந்திரப் பூனையை இப்படி கிண்டலுடன் பார்க்கலாமா? எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. என்ன இருந்தாலும், எல்லாருமே பூமிக்குச் சொந்தமானவர்கள்தானே!

சந்நியாசி வந்தபோது, நான் பூனையைப் பற்றிய செய்தியைத்தான் சொன்னேன். அவர் அதை மிகவும் ரசித்துக் கேட்டார். முழுவதையும் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார்.

“நீலகண்டனைப் பார்த்துப் பெண்கள் பயப்படாமல் இருக்க மாட்டாங்க.'' சந்நியாசி சொன்னார்: “கைஸுக்குட்டின்ற பெயரைக் கேட்டப்போ, நான்கூட அது பெண் பூனைன்னுதான் நினைச்சேன். சரியா கவனிக்கல. இப்போது இவன் மந்திரப்பூனை ஆயிட்டான்ல?'' சிறிது நேர யோசனைக்குப் பிறகு, அவர் சொன்னார். “புனிதப் பூனை!'' தாடியைத் தடவியவாறு நீலகண்டனைப் பார்த்த சந்நியாசி தொடர்ந்தார்: “நீலகண்டன் ஒரு புனிதப் பூனைன்ற உண்மையை பத்து பேர் அறியட்டும். அதற்குப் பிறகு நேர்த்திக்கடன், காணிக்கைன்னு அவனைத் தேடி எல்லாரும் வர ஆரம்பிப்பாங்க. சுவாமிஜி, புனித மீன்களைப் பார்த்திருக்கீங்களா?''

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel