Lekha Books

A+ A A-

மந்திரப் பூனை - Page 29

mandhira-poonai

அவர் எப்போதும் படுக்கும் இடத்தில் நான் ஜமுக்காளத்தை விரித்து, போர்வையை மடித்து தலைப் பக்கம் வைத்துவிட்டு, இங்கு திரும்பி வந்தேன். நாற்காலியை விரித்து உட்கார்ந்தபோது. ஒரு சத்தம்! என்னவென்று பார்த்தேன். சௌபாக்யவதி ராஜலா பயந்துபோய் கத்தினாள்.

“ம்மூவே... நீலகண்டன் ஒரு வீட்ல உட்கார்ந்திருக்கான். அவனோட பார்வையைப் பார்த்தாலே பயமா இருக்கு. இங்க வந்து அவனைத் தூக்கிட்டுப் போகச் சொல்லுங்க...''

“ராஜலா ரெண்டு மாச கர்ப்பமா இருக்கா.'' மகளின் தாய் ஏதோ ரகசியம் சொல்கிற மாதிரி என்னிடம் சொன்னாள். மலையிடுக்கில் செல்கிற மாதிரி நான் நடந்து சென்றேன். சௌபாக்யவதிகள் மூன்று பேரும் ஒரு மரத்திற்குக் கீழே நின்றிருந்தார்கள். நீலகண்டன் அவர்களையே வைத்த கண் எடுக்காது பார்த்தவாறு ஒரு படியில் உட்கார்ந்திருந்தான். நான் அவனைக் கையில் எடுத்தவாறு திரும்பினேன்.

மாலை நேரத்தில் விளக்குகளைப்போட்டு, கடலின் இரைச்சலைக் கேட்டவாறு நாங்கள் வராந்தாவில் உட்கார்ந்திருந்தோம். எல்லாற்றையும் ஒரு வழி பண்ணிவிட்டு, கடல்நீர் இங்கு வந்தால்...? மகளின் தாய்க்கு ஒரு சந்தேகம்: “ராத்திரி நாம தூங்கிக்கிட்டு இருக்குறப்போ கடல்தண்ணி இங்கே வந்தா...?''

“அந்தக் கரையில எவ்வளவோ வீடுகள் இருக்கு! எவ்வளவோ மனிதர்கள்!''

நான் சொல்லிக்கொண்டிருக்கும்போது, ஒரு சங்கநாதம்! மகளின் தாய் வீட்டுக்குள் போகிறாள். அந்த இடைவேளையில் நீலகண்டன் வேகமாக வந்து என் மடியில் ஏறி உட்காருகிறான். போர்வையால் உடலை மூடிக்கொண்டு தோளில் ஜமுக்காளத்தை மடித்துப் போட்டவாறு சந்நியாசி வருகிறார்.

“உங்களோட கால் பாதம் பார்த்துதான் இங்கே வர்றேன்!''

“நட்சத்திரங்களைப் பார்த்தீங்களா?''

“வாழ்க்கையில சுமை அதிகமாயிடுச்சு!''

“சுமையை எல்லாரும் கொஞ்சம் சுமக்கத்தானே செய்யணும்!''

“வாழ்க்கை... முடியப்போற நேரம் நெருங்கிடுச்சுன்னு நினைக்கிறேன்!''

“எனக்கும்தான்!''

நட்சத்திரங்களே, சூரிய-சந்திரர்களே, அணுக்களே, மற்ற உலகங்களே, பிரபஞ்சங்களான பிரபஞ்சங்களே... சலாம்!

“சுவாமிஜி, இன்னைக்கு ராத்திரி நீங்க இங்கே தங்கலாமே!''

“முடியாத நிலை... தியானம்...!''

“சுவாமிஜி, உங்களுக்கு நாளைக்கு இங்கேதான் சாப்பாடு!''

“கடவுளோட அருளாசி இருந்தா...''

அலைகளே, கடல்களே, மலைகளே, வானமே... சலாம்!

6

டல் இரண்டு வீடுகளையும் சேர்ந்து விழுங்கியது. ஒரு பலா மரமும், சுமார் நாற்பது தென்னை மரங்களும்கூட அதற்கு பலி ஆயின. அதற்குப் பிறகும் கோபத்துடன் கர்ஜித்துக்கொண்டு படுவேகமாக தன் பலத்தை அது காட்டிக்கொண்டுதான் இருந்தது. கடல் தன் எல்லையைக் கரைப்பக்கம் மேலும் அதிகமாக்கிக் கொண்டிருந்தது.

உண்மையிலேயே மகிழ்ச்சிதான்- சந்நியாசி வந்தார். முன்பு நான் தனி பிரம்மச்சாரியாக இருந்த காலத்தில் எனக்கென்று சொந்தமாக மூன்று அலுமினியப் பாத்திரங்கள் இருந்தன. மீன்களோ மாமிசமோ படாத பாத்திரங்கள் அவை. அந்தப் பாத்திரங்களையும் ப்ரிமா ஸ்டவ்வையும் சிறிய இரும்பு உரலையும் மற்ற சில பொருட்களையும் பலா மரத்திற்குக் கீழே கொண்டு வந்து வைத்தபோது உள்ளே இருந்தது ஒரு குரல்:

“மீதி இருக்குறவங்களுக்கும் சேர்த்து சமையல் பண்றதா இருந்தா, சமையலறைக்குள்ள போக வேண்டியதே இல்ல...''

“இது சந்நியாசிகளோட சாப்பாடு!''

“டாட்டோ... எனக்கு இதுதான் வேணும்!''

“அப்படின்னா மகளோட அம்மாவுக்கும் இதுவே இருக்கட்டும்!''

“ராஜலா, கதீஜா பீபி, சௌமினிதேவி...?''

“அவுங்களையும் கூப்பிடு. நீலகண்டன், ஒயிட் லெகான் சேவல், அவனோட பதினேழு - ஸாரி - பதினாறு பொண்டாட்டிகள், குஞ்சுகள், ஒரு நாய், நாலு பசுக்கள் - எல்லாருக்கும் இன்னைக்கு அருமையான சந்நியாசி சாப்பாடு...''

புதிய வெட்டுக் கற்களும், விறகும் வந்து சேர்ந்தன. இரண்டு அடுப்புகள் சில நிமிடங்களில் தயாராயின. ஈயம் பூசிய செம்பாலான ஒரு பானை வந்தது. பிரியாணி அரிசி, உலர்ந்த திராட்சை, முந்திரிப் பருப்பு, கடலைப்பருப்பு, உருளைக்கிழங்கு, எலுமிச்சம்பழம், தக்காளிப் பழம், அவரைக்காய், பச்சை மிளகாய், வெங்காயம், மிளகுப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள் பொடி, உப்பு, இஞ்சி, கருவேப்பிலை, பச்சை கொத்தமல்லி, புதினா, காய்ந்த மிளகாய், தேங்காய் எண்ணெய் (சந்நியாசிக்கு நெய் பிடிக்காது) எல்லாமே அங்கு இருந்தன. சந்நியாசி அரிசியைக் கழுவி சுத்தம் செய்து, அடுப்பில் இருந்த பானையில் நீரை ஊற்றி சுட வைத்தார். இன்னொரு அடுப்பில் பச்சை மிளகாய் நறுக்கிப் போடப்பட்ட கடலைப் பருப்பு வெந்து கொண்டிருந்தது. இரண்டு அடுப்புகளுமே படுஜோராக எரிந்து கொண்டிருந்தன. கூர்மையான கத்தியால் உருளைக் கிழங்கைத் துண்டுதுண்டாக நறுக்கி, வெண்டைக்காயை சிறு சிறு துண்டாக ஆக்கி, வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி, அவரைக்காயை சிறு சிறு துண்டாக ஒடித்து, மிளகுப் பொடி, மல்லிப் பொடி, கொஞ்சம் மஞ்சள் பொடி ஆகியவற்றையும் கலந்து, அதில் இஞ்சி, வெள்ளைப் பூண்டு, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றைக் கலந்து இரும்பு உரலில் போட்டு இடித்து ஒரு உருண்டை ஆக்கினார். பருப்பு வெந்து முடிந்தபோது, உருளைக்கிழங்கு, வெண்டைக்காய், அவரைக்காய் ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு வேகவைத்து, சிறிது நேரத்தில் கொஞ்சம் உப்பைப் போட்டு இன்னும் சிறிது வேக இருக்கும் நேரத்தில், இன்னொரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி அதில் வெங்காயத் துண்டுகளைப் போட்டார். கொஞ்சம் காய்ந்த மிளகாய்த் துண்டுகளை அதில் கலந்தார். மிளகாய்த் துண்டுகள் இலேசாகக் கறுகத் தொடங்கிய போது, கொஞ்சம் கருவேப்பிலையையும் கொத்தமல்லி இலைகளை யும், சிறிது உப்பையும் அவர் போட, "படா படா' என்ற சத்தத்துடன் அது அடுப்பில் பொரிந்து கொண்டிருக்க, உருண்டையாக இருந்த மசாலாவை தேங்காய் எண்ணெய்யில் போட்டு, ஒரு வித ஸ்டைலுடன் அதை அவர் கொதிக்க வைத்தார். நல்ல வாசனையை வெளியே பரப்பியவாறு அது கொதித்துக்கொண்டிருந்தது. இப்போது வேக வைத்துத் தயாராக இருந்த பருப்பை மசாலாவுடன் கலந்து, கருவேப்பிலையையும் கொத்தமல்லி இலையையும் புதினாவையும் சேர்த்து, இறக்கி கீழே வைத்து மூடினார். இந்த நேரத்தில் வாசனையை முகர்ந்தவாறு சௌபாக்யவதிகளான ராஜலாவும், கதீஜா பீபியும், சௌமினி தேவியும் எங்களைப் பார்த்தவாறு அடக்க ஒடுக்கத்துடன் நடந்துசென்று முற்றத்தைத் தாண்டினார்கள். அப்போது அவர்களைப் பார்த்து, "ம்யாவோ” என்று கத்தினான் நீலகண்டன். அவர்கள் அதைக் கேட்டு நடுங்கியதை என்னால் உணர முடிந்தது. சந்நியாசி சோறு வெந்துவிட்டதா என்று பார்த்தார். இன்னும் கொஞ்சம் வேக வேண்டும். சிறிது நேரத்தில் குழம்பு இருந்த பாத்திரத்தை எடுத்து சோறு இருந்த பானைக்குள் கவிழ்த்தார். ஞாபகமாக அதைக் கிளறி விட்டு, திராட்சைப் பழம், முந்திரிப்பருப்பு ஆகியவற்றை அதில் போட்டு மூடி வைத்தார். தீயை நன்கு எரிய விட்டார்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel