Lekha Books

A+ A A-

மந்திரப் பூனை - Page 33

mandhira-poonai

“சரி...'' அவர்கள் கேட்ட கேள்வியைக் காதில் வாங்காத மாதிரி நான் கேட்டேன்: “சாதாரண மனிதர்கள் செய்து காட்டியிருக்கும் அற்புதச் செயல்களை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?''

“சாதாரண மனிதர்கள் என்ன அற்புதத்தைக் காட்டிட முடியும்?''

“சின்னச் சின்ன அற்புதங்கள்...!''

“எங்கே சொல்லுங்க... கேட்கிறோம்!''

“நம்மோட இந்த பூமி உண்டாகி எத்தனையோ கோடி வருஷங்களாச்சுன்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க. எத்தனை கோடி வருஷங்கள்னு எனக்கு இப்போ ஞாபகத்துல இல்ல. ஒரு ஆயிரம் கோடி வருஷங்கள்னு வச்சுக்குவோம். இந்த ஆயிரம் கோடி வருஷங்களின் பயங்கரமான இருட்டு இருக்கே! அதாவது... கூரிருட்டு! இந்தக் கடுமை யான இருட்டுல ஒரு பொத்தானை அழுத்தின உடனே, கோடிக்கணக் கான மின்விளக்குகள் எரியத் தொடங்குது. பகலை விட படுவெளிச்சமா அது இருக்குது. ஒரு கம்பி வழியா ஐயாயிரம் மைல் தூரத்துல இருக்குற மனிதன்கூட நாம இப்போ பேசிக்கிட்டு இருக்கோம். எங்கோ இருக்குற ஒரு ஆளை நாம இங்கே இருந்தே பார்க்கலாம். வேறொரு பொத்தானை அழுத்தினா ஆயிரம் மைல் தூரத்துல இருக்குற இசையை நாம கேட்கலாம். செய்திகளையும், சொற்பொழிவையும் கேட்கலாம். காளையும், எருமையும், குதிரையும், ஒட்டகமும் இல்லாமலே இப்போ வண்டிகள் ஓடுது. கடலுக்கு மேலே போற கப்பல்கள், கடலுக்கு அடியில போற கப்பல்கள், கடலுக்கு கீழே போற சுரங்கங்கள், ஆகாயத்துல பறக்குற விமானங்கள், சந்திரனுக்கும் மத்த கிரகங்களுக்கும் பறந்துபோற கோள்கள், மனிதர்களோட ஆயுளை நீடிக்கக் கூடிய மருந்துகள், நோய்கள்ல இருந்து விடுதலை செய்யும் முயற்சிகள், கண்கள் போனவங்களுக்கு மீண்டும் கண் பார்வை...''

“ஓஹோ... இதைச் சொல்றீங்களா? இது எல்லாமே சாதாரண சம்பவங்கள்தானே! நாங்க நினைச்சோம்- நீங்க ஏதோ அற்புதச் செயல்களைப் பத்திச் சொல்லப் போறீங்கன்னு. இதுல என்ன அற்புதங்கள் இருக்கு?''

அவர்கள் எழுந்தார்கள். நீலகண்டனைச் சுற்றி நின்று அவனையே உற்றுப் பார்த்தார்கள். அவர்கள் புறப்படும்போது நான் சொன்னேன்: “ஒரு விஷயத்தை ஞாபகத்துல வச்சுக்கணும். இந்த மந்திரப் பூனையைப் பத்தி யார்கிட்டயும் சொல்லாதீங்க!''

அடுத்தநாள்- இன்னொரு ஆச்சரியமான விஷயம் நடந்தது. மகள் ஓடி வந்து சொன்னாள்: “டாட்டோ... நீலகண்டனைக் காணல...''

“அடியே...'' மகளின் தாயை நான் அழைத்தேன். சொல்லப்போனால் சரியாக வாயைத் திறந்துகூட அதை நான் சொல்லவில்லை. அதற்குள் எங்கோ தூரத்தில் ஏதோ முக்கிய வேலையில் ஈடுபட்டிருந்த அவள் அடுத்த நொடியே, “என்ன?'' என்று கேட்டவாறு விழுந்தடித்துக் கொண்டு ஓடிவந்தாள். எனக்கொரு விஷயம் தெரியும்- மகளின் தாயும் சரி, மற்ற சௌபாக்யவதிகளும் சரி, அவர்களுக்கு என்மேல் ஒரு சந்தேகம். என்னுடைய அடுத்த குறி யாராக இருக்கும்? இனி யாரை நான் ஆணாக மாற்றப் போகிறேன் என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஓடிக்கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. அந்த பயத்தில் அவர்களிடம் இதற்குமுன் இருந்திராத அடக்கமும், பணிவும், பக்தியும் வந்து குடி கொண்டிருப்பதையும் என்னால் காண முடிந்தது. வேகமாக ஓடிவந்த மகளின் தாயிடம் நான் கேட்டேன்:

“நீலகண்டன் எங்கே?''

“நம்ம வீட்லயும் பார்த்தேன். பக்கத்து வீடுகள்லயும் பார்த்தேன். எங்கேயும் காணலியே!''

“யாராவது அவனைக் கொன்னுட்டாங்களா?''

அப்படி ஒரு விஷயம் நடந்திருந்தால் குற்றவாளிகள் சௌபாக்யவதிகளான கதீஜா பீபி, ராஜலா, சௌமினிதேவி, ஸ்ரீமான்மார்களான வாசுதேவன், அஸன்குஞ்ஞு, ராமகிருஷ்ணன், மகளின் தாய்- இவர்கள்தான். மகளுக்கு இதில் ஒரு பங்கும் கிடையாது.

“யாரும் கொல்லல...'' மகளின் தாய் சொன்னாள்: “அதை யார் கொல்வாங்க? சொல்லப்போனா நீலகண்டனைப் பார்த்தா, எல்லாருக்குமே பயம்...''

அவள் அப்படிச் சொன்னது எனக்குப் பிடித்தது. அவன் நன்றாக வாழட்டும். என்ன இருந்தாலும் அவன் ஆணாயிற்றே! காதல் அது இதுவென்று ஒருவேளை நடைப் பயணம் போயிருப்பானோ? ம்... நீலகண்டன் எப்படியும் திரும்பி வருவான். ஆனால், நீலகண்டன் காணாமல் போய்விட்டான் என்பதற்காக யாருமே வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. இரவு முழுக்க நான் பார்த்தேன். சாப்பிடக்கூட இல்லை. தூக்கம்கூட வரவில்லை. (அவன் இப்போதும் என் பக்கத்தில் இருப்பது மாதிரியே உணர்ந்தேன். மகளின் தாய் நீலகண்டன் அறைக்குள் இருப்பதாகவே நினைத்து, இப்போதும் தலையணைக்குப் பக்கத்தில் அரிவாளை வைத்திருக்கிறாள்.) நீலகண்டன் எங்கே போயிருப்பான்?

நீலகண்டனைக் காணோம் என்ற அந்த கவலையான செய்தி மனதை தினமும் வாட்டி எடுத்துக்கொண்டிருந்தது. நாட்கள் படுவேகமாக நீங்கிக்கொண்டிருந்தன. இந்தச் சூழ்நிலையில் மந்திரப்பூனை பற்றி கேள்விப்பட்டு கண்ணாடி அணிந்த ஒரு ஆள் ஒரு நாள் வீடு தேடி வந்தார். மிகவும் அடர்த்தியான கண்ணாடி... அதற்குள் சிறிய விழிகள். கறுப்பு ஃப்ரேம். மிகவும் சாதுவாக அந்த ஆள் இருந்தார். வாழ்க்கையில் இன்னும் எவ்வளவோ நாட்கள் இருக்கின்றன என்ற நினைப்பு அந்த ஆளிடம் இருப்பதை என்னால் உணர முடிந்தது. கையிடுக்கில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்து அந்த ஆள் மேஜை மேல் வைத்தார். ஒரு பயண நினைவுப் புத்தகம் அது. பிரமிடுகளின் படங்கள் அதில் இருந்தன. நாங்கள் இருவரும் தலா ஒரு டம்ளர் பால் கலந்த தேநீர் குடித்தோம். அவர் புகை பிடிக்கவில்லை. நான் ஒரு சிகரெட்டை உதட்டில் வைத்துப் புகைத்தேன். இரண்டு முறை புகையை ஊதிவிட்டு, புத்தகத்தை எடுத்து பக்கங்களைப் புரட்டினேன். நிறைய புகைப்படங் கள் அதில் இருந்தன. ஆங்காங்கே பல இடங்களில் மையால் அடிக்கோடு இடப்பட்டிருந்தது. அடிக்கோடிட்ட இடங்களை வாசித்துப் பார்த்தேன். எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் மனிதர்கள் உண்டாக்கியதாயிற்றே பிரமிடுகள்! அங்கே இருந்து நானூறு, ஐந்நூறு மைல் தூரத்தில் ஒரு மலையின் பள்ளத்தாக்கில் இருக்கும் குகைகளில் சில கல்லறைகள். அந்தக்கால மன்னர்களுடைய தாக இருக்கலாம். அவற்றைத் திறந்து பார்த்தபோது, ஏதோ மருந்து களில் நனைத்த துணிகளால் மூடப்பட்ட பிரேதங்கள். மூவாயிரம், நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு மரணமடைந்த உடல்கள் அவை. இது அங்கு சர்வ சாதாரணமான ஒன்று. ஆனால் ஒரே ஒரு விசேஷம்... அருகில் இருக்கும் வெள்ளை மணலில் பதிந்திருக்கும் ஒரு கால்சுவடு... வேலைக்காரனின் அல்லது வைதீகனின் கால்சுவடாக அது இருக்கலாம்.

“நான்காயிரம், ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னாடி உள்ள ஒரு கால்சுவடு!''

நாங்கள் அதைப் பற்றி நீண்ட நேரம் நினைத்துப் பார்த்தோம். அந்தக் கால் சுவடு பதிந்த காலத்திற்குப் பிறகு... இன்றுவரை!

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel