Lekha Books

A+ A A-

மந்திரப் பூனை - Page 32

mandhira-poonai

நீலகண்டன் திரும்பவும் வந்து நாற்காலிமேல் ஏறி உட்கார்ந்தான். மீண்டும் அவர்களையே வெறித்துப் பார்த்தான்.

நான் நீலகண்டன் என்ற இந்துப் பூனையை எடுத்து என் மடிமேல் வைத்தேன். தங்களுக்குள் அவர்கள் ஏதோ பேசினார்கள். அடுத்து ஒரு கேள்வி:

“மனிதர்களைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?''

"உண்மையைச் சொல்லனும்னா, புதுசா பாக்குற எந்த மனிதனையும் சந்தேகத்தோட பார்க்கணும். சில நேரங்கள்ல நாரத முனியா இருக்கலாம். இல்லாட்டி அரபிக் கதைகள்ல வர்ற இரட்டை வேடம் போடுற உமரய்யாராக இருக்கலாம். சில நேரங்கள்ல விக்கிரமாதித்தன் வேடம் மாறி வந்திருக்கலாம். இல்லாட்டி பட்டியாகவோ வேதாள மாகவோகூட இருக்கலாம்.” இதுதான் சரியான பதில். இருந்தாலும் அவர்களைப் பார்த்து நான் சொன்னேன்: “ஒவ்வொரு நாளும் ஏகப்பட்ட கொடுமைகள் செய்து வாழ்ற ஒரு மிருகம்தான் மனிதன்!''

“அப்படின்னா மனிதர்கள்கிட்ட பெரிசா சொல்ற மாதிரி ஒண்ணும் இல்லைன்னு சொல்றீங்களா?''

“ஏன் இல்லாம? நிறைய இருக்கே! அறிவு, செயல், சிந்தனை, நன்மையைப் பற்றிய தெளிவு, மனிதநேயம்- இப்படி எண்ணிப் பார்த்தா அடக்க முடியாத அளவுக்கு நிறைய இருக்கே!''

“அற்புதங்கள் உண்டாக்குவதற்கான சக்தி?''

“என்கிட்ட கிடையாது!''

“புத்த பகவான், பரசுராமன், சிவன், ஸ்ரீராமன், ஸ்ரீகிருஷ்ணன் - இவங்கல்லாம் மனிதர்களா பூமியில நடமாடினவங்கதானே?''

அடுத்த நிமிடம் அஸன்குஞ்ஞு துள்ளிக்குதித்து எழுந்தான்.

“மக்களுக்கு நல்ல விஷயங்களைச் சொல்ல வந்த மகா மனிதர்களை விட்டு விட்டீங்களே! ஆதாம் நபி, நுஹ் நபி, இப்ராஹிம் நபி, மூஸா நபி, ஈஸா நபி, முஹம்மது நபி...''

“மன்னிக்கணும் அஸன்குஞ்ஞி...'' வாசுதேவன் சொன்னான்: “இயேசு கிறிஸ்து ஒரு மதபோதகர் மட்டும்தான்றதை கத்தோலிக்கர்கள் ஒத்துக்குவாங்களா?''

“ஒருநாளும் ஒத்துக்க மாட்டாங்க.'' ராமகிருஷ்ணன் சொன்னான்.

“அது போகட்டும்...'' வாசுதேவன் சொன்னன்: “இவங்க காட்டிய அற்புதச் செயல்கள் உங்களுக்குத் தெரியும்ல?''

“கேள்விப்பட்டிருக்கேன்.'' நான் சொன்னேன்: “எத்தனையோ வருடங்களுக்கு முன்னாடி இந்தியாவுக்கு வந்த ஒரு சீன யாத்திரீகன். அவர் பேரு ஹுயான்... இல்ல... ஃபாஹியான்னு நினைக்கிறேன். பேரு சரியா ஞாபகத்துல இல்ல. புத்தகம் இங்கேதான் எங்கேயாவது இருக்கும். நான் சொன்ன சீனாக்காரன்ல யாரோ ஒரு ஆள் எழுதினது இந்தப் புத்தகம். அவர் ஒரு புத்த ஆலயத்திலோ வேறு எங்கோ சில (மூன்று என்று ஞாபகம்) ஏணிகளைப் பார்த்திருக்காரு. அதுல தங்கத்தாலான ஏணியை, புத்தபகவான் சொர்க்கத்துக்குப் போறதுற்காகப் பயன்படுத்தினதுன்னு சொல்லி இருக்காங்க.''

“புத்த பகவான் தெய்வம்ன்றத ஒத்துக்குறீங்களா?'' வாசுதேவன் கேட்டான். நான் பதில் சொல்வதற்கு முன்பு அஸன்குஞ்ஞு வேகமாக எழுந்து உரத்த குரலில் சொன்னான்:

“புத்தர் தெய்வம்ன்றதை நான் ஒத்துக்க மாட்டேன்!''

அவ்வளவுதான். அதற்குப் பிறகு வாக்குவாதங்களும், சத்தங்களும்தான். கடைசியில் ராமகிருஷ்ணன் சொன்னான்:

“அஸன்குஞ்ஞி... நம்மோட விக்கிரமாதித்தன் என்னவெல்லாம் அற்புதங்கள் செஞ்சு காண்பிச்சிருக்காரு! உமரய்யார், பட்டி, வேதாளம் - இவங்களையெல்லாம் நாம் மறந்துட்டா எப்படி? சரி போகட்டும்... என்ன இருந்தாலும் புத்த பகவான் அற்புதங்கள் நிறைய காட்டியிருக்காரு. பிறகென்ன?''

நான் சொன்னேன்: “சிலர் கடலை கரையாக ஆக்கியிருக்காங்க..''

“சும்மா இல்ல... ஒண்ணாம் நம்பர் கோடரியை எறிஞ்சு...''

“பிறகு... விஷத்தைச் சாப்பிட்டு, ஒரு மலையையே தூக்கி, வாயைத் திறந்து ஈரேழு உலகங்களையும் காட்டி, புஷ்பக விமானத்துல பயணம் செஞ்சு, திமிங்கிலத்தோட வயித்துல சில நாட்கள் தங்கி, சீடர்களோட கடல்மேல நடந்து, உடன் வந்தவர்களுடன் பெரிய ஒரு நதியை ரெண்டாகப் பிளந்து நடந்து அக்கரையை அடைந்து, மழை பெய்ய வைச்சு, பெய்த மழையை நிறுத்தி, கொடுங்காற்றை அடக்கி, சந்திர மண்டலத்தை ரெண்டாகப் பிளந்து காண்பித்து...''

“இதெல்லாம் அற்புதங்கள்தானே?''

“இவர்கள்ல சில பேரோட உபதேசங்களைக் கேட்குறீங்களா?''

“வேண்டாம்.'' வாசுதேவன் சொன்னான்: “எங்களுக்குத் தெரிய வேண்டியது அற்புதங்கள்தான். சபரிமலை அய்யப்பனும் வாவரும் மனிதர்களா இந்த பூமிக்கு வந்தவங்கதானே? சாய்பாபாவும் மனிதரா வந்தவர்தான். சத்யசாயிபாபா -அவரும் மனிதர்தான். அவர் எவ்வளவு அற்புதங்களைச் செஞ்சு காட்டியிருக்கார்! வெட்ட வெளியில இருந்து திருநீறு, கைக்கடிகாரங்கள், பூக்கள்... இப்படி என்னென்னவெல்லாம் எடுத்து பக்தர்களுக்கு அவர் தர்றார்!''

நான் சொன்னேன்:

“அவருக்கும் நீங்க சொன்ன மத்த புனிதர்களுக்கும் அமானுஷ்ய சக்தி ஏதாவது இருக்கும்!''

“உங்களுக்கு?''

“என்கிட்ட ஒண்ணும் கிடையாது. நான் ஒரு சின்ன மனுஷன். எனக்கு இருக்குறது சின்ன அறிவு. சின்ன இதயம். என்னோட கண்களுக்கு சரியா பார்வைகூட இல்ல. கண்ணாடி எப்பவும் போட வேண்டியிருக்கு. எனக்கு மட்டும் நீங்க சொல்ற மாதிரி சக்தி இருந்தால், என் கண்களை நான் சரி பண்ணிட மாட்டேனா? நீங்க என் மீசையைப் பாருங்க. என்னோட வழுக்கை விழுந்த தலையைப் பாருங்க. இந்த நிலத்துல இருக்குற தென்னை மரங்களைப் பாருங்க. இந்த மீசையை நான் கருப்பு சாயம் பூசி, கருகருன்னு தெரியிற மாதிரி வச்சிருக்கேன். பெரிய பெரிய அற்புதங்களையெல்லாம் செஞ்சு காட்டுற அளவுக்கு எனக்கு சக்தி இருந்தா... பெண் பூனைக் குட்டியை ஆணா மாத்தக்கூடிய வல்லமை கொண்ட மனிதனா நான் இருந்தா என் மீசை எப்போதும் கருப்பாவே இருக்கணும்னு நான் சொல்லி இருப்பேன். என்னோட வழுக்கைத் தலையில கருப்பு முடி வளரும்படி செஞ்சிருப்பேன். இங்க இருக்குற தென்னை மரத்தோட ஒவ்வொரு குலையிலயும் நூறு தேங்காய் காய்ச்சுத் தொங்கணும்னு கட்டளையே போட்டிருப்பேன். சுத்தி இருக்குற எல்லா வீடுகள்லயும் இருக்குற கஷ்டங்களை நானே தீர்த்திருப்பேன். இந்த உலகத்தை விட்டு வறுமையும் நோயும் போரும் நிரந்தரமா இல்லாமலே போகட்டும்னு நான் உத்தரவு போட்டி ருப்பேன். பொறாமை, பகை, வஞ்சனை, வன்முறை - எல்லாமே இந்த பூமியில் இருந்த இடம் தெரியாம அழியட்டும்னு கட்டளை பிறப்பித்திருப்பேன். இவை ஒவ்வொன்றும் நான் மனசில ஆசைபடுகிற விஷயங்கள். ஆனா, இது நடைமுறையில நடக்கப்போறது இல்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும். காரணம் என்கிட்ட எந்தவித தெய்வீக சக்தியும் இல்லைன்றதுதான்!''

“இது உண்மைதான்றதைப் புரிய வைக்க, கொதிக்கிற நெய்யில கையை முக்கிக் காட்டத் தயாரா இருக்கீங்களா?''

பிரபஞ்சங்களைப் படைத்த கடவுளே!

எந்தவித அற்புத சக்தியும் என்னிடம் இல்லை என்பதை நிரூபிக்க, கொதித்துக் கொண்டிருக்கும் நெய்யில் என் கையை நுழைத்தால், என்ன ஆகும்? என் கை வெந்து போகாதா?

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel