Lekha Books

A+ A A-

மணப்பெண் - Page 13

mana-penn

அதுவும் பொது மக்கள் எல்லாரும் பார்க்கிற மாதிரி... ஆனால், அதற்காக அவரை ஒரு மனிதன் குற்றம் சுமத்திடக்கூடாது. கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக என்னால் ஒரு சிறிய அளவில்கூட வட்டியைக் கட்ட முடியவில்லை. வாங்கிய முதல் அப்படியே இருக்கு!''

அந்த விஷயத்தின் கடுமையை நன்கு தெரிந்திருந்ததாலும், தன் மாமா யாருடைய உதவியும் இல்லாததால் எந்த அளவிற்கு சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டிருப்பதாலும் லலிதா அந்த விஷயத்தை எப்படியாவது மாற்றி வேறு பக்கம் கொண்டு போய் விடவேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தாள். எங்கே ஒரு வேற்று மனிதனின் முன்னால் தன் மாமா வீட்டிலுள்ள அனைத்து அழுக்குத் துணிகளையும் சலவை செய்ய ஆரம்பித்துவிடுவாரோ என்று பயந்து விட்ட அவள் வேகமாக சொன்னாள்: “கவலைப்படாதீங்க மாமா. எல்லாம் பின்னர் வரப்போகும் விஷயங்கள்.''

லலிதா பயந்ததைப் போல குருச்சரண் அப்படி எதையும் வெளியே தெரியும்படி கூறவில்லை. அதற்குப் பதிலாக அவர் மெதுவாக சிரித்துக் கொண்டே சொன்னார்: “எது பின்னால் நடக்கும், கண்ணு? கிரின், இங்கே பாருங்க. இந்த என்னுடைய மகள் எனக்கு தாய் மாதிரி. இவள் தன்னுடைய வயதான மகன் எதைப் பற்றியும் கவலைப்படக்கூடாது என்று நினைக்கிறாள். லலிதா, பிரச்சனையே இதுதான்... வெளியில் இருப்பவர்கள் உன் மாமாவிற்கு ஏதோ பிரச்சினைகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளவே மறுக்கிறார்கள்..''

கிரின் கேட்டான் : “இன்றைக்கு நபின் பாபு என்ன சொன்னார்?''

கிரினுக்கு ஏற்கெனவே எல்லா விஷயங்களும் தெரியும் என்பதைத் தெரியாமல் இருந்த லலிதா, விருந்தாளியின் இந்த தாங்கிக் கொள்ள முடியாத ஆர்வத்தைப் பார்த்து மேலும் மேலும் கோபப்பட்டாள்.

குருச்சரண் எல்லாவற்றையும் கூறினார். நபின்ராயின் மனைவி நீண்ட காலமாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள். சமீபத்தில் டாக்டர்கள் அவளை வேறு சூழ்நிலைக்குக் கொண்டு போனால்தான் நிலைமை சரியாகும் என்று கூறிவிட்டார்கள். பணம் தேவைப்படுகிறது. அதனால் நபின் பாபு தனக்கு வரவேண்டிய வட்டித்தொகை முழுவதையும், சொல்லப்போனால் வாங்கிய பணத்தில் ஒரு பகுதியையும் சேர்த்துத் தரும்படி கேட்டுக் கொண்டார்.

கிரின் சிறிது நேரத்திற்கு அமைதியாக இருந்தான். அதற்குப் பிறகு மெதுவான குரலில் அவன் சொன்னான் : “நான் சில விஷயங்களை உங்களிடம் கூற வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், கூறுவதற்கு தயக்கமாக இருந்தது. உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால், இன்றைக்கே என்னை அதைச் செய்ய அனுமதியுங்கள்.''

குருச்சரண் உரத்த குரலில் சிரித்துக் கொண்டே சொன்னார்: “என்னிடம் எதையும் கூறுவதற்கு யாரும் எந்தச் சமயத்திலும் தயங்க மாட்டார்கள். அப்படி என்ன விஷயம், கிரின்?''

கிரின் மெதுவாக பதில் சொன்னான் : “நபின் பாபு மிகவும் அதிகமாக வட்டித் தொகை வாங்குவதாக அக்கா என்னிடம் சொன்னாங்க. என்னிடம் ஏராளமான பணம் வெறுமனே கிடக்கு. கடனை அடைப்பதற்கு நான் ஏன் அதை பயன்படுத்தக்கூடாது?''

குருச்சரண், லலிதா இருவரும் அதைக் கேட்டு திகைத்துப் போய்விட்டார்கள். கிரின் தொடர்ந்து சொன்னான்: “இந்த நிமிடத்தில் எனக்கு அதிக பணத் தேவை இல்லை. உங்களுக்கு அது பயன்படும் பட்சம், நீங்க அதை இப்போ எடுத்துக் கொள்ளுங்கள் என்று நான் சொல்றேன். எதிர்காலத்தில் உங்களால் எப்போது முடிகிறதோ, அப்போ அதைத் திருப்பி தாங்க. நான் நினைக்கிறது அதுதான்...''

குருச்சரண் மெதுவான குரலில் கேட்டார் : “நீ எனக்கு முழுப் பணத்தையும் தர்றியா?''

கிரின் மிகவும் உறுதியான குரலில் சொன்னான்: “ஆமாம்... அது உங்களுடைய சுமைகளை கொஞ்சம் அது குறைக்கும் என்றால்...''

குருச்சரண் அதற்குப் பிறகு என்னவோ சொல்ல முயன்றார். அப்போது அன்னக்காளி வேகமாக வந்து சொன்னாள்: “லலிதா அக்கா... சீக்கிரம்... சேகர் அண்ணா நம்மை ரெடியாகச் சொன்னார். நாம எல்லாரும் திரை அரங்கத்திற்கு செல்கிறோம். '' அவள் வேகமாக உள்ளே நுழைந்ததைப் போலவே, வேகமாக வெளியேறவும் செய்தாள். அவளுடைய பெருகி வந்த உற்சாகம் குருச்சரணை வாய்விட்டு சிரிக்கச் செய்தது. லலிதா அசையாமல் நின்றிருந்தாள்.

அன்னக்காளி சிறிது நேரத்தில் திரும்பி வந்து பொறுமையை இழந்து கேட்டாள்: “நீங்க இன்னும் உள்ளே போகலையா, லலிதா அக்கா? நாங்க எல்லாரும் காத்திருக்கிறோம்.''

திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டும், லலிதா அங்கிருந்து அசைவதாகத் தெரியவில்லை. தன் மாமாவின் இறுதி முடிவை அவள் தெரிந்து கொள்ள விரும்பினாள். ஆனால், குருச்சரண் அன்னக்காளியைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டே லலிதாவைப் பார்த்து மெதுவான குரலில் சொன்னார்: “கண்ணு... அப்படியென்றால் போ. தாமதம் செய்யாதே... அவர்கள் எல்லாரும் உனக்காக காத்திருக்கிறார்கள்.''

லலிதா அங்கிருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை. அங்கிருந்து புறப்படத் தயாராகும்போது, அவள் மிகுந்த நன்றிப் பெருக்குடன் கிரினைப் பார்த்தாள். அவளைப் புரிந்து கொள்வதற்கு அவனுக்கு அதிக சிரமம் உண்டாகவில்லை.

சுமார் பத்து நிமிடங்களுக்குப் பிறகு, முழுமையாகத் தயார் ஆனவுடன், லலிதா மீண்டும் அறைக்குள் ஏதோ பொருளை வைக்க வருவதைப் போல திரும்பவும் வந்தாள்.

கிரின் அதற்குள் போய்விட்டிருந்தான். குருச்சரண் தன் தலையை கனமான தலையணை தாங்கிக் கொள்ள, முகத்தில் கண்ணீர் வழிந்த கோலத்தில் படுத்திருந்தார். அந்தக் கண்ணீர் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் ஆனந்தக் கண்ணீர் என்பதை லலிதா தெளிவாக உணர்ந்தாள். தொடர்ந்து காலடிச் சத்தமே கேட்காமல் உள்ளே வந்ததைப் போலவே, அறையைவிட்டு அவள் வெளியேறவும் செய்தாள்.

சிறிது நேரத்திற்குப் பிறகு அவள் சேகரின் அறையில் வந்து நின்றபோது, லலிதாவின் கண்களும் கண்ணீரால் நிறைந்திருந்தன. அன்னக்காளி அங்கு இல்லை. அவள்தான் காரில் முதலாவதாக போய் உட்காருவாள். சேகர் மட்டும் தனியாக தன்னுடைய அறையில் காத்திருந்தான். (அனேகமாக லலிதாவை எதிர்பார்த்து). மேலே அவளைப் பார்த்த அவன், அவளுடைய கண்ணீர் நிறைந்த கண்களைப் பார்த்தான்.

கடந்த பத்து நாட்களாக லலிதாவைப் பார்க்காத அவன் அவள்மீது அதிகமான எரிச்சலில் இருந்தான். ஆனால், தற்போது அவன் எல்லாவற்றையும் மறந்துவிட்டு, மிகுந்த ஈடுபாட்டுடன், அன்பு கலந்த குரலில் கேட்டான்: “ என்ன விஷயம்? நீ ஏன் அழுகிறாய்?''

லலிதா தலையைக் குனிந்து கொண்டு, அதை வேகமாக ஆட்டினாள்.

அவளைப் பார்க்காமல் பல நாட்கள் இருந்த விஷயம் சேகரிடம் குறிப்பிடத்தக்க ஒரு மாற்றத்தை உண்டாக்கி விட்டிருந்தது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel