Lekha Books

A+ A A-

மணப்பெண் - Page 16

mana-penn

கிரின் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. தான் கேள்விப்பட்டதை அவன் நினைத்துப் பார்த்தான். சேகர் தேநீர் அருந்தமாட்டான். மற்றவர்கள் தேநீர் அருந்துவதையும் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

தன்னுடைய கோப்பையை எடுத்துக் கொண்டே குருச்சரண் கிரினும் தானும் லலிதாவிற்காக பார்த்துக்கொண்டிருக்கும் மணமகனைப் பற்றிக் கூறினார். பையன் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தான். அவனை அளவுக்கு மேலே புகழ்ந்து கூறினார் குருச்சரண் : “ஆனால், இவ்வளவு விஷயங்களுக்குப் பிறகும், நம்ம கிரினுக்கு அவனைப் பிடிக்கவில்லை. சொல்லப் போனால், பையன் பார்க்குறதுக்கு அழகு என்று கூறுவதற்கில்லை. ஆனால், ஒரு மனிதனுக்கு தோற்றங்கள் என்ன வித்தியாசத்தைக் கொண்டு வந்து விடப் போகிறது? அது அவனை தேர்ச்சி பெற்றவனாகக் காட்டி விடுகிறது.'' லலிதாவிற்கு எப்படியாவது வெகு சீக்கிரமே திருமணமாகிவிட வேண்டும் என்பதில் குருச்சரண் மிகவும் ஆர்வமாக இருந்தார். அது அவரை மிகப் பெரிய பொறுப்பிலிருந்து விடுதலை செய்யும்.

அவரை புன்னகையுடன் பார்த்துக் கொண்டே சேகர் கேட்டான்: “ கிரின் பாபுவிற்கு அவனை ஏன் பிடிக்கவில்லை? பையன் படித்தவனாக இருக்கிறான். பொருளாதார ரீதியாக நல்ல நிலைமையில் இருக்கிறான். மொத்தத்தில் - ஒரு நல்ல மணமகன்!''

கிரினுக்கு மணமகனை ஏன் பிடிக்கவில்லை என்பதற்கான காரணத்தை மனதிற்குள் தெரிந்து வைத்திருந்தாலும், அதைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே சேகர் கேட்டான். அவனைப் பொறுத்தவரையில் எந்த மாப்பிள்ளையையும் பொருத்தமானவன் என்று கிரின் ஏற்றுக் கொள்ள போவதில்லை என்பதையும் அவன் நன்கு அறிவான். எப்படியோ மாட்டிக் கொண்ட கிரின் உடனடியாக ஒரு பதிலைக் கூறிவிட்டு வெளியே வரமுடியவில்லை. அவன் முகம் சிவந்து, பதைபதைப்புடன் இருந்தான். அதைக் கவனித்த சேகர் எழுந்து சொன்னான்: “சித்தப்பா, நாளைக்கு நான் அம்மாவுடன் கிளம்புகிறேன்... உரிய நேரத்தில் எங்களுக்கு தகவலைச் சொல்ல மறந்துவிடாதீர்கள்!''

குருச்சரண் சொன்னார்: “அது எப்படி முடியும்? நீங்க எல்லாரும் எனக்காக இருப்பவர்கள். இன்னும் சொல்லப்போனால், உன் தாய் இல்லாமல் எதுவும் நடக்காது. எல்லாவற்றையும் தாண்டி, உன் அம்மாவை லலிதாவிற்கு தாய் என்றுகூட கூறலாம். நீ என்ன சொல்றே, லலிதா?'' - புன்னகைத்தவாறு, அவர் திரும்பி கேட்டார் : “ அவள் எப்போது போனாள்?''

சேகர் சொன்னான்: “இந்த விஷயத்தைப் பேச ஆரம்பித்தவுடனே, அவள் தப்பித்துப் போய்விட்டாள்.''

குருச்சரண் சொன்னார்: “ அவள் அப்படி நடந்து கொள்வதுதான் சரி. இன்னும் சொல்லப் போனால், லலிதா இப்போது உலக அறிவு கொண்டவளாக ஆகிவிட்டாள்!'' ஒரு நீண்ட பெருமூச்சை விட்ட அவர் தொடர்ந்து சொன்னார் : “என் பொண்ணு குடும்பத்தனமும் அறிவுத்தன்மையும் அருமையாகக் கலந்துவிட்டிருக்கும் ஒரு கலவை. அப்படிப்பட்ட ஒரு பெண்ணைச் சாதாரணமாக பார்க்க முடியாது, சேகர்நாத்! '' இந்த வார்த்தைகளைக் கூறியபோது, ஆழமாக வேரோடி விட்டிருக்கும் பாசம் அவரின் குரலிலும் முகத்திலும் இனிமையாக நிழல் பரப்பியது. கிரினும் சேகரும் அந்த வயதான மனிதருக்கு மனதிற்குள் மரியாதை செலுத்தியவாறு அமைதியாக இருந்தார்கள்.

7

தேநீர் அமர்வில் இருந்து பலவந்தமாக தப்பித்து ஓடிய லலிதா நேராக அறைக்குச் சென்றாள். சக்தி வாய்ந்த கேஸ் விளக்குகளுக்கு கீழே இருந்த அவனுடைய சூட்கேஸை மேலே எடுத்து, சேகரின் கம்பளியால் ஆன போர்வையை மடித்து அழகாக உள்ளே வைத்தாள். அப்போது சேகர் அறைக்குள் வருவதை அவள் பார்த்தாள். அவள் தலையை உயர்த்திப் பார்த்து, பயத்தாலும் திகைப்பாலும் எதுவும் பேசாமல், பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

ஒரு சட்டப் போராட்டத்தில் தன்னுடைய அனைத்தையும் இழந்து, நீதி மன்றத்திலிருந்து மனம் உடைந்து, தோல்வியைச் சந்தித்து வெளியே வரும் ஒரு மனிதனுக்கும் தீர்ப்பிற்கு முன்னால் இருந்த நம்பிக்கை நிறைந்த - எதையும் வெற்றியாகப் பார்க்கும் மனநிலை கொண்ட மனிதனுக்குமிடையே எந்தவொரு சம்பந்தமும் இருக்காது என்பதைப் போல சேகரும் லலிதாவிற்கு யாரென்று தெரியாத ஒரு அன்னியனாக மாறிவிட்டிருந்தான். பலவித சிந்தனைகளாலும் பாதிக்கப்பட்டிருக்கும் அடையாளம் அவனுடைய முகத்தில் தெரிந்தது. தடுமாறிய குரலில் அவன் கேட்டான் : “நீ என்ன செய்கிறாய், லலிதா?''

பதிலெதுவும் சொல்லாமல் லலிதா அருகில் வந்து அவனுடைய கைகளைப் பற்றியவாறு கண்ணீருடன் கேட்டாள்: “என்ன விஷயம் சேகர் அண்ணா?''

“என்ன? எதுவும் இல்லை...'' - சேகர் செயற்கையான ஒரு சிரிப்பை வெளியிட்டான். லலிதா தொட்டது, அவனுக்கு சற்று உயிர் வந்ததைப்போல இருந்தது. அருகில் இருந்த கட்டிலில் போய் உட்கார்ந்த அவன் தன் கேள்வியைத் திரும்பவும் கேட்டான்: “ நீ என்ன செய்கிறாய்?''

லலிதா பதில் சொன்னாள்: “இந்த அடர்த்தியான மேல் கோட்டை வைப்பதற்கு நான் மறந்துவிட்டேன். அதை வைப்பதற்காக வந்தேன்.'' சேகர் அவளையே அமைதியாகப் பார்த்தான். லலிதா மேலும் சற்று மென்மையான குரலில் தொடர்ந்து சொன்னாள்: “சென்றமுறை புகை வண்டி பயணம் உங்களுக்கு மிகவும் வசதிக்குறைவுகளுடன் இருந்தது. உங்களிடம் பெரிய அளவைக் கொண்ட கோட்டுகள் நிறைய இருந்தன. ஆனால், அவற்றில் ஒன்றுகூட கனமாக இல்லை. அதனால், நாம் திரும்பி வந்த உடனே, நான் உங்களுடைய அளவிற்கு ஒரு கோட்டை தைக்கச் சொன்னேன்.'' லலிதா ஒரு கனமான ஓவர் கோட்டை எடுத்து சேகரிடம் கொண்டு வந்து கொடுத்தாள்.

அதை மிகவும் கவனித்துப் பார்த்த சேகர் சொன்னான்: “ஆனால், ஒரு விஷயத்தை என்னிடம் நீ கூறுவதே இல்லை. ஏன்?''

லலிதா சிரித்தாள் : “நீங்க எல்லாரும் நாகரீக மோகம் கொண்ட மிடுக்கான மனிதர்கள். இப்படிப்பட்ட ஒரு கனமான கோட்டை தயாரிப்பதற்கு என்னை நீங்க அனுமதிப்பீங்களா? அதனால், உங்களிடம் கூறுவதற்கு பதிலாக நான் தைக்கச் சொல்லி தயார் பண்ணி வைத்துவிட்டேன்!'' அதை சூட்கேஸில் வைத்தவாறு அவள் சொன்னாள்: “ இது மேலாக இருக்கு. சூட்கேஸைத் திறந்தவுடன், நீங்க இதைப் பார்த்துவிடலாம். உங்களுக்கு குளிர் இருந்தால், இதைப் போட்டுக் கொள்ள மறந்துடாதீங்க.''

“சரி...'' - சேகர் முணுமுணுத்துக் கொண்டே தூரத்தில் கண்களை இமைக்காமல் பார்த்தான். திடீரென்று அவன் உரத்த குரலில் சொன்னான்: “இல்லை... இது நடக்காத விஷயம். இது நடப்பதற்கு வாய்ப்பே இல்லை!''

“எது நடக்காது? நீங்க இதை அணிய மாட்டீர்களா?''

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel