Lekha Books

A+ A A-

மணப்பெண் - Page 14

mana-penn

அவன் உடனடியாக அருகில் வந்து அவளுடைய தோள்களைத் தொட்டவாறு, லலிதாவை மேலே பார்க்கும்படி கட்டாயப்படுத்திக் கேட்டான்: “என்ன! நீ உண்மையாகவே அழறியா? என்ன நடந்தது?''

லலிதாவால் அதற்கு மேல் தன்னை அடக்க முடியவில்லை. எங்கே நின்றிருந்தாளோ, அதே இடத்தில் அவள் கீழே உட்கார்ந்து, தன் முகத்தை புடவையின் முந்தானையில் புதைத்துக் கொண்டு, தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.

6

ன்னிடம் அசலும் வட்டியும் அடங்கிய முழுத் தொகை என்று கூறி கொடுக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களைப் பெற்றுக் கொண்டு, நபின்ராய் அடமான பத்திரங்களைத் திருப்பித் தந்தவாறு கேட்டார்: “சரி... உங்களுக்கு யார் பணம் தந்தாங்க?''

மெதுவான குரலில் குருச்சரண் சொன்னார்: “என்னிடம் அதைக் கேட்காதீங்க. அது ரகசியம்.''

அந்தப் பணத்தைத் திரும்ப பெற்றதில் நபின் ராய்க்கு சிறிதுகூட சந்தோஷம் இல்லை. அவர் கடனாகப் பெறப்படும் பணம் திரும்பச் செலுத்தப்பட வேண்டும் என்பதை எந்தச் சமயத்திலும் விரும்பு வதில்லை. அதை அவர் எதிர்பார்ப்பதும் இல்லை. அதற்கு பதிலாக, குருச்சரணை துன்பப்படுத்துவதன் மூலமும், அவரைத் தொடர்ந்து நச்சரித்துக் கொண்டிருப்பதன் மூலமும், அந்த அப்பாவி ஏழையை அடமானம் வைக்கப்பட்ட வீட்டிலிருந்து வெளியேற்றி விடலாம் என்று அவர் மனதிற்குள் திட்டம் போட்டிருந்தார். அதைத் தொடர்ந்து நபின் ராய் இப்போது இருக்கும் அந்த கட்டிடத்தை இடித்துவிட்டு, அந்த இடத்தில் ஒரு பிரம்மாண்டமான மாளிகையை எழுப்பலாம் என்று நினைத்திருந்தார். குத்துவதைப் போன்ற வார்த்தைகளுடன் அவர் சொன்னார் : “ஆனால்... இப்போது இது ரகசியமாகிவிட்டது! தப்பு உங்கள் மீது இல்லை. என்னுடையதுதான். உங்களிடம் பணத்தைத் திருப்பிக் கேட்டது என் தவறு. இல்லையா? நாம பழகி எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன?''

காயம் பட்ட குருச்சரண் சொன்னார்: “ இது என்ன பேச்சு, அய்யா? நீங்க எனக்கு பணம் கடனாகத் தந்தீங்க. நான் அதை திருப்பி கொடுத்துவிட்டேன். நான் இப்போதும் உங்களுடைய அளவற்ற அன்பிற்குக் கடன்பட்டுத்தான் இருக்கிறேன்.''

அதைக் கேட்டு நபின் பாபு சிரித்தார். அவர் நல்ல உலக அறிவைக் கொண்டவர். இல்லாவிட்டால், இந்த அளவிற்கு செல்வத்தை அவரால் சம்பாதித்திருக்க முடியாது. அவர் தொடர்ந்து சொன்னார் : “நீங்க அந்த அளவிற்கு அதை உண்மையாகவே நம்பியிருக்கும் பட்சம், இப்படிப்பட்ட சிரமமான - நினைத்துப் பார்க்க முடியாத சூழ்நிலையில் அவசர அவசரமாக பணத்தைத் திருப்பித் தந்திருக்க வேண்டியதில்லை. நான் உங்களிடம் பணத்தைப் பற்றி ஞாபகப் படுத்தினேன் என்றால், அதற்குக் காரணம்கூட நோய்வாய்ப்பட்டிருக்கும் என்னுடை மனைவிதான். நான் அல்ல. ஆனால்... சொல்லுங்க. இந்த முழு வீட்டையும் எவ்வளவு பணத்திற்கு நீங்க அடமானம் வைத்தீர்கள்?''

குருச்சரண் தலையை ஆட்டிக் கொண்டே சொன்னார்: “இந்த வீடு அடமானமாக வைக்கப்படவில்லை. அதேபோல வட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை.''

நபின் பாபுவிற்கு அதை ஏற்றுக் கொள்ள மிகவும் சிரமமாக இருந்தது. அவர் சொன்னார்: “என்ன? இவ்வளவு பெரிய தொகை வெறும் நம்பிக்கையின் பெயரில் தரப்பட்டதா?''

“ஆமாம்... உண்மைதான். அதே போன்ற ஒரு முறையில்... அந்த பையன் மிகவும் நல்லவனாகவும், நிறைய இரக்க குணம் கொண்டவனாகவும் இருக்கிறான்.''

“பையனா? யார் அந்த பையன்?''

குருச்சரண் மிகவும் அமைதியாக இருந்தார். தனக்கு சிறிதளவே தெரிந்திருந்தாலும், அவர் அதை வெளியே சொல்லி இருக்கக்கூடாது.

அவருடைய பேசும் விதத்தைப் பார்த்த நபின் பாபு புன்னகைத்துக் கொண்டே சொன்னார் : “ உங்களுக்கு உதவி செய்த மனிதரின் பெயரை வெளியே கூறக்கூடாது என்ற நிலைமை இருக்கலாம். இதற்கு மேல் உங்களை நான் சிரமப்படுத்தப் போவதில்லை. நான் இந்த உலகத்தின் பெரும் பகுதியைப் பார்த்திருக்கிறேன். அதனால் நான் உங்களுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையைத் தருகிறேன். இந்த நல்லது செய்யும் நபர், தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு உங்களுக்கு மிகப் பெரிய துன்பங்களைத் தராமல் இருக்க வேண்டும்!''

அந்த பேச்சுக்கு எந்த பதிலும் கூறாமல், குருச்சரண் மிகவும் பணிவாக விடைபெற்றுக் கொண்டு, பத்திரங்களுடன் அங்கிருந்து கிளம்பினார்.

ஒவ்வொரு வருடமும் இதே காலத்தில் புவனேஸ்வரி சில நாட்களை மேற்குப் பகுதியில் செலவிடுவாள். அவளுடைய வயிற்று வலி மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது என்று கூற முடியாது. ஆனாலும் அந்த பயணம் அவளுக்கு ஆறுதலாக இருந்தது. அன்றொரு நாள் நபின்பாபு குருச்சரணிடம் பேசியபோது, நிலைமைகளை மிகவும் அளவிற்கும் அதிகமாக தான் நினைத்ததை அடைய வேண்டும் என்பதற்காக மிகைப்படுத்திக் கூறிவிட்டார். எது எப்படி இருந்தாலும், பயணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

ஒருநாள் காலை நேரத்தில், சேகர் தன்னுடைய அவசிய பொருட்களை சூட்கேஸிற்குள் அடுக்கிக் கொண்டிருந்தான். அன்னக்காளி அறைக்குள் நுழைந்து கேட்டாள்: “ சேகர் அண்ணா, நீங்கள் எல்லாரும் நாளைக்குக் கிளம்புகிறீர்கள், இல்லையா?''

மேலே தலையை உயர்த்திப் பார்த்த சேகர் சொன்னான்: “ காளி, நீ கொஞ்சம் உன்னுடைய லலிதா அக்காவைக் கூப்பிடு. அவள் எதையெல்லாம் எடுத்துக் கொண்டு போக விரும்புகிறாளோ, அவற்றை அவள் உள்ளே வைக்கட்டும்.'' ஒவ்வொரு வருடமும் லலிதா அவர்களுடன் செல்வாள். புவனேஸ்வரியின் தேவைகள், வசதிகள் எல்லாவற்றையும் அவள் கவனித்துக் கொள்வாள். அதனால், அவள் இந்த முறையும் தங்களுடன் பயணிக்கிறாள் என்று சேகர் நினைத்தது இயல்பான ஒரு விஷயமே.

தலையை ஆட்டிக் கொண்டே அன்னக்காளி சொன்னாள்: “இந்த வருடம் லலிதா அக்கா வர முடியாத நிலையில் இருக்காங்க.''

“ஏன்?''

அன்னக்காளி சொன்னாள்: “அவங்க எப்படி வரமுடியும்? இந்த குளிர் காலத்தில் அவங்களுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. அப்பா மாப்பிள்ளையைத் தேடிக் கொண்டிருக்கிறார்.''

சேகர் வெட்ட வெளியையே கண்களை இமைக்காமல் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அன்னக்காளி அவனுடைய இப்போதைய சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாமல், வீட்டில் பேசப்படும் விஷயங்களில் தான் கேள்விப் பட்டவையை உற்சாகத்துடன் அவனிடம் முணுமுணுக்கும் குரலில் கூறினாள்: “எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை. ஒரு நல்ல மாப்பிள்ளையை லலிதா அக்காவிற்குப் பார்த்தாக வேண்டும் என்று கிரின் பாபு சொல்லிவிட்டார். அப்பா இன்னைக்கு அலுவலகத்திற்குப் போகவில்லை. லலிதா அக்காவிற்காக யாரோ ஒரு பையனை இன்றைக்கு பார்க்கப் போகிறார். கிரின் பாபு அவருடன் போகிறார்.''

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel