Lekha Books

A+ A A-

மணப்பெண் - Page 11

mana-penn

மனோரமா அதற்கு பதில் சொன்னாள்: “நான் அதை ஒப்புக் கொள்கிறேன். கணவன், மனைவி இருவருமே மிகவும் எளிமையானவர்கள்தான். அதுதான் மிகவும் வருத்தம் தரக்கூடியது, கிரின். அப்படிப்பட்ட ஒரு மனிதர் வீடு இல்லாமல், தங்குவதற்கு இடம் இல்லாமல் இருப்பது என்றால்...? நீயே அதை உன் கண்களால் பார்க்கவில்லையா கிரின்! சேகர்பாபு அழைத்தவுடன் லலிதா எப்படி ஓடினாள் என்பதை நீயே பார்க்கவில்லையா? அதைப் பார்க்குறப்போ, முழு வீடும் அவர்களுக்கு கட்டுப்பட்டிருப்பதைப் போல தோன்றுகிறதே! ஆனால், என்னதான் அவர்களுக்கு சேவைகள் செய்யட்டும். நபின் ராயின் பிடிகளுக்குள் ஒருமுறை மாட்டிக்கொண்டால், அதற்குப் பிறகு அந்த சூழ்நிலையில் இருந்து தப்பி வருவது என்பதை எதிர்பார்க்கவே கூடாது!''

கிரின் கேட்டான்: “அப்படின்னா இந்த விஷயத்தை நீங்க பார்த்துக் கொள்கிறீர்களா, அக்கா?''

“சரி... நான் பார்த்துக் கொள்கிறேன். நீ இரக்கப்பட்டு உதவுவதாக இருந்தால் அப்படியே நடக்கட்டும். “சற்று சிரித்துக் கொண்டே மனோரமா கேட்டாள் : “அது இருக்கட்டும்... நீ ஏன் இந்த அளவிற்கு அக்கறை எடுக்கிறாய் கிரின்?''

“எனக்கு வேறு என்ன ஆர்வம் இருக்கிறது அக்கா? துன்பத்தில் இருக்கும் யாருக்காவது கருணை கொண்டு உதவுகிற செயல்தான் இது'' - கிரின் தடுமாற்றமான மனநிலையுடன் அங்கிருந்து புறப்பட்டான். புறப்பட்ட சிறிது நேரத்தில் அவன் மீண்டும் திரும்பி வந்தான்.

அவனுடைய தங்கை கேட்டாள்: “ இப்போ என்ன?''

புன்னகைத்துக் கொண்டே கிரின் சொன்னான்: “இந்த கஷ்டங்கள் நிறைந்த கதைகள்... சொல்லப் போனால், அவை ஒவ்வொன்றும் உண்மையானவை அல்ல...''

ஆச்சரியத்துடன் மனோரமா கேட்டாள்: “நீ ஏன் இதைச் சொல்கிறாய்?''

கிரின் விளக்கிச் சொன்னான்: “வறுமையின் பிடியில் சிக்கிக் கிடக்கும் ஒரு பெண் செலவழிப்பதைப் போல, லலிதா பணத்தைச் செலவழிக்கும் முறை இல்லை. அன்றொரு நாள் நாங்க திரை அரங்கத்திற்கு சென்றோம். லலிதா எங்களுடன் வரவில்லை. ஆனால், தன் தங்கையின் மூலமாக பத்து ரூபாயைக் கொடுத்து அனுப்பினாள். அவள் பணத்தைத் தாராளமாக செலவழிக்கும் முறையைப் பற்றி நீங்க ஏன் சாருவிடம் கேட்கக்கூடாது? அவளுடைய தனிப்பட்ட செலவுகள் ஒரு மாதத்திற்கு இருபத்தைந்து ரூபாய்களுக்குக் கீழே இருக்காது.''

மனோரமாவிற்கு அதை நம்புவதற்கு மிகவும் சிரமமாக இருந்தது.

சாரு சொன்னாள்: “உண்மைதான், அம்மா. ஆனால், அது எல்லாமே சேகர் பாபுவின் பணம். இது இப்போது மட்டும் நடக்கவில்லை. அவள் சின்ன பிள்ளையாக இருந்த காலத்திலிருந்தே, அவள் எப்போதும் சேகர் அண்ணாவின் அலமாரியைத் திறந்து பணத்தை எடுப்பாள். யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க.''

தன் மகளைப் பார்த்துக் கொண்டே மனோரமா சந்தேகத்துடன் கேட்டாள்: “அவள் பணத்தை எடுக்கும் விஷயம் சேகர் பாபுவிற்குத் தெரியுமா?''

சாரு பலமாகத் தலையை ஆட்டினாள் . “அவர் இருக்கும் போதுதான் அவள் அலமாரியைத் திறந்து பணத்தை எடுப்பாள். போன மாதம் அன்னக்காளியின் பொம்மை திருமணத்தின்போது அவ்வளவு பணம் தந்தது யாரென்று நினைக்கிறீர்கள்? லலிதாதான் எல்லா செலவுகளையும் ஏற்றுக் கொண்டாள்.''

அதைக் கூர்ந்து கவனித்துக் கேட்ட மனோரமா சொன்னாள்: “என்ன நினைப்பது என்றே எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒரு விஷயம் மட்டும் உண்மை. பையன்கள் அவர்களுடைய தந்தையைப் போல இறுக மூடப்பட்ட கைகளுடன் இருப்பதில்லை. அவர்கள் தாயாரின் கவனத்தில் வளர்க்கப்பட்டவர்கள். அவர்களுக்கு மென்மையான மனம் இருக்கும். அவர்கள் இறை நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவை ஒருபுறம் இருக்க, லலிதா உண்மையிலேயே மிகவும் நல்ல பெண். சிறு குழந்தையாக இருந்ததிலிருந்தே அவர்களுக்கு மிகவும் அருகில் வளர்க்கப்பட்டவள் அவள். அவள் கிட்டத்தட்ட தன்னுடைய சொந்த சகோதரனைப் போலவே சேகரைப் பார்க்கிறாள். அதனால்தான் அவர்கள் எல்லாரும் அவள்மீது அன்புடன் இருக்கின்றனர். சாரு, நீ அவர்களுடன் எப்போதும் பழகிக் கொண்டிருப்பவள். இந்த குளிர் காலத்தின்போது சேகருக்கு திருமணம் நடக்கப்போகிறது அல்லவா? அந்த கிழவர் மிகப்பெரிய தொகையை வரதட்சணையாக வாங்கி விடுவார் என்று நினைக்கிறேன்.''

அதற்கு சாரு சொன்னாள்: “ஆமாம், அம்மா... இந்த குளிர் காலத்தின்போது... எல்லா விஷயங்களும் பேசி முடிக்கப்பட்டுவிட்டது என்று நான் கேள்விப்பட்டேன்.''

5

ல்லா வயதைச் சேர்ந்தவர்களும் மிகவும் எளிதில் பழகக்கூடிய ஒரு மனிதராக குருச்சரண் பாபு இருந்தார். இரண்டு அல்லது மூன்று நாட்கள் பழக்கத்திலேயே, அவருக்கும் கிரினுக்கும் இடையே ஒரு நெருங்கிய நட்பு உண்டாகிவிட்டது. தனக்கென்று நிலையான சொந்தக் கருத்துகள் எதுவும் இல்லையென்றாலும், அவர் விவாதம் செய்வதில் விருப்பம் கொண்டிருந்தார். அதே நேரத்தில், விவாதத்தில் தோல்வியைத் தழுவினாலும், அதை அவர் ஒரு காயமாகவே எடுத்துக் கொள்வதில்லை.

மாலை வேளைகளில் அவர் கிரினை ஒரு கப் தேநீர் அருந்துவதற்காக அழைப்பார். குருச்சரண் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்த பிறகு, ஒவ்வொரு நாளும் இது நடக்கும். முகத்தையும் கை- கால்களையும் கழுவும்போதே அவர் கூறுவார் : “ லலிதா, எனக்கு ஒரு கப் தேநீர் தர முடியுமா கண்ணு? காளி, போய் உன் கிரின் மாமாவை இங்கே வரச் சொல்லு!'' பிறகு, முடிவற்ற விவாதங்கள் பல கோப்பை தேநீருக்கு மத்தியில் நடந்து கொண்டிருக்கும்.

சில நேரங்களில் லலிதா தன் மாமாவிற்கு அருகில் அமைதியாக உட்கார்ந்து உரையாடலை கவனித்துக் கொண்டிருப்பாள். அந்த நாட்களில் கிரின் வாதங்களையும் எதிர் வாதங்களையும் ஆதாரங்களுடன் கூறிக் கொண்டிருப்பான். பெரும்பாலும் விவாதம் நவீன சமூகத்தின் மோசமான விஷயங்களுக்கு எதிராக இருக்கும். சமூகத்தின் இதயமற்ற தன்மை, அறிவுப்பூர்வமாக இல்லாத செயல்கள், கொடுமைகள் - இவைதான் காரசாரமாக அந்த இரண்டு மனிதர்களும் விவாதிக்கக்கூடிய விஷயங்களாக இருக்கும்.

அவர்களின் கருத்துகளுக்கு ஆதரவாக - வெளிப்படையாக எதுவும் இல்லையென்றாலும், கிரினின் கருத்துகள் குருச்சரணின் குழப்பங்களும், கவலைகளும் நிறைந்த மனதில் எதிரொலித்துக் கொண்டிருந்தன. இறுதியாக அவர் தலையை ஆட்டிக் கொண்டே கூறுவார் : “நீ சொல்றது சரி, கிரின். உரிய நேரத்தில் தன் மகளுக்கு திருமணம் செய்து வைத்து, அதைப் பார்க்க விரும்பாதவர்கள் யார் இருப்பார்கள்? ஆனால், அதை எப்படி ஒரு மனிதன் செய்ய முடியும்? சமூகத்தின் கொள்கைகளின்படி ஒரு பெண் வளர்ந்தால், அவளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். ஆனால் அவர்கள் திருமண ஏற்பாடுகளுக்கு உதவி செய்வார்களா? உதாரணத்திற்கு - என்னையே எடுத்துக் கொள், கிரின்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel