Lekha Books

A+ A A-

மணப்பெண் - Page 9

mana-penn

அவனுக்கு எதுவுமே கொடுக்காமல் வெறுங் கையுடன் போகச் சொல்வது என்பதன் மூலம் அவள் தன்னை ஒரு புதிய ஆரம்பத்திற்கு தயார் பண்ணிக் கொள்வது என்பதை அவள் சிறிதும் விரும்பவில்லை.

அந்த மனிதன் மீண்டும் அழைத்தான்.

அன்னக்காளி வேகமாக ஓடிவந்து சொன்னாள்: “லலிதா அக்கா, அந்த உங்களுடைய "மகன்' இங்கே வந்திருக்கிறார்!''

லலிதா சொன்னாள்: “காளி, எனக்காக தயவுசெய்து சிரமப்படு. இப்போது என்னால் ஒரு நிமிடம்கூட செலவழிக்க முடியாது. தயவுசெய்து உன்னுடைய சேகர் அண்ணாவிடம் ஓடிச் சென்று ஒரு ரூபாய் கேள்!''

அன்னக்காளி ஓடிச் சென்று, சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து லலிதாவிடம் ஒரு நாணயத்தைக் கொடுத்துவிட்டுச் சொன்னாள்: “இந்தா!''

லலிதா கேட்டாள்: “சேகர் அண்ணா என்ன சொன்னார்?''

“எதுவும் சொல்லவில்லை. அவர் தன்னுடைய கோட்பைக்குள் இருந்து காசை எடுத்துக் கொள்ளச் சொன்னார். நான் எடுத்தேன்!''

“அவர் எதுவுமே சொல்லவில்லையா?''

“இல்லை... எதுவும் சொல்லவில்லை'' - அன்னக்காளி தன் தலையை ஆட்டி கூறிக் கொண்டே, விளையாடுவதற்காக அங்கிருந்து நகர்ந்தாள்.

லலிதா தன்னுடைய கொடைத் தன்மை நிறைந்த செயலைச் செய்தாள். ஆனால், அவளுக்காக பிச்சைக்காரன் குவித்து வைத்திருக்கும் உயர்ந்த ஆசீர்வாதங்களைக் கேட்பதற்காக அவள் காத்திருக்க விரும்பவில்லை. சொல்லப் போனால் அன்றைய தினம் அவள் அதை விரும்பவில்லை.

பிற்பகலில் சீட்டு விளையாடும் செயல் கடந்த இரண்டு நாட்களாக முழு வீச்சுடன் தொடர்ந்து கொண்டிருந்தது. ஆனால், அந்த பிற்பகல் வேளையில் தனக்கு தலைவலி இருப்பதாக பொய்யாக நடித்த லலிதா அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள். அது முழுமையான பொய் என்று கூறுவதற்கில்லை. அவள் உண்மையாகவே கவலையில் இருந்தாள். சாயங்காலம் அன்னக்காளியை வரவழைத்து அவள் கேட்டாள்: “சமீப நாட்களாக சேகர் அண்ணாவிடம் போய் உன்னுடைய பாடங்களை விளக்கிக் கூறும்படி நீ கேட்கவில்லையா?''

அன்னக்காளி தலையை ஆட்டினாள்: “ஏன், கேட்டேனே!''

“சேகர் அண்ணா என்னைப் பற்றி விசாரிக்கவே இல்லையா?''

“இல்லை... ஓ... ஆமாம்... ஆமாம்... நேற்றைக்கு முந்தைய நாள் அவர் விசாரிச்சார்... பிற்பகல் வேளையில் நீங்க சீட்டு விளையாடினீங்களா இல்லையா என்று கேட்டார்.''

ஆர்வத்துடன் லலிதா கேட்டாள்: “நீ என்ன சொன்னாய்?''

அன்னக்காளி சொன்னாள்: “ சாரு அக்காவின் வீட்டில் பிற்பகல் வேளையில் நீங்க சீட்டு விளையாடினீங்க என்று நான் சொன்னேன். அதற்குப் பிறகு சேகர் அண்ணா கேட்டார் "வேறு யாரெல்லாம் விளையாடினார்கள்?' என்று. நான் சொன்னேன்- மனோரமா அத்தை, சாரு அக்கா, அவங்களோட மாமா கிரின் பாபு, அதற்குப் பிறகு நீங்க... எல்லாரும் சேர்ந்து விளையாடினீர்கள் என்று. எனக்குச் சொல்லுங்க... லலிதா அக்கா... யார் நன்றாக விளையாடியது? நீங்களா, சாரு அக்காவின் மாமாவா? நீங்கதான் மிகவும் சிறப்பாக விளையாடுவீர்கள் என்று அத்தை எப்போதும் சொல்லுவாங்க. அது உண்மையா?''

ஆனால், லலிதா மிகவும் எரிச்சலடைந்துவிட்டாள். அன்னக்காளியின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவள் கடுமையான குரலில் சொன்னாள்: “நீ ஏன் அந்த அளவிற்கு அதிகமாகப் பேசுகிறாய்? நீ ஒவ்வொரு விஷயத்திலும் ஏன் தலையிடணும்... இனிமேல் நான் உன்னிடம் எந்தச் சமயத்திலும் எதையும் தர மாட்டேன்!'' அதைக் கூறிவிட்டு அவள் அங்கிருந்து கோபத்துடன் வெளியேறினாள்.

அன்னக்காளி அதிர்ச்சியடைந்து விட்டாள். லலிதாவின் திடீர் மனமாற்றத்திற்கான காரணத்தை அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

அடுத்த இரண்டு நாட்களாக மனோரமாவின் சீட்டு விளையாட்டு முற்றிலுமாக நின்றுவிட்டது. ஆரம்பத்திலிருந்தே கிரின் லலிதா மீது மிகவும் ஈர்க்கப்பட்டு இருப்பதாக மனோரமா சந்தேகப்பட்டாள்.

லலிதா இல்லாமல் இருக்கும் வேளைகளில் அவளுடைய சந்தேகங்கள் உண்மைதான் என்பதைத் தெரிந்து கொள்ளவும் முடிந்தது.

கடந்த இரண்டு நாட்களாகவே கிரின் மிகவும் நிலையற்ற மனம் கொண்டவனாகவும், ஞாபக சக்தி இல்லாதவனாகவும் இருந்தான். சாயங்கால வேளைகளில் அவன் எப்போதும் போவதைப்போல, நடப்பதற்குக்கூட அவன் வெளியே செல்வதில்லை. வேகமாக வீட்டிற்குள் நுழையும் அவன் ஒரு அறைக்கும் இன்னொரு அறைக்கும் காரணமே இல்லாமல் அலைந்து கொண்டிருந்தான். அன்று பிற்பகல் நேரத்தில் திரும்பி வந்த அவன் சொன்னான்: “அக்கா இன்றைக்கும் சீட்டு விளையாட்டே இல்லையா?''

மனோரமா சொன்னாள்: “அது எப்படி முடியும், கிரின்? விளையாடுவதற்கு யார் இருக்கிறார்கள்? ம்... சரி... நாம மூணுபேரும் சேர்ந்து விளையாட வேண்டியதுதான்.''

சிறிதுகூட உற்சாகமே இல்லாமல் கிரின் பதில் சொன்னான்: “மூன்று பேர்களை வைத்து ஒரு விளையாட்டை எப்படி விளையாட முடியும், அக்கா? நீங்க ஏன் லலிதாவை வரவழைக்கக்கூடாது?''

“அவள் வர மாட்டாள்!''

யோசனையில் ஆழ்ந்து கொண்டே கிரின் கேட்டான்: “அவள் ஏன் வரமாட்டாள்? அவள் இங்கே வரக்கூடாது என்று அவளைத் தடை செய்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.''

மனோரமா தலையை ஆட்டினாள்: “இல்லை. அவளோட மாமாவும் அத்தையும் அப்படிப்பட்டவர்கள் இல்லை. இங்கே வரக்கூடாது என்பது அவளுடைய சொந்த முடிவுதான்.''

திடீரென்று உண்டான உற்சாகத்தில் கிரின் சொன்னான்: “அப்படியென்றால் கட்டாயம் நீங்க இன்னொருமுறை தனிப்பட்ட முறையில் போனால், அவள் நிச்சயமாக வருவாள்.'' தொடர்ந்து

லலிதா அங்கு வரவேண்டும் என்பதில் திடீரென்று அவன் அதிகமான ஆர்வத்தைக் கொண்டிருந்ததால் அவன் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தான்.

மனோரமா சிரித்தாள் : “நல்லது... அப்படியென்றால் நான் அதைச் செய்றேன்.'' அவள் அங்கிருந்து கிளம்பிச் சென்று சிறிது நேரத்திற்குப் பிறகு லலிதாவுடன் திரும்பி வந்தாள். அவர்கள் சீட்டு விளையாடு வதற்காக உட்கார்ந்தார்கள்.

இரண்டு நாட்களாக சீட்டு விளையாடாமல் இருந்ததால் விளையாட்டு வெகு சீக்கிரமே சூடு பிடித்தது. லலிதாவும் அவளுடைய பார்ட்னரும் வெற்றி பெற்றார்கள்.

ஒன்றோ இரண்டோ மணி நேரங்களுக்குப் பிறகு அன்னக்காளி திடீரென்று அங்கு வந்து லலிதாவை அழைத்தாள்: “லலிதா அக்கா... சேகர் அண்ணா கூப்பிடுகிறார். சீக்கிரம்!''

லலிதாவின் முகம் வெளிறியது. அவள் சீட்டு விளையாடுவதை நிறுத்திவிட்டுக் கேட்டாள் : “சேகர் அண்ணா அலுவலகத்திற்குப் போகவில்லையா?''

“எனக்குத் தெரியாது. ஒருவேளை அவர் திரும்பி வந்திருக்கலாம்''- அன்னக்காளி கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

லலிதா சீட்டுக்களை அருகில் வைத்துவிட்டு, மன்னிப்பு கேட்கிற மாதிரி மனோரமாவைப் பார்த்துக் கொண்டே சொன்னாள்: “நான் போக வேண்டும்.''

அவளுடைய கைகளைப் பிடித்தவாறு மனோரமா சொன்னாள்: “என்ன இது? இன்னும் இரண்டு விளையாட்டுகளை நீ ஏன் விளையாடக்கூடாது?''

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel