Lekha Books

A+ A A-

மணப்பெண் - Page 4

mana-penn

மிகப் பெரிய மொட்டை மாடி அவருடைய வீட்டிற்கும் குருச்சரணின் வீட்டிற்கும் தொடர்பு கொள்வதற்கும் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதன்மூலம் அந்த இரண்டு குடும்பங்களுக்குமிடையே ஒரு நெருக்கம் மிகவும் வேகமாக வளர்ந்துவிட்டிருந்தது. வீட்டிலிருக்கும் பெண்கள் தாங்கள் உரையாடிக் கொள்வதற்கும், ஒருவரோடொருவர் தொடர்பு கொள்வதற்கும் அந்த வழியையே பெரும்பாலும் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

2

ஷ்யாம் பஜாரில் இருக்கும் ஒரு வசதியான குடும்பத்திலிருந்து சேகருக்கு ஒரு திருமண ஆலோசனை வந்தது. சமீப நாட்களாகவே இந்த விஷயம் அவர்களுக்குள் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. ஒருநாள் மணமகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்த வீட்டிற்கு ஒரு முறை வந்து போனார்கள். வரும் குளிர் காலத்தில் ஒரு நல்ல நாளைத் திருமணத்திற்காகத் தேர்வு செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். சொல்லப் போனால்- சேகரின் பெற்றோர்தான் தங்களின் விருப்பம் என்னவென்பதைக் கூற வேண்டும். சேகரின் தாய் புவனேஸ்வரி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அவள் வேலைக்காரியிடம், “பையன் தனக்கு வேண்டிய பெண்ணைத் தானே தேர்வு செய்துகொள்ளும்போதுதான், என் மகனுக்குத் திருமணம் நடக்கும். வேறு மாதிரி நடக்காது'' என்ற தகவலைக் கூறி அனுப்பினாள்.

தன்னுடைய மனைவியின் குழப்பம் நிறைந்த நிபந்தனையைப் பார்த்து நபின் ராய் மிகவும் கவலைக்குள்ளானார். இந்த திருமண ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கக்கூடிய பொருளாதார ஆதாயத்தின் மீது மட்டுமே அவர் ஈர்க்கப்பட்டார். தன்னுடைய மனைவியின் மேலோட்டமான கண்ணோட்டத்தைப் பார்த்து அவர் மனதில் வெறுப்படைந்தார். “இதற்கு என்ன அர்த்தம்?'' அவர் எரிச்சலுடன் சொன்னார்: “நாம ஏற்கெனவே அந்தப் பெண்ணைப் பார்த்தாகி விட்டது. நாம முதல்ல நிச்சயத்தை வைப்போம். ஒரு நல்ல நாளன்று மீதி நடைமுறை விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொள்வோம்.''

தன் கணவருக்குத் தான் கூறியது பிடிக்கவில்லை என்ற விஷயம் அவளுக்கு நன்றாகத் தெரிந்தது. அதற்குப் பிறகும் அவள் முன்கூட்டியே ஒரு நிச்சயம் செய்வதற்கு சம்மதிக்க மறுத்தாள். தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டும் விதத்தில், நபின்ராய் அன்றைய உணவை மிகவும் தாமதமாகவே சாப்பிட்டார். சொல்லப்போனால், அவர் தன்னுடைய மதிய தூக்கத்தை வெளி அறையிலேயே வைத்துக்கொண்டார்.

ஒரு சாயங்கால நேரத்தில், சுமார் ஐந்து அல்லது ஆறு நாட்கள் கழித்து, லலிதா மிக அருமையாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் சேகரின் அறைக்குள் வந்தாள். அவன் அங்கிருந்த பெரிய கண்ணாடிக்கு முன்னால் நின்று கொண்டு, வரப்போகும் மணமகளைப் போய் பார்ப்பதற்காகத் தன்னை தயார் பண்ணிக் கொண்டிருந்தான். அமைதியாக அவனையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்த அவள் கேட்டாள்: “நீங்க பெண் பார்ப்பதற்காக வெளியே போகிறீர்களா?''

திரும்பிப் பார்த்துக் கொண்டே சேகர் சொன்னான்: “ஓ... நீயா? என் மணமகள் என்னைத் தேர்வு செய்கிற மாதிரி எனக்கு உதவி செய்யேன்!''

லலிதா சிரித்துக்கொண்டே சொன்னாள்: “எனக்கு இன்றைக்கு நேரம் இல்லை, சேகர் அண்ணா. நான் கொஞ்சம் பணம் வாங்கிட்டுப் போகலாம் என்று வந்தேன்'' -தொடர்ந்து அவள் தலையணைக்கு அடியில் இருந்த அவனுடைய அலமாரியின் சாவிகளை எடுப்பதற்காக நடந்தாள். அலமாரியைத் திறந்து, கொஞ்சம் பண நோட்டுகளை எடுத்து, தன்னுடைய புடவைத் தலைப்பில் அவற்றை வைத்துக்கொண்டு, தனக்குத் தானே கூறிக்கொண்டாள்: “எனக்கு எப்போதெல்லாம் பணம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் வந்து எடுத்துக் கொள்கிறேன். ஆனால், இதை எப்படித் திருப்பித் தருவது?''

தன்னுடைய தலைமுடியை மிகவும் கவனமாக ஒரு குறிப்பிட்ட ஸ்டைலில் வாரிக் கொண்டிருந்த சேகர் அதற்கு பதில் சொன்னான்: “அது திருப்பித் தரப்படாது, லலிதா. அதற்கு மாறாக, அது திருப்பி தரப்பட்டுக் கொண்டிருக்கிறது.''

புரிந்துகொள்ள முடியாமல், லலிதா அவனையே வெறித்துப் பார்த்தாள்.

“உனக்குப் புரியலையா?''

லலிதா தலையை ஆட்டினாள்: “இல்லை''.

“இன்னும் கொஞ்சம் பெரியவளா ஆகு. அப்போ உனக்குப் புரியும்'' -சொல்லிக் கொண்டே சேகர் தன்னுடைய ஷூக்களை எடுத்து அணிந்துகொண்டு அங்கிருந்து வெளியேறினான்.

அன்று இரவு சேகரின் தாய் அறைக்குள் நுழைந்தபோது, அவன் கட்டிலில் கால்களை நீட்டிக் கொண்டு படுத்திருந்தான். அவன் வேகமாக எழுந்து உட்கார்ந்தான். கட்டிலின் ஒரு நுனியில் அமர்ந்து கொண்டு அவள் கேட்டாள்: “பெண் எப்படி இருக்கிறாள்?''

தன் தாயைப் பாசத்துடன் பார்த்துக்கொண்டே அவன் சொன்னான்: “அழகாக இருக்கிறாள்!''.

புவனேஸ்வரிக்கு ஐம்பதை நெருங்கிய வயது இருக்கும். ஆனால், முப்பத்தைந்து வயதிற்கு மேல் ஒரு நாள்கூட அவளுக்கு அதிகமான வயது இருக்கும் என்று கூற முடியாத அளவிற்கு அவள் தன் உடலை வைத்திருந்தாள். இன்னும் சொல்லப் போனால், அவளுடைய நெஞ்சுக்குள் துடித்துக்கொண்டிருந்த தாய்மை நிறைந்த இதயம் எப்போதும் உற்சாகத்துடனும் மென்மைத்தனத்துடனும் இருந்தது. அவள் மிகவும் பின்தங்கிய பின்புலத்திலிருந்து வந்தவள். அவள் பிறந்து, வளர்ந்தது எல்லாமே ஒரு சிறிய கிராமத்தில்தான். ஆனால், நகர வாழ்க்கையில் ஒரு நாள்கூட அவள் வேறுபட்டவளாகத் தோன்றவில்லை. நகரத்தின் சுறுசுறுப்பான, துடிப்பு நிறைந்த வாழ்க்கையை மிகவும் எளிதாக அவள் ஏற்றுக்கொண்டாள். அதே நேரத்தில் தன்னுடைய பிறந்த இடத்தின் அமைதியையும் இனிமையையும் அவள் தன்னிடம் காப்பாற்றிக் கொள்ளவும் செய்தாள். தனக்கு அப்படிப்பட்ட மிகச் சிறந்த அன்னை கிடைத்ததற்காக சேகர் மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டான். ஆனால், தன்னைப் பற்றி அந்த அளவிற்கு பெருமையாக புவனேஸ்வரியே நினைத்துக் கொண்டதில்லை. கடவுள் சேகருக்கு நிறைய சிறப்புகளை வாரி வழங்கி விட்டிருந்தார்- நல்ல உடல் நலம், அழகான தோற்றம், இளமை, அறிவாற்றல். ஆனால், அவை எல்லாவற்றையும்விட தன்னுடைய தாயின் மகன் என்று முழுமனதுடன் கூறிக் கொள்வதைத்தான் அவன் மிகச் சிறந்த விஷயமாக நினைத்தான்.

இப்போது அவனுடைய தாய் சொன்னாள்: “இப்படிக் கூறிவிட்டு நீ அமைதியாக இருக்கிறாய். ஆச்சரியமாகத்தான் இருக்கு!''

மீண்டும் ஒரு முறை புன்னகைத்துக் கொண்டே சேகர் சொன்னான்: “சரிதான்... நான் உங்களுடைய கேள்விக்கு பதிலைச் சொன்னேன்.''

புவனேஸ்வரியும் சிரித்துக்கொண்டே சொன்னாள்: “அது என்ன பதில்? அவள் கறுப்பாக இருக்கிறாளா? நல்ல நிறத்துடன் இருக்கிறாளா? யாரை மாதிரி இருக்கிறாள்? நம்ம லலிதா மாதிரியா?''

தலையை உயர்த்திப் பார்த்துக்கொண்டே சேகர் பதில் சொன்னான்: “லலிதா கறுப்பு. அந்தப் பொண்ணு நல்ல நிறம்.''

“அவளின் பிற விஷயங்கள்?''

“மோசமில்லை.''

“அப்படியென்றால், நான் உன் அப்பாவிடம் பேசட்டுமா?''

சேகர் அமைதியாக இருந்தான்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

மருதாணி

மருதாணி

February 15, 2012

அடிமை

அடிமை

June 18, 2012

கீறல்கள்

கீறல்கள்

November 2, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel