Lekha Books

A+ A A-

மணப்பெண் - Page 5

mana-penn

தன் மகனையே இரண்டு நிமிடங்கள் வெறித்துப் பார்த்துவிட்டு இறுதியாக புவனேஸ்வரி கேட்டாள்: “அவள் படிப்பு எப்படி? அவள் எதுவரை படிச்சிருக்கா?''

“நான் அதைக் கேட்கணும்னு நினைக்கல'' - சேகர் பதில் சொன்னான்.

அவனுடைய தாய் ஆச்சரியப்பட்டாள். “நீ அதைக் கேட்கணும்னு நினைக்கலையா? இந்த நாட்களில் மிகவும் முக்கியமாக இருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி நீ கேட்கவே இல்லையா?''

சேகர் சிரித்துக் கொண்டே சொன்னான்: “இல்லை அம்மா. என் மனதில் அப்படியொரு நினைப்பு தோன்றவே இல்லை!''

தன் மகனின் பதிலைக் கேட்டு வியப்படைந்த புவனேஸ்வரி அவனையே சிறிது நேரம் வெறித்துப் பார்த்தாள். பிறகு வாய்விட்டுச் சிரித்தவாறு ஆச்சரியத்துடன் சொன்னாள்: “அப்படியென்றால் அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்று அர்த்தம்!''

சேகர் என்னவோ கூறுவதற்கு முற்பட்டான். ஆனால், லலிதா அறைக்குள் நுழைவதைப் பார்த்ததும், அவன் அமைதியாக இருந்துவிட்டான். லலிதா நேராக அறைக்குள் நுழைந்து புவனேஸ்வரி யின் நாற்காலிக்கு பின்னால் வந்து நின்றாள். தன்னுடைய இடக் கையை நீட்டிய புவனேஸ்வரி அவளை முன்னால் கொண்டு வந்து கேட்டாள்: “என்னடா கண்ணு?''

மிகவும் அமைதியாக லலிதா பதில் சொன்னாள்: “ஒண்ணுமில்லைம்மா!''

ஆரம்பத்தில் லலிதா புவனேஸ்வரியை "அத்தை” என்று அழைத்தாள். ஆனால் ஒருநாள் அவளை அப்படி அழைக்கக்கூடாது என்று தடுத்த புவனேஸ்வரி சொன்னாள்: “நான் உன்னுடைய அத்தை இல்லை, லலிதா. நான் உன்னுடைய அம்மா.'' அதற்குப் பிறகு, லலிதா அவளை "அம்மா” என்றே அழைத்தாள்.

அவளை மேலும் அருகில் இழுத்தவாறு புவனேஸ்வரி பாசத்துடன் கேட்டாள்: “எதுவும் இல்லையா? அப்படியென்றால் நீ என்னை சும்மா பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்திருக்கிறாய்?''

சேகர் கேட்டான்: “உங்களைப் பார்க்க வந்திருக்கிறாளா? தன்னுடைய மாமாவின் வீட்டில் அவள் சமையல் பண்ண வேண்டியதிருக்குமே?''

“ஆனால் இவள் ஏன் சமையல் பண்ணணும்?'' -அவனுடைய தாய் கேட்டாள்.

ஆச்சரியத்துடன் சேகர் பதில் சொன்னான்: “அந்த வீட்டில் பிறகு யார் சமையல் பண்ணுவார்கள்? இவள்தான் சமையல் வேலைகளையும், வீடு சம்பந்தப்பட்ட எல்லா வேலைகளையும் இப்போது பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இவளுடைய மாமா அன்றைக்கே சொன்னாரே!''

புவனேஸ்வரி உரத்த குரலில் சிரித்துக் கொண்டே சொன்னாள்: “இவளோட மாமா சொன்னாரா? அவர் சொன்னது கொஞ்சங்கூட பொருத்தமாக இல்லை. இவளுக்கு இன்னமும் கல்யாணமே ஆகவில்லை. இவள் சமையல் பண்ணினதை யார் சாப்பிடுவாங்க? இவள் அதற்காகக் கஷ்டப்படக்கூடாது. நம்முடைய பிராமண சமையல்காரியை நான் அங்கே அனுப்பியிருக்கிறேன். அவள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வாள். உன் அண்ணி நம்முடைய சமையலைப் பார்த்துக்கொள்கிறாள். அதனால் சாப்பாட்டைப் பற்றியோ வேறு விஷயங்களைப் பற்றியோ கொஞ்சம்கூட கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.''

தன்னுடைய தாய் பக்கத்து வீட்டில் இருந்துகொண்டு வறுமையில் உழன்று கொண்டிருப்பவர்களின் கனமான சுமைகளைக் குறைக்கும் பொறுப்பைத் தானாகவே ஏற்றுக் கொண்டிருக்கிறாள் என்பதை சேகர் தெளிவாகப் புரிந்து கொண்டான். அதைத் தொடர்ந்து அவன் ஒரு நிம்மதி கலந்த பெருமூச்சு விட்டான்.

ஒரு மாதம் கடந்தோடியது. ஒருநாள் சேகர் தன்னுடைய கட்டிலிலில் கால்களை நீட்டிப் படுத்திருந்தபோது, லலிதா அவனுடைய அறைக்குள் வந்தாள். சாவிக் கொத்தை எடுத்து, ஓசை கேட்கும் வண்ணம் அலமாரியின் டிராயரைத் திறந்தாள். புத்தகத்திலிருந்து தன்னுடைய கண்களை உயர்த்தாமலே சேகர் கேட்டான்: “என்ன?''

லலிதா சொன்னாள்: “நான் பணம் எடுக்கிறேன்.''

“ம்...'' - சேகர் தான் வாசித்துக் கொண்டிருப்பதைத் தொடர்ந்தான். தன் புடவையின் ஒரு நுனியில் பணத்தை வைத்து முடிச்சு போட்ட லலிதா எழுந்தாள். அன்று அவள் தன்னை அழகுப்படுத்திக் கொள்வதில் தீவிர கவனம் செலுத்தியிருந்தாள். சேகர் அதைப் பார்க்க வேண்டும் என்றும் நினைத்தாள். அவள் சொன்னாள்: “நான் பத்து ரூபாய்கள் எடுத்திருக்கிறேன் சேகர் அண்ணா?''

“நல்லது''- தன்னுடைய புத்தகத்திலிருந்து தலையை உயர்த்தாமல் சேகர் சொன்னான். அவனுடைய கவனத்தைத் தன்னை நோக்கி இழுப்பதில் தோல்வியடைந்த லலிதா, இதையும் அதையும் தொட்டுக் கொண்டு காரணமே இல்லாமல் நேரத்தைப் போக்கிக் கொண்டிருந் தாள். அதற்குப் பிறகும் எந்தவொரு பயனும் உண்டாகாமல் போகவே, அவள் அங்கிருந்து கிளம்பியே ஆகவேண்டும். ஆனால், சேகரிடம் பேசாமல் அவள் இப்போது கிளம்ப முடியாது. இன்னும் சிறிது நேரத்தில் அவள் வேறு சிலருடன் திரை அரங்கத்திற்குச் செல்ல வேண்டும். அவள் சேகரின் அனுமதியை எதிர்பார்த்து அங்கேயே நின்றிருந்தாள்.

சேகரின் அனுமதி இல்லாமல் லலிதா எந்தவொரு சிறிய செயலையும் செய்யமாட்டாள். அப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று அவளுக்கு யாரும் உத்தரவு போடவில்லை. அப்படி நடந்து கொள்வதற்கு எந்தவொரு காரணமும்கூட கிடையாது. அவள் எப்போதும் அவனுடைய சம்மதத்துடன்தான் எதையும் செய்வது என்பதை வழக்கமாக்கிக் கொண்டாள். நீண்ட நாட்களாகவே ஒவ்வொரு விஷயங்களும் அப்படித்தான் நடந்து கொண்டிருந்தன. தன் மனதில் இருக்கும் இந்த பேசப்படாத சட்டத்தைப் பற்றி அவள் எந்தச் சமயத்திலும் கேள்வி கேட்கவோ விவாதித்துப் பார்க்கவோ இல்லை. இயற்கையாகவே எந்த உயிரினத்திற்கும் இருக்கக்கூடிய அறிவை வைத்துக் கொண்டு பார்க்கும்போது, மற்றவர்கள் தாங்கள் நினைக்கிறபடி செயல்பட்டுக் கொண்டும், விரும்புகிற இடங்களுக்குப் போய்க்கொண்டும் இருப்பதைப்போல தன்னால் போகமுடியாது என்பதை லலிதா புரிந்து கொண்டிருந்தாள். லலிதா முழு சுதந்திரம் கொண்டவளாக இல்லை. அதே நேரத்தில் அவளுடைய மாமா, அத்தை ஆகியோரின் சம்மதம் மட்டுமே போதும் என்று அவள் நினைக்கவில்லை. கதவுக்குப் பின்னால் நின்று கொண்டு அவள் மெதுவான குரலில் சொன்னாள்: “நாங்க திரை அரங்கத்திற்குப் போகிறோம்.''

அவளுடைய மென்மையான குரல் சேகருக்கு சரியாகக் கேட்கவில்லை. அதனால் அவனிடமிருந்து அவளுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.

அதனால் லலிதா தன் குரலைச் சற்று உயர்த்திக் கொண்டு சொன்னாள்: “அவர்கள் எனக்காகக் காத்திருக்கிறார்கள்.''

அவளுடைய குரலை அவன் இந்த முறை காதில் வாங்கியிருக்க வேண்டும். சேகர் தன் கையில் இருந்த புத்தகத்தை அருகில் வைத்துவிட்டுக் கேட்டான்: “என்ன விஷயம்?''

சற்று நெளிந்து கொண்டே லலிதா சொன்னாள்: “கடைசியில் நான் சொன்னதைக் கேட்டுட்டீங்க. நாங்க திரை அரங்கத்திற்கு போகிறோம்.''

சேகர் கேட்டான்: “நாங்கன்னா யார் யார்?''

“அன்னக்காளி, சாருபாலா, மாமா, நான்!''

“இந்த மாமா யார்?''

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel