
“லலிதா அக்கா உடல் நலத்துடன் இல்லையென்றால், அவங்க வராமல் இருக்கட்டும். சாரு அக்கா! அவங்க என்னிடம் பணத்தைத் தந்துட்டாங்க. நாம எல்லாரும் போவோம்.'' எல்லாரையும்விட வயதில் மிகவும் இளையவளாக இருந்தாலும் அன்னக்காளி எந்த விதத்திலும் அறிவு விஷயத்தில் குறைந்தவளாக இல்லை என்பதை சாரு தெளிவாகத் தெரிந்து கொண்டாள். அவள் உடனடியாக அதற்கு ஒப்புக் கொள்ளவே, அவர்கள் எல்லாரும் ஒன்றாகக் கிளம்பினார்கள்- லலிதா இல்லாமல்.
சாருபாலாவின் தாய் மனோரமாவிற்கு சீட்டு விளையாடுவதை விட வேறு எதிலும் குறிப்பிடும் வண்ணம் விருப்பம் கிடையாது. ஆனால், அவள் கொண்டிருக்கும் தீவிர ஈடுபாடு அளவிற்கு விளையாட்டில் அவள் திறமைசாலியாக இருக்கவில்லை. இந்தக் குறைபாடு லலிதா அவளுடைய பார்ட்னராக சேர்ந்தவுடன், சரி செய்யப் பட்டுவிட்டது. அதற்குக் காரணம் - லலிதா சீட்டு விளையாட்டில் அபார திறமைசாலியாக இருந்ததே. மனோரமாவின் தம்பி கிரின் வந்ததிலிருந்து, மனோரமாவின் அறையில் பிற்பகல் முழுவதும் தொடர்ந்து சீட்டு விளையாட்டு நடந்து கொண்டேயிருந்தது. கிரின் மிகவும் சிறப்பாக விளையாடினான். அதனால், மனோரமா அவனுக்கு சரி நிகராக விளையாட வேண்டுமென்றால், லலிதா அங்கு கட்டாயம் இருந்தாக வேண்டும்.
திரை அரங்கத்திற்குப் போன நாளுக்கு மறுநாள் சீட்டு விளையாடும் அந்தக் குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல் போகவே, மனோரமா வேலைக்காரியை லலிதாவின் வீட்டிற்கு அனுப்பினாள்.
லலிதா ஒரு ஆங்கில நூலை வங்க மொழிக்கு மொழி பெயர்ப்பதில் ஈடுபட்டிருந்தாள். அவள் தன்னுடைய புத்தகங்களை விட்டு, வர மறுத்துவிட்டாள்.
லலிதாவின் சினேகிதியும் அவளை அழைத்துக் கொண்டு வருவதில் தோல்வியைச் சந்திக்கவே மனோரமாவே அங்கு வந்துவிட்டாள். லலிதாவின் புத்தகங்களை சற்று நகர்த்தி வைத்துவிட்டு, அவள் சொன்னாள்: “நீ உன் முதுகுத் தண்டை இந்த நூல்களுக்காக ஒடித்துக் கொள்ள வேண்டிய தேவையே இல்லை, லலிதா. நீ வளர்ந்து வர்றப்போ நீதிபதியாக ஆகப் போவதில்லை. இதற்கு பதிலாக சீட்டு விளையாட்டை நன்கு விளையாடலாம். எழுந்து வா!''
லலிதா இக்கட்டான நிலையில் தான் இருப்பதை உணர்ந்தாள். இப்போது தான் வருவதற்கில்லை என்றும், மறுநாள் கட்டாயம் வருவதாகவும் கண்ணீர் வழிய கூறினாள். அவள் கூறியதைக் காதிலியே வாங்கிக் கொள்ள மறுத்த மனோரமா, லலிதாவின் அத்தையிடம் விஷயத்தைக் கூறி, வலுக்கட்டாயமாக லலிதாவுடன் அங்கிருந்து கிளம்பினாள். அதனால், அன்றும் கிரினுக்கு நேர் எதிரில் உட்கார்ந்து கொண்டு, அவள் சீட்டு விளையாட வேண்டியிருந்தது. ஆனால், விளையாட்டு அன்று அந்த அளவிற்கு சுவராசியமாக இருக்கவில்லை. லலிதா எந்த வகையில் பார்த்தாலும், விளையாட்டில் முழுமையாக கவனம் செலுத்தவில்லை. அவள் முழு நேரமும் ஒரே பதைபதைப்பிலேயே இருந்தாள். பொழுது இருட்டியவுடன், அவள் கிளம்பிவிட்டாள். கிரின் அந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு சொன்னான்: “நேற்று நீ பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டாய். ஆனால், எங்களுடன் வரவில்லை. நாம ஏன் மீண்டும் நாளைக்குப் போகக்கூடாது?''
தன் தலையை ஆட்டிக் கொண்டே லலிதா மெதுவான குரலில் சொன்னாள்: “இல்லை... நான் மிகவும் உடல் நலமில்லாமல் இருந்தேன்!''
சிரித்துக் கொண்டே கிரின் சொன்னான்: “நீ இப்போ தேறிவிட்டாய். நாளைக்கு கட்டாயம் போக வேண்டும்.''
“இல்லை... இல்லை... நாளைக்கு எனக்கு நேரமே இல்லை'' - லலிதா அந்தக் கணமே அங்கிருந்து வெளியேறிவிட்டாள். அன்று சேகரின் கோபம் மட்டுமல்ல அவளை அப்படிப் போகும்படி செய்தது. சேகர் கடுமையாக கூறியதற்குப் பின்னால், அவளே ஒருவித குழப்பமான மன நிலையுடன் இருந்தாள் என்றும் சொல்லலாம்.
சேகரின் வீட்டில் நடமாடுவதைப் போலவே, அவள் சாருவின் வீட்டிற்குள்ளும் சர்வ சாதாரணமாக நுழைவதையும் வெளியேறுவதையும் வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். அந்த வீட்டில் தானும் ஒரு உறுப்பினர் என்பதைப் போல அவள் எல்லாரிடமும் எளிமையாகக் கலந்து பழகினாள். அதனால் சாருவின் மாமா கிரின் பாபுவுவைச் சந்திப்பதிலோ, அவனுடன் உரையாடுவதிலோ அவளுக்கு எந்தவொரு தயக்கமும் இல்லை. எனினும், அன்று சீட்டு விளையாடிக் கொண்டிருக்கும் முழு நேரமும் சேகர் கூறிய வார்த்தைகளை அவளால் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அதே நேரத்தில் மிகவும் குறுகிய காலம் மட்டுமே அவரைத் தெரிந்திருந்ததால், கிரின் அவளை சாதாரணமாக இருப்பதைவிட அதிக ஆர்வத்துடன் பார்ப்பதையும் அவள் தெரிந்து கொண்டிருந்தாள். ஒரு மனிதன் புகழ்கிற மாதிரி முறைத்துப் பார்ப்பது என்பது மிகவும் வெட்கப்படக்கூடிய ஒரு செயலாக அவளுக்குத் தோன்றியது. அப்படிப்பட்ட ஒன்றை அவள் மனதில் நினைத்துப் பார்த்ததுகூட இல்லை.
அவள் சிறிது நேரம் தன் வீட்டின் முன் நின்றாள். பிறகு நேராக சேகரின் வீட்டிற்குச் சென்று எப்போதும் போல வேலை செய்ய ஆரம்பித்தாள். அவனுடைய அறையின் சிறுசிறு விஷயங்களைக்கூட சிறு வயதிலிருந்து அவள்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். குவிந்து கிடக்கும் புத்தகங்களை எடுத்து வைப்பது, மேஜையைச் சுத்தமாக வைத்திருப்பது, பேனாக்களை சரி பண்ணி வைப்பது, மையை பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் எடுத்து வைத்திருப்பது... வேறு யாரும் இந்த வேலைகளைச் செய்யமாட்டார்கள். லலிதாவின் உரிமையும் பொறுப்பும் அவற்றில் இருந்தன. அவள் உடனடியாக பெருக்கி சுத்தம் பண்ண ஆரம்பித்தாள். அப்படியென்றால்தான் சேகர் வருவதற்கு முன்பே முடிக்க முடியும்.
எப்போது சந்தர்ப்பம் கிடைத்தாலும், அவள் வீட்டை பற்றித்தான் நினைப்பாள். ஏனென்றால், அவள் யாரைப் பார்த்தாலும் அவர்களை தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றே நினைத்தாள். மற்றவர்களும் அவளை அப்படித்தான் நடத்தினார்கள். தன்னுடைய எட்டாவது வயதில் பெற்றோர்களை இழந்த லலிதா தன்னுடைய மாமாவின் வீட்டில் உள்ளவர்களில் ஒருத்தியாக ஆகிவிட்டாள். அதற்குப் பிறகு சிறு குழந்தையைப் போல அவள் சேகரையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பாள். அவனுடைய மேற்பார்வையில் அவள் தன் படிப்பில் வளர்ந்தாள்.
சேகரின் பாசத்தில் அவளுக்கு மிகவும் சிறப்பான இடம் கிடைத்திருக்கிறது என்ற விஷயம் எல்லாருக்கும் தெரியும். ஆனால், அந்தப் பாசம் எந்த அளவிற்கு ஆழங்களுக்குள் போய்விட்டிருக்கிறது என்ற உண்மை யாருக்கும் தெரியாது. லலிதாவிற்கேகூட அது தெரியாது. அவளின் சிறு வயதிலிருந்தே சேகர் அளவற்ற அன்பை அவள் மீது பொழிவதை எல்லாரும் பார்த்திருக்கிறார்கள். யாருக்கும் தெரியாத ஒரு விஷயமல்ல அது. ஒருநாள் ஒரு புலர்காலைப் பொழுதில் அவள் அந்த வீட்டின் இளம் மணமகளாக வரக்கூடிய வாய்ப்பு இருப்பதைக்கூட யாரும் உணர்ந்திருக்கவில்லை. லலிதாவின் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் அதைப்பற்றி எண்ணிப் பார்த்ததுகூட இல்லை. புவனேஸ்வரிக்குகூட அப்படியொரு எண்ணம் தோன்றியது இல்லை.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook