மணப்பெண் - Page 28
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 11432
அதற்கு மேல் தலையை உயர்த்த சேகரால் முடியவில்லை எனினும், அவன் சொன்னான்: “நான் என்ன சொன்னேனோ, அதுதான் அம்மா. இது இன்னைக்கு நடந்தது இல்லை. நான்கு வருடங்களுக்கு முன்னால்... நீங்க உண்மையிலேயே இவளுடைய அம்மாதான். நான் இதற்கு மேல் எதுவும் கூறக்கூடாது. இவளையே கேட்டுக்கொள்ளுங்கள், அம்மா. இவள் எல்லாவற்றையும் உங்களிடம் கூறுவாள்.'' லலிதா எழுந்து, அவனுடைய அன்னையின் பாதத்தைத் தொடுவதற்காக மரியாதையுடன் கீழே குனிந்து கொண்டிருப்பதை சேகர் பார்த்தான். எழுந்து, அவன் அவளுக்கு அருகில் போய் நின்றான். இருவரும் சேர்ந்து அந்தச் செயலைச் செய்து முடித்தார்கள். அதற்குப் பிறகு சேகர் அமைதியாக அங்கிருந்து வெளியேறினான்.
புவனேஸ்வரியின் முகத்தில் சந்தோஷத்தால் உண்டான கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தது. அவள் மிகவும் பிரியத்துடனும் உண்மை யாகவும் லலிதா மீது அன்பு வைத்திருந்தாள். அலமாரியைத் திறந்து, தன்னுடைய அனைத்து நகைகளையும் வெளியே எடுத்து, அவள் அவற்றைக் கொண்டு தன் கைகளாலேயே லலிதாவை அலங்கரித்தாள். கொஞ்சம் கொஞ்சமாக அவள் லலிதாவிடமிருந்து எல்லா விஷயங்களையும் தெரிந்து கொண்டாள். என்னவெல்லாம் நடந்தன என்பதைப் பற்றிய தகவலையும் தெரிந்துகொண்ட பிறகு, அவள் கேட்டாள்: “அதனால்தான் கிரின் காளியைத் திருமணம் செய்து கொண்டானா?''
லலிதா சொன்னாள். “ஆமாம், அம்மா. அதுதான் காரணம். கிரின் பாபுவைப் போன்று வேறு யாரும் இந்த உலகத்தில் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. என் சூழ்நிலையை அவரிடம் நான் சொன்னவுடன் நான் ஏற்கெனவே வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டவள் என்பதை அந்த நிமிடத்திலேயே அவர் ஏற்றுக் கொண்டார். என் கணவர் என்னை ஏற்றுக் கொள்வாரா, மாட்டாரா என்பது என் கணவர் தீர்மானிக்க வேண்டிய விஷயம். ஆனால், அவர் அதை ஏற்றுக்கொண்டுவிட்டார். என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விஷயத்தில் தன் மனதை மாற்றிக் கொள்வதற்கு கிரின் பாபுவிற்கு அதுவே போதுமானதாக இருந்தது.''
புவனேஸ்வரி பாசத்துடன் அவளைத் தடவிக் கொடுத்தவாறு சொன்னாள்: “கடைசியில் உன் கணவன் உன்னை ஏற்றுக்கொண்டு விட்டான், கண்ணு! நீங்க இரண்டு பேரும் ஒன்றாகச் சேர்ந்து பல பல வருடங்கள் சந்தோஷமா இருக்கணும். ஒரு நிமிடம் இரு... நான் போய் அபினாஷிடம் மணமகள் மாறிவிட்டாள் என்ற விஷயத்தைச்
சொல்லிட்டு வந்திடுறேன்.'' புன்னகைத்தவாறு, புவனேஸ்வரி தன் மூத்த மகனின் அறை இருக்கும் திசையை நோக்கி நடந்து சென்றாள்.
+Novels
Short Stories
May 28, 2018,
July 31, 2017,
May 10, 2018,
March 7, 2016,