Lekha Books

A+ A A-

மணப்பெண் - Page 25

mana-penn

ஆனால், இப்போது மணமகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காரியங்களை இதற்கு மேலும் தாமதப்படுத்த விரும்பவில்லை. அவர்கள் முந்தைய நாள் வந்து நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்தி முடித்துவிட்டார்கள். திருமணமும் இந்த மாதத்திலேயே நடக்கிறது. சேகர், போய் தன் தாயை அழைத்துக் கொண்டு வருவதற்காகத் தன்னைத் தயார் பண்ணிக் கொண்டிருந்தான். அலமாரியில் இருந்த தன் பொருட்களை எடுத்து வைப்பதற்காகக் கொண்டு வந்தபோது, நீண்ட நாட்களுக்குப் பிறகு லலிதா அவனுடைய மனதில் தோன்றினாள். முன்பு இந்த மாதிரி விஷயங்களையெல்லாம் அவள்தான் அக்கறையுடன் கவனிப்பாள்.

லலிதாவும் அவளுடைய குடும்பமும் அங்கிருந்து சென்று மூன்று வருடங்களுக்கும் மேலாகிவிட்டன. நீண்ட காலமாக அவர்களைப் பற்றி எந்த தகவலும் இல்லாமலிருந்தது. அவர்களைப் பற்றி விசாரிப்பதற்காக அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சொல்லப் போனால், அதற்கான ஆர்வமும் அவனிடம் இல்லை. காலப்போக்கில், லலிதா மீது ஒரு விதமான வெறுப்பு அவனுடைய மனதில் வளர்ந்து விட்டிருந்தது. இன்று திடீரென்று அவர்கள் எல்லாரும் எப்படி இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பம் அவனுக்கு உண்டானது. இன்னும் சொல்வதாக இருந்தாலும், அவர்கள் நல்ல நிலையில் இருப்பதற்கு நிறைய காரணங்கள் இருந்தன. கிரின் நல்ல வசதி படைத்தவன் என்ற விஷயம் சேகருக்கு நன்றாகத் தெரியும். எனினும், எல்லா விஷயங்களையும் அவன் தெரிந்துகொள்ள விரும்பினான். திருமணம் எப்போது நடந்தது- அவர்கள் எல்லாரும் எப்படி இருக்கிறார்கள்- எல்லா விஷயங்களையும்தான்.

குருச்சரணின் வீட்டில் குத்தகைக்கு இருந்தவர்கள் இப்போது அங்கு இல்லை. அவர்கள் வேறு எங்கோ மாறிவிட்டிருந்தார்கள். ஒரு முறை சாருவின் தந்தையைப் போய் பார்த்தால் என்ன என்றுகூட சேகர் நினைத்தான். கிரின் எங்கு இருக்கிறான் என்பதைப் பற்றிய தகவல் கட்டாயம் அவர்களுக்கு தெரிந்திருக்கும். சில நிமிடங்களுக்கு பொருட்களை எடுத்து அடுக்கி வைப்பதை நிறுத்தி வைத்து விட்டு, அவன் வெட்ட வெளியையே சாளரத்தின் வழியாக வெறித்துப் பார்த்துக் கொண்டே, அந்த விஷயங்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தான். திடீரென்று அவர்களுடைய வயதான வேலைக்காரப் பெண் உரத்த குரலில் கதவிற்கு வெளியிலிருந்து அழைத்தாள். “சின்ன அய்யா, காளியின் அம்மா உங்களைப் பார்க்கணும்னு சொன்னாங்க.''

ஆச்சரியத்துடன் பின்னால் திரும்பிப் பார்த்த சேகர் கேட்டான்: “எந்த காளியின் அம்மா?''

வேலைக்காரி குருச்சரணின் வீட்டைச் சுட்டிக்காட்டியவாறு சொன்னாள்: “நம்ம காளியின் அம்மா, சின்ன அய்யா. அவங்க நேற்று இரவு வந்திருக்காங்க.''

“நான் வர்றேன்'' -சேகர் உடனடியாக கிளம்பினான்.

அந்த நாள் முடிவடையும் நிலையில் இருந்தது. அவன் வீட்டிற்குள் காலடியை வைத்ததுதான் தாமதம், சுற்றிலும் உரத்த ஓசை எதிரொலித்துக் கொண்டிருந்தது. ஒரு விதவை அணிய வேண்டிய ஆடையை அணிந்திருந்த குருச்சரணின் மனைவிக்கு அருகில் போன சேகர், அவளுக்கு முன்னால் தரையில் உட்கார்ந்து, அமைதியாக தன்னுடைய கண்ணீர்த் துளிகளை விழுங்கிக் கொண்டிருந்தான். குருச்சரண் என்ற மனிதர் மீது அல்ல- தன்னுடைய சொந்த தந்தை மீது உண்டான துயரம் மீண்டும் சேகரை முழுமையாக வந்து மூடிக் கொண்டது.

சுற்றிலும் இருள் வந்து மூடியவுடன், லலிதா அறைக்குள் விளக்குகளுடன் வந்தாள். அவள் சற்று தூரத்தில் இருந்தவாறு சேகரைப் பார்த்து வணக்கம் சொன்னாள். சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்த அவள், அமைதியாக அங்கிருந்து வெளியேறினாள். இப்போது ஒரு பதினேழு வயது பெண்ணாக இருக்கும் அந்த இன்னொரு மனிதரின் மனைவியைப் பார்க்கவோ, அவளுடன் பேசவோ சேகரால் முடியவில்லை. எனினும், ஓரக் கண்களால் பார்த்த பார்வையில் சிறிதளவு தெரிந்துகொள்ள முடிந்தது. லலிதா சற்று வளர்ந்து மட்டும் இல்லை. அதற்கும் மாறாக, அவள் நிறைய மெலிந்து போயும் காணப்பட்டாள்.

போதும் என்ற அளவிற்கு அழுதுவிட்டு, குருச்சரணின் விதவை மனைவி கூற இருந்தது இதுதான். அந்த வீட்டை விற்பனை செய்துவிட்டு, முங்கரில் இருக்கும் தன்னுடைய மருமகனின் வீட்டில் போய் வாழ வேண்டும் என்பதைத்தான் இப்போது தான் செய்ய விரும்புவதாக அவள் சொன்னாள். அந்த வீட்டை விலைக்கு வாங்க வேண்டும் என்று சேகரின் தந்தை ஏங்கினார். இப்போது அவளுடைய குடும்பம் அந்த வீட்டை சேகரின் குடும்பத்திற்கு, உரிய விலைக்கு விற்க விரும்புகிறது. இதன் மூலம் ஏதோ ஒரு வகையில் அந்த வீட்டின் ஒரு பகுதியாக இருப்பதைப் போலவே அவர்களால் உணர முடியும். வீட்டை விற்று விட்டோமே என்ற கவலை அவர்களுக்கு உண்டாகாது. எதிர்காலத்தில் எப்போதாவது அவர்கள் அந்த வீட்டிற்கு வந்தால், சில நாட்கள் தான் அங்கு தங்கிச் செல்வதற்கான அனுமதி தனக்கு நிச்சயமாக கிடைக்கும் என்று உறுதியாக நம்பினாள் அவள். தன் தாயிடம் இந்த விஷயத்தைப் பற்றி பேசுவதாகவும், தன்னால் முடிந்ததை தான் செய்வதாகவும் சேகர் கூறியவுடன், அவள் தன் கண்ணீரைத் துடைத்துவிட்டு கேட்டாள்: “எப்படியாவது அம்மா எங்களை இப்போ வந்து பார்க்க மாட்டார்களா?''

தன் தாயை அழைத்து வருவதற்காக அன்று இரவே தான் புறப்பட இருப்பதாக சேகர் சொன்னான். அதற்குப் பிறகு குருச்சரணின் விதவை மனைவி பிற தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டாள். சேகரின் திருமணத் தேதி, மணமகளின் குடும்பத்தார் எவ்வளவு வரதட்சணை தருகிறார்கள், என்னவெல்லாம் நகைகள் வாங்கப்பட்டிருக்கின்றன, நபின்ராய் எப்படி மரணமடைந்தார், அவரின் மரணத்தை புவனேஸ்வரி எப்படி தாங்கிக் கொண்டாள்... இப்படி பல விஷயங்கள்.

சேகர் இறுதியாக அங்கிருந்து கிளம்ப அனுமதிக்கப்பட்டபோது, நிலவு மேலே எழுந்திருந்தது. அந்த நேரத்தில், கிரின் கீழே வந்து கொண்டிருந்தான். அவன் தன் சகோதரியான சாருவின் தாயைப் பார்ப்பதற்காக போய்க் கொண்டிருக்க வேண்டும். அதைப் பார்த்துவிட்டு குருச்சரணின் மனைவி கேட்டாள்: “சேகர்நாத், உனக்கு என் மருமகனுடன் பழக்கம் உண்டா? உலகத்தின் எந்த இடத்திலும் அவருடன் ஒப்பிடுவதற்கு வேறொரு ஆள் இல்லை.''

அதைப் பற்றி எந்தவித சந்தேகங்களும் சேகருக்கு இல்லை. அதைக் கூறிய அவன் தனக்கு ஏற்கெனவே கிரினுடன் அறிமுகம் இருக்கிறது என்பதை அவளுக்குத் தெரியும்படி கூறிவிட்டு, வேகமாக அங்கிருந்து வெளியேறினான். ஆனால், வெளி அறையை அடையும்போது, அவன் தானாகவே நிற்கும்படி தள்ளப்பட்டான்.

இருட்டில், கதவுக்குப் பின்னால் லலிதா காத்திருந்தாள். அவள் கேட்டாள்: “நீங்க இன்னைக்கு இரவு அம்மாவை அழைப்பதற்காக போகிறீர்களா?''

சேகர் சொன்னான்: “ஆமாம்''.

“அவங்க மிகுந்த துயரத்தில் இருக்காங்களா?''

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel